PUBLISHED ON : ஜன 22, 2017

பொன்னாத்தாளின் பிணத்திற்கு மாலை அணிவித்த மாரப்பன், குலுங்கி குலுங்கி அழுதார். வெளியூரிலிருந்து வந்திருந்த பொன்னாத்தா உறவுக்காரர்கள், ஆச்சரியத்துடன், 'யார் இவர்...' என்று விசாரிக்க, 'பொன்னாத்தாளோட பக்கத்து காட்டுக்காரர்; தாயாப் பிள்ளையா பழகினவங்க. அதான், அவரும், அவர் பொண்சாதியும் அழறாங்க...' என்றனர், அருகில் அமர்ந்திருந்தோர்.
மாரப்பனின் மனைவி பெண்கள் கூட்டத்தில் அமர, வாசலில் போடப்பட்டிருந்த நாற்காலியில் வந்து அமர்ந்தார் மாரப்பன்.
கூட்டத்தில் ஒருத்தி, 'எப்பேர்ப்பட்ட மனுஷி பொன்னாத்தா... நோயாளி புருஷனோட மனம் கோணாம வாழ்ந்து, ஒத்தப் பொம்பளையாய் உழைச்சு, மூணு மக்களையும் படிக்க வைச்சு, வேலை வாங்கி கொடுத்து, கல்யாணம் பண்ணி, ஒரு கெட்ட சொல்லுக்கு இடமளிக்காம தெய்வமா போய் சேர்ந்துட்டா...' என்று அங்கலாய்க்க, கடந்த கால நினைவுகளில் ஆழ்ந்து போனார், மாரப்பன்.
பாதையோரம் இருந்த புளிய மரத்தில், கம்பு குச்சியால் புளியம்பழங்களை உதிர்த்து, எடுத்து மடியில் பதுக்கினாள், பொன்னாத்தா. விளைந்த சோளப் பயிருக்குள் நின்று அதைப் பார்த்த மாரப்பன், 'பொன்னாத்தா... இன்னைக்கு நீ என்கிட்ட இருந்து தப்ப முடியாது; உன்னை காவக்குடிசைக்கு இழுத்துட்டுப் போயி, அசிங்கப்படுத்தல நான் மாரப்பன் இல்ல...' என்று மனதுக்குள் கறுவினான்.
நெடுநெடுவென்ற உயரத்தில், கறுகறுவென மூக்கும், முழியுமாக இருக்கும் பொன்னாத்தா மீது, மாரப்பனுக்கு ஒரு கண்.
பொன்னாத்தா புருஷன் காச நோயாளி; சதா எப்போதும் இருமிக் கொண்டே இருப்பான். புருஷனால் சுகப்படாதவள் தானே என நினைத்து, ஒருநாள் தன் ஆசையை மாரப்பன் வெளிப்படுத்த, பொங்கி வந்த ஆத்திரத்தை அடக்கி, வலிந்து வரவழைத்த புன்னகையுடன், 'அதுக்கென்ன நாயக்கரே... நாளைக்கு ராத்திரி என் புருஷன் வயலுக்கு தண்ணி பாய்ச்ச போயிடும்; நீ எங்க வீட்டை ஒட்டியிருக்கும் மொட்ட சுவத்து பக்கம் வந்திரு; ஜாக்கிரதை... முன்வாசல் வழியா வந்திராதே.... என் மாமியாகாரி கோட்டான் மாதிரி முழிச்சுட்டு இருப்பா... பின்பக்கமா, பட்டாளத்தான்
வீட்டு கொல்லைப் புறமாக வா...' என்று வழி சொல்லி அனுப்பினாள்.
