தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஏப் 29, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 29, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மா —

நான் கலப்புத் திருமணம் செய்தவன். நான் தாழ்ந்த ஜாதி; என் மனைவி உயர்ந்த ஜாதி. எனக்கு வயது 36. என் மனைவிக்கு வயது 30. எனக்கு இரண்டு பிள்ளைகள். முதல் பெண், வயது 7. இரண்டாவது ஆண், வயது 4. மகள் 2ம் வகுப்பு; மகன் எல்.கே.ஜி., படிக்கின்றனர். அம்மா, நாங்கள் திருமணம் செய்து, 14 வருடங்கள் ஆகின்றன. பதிவுத் திருமணம் செய்துள்ளோம். கடந்த, 13 வருடங்களாக, எந்த ஒரு சிறு பிரச்னை கூட இல்லாமல், வாழ்க்கை நடத்தினோம். ஆனால், கடந்த ஒரு வருடமாக, பிரச்னை செய்கிறாள் என் மனைவி.

திருமணம் முடிந்த பத்து ஆண்டுகள், சொந்த ஊரில் இல்லாமல், வெளியூரில் இருந்தோம். என் மனைவி, ஐந்து வருடம் வேலைக்கு போனாள். பிள்ளை பிறந்தவுடன் வேலைக்கு செல்லவில்லை. என் வருமானத்தில், வீட்டு வாடகை மற்றும் அனைத்துமே பார்த்தோம். கடின உழைப்பால் சீட்டு, டெலிபோன் பூத், பைனான்ஸ், துணி வியாபாரம் வார வசூல் என, நல்ல முன்னேற்றத்துடன் இருந்தோம். பிறகு மகன் பிறந்தான். பிறந்த ஒரு வருடத்தில், இனி இங்கு இருந்தால் செலவு அதிகமாகும். எனவே, 'சொந்த ஊருக்கே போய் விடலாம். நாங்கள் மட்டும் இங்கிருக்கிறோம், நீங்கள் மட்டும் வேலை செய்துவிட்டு, வாரத்துக்கு ஒருமுறை வந்து போங்கள்...' என்றாள் என் மனைவி. நானும் சரி என்று சொல்லி, என் சொந்த ஊருக்கு செல்லாமல், அங்கிருந்து மூன்று கி.மீ., தூரத்தில், தனியாக வீடு போக்கியத்திற்கு பிடித்து, குடிபோனோம்.

நான், எம்.ஏ., படித்துள்ளேன். என் மனைவி பிளஸ் 2. அவர்கள் இனத்தில் திருமணம் செய்தால் கூட, இந்த அளவுக்கு வைத்திருக்க மாட்டார்கள். நான் வைத்திருந்தேன். ஒருநாள் என் மனைவி பஸ்சிற்கு நின்றிருந்தாராம். அதை, அவர் அத்தை பார்த்து, 'இப்படி பஸ்சிற்கு காத்திருக்கும் நிலைமை உனக்கு தேவையா...' என்றாராம். இதை, நான் வந்தவுடன் என்னிடம் சொன்னாள். உடனே, நான் வைத்திருந்த டி.வி.எஸ்., 50ஐ எக்ஸ்சேஞ்ச் செய்து, மீதி பணத்தை வட்டிக்கு வாங்கி, ஸ்கூட்டி பெப் வாங்கி கொடுத்தேன்.

அடுத்த வாரமே, எத்தனை நாள் வேலைக்கு செல்வது என்று நினைத்து, 'நான் எல்.ஐ.சி., ஏஜன்டாக வேண்டும்...' என்றேன். அதற்கு அவள், 'நான் சும்மாதானே இருக்கிறேன்; நான் ஏஜன்டாகிறேன்...' என்றாள். நானும் சரி என்றேன். நாங்களிருக்கும் ஊரிலிருந்து, 38 கி.மீ., தூரத்தில் டிரையினிங் போய், எல்.ஐ.சி., ஏஜன்டாகவும் தேர்வானார்.

