
திருமணம், 'அவுட் ஆப் பேஷனா?'
நான் ஒரு மனநல மருத்துவர். சமீபகாலமாக திருமணத்திற்கு முன், பின் என, பலர், 'கவுன்சிலிங்' வருவது அதிகரித்துள்ளது. இது நல்ல விஷயம் தான்.
என் அனுபவத்தில், இவர்களில் பலரிடம், திருமணம் குறித்த புரிதல்கள், கவலை தருவதாக உள்ளது.
அவற்றில் சில:
வசதிக்கு மீறி செலவு செய்து, கல்யாண நிகழ்வை ஏன் செய்யணும்; என் சுதந்திரம் தான் ரொம்ப முக்கியம்; திருமணத்தை எளிதில் முறித்துக் கொள்ளலாம்; குழந்தை பெரிய சுமை; திருமணம் தாண்டிய உறவுகள் நடக்க கூடியவை தான் மற்றும் விட்டுக் கொடுத்தல் என்பது, ஏமாறுவதற்கு சமம்.
இப்படி நிறைய எதிர்மறை எண்ணங்கள் வைத்துள்ளனர்.
நமக்கு ஏற்ற செலவை செய்வோம், புதிதாக வரும் உறவில் அறிந்து, பகிர்ந்து மகிழ நிறைய விஷயங்கள் இருக்கும். குழந்தைகள் என்பது இயல்பு, மகிழ்ச்சிக்குரியது.
விட்டுக் கொடுத்தல் என்றால், உறவுக்கு உதவாதவைகளை விடுவது, உறவுக்கு வேண்டியதை கொடுப்பது என்ற நிதர்சனம் புரியாமல் இருக்கின்றனர்.
இவற்றில் உள்ள நல்லதை ஏற்க, இளவட்டங்கள் சற்று சிந்திக்க வேண்டும்.
சமூக வலைதளங்கள், சில மேடை பேச்சுகள் மற்றும் சில புத்தகங்கள் இதுபோன்ற எதிர்மறை எண்ணங்களை வளர்க்கின்றன. பெரும்பாலானோரிடம் திருமணம், 'அவுட் ஆப் பேஷன்' என்றாகி விடுமோ என்றே தோன்றுகிறது.
திருமணம் - குடும்ப அமைப்புகள் சரியாக கட்டமைக்காத நாடுகள் எவ்வளவு அவதிப்படுகின்றன என்று, இளம் தலைமுறையினர் சற்று கூர்ந்து பார்த்து திருத்திக் கொள்வது நல்லது.
ப.நரசிம்மன், சென்னை.
அழகான கையெழுத்தை ஊக்குவிக்கும், ஆபீசர்!
எங்கள் காலனியில், மாலை வேளைகளில் பள்ளி மாணவர்களை ஒன்று திரட்டி, ஆளுக்கு ஒரு வெள்ளை காகிதத்தை தந்து, அவர்களை எழுத வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவர்.
மாணவன் ஒருவனிடம், ஒரு கடிதத்தை, 'டிக்டேட்' செய்து கொண்டிருந்தார்.
அவரை தனியே அழைத்து, 'என்ன சார் இது, நீங்க எழுத வேண்டிய, 'பர்சனல் லெட்டரை' பசங்ககிட்ட சொல்லி, எழுதச் சொல்றீங்களே...' என்றேன்.
'இது மாணவர்களுக்கு நான் தர்ற பயிற்சி. என் நண்பருக்கு கடிதம் எழுதறேன். ஆனா, அதுல எல்லாம் பொது விஷயம் தான் இருக்கும்.
'பொதுவா, இன்றைய தேதியில, பள்ளி மாணவர்களுக்கு கையால் எழுதற பயிற்சியே இல்லாமப் போச்சு, தப்பும் தவறுமா தமிழ் எழுதறாங்க. கையெழுத்தும் நன்றாக இல்லை.
'இங்கே இருக்கும் மாணவர்களுக்கு, எழுத்துப் பயிற்சி தர்றதால, அவங்ககிட்ட நல்ல முன்னேற்றம் இருக்கு. அடித்தல் திருத்தல் இல்லாம எழுதுற மாணவனுக்கு, பரிசு தருவதுடன், அவன் கையால் எழுதிய கடிதத்தை என் நண்பருக்கு அனுப்புகிறேன். இது, இரட்டிப்பு சந்தோஷம்...' என்றார்.
அவரின் செயலை மனதார பாராட்டி வந்தேன்.
சசி பிரபு, சென்னை.
பழுது நீக்க கற்றுக்கொள்ளுங்கள்!
அவசர வேலையாக நண்பரது காரில் பயணித்துக் கொண்டிருந்தேன். கல்லுாரி படிப்பை முடித்த அவரது மகன், காரை ஓட்டினான். வழியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் எதிர்பாராவிதமாக பழுதாகி நின்று விட்டது, கார்.
'அவசரமாக செல்லும் இந்த நேரத்தில் கார் பழுதாகி விட்டதே. இப்போது எங்கு போய் மெக்கானிக்கை தேடுவது...' என்று, நான் கையை பிசைந்தேன்.
கார், 'டிக்கி'யிலிருந்து 'டூல்ஸ்'களை எடுத்து, சரி பார்க்க ஆரம்பித்தான், நண்பரின் மகன். அரை மணி நேரத்திற்குள் பழுது நீக்கி, திரும்பவும் காரை இயக்கினான்.
அவனை வியப்பாக பார்த்தேன்.
'இன்றைய காலகட்டத்தில் கார் எவ்வளவு முக்கியமோ, அதே போல், அதன் பாகங்கள், அது இயங்கும் விதம், அதை எளிதில் சரி செய்யும்முறையையும் கற்றிருப்பது
மிக அவசியம்.
'கல்லுாரி கோடை விடுமுறை நாளில், இவனை, கார் மெக்கானிக் ஷாப்பில் வேலைக்கு சேர்த்தேன். சிறு சிறு பழுதுகளை இவனே சரி செய்யும் அளவுக்கு பழக்கினேன்...' என்றார், நண்பர்.
அவரை மனதார பாராட்டினேன்.
போக வேண்டிய இடத்திற்கு தடங்கலின்றி சரியான நேரத்திற்கு போய் சேர்ந்தோம்.
எனவே, இன்றைய இளைஞர்கள் கார் ஓட்ட பழகுவதோடு மட்டுமல்லாமல், அதன் சிறு சிறு பழுதுகளையும் சரி பார்க்க தெரிந்து கொள்வது காலத்தின் கட்டாயம்.
பொன்சரவணகுரு, செங்கோட்டை.