மறுநாள், பட்டாளத்தான் பொண்டாட்டியிடம், 'ஏடி மாரியம்மா... நேத்து ராத்திரி வயிறு கடகடன்னு இருக்குன்னு மந்தைக்கு போனேன்டி. கருவேலம் புதருக்குள்ள இருந்து, 'குசுகுசு'ன்னு சத்தம்... என்னான்னு உத்துக் கேட்டா... ரெண்டு திருட்டுப் பயலுக, 'பட்டாளத்தான் ரொம்ப வளப்பமா தெரியுறான்... நாளைக்கு ராத்திரி அவன் வீட்டுல கை வைச்சுருவோம்'ன்னு பேசினானுங்கடி... எதுக்கும் ராத்திரி உன் புருஷன உஷாரா இருக்கச் சொல்லு; எப்படியும் திருடன் கொல்லைப்புற சுவர் வழியாத் தான் குதிச்சு வருவான்...' என்று ஊதி விட, 'வரட்டும் அந்த திருட்டு மாப்பிள்ளை... ஒரு கையையும், காலையும் காவு வாங்குறேன்...' என கொதித்த பட்டாளத்தான், வெட்டரிவாள், வேல் கம்புடன் திருடனுக்காக காத்திருக்க, நிம்மதியாக தூங்கப் போனாள், பொன்னாத்தா.
தலையில் சிலுப்பிய நாலைந்து முடிகளை படிய வாரி, அத்தர் பூசி, அங்க வஸ்திரம் அணிந்து, ஜம்மென்று புறப்பட்ட மாரப்பன், நடுசாமத்தில் பட்டாளத்தான் வீட்டு கொல்லைப் புறச் சுவரை ஏறிக் குதிக்க, அதற்காகவே காத்திருந்த பட்டாளத்தானும், அக்கம் பக்கத்தினரும் திருடன் என நினைத்து மாரப்பனை நையப் புடைக்க, அவர்களிடமிருந்து எப்படியோ தப்பிச் சென்றான், மாரப்பன்.
காலையில், மாரப்பன் வீட்டு வழியாக காட்டுக்குச் சென்ற பொன்னாத்தா, வாசலில் அமர்ந்திருந்த மாரப்பன் மனைவியிடம், 'என்ன நாயக்கரம்மா... எங்க உன் நாயக்கர ஆளையே காணோம்...' என்றாள்.
'அத ஏன் கேட்குறே போ... எங்கேயோ போயி விழுந்து, கை, கால உடைச்சுட்டு வந்து கிடக்காக, என் தம்பிக்கு சொல்லி அனுப்பியிருக்கேன்; அவன் வந்ததும், பூசாரணம்பட்டிக்கு கூட்டிட்டு போயி கட்டுப் போடணும்...' என்றாள்.
'அடடே விழுந்துட்டாரா...' எனக் கேட்டவாறு, வீட்டிற்குள் நுழைந்தாள். தாழ்வாரத் திண்ணையில், கயிற்றுக் கட்டிலில், முனங்கியபடி படுத்திருந்த மாரப்பனை பார்த்ததும், 'நாயக்கரே...' என, மெதுவாக கூப்பிட்டாள். மெல்ல கண்விழித்துப் பார்த்த மாரப்பன், அவளைப் பார்த்ததும்,
பற்களை, 'நறநற' வென கடித்து, 'அடியே போக்கத்தவளே... இவள ஏண்டி உள்ளே விட்டே... முதல்ல இவள வெளியே போகச் சொல்லு...' என்று கத்தினான்.
'ஏம்மா... உன் நாயக்கன் எதுக்கு இந்த கத்து கத்துறாப்புல... எனக்கென்னமோ, இவரப் பாக்கயில எங்கேயோ போயி எக்குத் தப்பா அடிவாங்கின மாதிரியில்ல தெரியுது. எதுக்கும் கோழி அடிச்சு, குழம்பு வச்சு ஊத்தி உடம்பத் தேத்து...' என்று நக்கலாக கூறிச் சென்றாள்.
அச்சம்பவத்தை நினைத்ததும், மாரப்பனுக்கு மனதுக்குள் ஆவேசம், எப்படியாவது அவளை பழிவாங்க வேண்டும் என்று!
புளியம்பழங்களை மடி நிறைய நிரப்பி, இடுப்போடு சேர்த்துக் கட்டிய பொன்னாத்தா, மெதுவாக தன் காட்டை நோக்கி நடக்க, 'ஏய் பொன்னாத்தா... நில்லு...' என்ற சத்தம் போட்டான், மாரப்பன்.
