தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : பிப் 03, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 03, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்பு சகோதரிக்கு —

நான் 20 வயது பெண். திருமணமாகி, மூன்று வருட மாகிறது. திருமணத்துக்கு முன், ஒருவரை உயிருக்குயிராக விரும்பினேன். ஆனால், ஒருதலையாக! இந்த விஷயம் அவருக்கே தெரியாது. பெற் றோர் வற்புறுத்தலால் எனக்கு வேறு இடத்தில் திருமணம் ஏற்பாடாகியது. விருப்பமில்லாமல் திருமணம் முடிந்தது.

ஆரம்பத்திலிருந்தே எனக்கு, 'எதன்' மீதும் நாட்டமில்லை; மனம் எதிலும் ஒட்டவில்லை. நான் விரும்பிய வாழ்க்கை கிட்டவில்லை என்ற காரணத்தாலோ அல்லது வேறு காரணத்தாலோ எனக்கு, 'அந்த' விஷயத்தில் சிறிதும் விருப்பம் ஏற்படவில்லை. என் கணவரின் மன திருப்திக்காக இணங்குகிறேன் என்றாலும் கூட, எனக்கு தானாக அந்த விருப்பம் ஒருநாள் கூட ஏற்பட்டது இல்லை.

இன்னும் பழைய கதையை நினைக்கிறது பைத்தியக்காரத்தனம் என்று எனக்கே தெரிகிறது. இப்படி கடமைக்காக ஒரு வாழ்க்கை வாழ்வதை விட, சாவது மேல் என சில சமயம் தோன்றுகிறது.

'அந்த' விஷயத்தைப் பற்றி நினைத்தாலே பிடிக்க வில்லை. இன்னும் சொல்லப் போனால், இரவு நேரம் ஏன் தான் வருகிறதோ என சில சமயம் தோன்றும். இரவு நேரம் வந்தாலே அழுகை வரும். எத்தனையோ இரவு கள் அழுது கொண்டே கழித்திருக்கிறேன்.

விருப்பமில்லாமல் வாழ்வதற்கு எனக்கு இஷ்டமில்லை. என் கணவருக்கு, அவரை மனதார நேசிக்கக் கூடிய மனைவியாக என்னால் இருக்க முடியவில்லை. இப்படி ஒரு மனைவி அவருக்கு தேவையா? என் சுயநலத்துக்காக இல்லை யென்றாலும், அவருக்காகவாவது நான் தற்கொலை செய்து கொள்ளலாம் எனத் தோன்றுகிறது. அவராவது ஒரு நல்ல பெண்ணை திருமணம் செய்து வாழ வேண்டும். இப்படி ஒரு மனைவியாக இருக்கவே எனக்கு வெட்கமாக இருக்கிறது.

நான் முன்பு விரும்பியவரை மறக்க முடியாதது தான் இதற்கு காரணமா அல்லது வேறு என்ன காரணம் என்றே எனக்கு புரியவில்லை. இனிமேல் அவரை நினைத்துக் கொண்டிருப்பது முட்டாள் தனம் என்று எனக்கே தெரிகிறது. எவ்வளவு முயன்றும் இந்த மூன்று வருடமாகியும், 'அந்த' விஷயத்தில் இன்னும் ஈடுபாடு வரவில்லை. வாழ்வதா, சாவதா? எனக்கு ஒரு வழி கூறுங்கள்.

இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென் றால், இப்போது எனக்கு, 'அட்வைஸ்' பண்ணுவதே நான் யாரை விரும்பினேனோ அவரே தான். என் திருமணத்திற்குப் பின், சந்தர்ப்ப சூழ்நிலையால் அவருக்கு இந்த விஷயம் தெரிய வந்தது. அன்றிலிருந்து இன்று வரை எனக்கு அறிவுரை கூறுவது அவர்தான்.

எப்பவோ சாகணும்ன்னு முடிவெடுத்தவள், அவருடைய, 'அட்வைசை கேட்டு' மனசை மாத்திக்கிட்டேன். அவர் என் நெருங்கிய உறவினர்; ஆதலால், எல்லாரிடமும் பேசுவது போல் அவரிடமும் சகஜமாக பேசுவதுதான் இப்போது எனக்குள்ள மன ஆறுதல்.

அவருக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. இந்த விஷயம் தெரிந்து, முதலில் சந்தோஷப்பட்டவள் நான்தான்.

