
அன்புள்ள அம்மாவுக்கு —
எனக்கு, வயது: 30. திருமணமாகி, 10 வருடங்கள் ஆகிறது. எனக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர். என் கணவர் தங்கமானவர். என் மேல் உயிரையே வைத்திருக்கிறார்; நானும் அப்படித்தான்; அவர் மேல் உயிரையே வைத்திருக்கிறேன். கடந்த மூன்றாண்டுகளாக, ஒரு ஜெராக்ஸ் கடையில் வேலை பார்த்து வருகிறேன்.
ஆறு மாதத்திற்கு முன், என் கடை முதலாளி, என்னை பார்த்து, 'உன்னை எனக்கு பிடித்திருக்கிறது. தவறாக நினைக்க வேண்டாம். உன் அன்புதான் எனக்கு வேண்டும். மற்றபடி, நீ உன் குடும்பத்தை பார்த்துக் கொள், நான், என் குடும்பத்தை பார்த்துக் கொள்கிறேன். ஆனால், உன் அன்பு எனக்கு கண்டிப்பாக வேண்டும்...' என்றார்; எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
ஆனால், என் மனமும் அவரை விரும்ப ஆரம்பித்தது. அவருக்கு திருமணம் ஆகி விட்டது;
வயது 44 ஆகிறது. அவருக்கும், இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆனால், அவரும் என் மேல் மிகவும் அன்பாக இருக்கிறார். என் வீட்டுக்காரர் இல்லாத நேரத்தில், மொபைலில் அடிக்கடி பேசிக் கொள்வோம். ஆனால், கடையில் அதிகமாக பேச மாட்டோம். இன்று வரை, அவரும் என்னிடம் கண்ணியமாகவும், மரியாதையாகவும் நடந்து கொள்கிறார்.
இப்போதெல்லாம் அவரை பார்க்காமல், பேசாமல் என்னால் இருக்க முடிவதில்லை. அவரின் நினைவுகள், என்னுள் அதிகமாகி விட்டது. அவரும் அப்படித்தான் சொல்கிறார். நான் செய்வது தவறா என்று தெரியவில்லை. ஆனால், அவரை பார்க்காமல், பேசாமல் என்னால் இருக்க முடியவில்லை. நான் என்ன செய்வது என்று தெரியவில்லை.
நான் தொடர்ந்து அவருடன் பழகலாமா? இதனால், என் வாழ்க்கைக்கு ஏதாவது பிரச்னை வருமா? தவறு என்று தெரிகிறது; ஆனால், மறக்க முடியவில்லை. நான் கோபமாக பார்த்தால் கூட, அவர் தாங்க மாட்டார். என்ன செய்வது? நீங்கள்தான் எனக்கு ஒரு நல்ல பதிலையும், என் மனதிற்கு ஒரு தெளிவையும் தர வேண்டும்.
— இப்படிக்கு,
உங்கள் அன்பு மகள்.
அன்புள்ள மகளுக்கு —
நோய் தொற்றிய அறிகுறி, லேசாக தெரிய ஆரம்பித்திருக்கும் வேளையில், மருத்துவரை அணுகியிருக்கிறாய். உன்னை தொற்றி இருக்கும் நோயின் பெயர் - கள்ள உறவு. அது, மேலும் தீவிரமாக பரவி, உன்னை இரையெடுக்க, சில பல நாட்களாகலாம். இப்போதே சிகிச்சை மேற்கொண்டு குணமாக பார்.
தவறான உறவில் ஈடுபடும் எல்லா பெண்களும், தாங்கள் பழகும் ஆண்களை பற்றி கூறும் போது, 'அவர் மாதிரி நல்லவரை, இந்த உலகத்தில் பார்க்க முடியாது...' என்பர் அல்லது 'என்கிட்ட மதிப்பும், மரியாதையுமா பேசுவார்...' என்பர்.
- இப்போது, உன் விஷயத்துக்கு வருவோம். நீ ஒரு ஜெராக்ஸ் கடையில் வேலை பார்க்கிறாய். மாதம், 2 ஆயிரம் ரூபாய் சம்பளம் தருவார். உன் அழகை பார்த்து தூண்டில் போடுகிறான் உன் முதலாளி. உன் அன்புதான் எனக்கு வேண்டும் என்கிறான் அல்லவா? அதன் உண்மையான அர்த்தம், 'உன் உடம்பு தான் எனக்கு வேண்டும்...' என்று அர்த்தம்.
இனி, நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா செல்லம்?
மொபைல் போன், ஜெராக்ஸ் கடை முதலாளி வாங்கிக் கொடுத்தது என்றால், திருப்பிக் கொடுத்து விடு. உன் கைபேசி என்றால், முதலாளி எண்ணை அழித்து விடு; புதிய எண்ணுக்கு மாறி விடு. வேலையிலிருந்து தாமதிக்காமல் நின்று விடு. தையல் கற்று, லேடீஸ் டைலரிங் கடை வை. குழந்தைகளுடனும், கணவனுடனும் உடலால், மனதால் நெருங்கு. இரு குழந்தைகளுக்கு தாயான உனக்கு, கள்ள உறவு, ரொமான்ஸ் தேவைதானா என கேட்டு, உன் கன்னங்களில், நாலு அறை கொடுத்துக் கொள்.
வாரா வாரம் கோவிலுக்கு போய் வா. கெட்டவழிக்கு இழுக்கும் தோழியரிடம் இருந்து விலகு. மொபைல் போன் வைத்துக் கொள்ளாதே. பணத்துக்கு பணம், சபலத்துக்கு சபலம் மிச்சமாகும்.
திருமண வட்டத்திற்கு வெளியே நிற்கும் எல்லா ஆண்களும் விஷப் பாம்புகளே. கொத்தி உயிரெடுப்பது அவைகளின் பிறவிக் குணம். 'அம்மா... நான் பழகும் சாமியார் பாம்பு, பிரண்ட்லி பாம்பு, ரொம்ப ரொம்ப மரியாதை பாம்பு, அதை மடியில் போட்டு கொஞ்சினால் என்னம்மா ஆகும்?' என்று பச்சை பிள்ளை போல் கேட்காதே. கொத்தும்... உன்னை மட்டுமல்ல, உன்னை சேர்ந்தோரையும் உயிரெடுக்கும்.
ஆசை வார்த்தைகள் மிழற்றும் அற்பர் நிழல் சேராதே!
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.