திரும்பிப் பார்த்தவள், 'என்ன நாயக்கரே... எதுக்கு நிற்கச் சொல்றே...' என்றாள்.
'எதுக்கா... என் மரத்து புளியம்பழத்தை களவாடி வச்சுருக்கியே... அதுக்கு!' என்றான்.
'ஏய்யா... ஆசைப்பட்டு ஒத்தப் புளியங்கா பறிச்சதுக்கா, உன் மரத்தையே கொள்ளையடிச்சது மாதிரி பேசுறே...'
'மடி நிறைய அரை மூட்டை புளியங்காய பறிச்சு வச்சுக்கிட்டு, ஒத்தப் புளியங்காய்ன்னா சொல்றே... இங்க பாரு... உன்கிட்ட நான் பேச விரும்பல; பேசாம காவக்குடிசைக்கு நடையக் கட்டு...' என்றான் கண்டிப்புடன்!
'சரி நட வர்றேன்...' என்று அலட்டிக்காமல் அவன் பின் நடந்த பொன்னாத்தா, 'மடியில் இருக்கிற புளியங்காய காவக்காரங்க பாத்தாங்கன்னா, 100 ரூபாயாவது அபராதம் விதிச்சுடுவாங்களே...' என நினைத்தவள், புளியங்காய்களை ஒவ்வொன்றாக எடுத்து, இருபுறமும் இருந்த ஓடைக்குள் மெதுவாக விட்டெறிந்தபடியே நடந்தாள்.
விளைந்த பயிர்களை, திருடர்களிடமிருந்து பாதுகாப்பதற்காக, அக்காலத்தில், காவல்காரர்கள் நியமிக்கப்பட்டிருப்பர். அவர்களுக்கு சம்பளமாக, சில மரக்கால் தானியத்தை கொடுப்பர், நிலத்தின் உரிமையாளர்கள். விளைச்சலை திருடும் போது, கையும், களவுமாக சிக்கி விட்டால், அவர்களை காவல் குடிசைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அபராதம் விதிப்பது அக்காலத்து வழக்கம்.
காவல் குடிசையில் இருந்தவர்கள், 'என்ன மாரப்பா... என்ன விஷயம்... பொன்னாத்தாளோட வர்றே...' என்று கேட்டனர்.
'பொன்னாத்தா, என் புளியமரத்துல காய்கள திருடிட்டா...' என்றான்.
'ஏன் தாயி... மாரப்பன் சொல்றது உண்மையா...' என்று வயதான காவல்காரர் ஒருவர் கேட்க, 'இல்லங்க அய்யா... ஆசைப்பட்டு ஒத்த புளியங்கா பறிச்சேன். அதுக்கு போயி இந்த மாரப்பன் உங்க கிட்ட இழுத்துட்டு வர்றாரு...' என்றாள்.
உடனே, 'பொய் சொல்றா... மடியக் காட்டச் சொல்லுங்க...' என்றான் மாரப்பன்.
'நீங்களே பாருங்கய்யா...' என்றவாறு மடியை உதற, தலை சும்மாடு தான் கீழே விழுந்தது; ஒத்த புளியங்காய் கூட விழவில்லை.
காவல்காரர் மாரப்பனை திட்டி, 'இங்க பாரு மாரப்பா... பொம்பளப் புள்ள மேல அபாண்டமா பழி சொல்லாதே...' என்று கண்டித்து அனுப்பினார்.
பொன்னாத்தாளை பார்த்து, பற்களை கடித்த மாரப்பன், 'இன்னைக்கு எப்படியோ தப்பிச்சுட்டே... என்னைக்காவது என்கிட்ட மாட்டுவே அப்ப வச்சுக்கிறேன்...' என்று முணுமுணுக்க, அவனை அலட்சியமாக பார்த்து, தன் காட்டை நோக்கி நடையைக் கட்டினாள், பொன்னாத்தா.
இச்சம்பவம் நடந்து சில மாதங்கள் கடந்த விட்டன.
