
அஷ்டமி என்றாலே பயப்படுகின்றனர், மக்கள். உண்மையில், இது மிக நல்ல நாள். பைரவரின் வரலாறும், அஷ்டமியின் முக்கியத்துவமும் தெரிந்தால், இதன் அருமை புரியும்.
பெரும் தவம் செய்து, சிவனிடம் மாபெரும் வரங்களைப் பெற்றான், அந்தகாசுரன். தேவர்களைப் பாடாய் படுத்தினான். வாழ்வே இருண்டு விட்டதாகக் கருதி, அவர்கள் பயந்து அலறினர்.
அந்தகம் என்ற வார்த்தைக்கு, இருள் என்று அர்த்தம். வரத்தை தவறாக பயன்படுத்திய அந்தகனை, சம்ஹாரம் செய்ய முடிவெடுத்தார், சிவன்.
தன் உடலின் வெப்பத்திலிருந்து ஒரு சக்தியை உருவாக்கினார். கால பைரவர் என, பெயர் சூட்டினார். இவரது தலைமையின் கீழ், எட்டு பைரவர்கள் உருவாயினர். அவர்கள், அஷ்ட பைரவர்கள் எனப்பட்டனர். இவர்கள் எட்டு திசைக்கும் காவலர்கள் ஆயினர்.
எந்த திசைக்கு, எந்த நேரத்தில் வந்தாலும், அந்தகனை விரட்டியடித்தனர். கடைசியில், அவன் மரணத்தை தழுவினான். தேவர்களின் மனதில் இருந்த பயம் எனும் இருள் நீங்கி, ஒளி பிறந்தது.
பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர் என, அர்த்தம். மரணமே வந்தாலும் கூட, அவர் அந்த பயத்தை தீயில் இட்ட பஞ்சாக்கி விடுவார். அவருக்கு, அஷ்டமி திதி தான் முக்கியம். எல்லாராலும் ஒதுக்கப்படும் அஷ்டமியை அவர், தனக்குரியதாக்கியதற்கு காரணம் உண்டு.
இவருக்கு மகாருத்ரன் என, பெயர் உண்டு. அஷ்டமி திதியின் நாயகர், பைரவர் எனும் மகாருத்ரனுக்கு, யுத்தம் செய்தல், ஆயுதங்களைக் கையாளுதல் ஆகியவை பிடித்த விஷயங்கள்.
சுப நிகழ்ச்சிகளுக்கும், ஆயுதங்களுக்கும் சம்பந்தமில்லை. அது மட்டுமா, அம்பாள், அசுரர்களை அழிக்க ஆயுதம் ஏந்தும் நாளும் அஷ்டமி தான். எனவே, இந்நாளில் சுப நிகழ்ச்சிகளைத் தவிர்த்து, பரிகார பூஜை நாளாக்கி உள்ளனர்.
அஷ்டமி, செல்வ வளத்திற்குரிய நாளும் கூட. அன்று, அஷ்ட லட்சுமிகளும், பைரவரைத் தரிசிக்க வருகின்றனர். இந்நாளில், பைரவரை தரிசித்தால், எல்லா வளங்களும் பெறலாம்.
அஷ்ட பைரவர்களில் அசிதாங்க பைரவருக்கு அன்னப்பறவை, ருரு பைரவர் - ரிஷபம், சண்ட பைரவர் - மயில், குராத பைரவர் - கருடன், உன்மத்த பைரவர் - குதிரை, கபால பைரவர் - யானை, பீக் ஷண பைரவருக்கு சிங்கம் ஆகியவை வாகனங்கள். சம்ஹார பைரவரான கால பைரவருக்கு, நாய் வாகனமாக உள்ளது.
ஒன்றல்ல, இரண்டல்ல, 64 வகை பைரவர்கள் உலகில், 64 பணிகளைச் செய்கின்றனர் என்பதும் விசேஷ தகவல்.
கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமியை, கால பைரவாஷ்டமி என்பர். மற்ற அஷ்டமிகளை விட, சிவன் நெருப்பாய் நின்ற இம்மாத அஷ்டமி, மிக மிக விசேஷமானது. பைரவரின் பிறந்த நாளாக கூட, இதைக் கருதலாம்.
ஆக, எல்லா நாளும் நல்ல நாளே என்பதே, பைரவாஷ்டமி உணர்த்தும் பாடம்.
- தி. செல்லப்பா