என்னுடன் வேலை செய்யும் பையன், என் வீட்டிற்கு வருவான், தங்குவான். நான், அதைப் பெரிதாக கருத மாட்டேன். என் மனைவியை, 'அக்கா... அக்கா...' என்று கூறுவான். அவனுக்கு வயது 26. ஒருநாள், நான், என் பிள்ளைகள், மனைவி, அந்தப் பையன் அனைவரும் வெளியூர் திருமணம் ஒன்றுக்கு போனோம். அப்போது என் மனைவி, மகள் மற்றும் அந்தப் பையன் ஒரு சீட்டிலும், நானும், என் மகனும் ஒரு சீட்டிலும் உட்கார்ந்து போனோம்.

அந்த பையன், ஒரு பெண்ணை காதலிக்கிறான். திருமணத்திற்கு சென்ற போது, தன் காதலியின் வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்று அறிமுகப் படுத்தினான். நாங்கள் அன்றே ஊர் திரும்பினோம். ஆனால், அவன் மட்டும், தன் காதலி வீட்டில் தங்கிவிட்டு, இரண்டு நாள் கழித்து வந்தான். அந்த இரண்டு நாட்களும், என் மனைவி சோகமாகவே இருந்தாள். மூன்றாவது நாள், அவன் வந்ததும் சந்தோஷமாகி விட்டாள். என் மனைவி மீது கொண்ட நம்பிக்கையால், இதையும் நான் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.

அதன்பின், குழந்தையின் காது குத்து விழாவை நடத்த, என் மனைவி கேட்டு கொண்டதால், 80 ஆயிரம் ரூபாய் செலவு செய்தேன். இந்த விழாவை சாக்காக வைத்து, என் மனைவியும், அந்த பையனும் ஜாலியாக இருந்தனர்.

என் நண்பர்கள் இவற்றையெல்லாம் பார்த்து, என்னை கிண்டலடிக்க ஆரம்பித்தனர். அதன்பின், அவனுடன் பழக வேண்டாம் என்று, என் மனைவிக்கு அறிவுறுத்தினேன்.

உடனே, தாலியை கழற்றி வைத்துவிட்டு, பணம் ஒரு லட்சம், 13 சவரன் நகையும், கொடுக்க வேண்டும் என்றும், விடுதலை பத்திரத்தில் இருவருமே கையெழுத்திட்டு பிரிந்திடுவோம் என்றும் கூறினாள். இதற்கிடையில் தற்கொலைக்கு முயன்றாள்.

அதன்பின், அந்த பையனும், என் மனைவியும் அத்துமீறி பழகியதோடு, தனிக்குடித்தனம் போகிறோம் என்றனர். உடனே, பழனி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அவர்கள் விசாரித்ததற்கு, 'என்னுடன் வாழ முடியாது...' என்று, என் மனைவி கூறி விட்டாள். நான் உடனே, 'இனிமேல் தற்கொலை எதுவும் அவள் செய்தால் எனக்கும், அதுக்கும் சம்பந்தமில்லை...' என்று எழுதி வாங்கிக் கொண்டேன்.

நான், என் பிள்ளைகள் மற்றும் என் அம்மாவுடன், நான் வேலை செய்யும் ஊருக்கு வந்து விட்டேன். பிள்ளைகள் என் பொறுப்பில் தான் படிக்கின்றனர். தொடர்ந்து, பல வழிகளில் நச்சரித்து, என்னிடம் பணம் பெறுகிறாள் என் மனைவி. காதுகுத்து விசேஷ கடன், 80 ஆயிரம் என் மேல். இப்போது பிள்ளைகளை வைத்து, தினம் தினம் ரத்தக்கண்ணீர் வடிக்கிறேன். கடந்த ஜூன் மாதம் விவாகரத்துக்கு, கோர்ட்டில் அப்ளை பண்ணியுள்ளார். நான்கு வாய்தா முடிந்து விட்டது.

இப்போது, அந்த பையனுடன்தான் சுற்றுகிறாள். கோர்ட்டுக்கு கூட அவனைத்தான் கூட்டிக்கொண்டு வருகிறாள். நான் ஊருக்கு போனாலே, ஒவ்வொருத்தரும், ஒவ்வொரு விதமாக சொல்வதை கேட்டால், மனதுக்கு ரொம்ப கஷ்டமாக உள்ளது. இதுவரையில் பிள்ளைகளை பார்க்க, அவள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. என் பிள்ளைகளுக்கு, அம்மாவின் துர்நடத்தை புரிகிறது.