அன்று மாலையில், திடீரென, வானம் மப்பும், மந்தாரமுமாக இருக்க, மழை பெய்யும் முன், காட்டை விட்டு கிளம்ப வேண்டுமே என நினைத்து, பறித்து வைத்த மொச்சை நெற்றுகளை ஒரு மூட்டையில் கட்டினாள், பொன்னாத்தா. பின், மாட்டுக்கு தீவனமாக சோளத் தட்டைகளை ஒடித்து, அதைக் கட்டுவதற்காக, வேலியோரம் பிரண்டைக் கொடியை தேடிப் போன போது தான், புதருக்குள் இருந்து அந்த வினோத சத்தம் கேட்டது. அது, அவள் மனதில் ஏதோ அபாயத்தை உணர்த்த, மெல்ல அடிமேல் அடி வைத்து, செடிகளை விலக்கி முன்னேறியவள், அங்கே கண்ட காட்சியில் குலை நடுங்கிப் போனாள்.
கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில், 10 வயது சிறுமி ஒருத்தியை சுற்றி, 45 வயதுக்கு மேற்பட்ட மூன்று ஆண்கள்! அழுக்கேறிய உடையும், எண்ணெய் கண்டு பல மாதங்களான பம்பைத் தலை, நீண்டு தொங்கும் தாடி, மீசை என, அவர்கள் தோற்றமே மனதில் கிலியை ஏற்படுத்தியது.
அவர்களில் இருவர், பீடியை புகைத்தபடி குத்துக்காலிட்டு உட்கார்ந்திருக்க, ஒருவன் அச்சிறுமியின் வாயில் துணியை திணித்து கொண்டிருந்தான்.
அடுத்து நிகழப் போவதை உணர்ந்த பொன்னாத்தா, மடிநிறைய மண்ணை அள்ளி நிரப்பினாள். பின், மெதுவாக அடிமேல் அடி வைத்து, குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்தவர்கள் பின்னால் சென்றவள், கையில் இருந்த களைக் கொத்தால், மின்னல் வேகத்தில் இருவரின் பின்னங் கழுத்தில் ஓங்கி ரெண்டு போடு போட்டாள். இருவரும், 'ஐயோ...' என கத்தி, அப்படியே மயங்கி சரிந்தனர்.
சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்த மற்றொருவன், ஆக்ரோஷத்துடன் அவளை நோக்கி வர, மடியில் இருந்த மண்ணை அள்ளி, அவன் முகத்தில் எறிந்தாள். அவன் கண்ணை கசக்கிய நேரத்தில் களைக் கொத்தால் அவன் மண்டையைத் தாக்க, அதன் இரும்பு முனை, அவன் மண்டையை பிளந்து ரத்தம், 'குபுகுபு'வென கொப்பளிக்க, வேரருந்த மரம் போல் அப்படியே அலறிச் சாய்ந்தான்.
அடுத்த நொடி, சிறுமியைத் தூக்கி தோளில் போட்டவள், சோளத் தட்டைக்குள் ஓட்டமெடுத்தாள்.
மறுநாள், பொங்கல் என்பதால், மனித சஞ்சாரம் இல்லாமல், மயான அமைதியாக இருந்தது காடு. கண்டிப்பாக சிறிது நேரத்தில் அவர்கள் எழுந்து விடுவர்; அவர்கள் கையில் சிக்கினால், இருவரும் கொடூரமாக கொல்லப்படுவோம் என்பதை உணர்ந்து, கண் மண் தெரியாமல் ஓடினாள், பொன்னாத்தா.
ஒரு வழியாக, சில அடி தூரத்தில் வீடுகள் தெரிய, சிறிது ஆசுவாசம் ஆனவள், சிறுமியை இறக்கி, அமர வைத்தாள். பின், தன் சேலையில், ஒரு முனையை கிழித்து, சிறுமியின் ஆடையற்ற உடம்பை மூடி, தோளில் தூக்கியபடி மெல்ல நடந்தாள்.
