தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : பிப் 10, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 10, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மாவுக்கு —

நான் கல்லூரியில் முதலாண்டு பயின்று வரும் பெண். என் அக்கா வீட்டுக்காரரின் தம்பியை விரும்புகிறேன். நான், 9ம் வகுப்பு படிக்கும் போதே என் அக்காவிற்கு கல்யாணம் நடந்து விட்டது. அப்போதிருந்தே, நான் அவனை விரும்பினேன். ஆனால், அவனிடம் கூறவில்லை.

அவன், ஒருத்தியை விரும்பினான். ஆனால், அந்த பெண்ணிற்கு வேறு இடத்தில் கல்யாணம் நடந்து விட்டது. பிறகு, அவன் பாலிடெக்னிக் படிக்கும் போது, அங்கு ஒரு பெண்ணை விரும்பினான். அதுவும் எனக்கு தெரிந்து, நான் வருந்தினேன். ஆனால், அவனை என்னால் மறக்க முடியவில்லை. ஆனால், என்னிடம் மிகவும் நல்லபடியாக பழகுவான்; அனைத்தையும் என்னிடம் கூறுவான்.

என்னிடம், 'எவளையும் நான் விரும்பவில்லை; என் நண்பர்கள் பொய் சொல்வர்...' என்று கூறுவான். ஒருநாள் நானும், என் தோழியும் விளையாட்டாக அவனுக்கு போன் செய்து, 'ஐ லவ் யூ' என்று சொல்ல, அதையே அவன் மனதில் வைத்துக் கொண்டு, என்னிடம் யாரும் இல்லாத சமயம் பேச முயன்றான்.

ஒரு நாள் என்னிடம், 'ஐ லவ் யூ' என்றான். பிறகு, 'என்னை லவ்வராக நினைத்தாலும் ஓ.கே., அண்ணனாக நினைத்தாலும் ஓ.கே.,' என்றான். என் அக்காவிற்கு இதில் ரொம்ப இஷ்டம். ஒரு வாரம் கழித்து சம்மதித்தேன்.

ஆனால், நான் சம்மதம் சொல்லுகிற வரைக்கும், அவனிடம் இருந்த ஒரு ஆர்வம் அதன் பிறகு இல்லை. எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அழுது கொண்டே இருந்தேன். என்னுடைய படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை.

பிறகு தானாகவே வலிய வந்தான்; பேசினான். அடுத்து நான் கேட்பதற்கு முன்னே, அவன் இரண்டு வாரம் என்னிடம் பேசாமல் இருந்ததற்கு, பல காரணங்கள் உண்டு என்று கூறி, 'அதை சொல்ல மாட்டேன்' என்று கூறினான். நானும் விட்டு விட்டேன்.

அவன் உண்மையாக என்னை விரும்புகிறானா, இல்லையா என்று தெரிவதற்காக ஒரு ராங்கால் செய்து, 'உன் னுடைய மனைவி பேசுகிறேன்...' என்று (வாய்சை மாற்றி) கூறினேன். அதற்கு அவனும் ரொம்ப டென்ஷனாகி, என்னிடம் இருந்து உண்மையை தெரிந்து கொள்ள முயன்றான். ஆனால், முடியவில்லை. எனக்கு ஒரே குழப்பமாகவும், பயமாகவும் உள்ளது. அவன் உண்மையில் என்னை விரும்புகிறானா, இல்லையா?

தங்கள் பதிலை எதிர்பார்க்கும்

அன்பு மகள்.

அன்பு மகளுக்கு—

உன் கடிதம் கிடைத்தது. கல்லூரியில் முதலாண்டு படிக்கும் நீ, 9ம் வகுப்பு படிக்கும் போதே, உன் அக்காவின் மைத்துனனை காதலித்ததாக எழுதியிருக்கிறாய்...

அவனோ, ஏற்கனவே ஓரிரண்டு பெண்களிடம், 'ஐ லவ் யூ' என்று வழிந்து விட்டு, அவர்கள் எல்லாம் காலா காலத்தில் கல்யாணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலானதும், உன் பக்கம் திரும்பியிருக்கிறான்.

அவன் இப்படி மலருக்கு மலர் தாவும் வண்டாக இருந்தாலும், 'பரவாயில்லை... என்னையும் தான் முகர்ந்து பாரேன்' என்று கூறுகிற அளவுக்கு முட்டாள்தனமாக அவனைக் காதலிக்கிறாய்.

உனக்கு மானம் காக்கும் மேலாடையில் இருக்க வேண்டிய காதல், அவனைப் பொறுத்த வரையில் மூக்கைச் சிந்தும் கைக்குட்டையாகவே இருந்திருக்கிறது என்று நான் சொன்னால் வருத்தப்படக் கூடாது!