அவர் சொன்னதைக் கேட்டு, நான் எவ்வளவோ திருந்தி இருக்கிறேன். என்றாலும், 'அந்த' விஷயத்தில் மட்டும் என்னை மாற்றிக் கொள்ள முடியவே இல்லை. அதை நினைக்கவே பிடிக்கவில்லை.

ஏதோ திருமணம் பண்ணி வைத்து விட்டனரே என்று வாழ்கிறேன். என் கணவரைப் பார்த்து எனக்கு ஒருநாள் கூட ஆசை வந்ததே இல்லை. நான் என்ன செய்வது? ப்ளீஸ்... எனக்கு ஒரு வழி கூறுங்கள்.

இப்படிக்கு,

அன்பு மகள்.


அன்பு சகோதரிக்கு—

உன் கடிதம் கிடைத்தது. விஷயம் அறிந்தேன்.

கடிதத்தில் உன் வயது 20 என்று எழுதியிருக்கிறாய். திருமணமாகி மூன்று வருடங்களாகிறது என்றும் எழுதியிருக்கிறாய். அப்படியானால், 17 வயதிலேயே திருமணமா? அந்த பதினேழு வயதில் நீ யாரையோ பார்த்து, மனதைப் பறி கொடுத்து, பின் அவரை நினைத்து ஏங்கியே - இப்போது கிடைத்துள்ள மணவாழ்வை பிடித்தமில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறாயா?

கண்ணம்மா... பதினேழு வயது என்பது ஒரு விதமான குழந்தைத்தனமும், வாலிபமும் கலந்து நிற்கும் கன்றுக்குட்டிப் பருவம்... இந்த வயதுப் பெண்களின் மனசுக்குள் ஒரு ஹீரோ இருப்பான்... இவ்வளவு சொல்வானேன்... ஏன், எனக்குள் கூட ஒருவன் இருந்தான். இதை, இப்படிச் சொல்லிக் கொள்வதில் நான் வெட்கப்படவில்லை.

என் வயசுப் பெண்களிடம், 'உங்களது பதினேழு வயசில், நீங்கள் யாரையாவது காதலித்திருக் கிறீர்களா' என்று கேட்டு பார்... புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., கண்ணதாசன், நடிகர் திலகம், பட்டோடி, தர்மேந்திரா, பாலமுரளி கிருஷ்ணா, ஜெயகாந்தன்... அவ்வளவு உயரப் போகாவிட்டாலும், எதிர் வீட்டிலிருக்கும் பையன், மாடியில் குடியிருக்கும் இளைஞன், அத்தை பிள்ளை, மாமா பிள்ளை - சில சமயம் மாமாவே...

அந்த வயசில் அப்பா, அண்ணன், தம்பி தவிர - மூன்றாம் மனிதரிடம் பழகுகிற வாய்ப்பே குறைச்சல். கொஞ்சம் பேசி, ஜோக் அடித்து, வாய் விட்டுச் சிரித்து அல்லது சிரிக்கச் செய்தால் போதும், மனசு, பாவாடை தாவணியை வரிந்து கட்டிக் கொண்டு டூயட் பாடி, ஆடத் தொடங்கி விடும்.

இந்த வயசில், பள்ளிக்கூட வாத்தியார்களின் மீது அநியாயத்துக்கு மையல் கொண்ட பெண்கள் கூட உண்டு.

என் சிநேகிதி ஒருத்தி, ஜெய்சங்கருக்கு கல்யாணம் என்கிற செய்தியை பத்திரிகையில் படித்து விட்டு, தற்கொலை முயற்சி வரைக்கும் கூடப் போய் விட்டாள். நல்ல வேளை - அவள் தன் முடிவுக்கு காரணம் என்று எதையும் எழுதி வைக்கவில்லை. ஆனால், சினேகிதிகளான எங்களுக்குத் தெரியும்.

அப்புறம் இரண்டு மூன்று வருடங்களுக்குப் பின் ஒல்லியாய், உயரமாய், ஒட்டடைக் குச்சிக்கு பேன்ட், ஷர்ட் மாட்டி விட்டாற்போல ஒருவர் மாப்பிள்ளையாய் வந்து சேர்ந்தார். அப்போது கூட அவள், 'என் ஜெய் எங்கே, இவர் எங்கே...' என்று முகத்தை மூடிக் கொண்டு அழுதாள் என்றால் பார்த்துக் கொள்ளேன்!