தெருக்கள் ஆழ்ந்த நித்திரையில் இருந்தது. நிதானமாக நடந்து அந்த வீட்டின் கதவைத் தட்டினாள். வீட்டிற்குள் விசும்பல் ஒலி சன்னமாக கேட்டது. ஓடிவந்து கதவைத் திறந்த உருவம், வாசலில் பொன்னாத்தா நிற்பதைப் பார்த்து, 'நீயா... நீ எதுக்கு இங்க வந்தே...' முகத்தில் கடுமை காட்டிய மாரப்பன், அடுத்த நொடி, அவள் தோளில் தொங்கிய உருவத்தைப் பார்த்ததும், நெஞ்சு பதறி, வேகமாக கதவைத் திறந்தான்.
வீட்டுக்கு பின்புறம் விளையாடிய தங்கள் செல்ல மகள் எங்கே போனாள் என்று, தவித்து, சொந்தம், பந்தம், விளையாடுமிடம் என எல்லா இடங்களிலும் தேடிச் சோர்ந்து, துவண்டிருந்த நேரத்தில், பொன்னாத்தா மகளை தூக்கி வந்த கோலத்தைப் பார்த்ததும், மாரப்பனுக்கும், அவன் மனைவிக்கும், அடி வயிற்றில் நெருப்பு பற்றியது போல் இருந்தது.
'நான் பெத்த மகளே... இதென்னடி கோலம்...' என்று மாரப்பன் மனைவி, மகளை கட்டிப்பிடித்து அரட்டிய போது, காட்டிற்கு புளிச்சிப் பழம் பறிக்கச் சென்ற போது, மூணு ஆட்கள் வாயைப் பொத்தி தூக்கி சென்றதாகவும் பொன்னத்தா வந்து காப்பாற்றியதையும் கூறினாள், சிறுமி.
'பொன்னாத்தா... என்னைப் பெத்த தாயி... என் பிள்ளையோட மானத்தையும், உயிரையும் காப்பாத்தின நீ தான்ம்மா என் குல தெய்வம்; என்னை மன்னிச்சுடு தாயி...' என்று கால்களில் விழுந்தான், மாரப்பன்.
அவன் தோளைத் தொட்டு தூக்கிய பொன்னாத்தா, 'நாயக்கரே...பொம்பளங்கிறவ வெறும் சதையால் செய்த பிண்டமில்ல; உன்னைப் போல தான், அவளுக்கும் மனசு இருக்கு; அதுல ஆசையும், பாசமும், சுய கவுரவமும், வாழ்க்கையோட வேதனையும், வலியும் நிரம்பி இருக்கு.
'நீ, என்னை சக மனுஷியா பாக்காம, சதையா பாத்தே... அதேமாதிரி, உன் பொண்ண, பச்ச மண்ணுன்னு கூட பாக்காம, சதைப் பிண்டமா பாத்திருக்குது சில மிருகங்க. என்னைக்கு நீங்க ௌல்லாம் பொம்பளைங்க உணர்வுக்கு மதிப்பு கொடுத்து, அவள சக மனுஷியா பாக்குறீங்களோ அன்னைக்குத் தான் இத்தகைய கொடுமைகளுக்கு விடிவு ஏற்படும்...' என்று சொல்லி, சென்று விட்டாள்.
முப்பது ஆண்டுகளுக்கு முன் நடந்த இச்சம்பவங்களை நினைத்துப் பார்த்த மாரப்பனுக்கு கண்ணீர் தாரை தாரையாக வந்தது.
''பொன்னாத்தாளுக்கு கூடப் பிறந்தவங்க யாருமில்ல; பிறந்த வழியில அண்ணன் முறை உள்ளவங்க யாராவது கோடிச் சேலையை கொண்டு வாங்கப்பா...'' என்று சடங்கு செய்பவர் குரல் கொடுக்க, வேகமாக எழுந்த மாரப்பன், ''என் கூடப் பிறக்காத தங்கச்சிக்கு நானே கோடிச் சேலை சாத்துறேன்...'' என்று கூறி, தன் மனைவி கையிலிருந்த பட்டுச் சேலையை வாங்கி, பொன்னாத்தாளின் உடலில் சாத்த, அதை வழிமொழிவது போல், வானம் தன் பங்கிற்கு மழைத் துளிகளை பொழிந்தது!
ப. லட்சுமி