நீயே எழுதியிருப்பதுபோல — எதுவுமே கையில் கிடைக்கிற வரையில்தான் ஏக்கமும், தவிப்பும்... கிடைத்த பின், 'ப்பூ... இவ்வளவு தானா' என்கிற அலட்சியம் வந்து விடுகிறது. இது, ஆண்களுக்கு மட்டுமல்ல; பெண்களுக்கும்தான்!

மேலும், 'நீ என்னை அண்ணனாக நினைத்தாலும் ஓ.கே., லவ்வராக நினைத்தாலும் ஓ.கே.,' என்று, அவன் கூறியதாக எழுதியிருக்கிறாய். எத்தனை அபத்தமாக இருக்கிறது.

தன் தங்கை தெருவில் நடந்து போகும் போது, ஒரு அண்ணனின் பார்வை - அவளுக்குப் பாதுகாப்பாகத் தான் தொடருமே அல்லாது அவளது உடம்பை மேயாது... அது காதலனின் சபலப்பட்ட மனசின் அடையாளம்.

ஒரு அண்ணன் எப்படி இருப்பான் அல்லது எப்படி இருக்க வேண்டுமென தெரியுமா?

தங்கையின் படிப்பில் அக்கறையுடையவனாக இருக்க வேண்டும்.

ஆறு வயசு அண்ணன், தன் நாலு வயசு தங்கையின் சுட்டு விரலைப் பிடித்து நடப்பான். அது ஒரு விதமானப் பொறுப்புணர்ச்சி. நாம்தான் நம் தங்கைக்கு எல்லாம் என்கிற நினைப்பு.

காதலன், படிப்பை, 'கட்' அடித்து விட்டு, சினிமாவுக்கு வருகிறாயா என்பான். கடற்கரையிலும், பிரவுசிங் சென்ட்டரிலும் சமோசாவும், கோக்கும் வைத்துக் கொண்டு மணிக்கணக்கில் பேசி, 'ஓ.கே., டார்லிங்... நாளைக்கு இதே இடத்துக்கு, இதே நேரத்துக்கு வந்து விடு' என்பான். அப்படி வர முடியாமல் போனால், முறுக்கிக் கொண்டு போவான். இல்லாவிட்டால் இன்னொருத்தியுடன் இழையோ இழை என்று இழைந்து, காதலியை வெறுப்பேற்றுவான்.

அதனால், இப்படி எதற்கும் ஓ.கே., என்கிறவன் ஒன்றுக்கும் பிரயோசனப்பட மாட்டான் என்பதை புரிந்து கொள். உன் அக்காவிற்கு என்ன... தன் தங்கையே தனக்கு ஓரகத்தியாய் வந்து விட்டால் பிரச்னை இல்லையே என்கிற கோணத்தில் பார்ப்பாள். அவளுக்கு ஓரகத்தியாக வேண்டுமென்பதற்காக, ஒரு ஸ்திர புத்தி இல்லாதவனை மணந்து, காலம் முழுக்கத் திண்டாடாதே!

தொலைபேசியில் குரலை மாற்றிப் பேசுவது, சினேகிதிகளிடம், 'எனக்கும் ஒரு லவ்வர் இருக்கானாக்கும்...' என்று மார் தட்டிக் கொள்வது, இதெல்லாம் சிறுபிள்ளைத்தனம்.

நம் எல்லாருக்குமே இரண்டு மனம் இருக்கிறது கண்ணம்மா... ஒன்று வெளிமனம்; இன்னொன்று ஆழ்மனம்.

வெளிமனம் பல விதமாய் நம் கருத்தையும், கவனத்தையும் திசை திருப்பி, 'இது ரொம்ப நல்லாயிருக்கு... இது இல்லையின்னா நான் உயிரோட இருக்க மாட்டேன்' — இப்படி எல்லாம் நினைக்க வைக்கும்; சொல்ல வைக்கும்.

ஆனால், ஆழ் மனம், நமக்கு எது நல்லதோ... அதை மட்டுமே சொல்லும்... 'வேண்டாம். இவன் சரிப்பட்டு வர மாட்டான். ஒழுங்காய் படி...' இப்படி இது சொல்வதெல்லாம் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாத - விழுங்க முடியாதக் கசப்பாகத்தான் இருக்கும்.

நீ பயப்படுவதாக எழுதியிருக்கிறாயே... அது, இந்த மனதின் குரலைக் கேட்டுத்தான். கொஞ்சம் காது கொடுத்துக் கேள். அப்புறம் உனக்கு யாருமே ஆலோசனை கூற வேண்டாம். உனக்கு எது நல்லதோ அந்த பாதையில் நீயே நடப்பாய்!

இப்போது நீ படிக்கிற பருவத்தில் இருக்கிறாய்... ஒழுங்காய் அதை கவனி!

என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.
***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us