இப்போது அவள் கோயமுத்தூரில் இருக்கிறாள். இரண்டு பெண், ஒரு பிள்ளை... ஒரு பெண் வெளிநாட்டில்... பையனுக்கு வரன் பார்த்துக் கொண்டிருக்கிறாள். ஒரு பெண் கல்லூரியில்... இப்போதெல்லாம் பழசைப் பற்றிப் பேசினாலே விழுந்து விழுந்து சிரிக்கிறாள்.

அது மட்டுமில்லை... இந்த விஷயத்தை தன் கணவரிடமும் சொல்லி இருக்கிறாள் போல... நான் ஒருமுறை கோவை போயிருந்தபோது, என் சினேகிதியின் கணவரே என்னிடம் கிண்டலாகச் சொன்னார்...

'எங்க பொண்ணுக்கு ஜெய்சங்கர் பிள்ளைய வேணுமானாப் பார்க்கலாமா மேடம்? பாவம்... உங்க சினேகிதி, ஜெய்யை கல்யாணம் தான் செஞ்சுக்க முடியலே, குறைஞ்ச பட்சம் சம்பந்தியாவாவது ஆகட்டுமே...' என்றார்.

நாங்கள் அத்தனை பேருமே விழுந்து விழுந்து சிரித்தோம்.

நீ இத்தனை வேதனைப்பட்டு எழுதியிருக்கிறபோது - நான் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் இப்படி எழுதுவது உனக்கு வருத்தமாக இருக்கிறதா? நீ கூட, சில வருடங்களுக்குப் பின் இப்படித்தான் சிரிப்பாய்.

இந்த உணர்ச்சிக்குப் பெயர் - கன்றுக்குட்டிக் காதல் என்றே சொல்வர். கொஞ்ச நாள் இந்த அலைக்கழிப்பு இருக்கும்; போகப் போக சரியாகி விடும்.

இது ஒரு புறம் இருக்கட்டும். சாதாரணமாய் ஒரு சமயம் இல்லாவிட்டாலும், இன்னொரு சமயம், கணவனிடம் அன்பாய், ஆசையாய், அணைப்புக்குள் அடங்குவதே பெண்ணின் இயல்பு. மேலும், அவர் நல்லவராக, கண்ணியமானவராக இருக்கும் போது இந்த விருப்பம் இருக்க வேண்டும்.

நீயோ, வெறும் மரக்கட்டையாக இருப்பதாக எழுதி இருக்கிறாய்... எப்போதுமே இந்த எண்ணம் இல்லை என்கிறாய். இரவையே வெறுக்கிறாய், இது தான் கொஞ்சம் உறுத்துகிறது.

நீ ஏன் ஒரு லேடி டாக்டரை, பார்க்கக் கூடாது? உன்னுடைய உடம்பில், உறவுக்கு ஏற்ற அளவுக்கு வளர்ச்சிகள் தோன்றி விட்டதா என்பதை மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். இப்படியொரு நிலை வரக் கூடாது என்பதற்காகத் தான், 'பெண்ணுக்கு திருமண வயது 21' என்று நிர்ணயித்திருக்கின்றனர். சாதாரணமாய், 18 வயதில் பெண்ணுக்குள் மாற்றங்கள் ஏற்படத் துவங்கி விடும்.

இன்னொரு விஷயம்... மிகுந்த நல்லவரே ஆனாலும், ஏற்கனவே நீ காதலித்த மனிதரிடம் இது பற்றி பேசவோ, அடிக்கடி சந்திப்பதோ தேவையில்லை என்றுதான் சொல்வேன். அவரை பற்றிய நினைப்பு மனசில் இருக்கும் வரை, இந்த எண்ணமே உன் அந்தரங்க வாழ்க்கைக்கு எதிரியாக இருக்கும்!

கணவரிடம் அன்பை வளர்த்துக் கொள்ள முயற்சி செய். உன், 'அவரை' விடவும் அழகானவர், அன்பானவர் உலகிலேயே இல்லை என்று நினை; தற்கொலை எண்ணத்தைத் தூக்கிப் போடு!

முதல் நாள் தயக்கம் மறுநாள் நெருக்கம் முறையே துவங்கும் இணைபவர் இயக்கம்! கவிஞரின் வரியை மெய்யாக்கு!

என்றென்றும் தாய்மையுடன்,

சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us