தீபாவளிக்கு, என் அக்கா வீட்டிற்கு பிள்ளைகளைக் கூட்டிப் போனேன். அதற்கு அவள், என் நண்பனுக்கு போன் செய்து, 'நான் இருக்கும் பக்கம், எதற்கு பிள்ளைகளை கூட்டி வர வேண்டும்...' என்று சத்தம் போட்டாளாம். அம்மா, இப்போது அவர்கள் வீட்டு ஆதரவும் இல்லை. எங்கள் வீட்டு ஆதரவும் இல்லை.

அம்மா வயசானவங்க. சாப்பாடு செய்து, துணி துவைப்பாங்க. மற்றபடி நான்தான் அனைத்து வேலைகளையும் செய்கிறேன். பயங்கர கஷ்டமாக உள்ளது. வீட்டிலுள்ள பொருட்கள் அனைத்தையும் எடுத்துச் சென்று விட்டாள் என் மனைவி. இப்போது சந்தோஷமாக உள்ளாராம். சுற்றியுள்ளவர்கள், 'பிள்ளைகளுக்காகவாவது சேர்ந்து வாழ்...' என்று சொன்னால், அவர்களை திட்டுகிறாள்.

அம்மா, என்னிடம் எந்த தவறான பழக்கமும் இல்லை. அம்மா, நீங்கள் தரும் முடிவை வைத்துதான் முடிவெடுக்க வேண்டும். என் மனைவிக்கு விவாகரத்து கொடுக்கவா, வேண்டாமா? பெரிய குழப்பமாக உள்ளது. என் உறவினர்கள் என்னை மறுமணம் செய்ய சொல்லி வற்புறுத்துகின்றனர். எனக்கு, என் பிள்ளைகள்தான் முக்கியம். என் பிள்ளைகளை அப்பா, அம்மா திட்டினாலே ஏற்க முடியவில்லை. இன்னொருத்தி வந்து திட்டினால், என்னால் தாங்கவே முடியாது. எனக்கு துளியும் ஆசை இல்லை. எல்லாமே என் பிள்ளைகள்தான். நான் மனிதனாக வாழ வேண்டும்; வாழ வழி சொல்லுங்கள்.

அன்பு மகன்.

அன்புள்ள மகனுக்கு—

நெருக்கமாய் கட்டிய மல்லிகைப்பூச் சரம் போலிருந்தது உன் ஆறுபக்க கடிதம். உன் மனதில் இருப்பதையெல்லாம், அப்படியே என் முன் கொட்டி விட்டாய். படித்து முடித்து, மனம் கனத்துப் போனேன்.

உனக்கும், உன் மனைவிக்கும் இடையே உறவு விரிசல் எதனால் ஏற்பட்டது என்று பார்ப்போமா?

* நீங்கள் இருவரும் கலப்பு திருமணம் செய்து கொண்டாலும், நீ தாழ்ந்த ஜாதியை சேர்ந்தவன் என்பதால் உனக்கு தாழ்வு மனப்பான்மையும், உன் மனைவி உயர் ஜாதியை சேர்ந்தவள் என்பதால், அவளுக்கு உயர்வு மனப்பான்மையும் தொடர்ந்திருக்கிறது.

* சீட்டு போடுதல், எஸ்.டி.டி., பூத் வைத்தல், பைனான்ஸ் கொடுத்தல், துணி வியாபாரம் பண்ணுதல், எல்.ஐ.சி., முகவர் பணி பார்த்தல் என, இப்படி பணம் சேர்க்கும் முயற்சியாகவே இருந்திருக்கிறது, உங்களின், 14 வருட திருமண வாழ்க்கை. குடிபோதை போல, பண போதையும் ஆபத்தானது. அந்த பண போதை, கணவன் - மனைவி இருவருக்கும் இடையே இருக்கும் அன்னியோன்யத்தை கெடுத்திருக்கிறது.

