PUBLISHED ON : மார் 27, 2022

ஏப்., 2 தெலுங்கு புத்தாண்டு
மும்மூர்த்திகளில் சிவனையும், திருமாலையும் வணங்குமளவு பிரம்மாவை வணங்குவதில்லை, நாம்.
புராணங்களின்படி, சிவனின் திருவடியையும், சிரசையும் பார்த்து வர, ஒரு போட்டி நடத்தப்பட்டது. சிரசை பார்க்க, அன்னப்பறவை வடிவில் பறந்து சென்றார், பிரம்மா. வராகம் - பன்றியாக பூமியைக் குடைந்து திருவடியைப் பார்க்க சென்றார், திருமால்.
இருவரது முயற்சியும் வெற்றி பெறவில்லை. ஆனால், சிவனின் சிரசைப் பார்த்து விட்டதாக பிரம்மா பொய் சொன்னதால், பூமியில் எங்கும் அவருக்கு கோவில் இல்லை. ஆனால், அத்தி பூத்தாற் போல், ராஜஸ்தான் மாநிலம், புஷ்கரில் இருக்கிறது. தமிழக கோவில்கள் சிலவற்றில் தனி சன்னிதிகள் உள்ளன.
ஆனால், ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடக மாநில மக்கள், இதை பொருட்படுத்தாமல், யுகாதி எனப்படும் தெலுங்கு புத்தாண்டின் துவக்க நாளில், பிரம்மாவுக்கு பூஜை செய்கின்றனர்.
யுகாதி என்றால், புதிய துவக்கம் என பொருள். சித்திரை மாதப் பிறப்புக்கு முன்னதாக வரும், யுகாதி, பங்குனி அமாவாசைக்கு அடுத்து வளர்பிறை இரண்டாம் நாள் கொண்டாடும் பழக்கம் இருக்கிறது. இவ்வாண்டு, மார்ச் 31ம் தேதி, அமாவாசை; ஏப்., 2ல் யுகாதி.
குருர் பிரம்மா குருர் விஷ்ணு குருர்தேவோ
மஹேச்வரஹ குருஸ் ஸாக்ஷாத் பரப்பிரம்ஹை
தஸ்மை ஸ்ரீகுரவே நமஹ
என்ற ஸ்லோகம் இருக்கிறது.
பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவருமே குருமார்கள் தான். அதில், பிரம்மா தான் நம்மைப் படைக்கிறார்.
'ஏன் படைத்தாய் இறைவா... எல்லாம் என் தலையெழுத்து...' என்று, வாழ்க்கையின் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நாம், பிரம்மாவை திட்டி தீர்த்திருப்போம். இதனால், அவருக்கு கோவில் எதற்கு என்று விட்டு விட்டோம்.
ஆனால், யுகாதி கொண்டாடும் மக்கள், 'எங்களை பிறக்க வைத்த நீயே, எங்கள் வாழ்வுக்கு பொறுப்பு. நாங்கள் செய்த பாவத்தின் பலனை அனுபவிக்கவே பிறவிகளைத் தொடர்ந்து தருகிறாய்.
இந்த புத்தாண்டின் துவக்கத்தில் இருந்தாவது, எங்களுக்கு நல்ல புத்தியை தா, நல்லதை நினைக்கும் மனதைக் கொடு...' என பிரார்த்திக்கின்றனர். அவரை பூஜிக்க, அட்சதை துாவி, மல்லிகை மலர் சூட்டுகின்றனர். வேப்பிலை கலந்த இனிப்பைப் படைக்கின்றனர்.
திருமணத்தின் போது மணமக்களுக்கு அட்சதை துாவி வாழ்த்துகிறோம். அப்போது, பிறர் வாழ வேண்டும் என்ற நல்ல எண்ணம், நமக்குள் பிறக்கிறது. மல்லிகை போன்ற வெள்ளை உள்ளத்தை இனியாவது பெறுவோம் என்ற எண்ணம் உண்டாகிறது. வாழ்வில் கசப்பு, இனிப்பு எது வந்தாலும் அதைக் கடக்கும் பக்குவம் ஏற்படுகிறது.
தெலுங்கு மக்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு இந்தியனும், தன் உள்ளத்தில் நல்ல எண்ணங்கள் பிறக்க, யுகாதி நன்னாளில் பிரம்மனை வேண்டுவோம்.
தி. செல்லப்பா