* நான் பெருந்தன்மையானவன், மனைவிக்கு சம உரிமை கொடுப்பவன் என்ற நினைப்பில், நீ, உன் மனைவிக்கு, பல தவறு செய்யும் சந்தர்ப்பங்களை அனிச்சையாய் ஏற்படுத்தி தந்திருக்கிறாய். மகன் பிறந்த ஒரு வருடத்தில், 'சொந்த ஊருக்கு போய் விடலாம்...' என, உன் மனைவி சொல்லி, உன்னை ஊருக்கு வெளியே, மூன்று கி.மீ., தூரத்தில் குடியமர்த்தியிருக்கிறாள்.

உன்னை வாரம் ஒருநாள் வந்தால்போதும் எனக் கூறி, வாரத்திற்கு ஆறு நாட்கள் நியாயமில்லாத சந்தோஷங்களை அனுபவித்திருக்கிறாள். உன் மொபெட்டை விற்று, மேலும் கடன் வாங்கியும் மனைவிக்கு ஸ்கூட்டி பெப் வாங்கிக் கொடுத்திருக்கிறாய். உன்னை மிஷினாக பாவித்திருக்கிறாள் உன் மனைவி.

* ஆரம்பத்திலேயே உன் மனைவியின் நண்பனை நீ கத்தரித்து விட்டிருக்க வேண்டும். நீயோ பேருந்தில், உன் மனைவியும், அவனும், ஜோடியாக பயணம் செய்யவிட்டிருக்கிறாய். உன் மனைவியும், அவனும், உன் வீட்டிலேயே இருக்கும் தனிமை சந்தர்ப்பங்கள் பலவற்றை ஏற்படுத்தி கொடுத்துள்ளாய். அவனின் இன்னொரு காதலியின் வீட்டாரை சமாதானப்படுத்த, உன் மனைவியை தூது அனுப்பியிருக்கிறாய். பிள்ளைகளுக்கு காதுகுத்து சாக்கில் உனக்கு, 80 ஆயிரம் கடன் ஏற்படுத்தி, காதலன் மற்றும் காதலன் சகாக்களுடன் கூத்தடித்திருக்கிறாள் உன் மனைவி.

* உன் மனைவி எமோஷனல் பிளாக்மெயில் செய்வதில் நிபுணி. 'காதலனுடன் பேசக் கூடாது என்கிறாயா, தாலியை கழற்றி எறிவேன்...' என்றிருக்கிறாள். காதலனின் கட்டளை பேரில்தான் உன்னுடன் தாம்பத்யம் வைப்பதை நிறுத்தியிருக்கிறாள். உனக்கு பிறந்த இரு குழந்தைகளை, உன்னை பிடிக்காததால், அவர்களையும் பிடிக்கவில்லை அவளுக்கு. தூக்க மாத்திரை சாப்பிட்டதாக மிரட்டியிருக்கிறாள். பலவிதங்களில் பணம் கறந்திருக்கிறாள். தூக்கு போட்டுக் கொள்ள போவதாக இன்னொரு சந்தர்ப்பத்தில் மிரட்டியிருக்கிறாள்.

திருமண பந்தம் மீறிய காதலில் ருசி கண்டுவிட்டாள் உன் மனைவி. விவாகரத்துக்கு பின், அவனைத்தான் அவள் மணந்து கொள்வாள் அல்லது தாலி கட்டாமல் குடும்பம் நடத்துவாள். காதலன் மூலம், அனைத்து வகை சித்திரவதைகளையும் அனுபவிக்கப் போகிறாள். அவள் வாழ்க்கையின் பிற்பகுதி நரகம்தான். சட்டப்பூர்வ விவாகரத்துக்கு சம்மதி. மறுமணம் செய்து கொள்ளாதே. காரணம், நீ கடிதத்தில் குறிப்பிடாத, ஒரு மெகா குறை, உன்னில் ஒளிந்திருப்பதாக யூகிக்கிறேன். பணம், பணம் என்று அலையாமல், குழந்தைகளை படிக்க வைத்து ஆளாக்கு.

என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us