தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : பிப் 24, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 24, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மாவிற்கு —

நான் 25 வயது பெண். படித்திருக்கிறேன். திருமணமாகி நான்கு வருடம் ஆகிறது. இரண்டு குழந்தைகள் உள்ளன. என் கணவர் கடை நடத்துகிறார். கடை யில் பெரும்பாலும் நானே இருப்பேன். குழந்தைகள் மீது அவருக்கு கொள்ளை பிரியம். நான் இல்லாமல் கூட இருப்பார்; குழந்தைகள் இல்லாமல் இருக்க மாட்டார்.

என் மீது அதிக பாசம் எல்லாம் கிடையாது. ஏதாவது கேட்டாலும் வாங்கித் தர மாட்டார். இருந்தாலும், ஏதோ பந்தத்திற்கு கட்டுப்பட்டு வாழ்க்கையை நடத்துகிறோம். என்னைப் பொறுத்தவரை, அவர் கவுரவமானவர், பொது சேவையில் நாட்டமுடையவர். தன்னோடு சேர்ந்து, தன் மனைவி கஷ்டப்பட்டாலும், பலனை மற்றவர்களே அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர். இப்படி இருக்கும்போது ஆரம்பித்தது ஓர் பிரச்னை...

கடந்த மூன்று வருடமாக, எங்களின் வாடிக்கையாளர் ஒருவர், என்னிடம் வந்து என்னை நேசிப்பதாகக் கூறுகிறார். முதலில் அவர் கூறியபோது அதிர்ச்சியடைந்தேன் நான். காரணம், நான் எப்போதும் கலகலப்பாக பேசும் சுபாவம் உடையவள்; அதுதான் காரணமா என்று நினைத்து அவரிடம், 'நானும் மணமானவள், நீங்களும் மணமானவர்... இதெல்லாம் நமக்கு ஒத்து வராது. அவரவர் வழியில் நாம் செல்வோம். அதிகமாக நான் பேசியதுதான் உங்களை கவர்ந்தது என்றால், பேசுவதையே நிறுத்தி விடுகிறேன்...' என்றேன்.

'நான் கொண்டது காதல்தான் என்று சொல்லவில்லை. ஏதோ ஒரு சக்தி உன்னிடம் உள்ளது. அது என்னை ஈர்க்கிறது. ஆனால், நீங்கள் பேசாமல் இருந்து விட்டால் எனக்கு ஷாக்காகி விடும். அதனால், பேசுவதை நிறுத்தி விடாதீர்கள்...' என வேண்டினார் அவர்.

அவரிடம் தொடர்ந்து சகஜமாக பழகி, அவரை மாற்ற எண்ணினேன். ஆனால், கணவரிடம் அவரைப்பற்றி எதுவும் சொல்லவில்லை. ஆனால், அவரின் கண்ணியமான பேச்சும், ஊருக்குள் அவருக்குள்ள மரியாதையும் எனக்குள் சில மாற்றங்களை உருவாக்கிவிட்டதாகத் தோன்றுகிறது.

நாள் ஆக ஆக, இரவில் தூங்க முடியவில்லை. பாதை மாறி விடுவேனோ என்று பயமாக உள்ளது. அவரை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்; பேசிக் கொண்டே இருக்க வேண்டும் போல் உள்ளது.

ஆனால், அது தவறென்றும் புரிகிறது. அவர் எப்போதும் மரியாதையுடன் தான் பேசுகிறார். எங்கள் எதிர் கடையில் பைனான்ஸ் நிறுவனம் நடத்துகிறார். இருவருமே இடம் மாறுவது என்பது முடியாத காரியம். என் மனதில் தற்போது நட்பு மீறிய ஏதோ ஒன்று... காதல் என்று ஒத்துக் கொள்ள முடியாது. மனம் குழம்பி ஏதாவது தவறு செய்து விடுவேனோ என பயமாக உள்ளது.

உங்கள் பதிலை எதிர்பார்க்கும்

அன்பு மகள்.


அன்பு மகளுக்கு —

உன் கடிதம் கண்டேன். மணமாகி நல்ல குணமுடைய குழந்தைகளின் மேல் கொள்ளை பிரியம் வைத்துள்ள, பொது சேவையில் மிகவும் நாட்டமுள்ள கவுரவமான கணவரை பெற்றிருந்தும், எங்கிருந்தோ வந்து முளைத்த ஒரு பைனான்ஸ்காரனிடம் மனதை பறிகொடுத்து, அனாவசியமாய் அல்லாடுகிறாய்.

மகளே, நல்ல கண்ணியமான குடும்பப் பெண்ணிடம், ஒருவன் தைரியமாக, நேசிப்பதாகச் சொன்னால், அந்த மனிதன் எந்த அளவிற்கு மதிக்கத்தகுந்தவனா இருப்பான் என்பதை, நீயும் கொஞ்சம் நினைத்துப் பார். இப்படி ஒருவன் உன்னை கேட்க வேண்டுமானால், உன்னிடம் உள்ள எது அவனை சலனப்படுத்தியது அல்லது இப்படிக் கூற தைரியம் கொடுத்தது எது?

'கலகலப்பாக எல்லாரிடமும் பேசுவேன்' என்கிறாய்... அது ஒன்று தான் என்றால், இவனைத் தவிர மற்றவர்கள் ஏன் உன்னிடம் தாங்கள் உன்னை நேசிப்பதாகக் கூறவில்லை.

நான் சொல்கிறேன் என்று வருத்தப்படக் கூடாது. சில பெண்களுக்கு, 'நாம், நமது பாதுகாப்பான வரைமுறையை கடந்து போய் கொண்டிருக்கிறோம். எதிராளியின் மனசுக்குள் தேவையில்லாத கிளர்ச்சியை உண்டு பண்ணுகிறோம்' என்பது தெரிந்தே, இது போன்ற காரியங்களை ஆர்வத்துடன் செய்வர்.

எல்லாமே நாம் பேசுகிற விதத்திலும், இடம் கொடுக்கும் விதத்திலும் தான் இருக்கிறது.

1. கணவர் இல்லாத நேரத்தில், அயல் மனிதரிடம் அநாவசியமாக சிரித்துப் பேசுவது.

2. பேச்சின் எல்லை தாண்டி, மட்டமான ஜோக்குகளிலும், விரசமான நையாண்டிகளிலும் வாய் கொடுத்து, எதிராளியின் சபலத்தை கிளப்பி விடுவது.

3. கணவர் அல்லாத ஒருவர், 'உனக்கு இந்த புடவை நல்லா இருக்கிறது. உன் கண்களுக்கு காந்த சக்தி இருக்கிறது' என்றெல்லாம் ரசித்துக் கூறினால், மேலும், அவரது ரசனைகளுக்கு மதிப்பு கொடுத்து, இன்னும் இன்னும் அழகாக, கவர்ச்சியாக அலங்கரித்து அவர்கள் முன்னால் நிற்பது.

4. குடும்பத்தில் கணவன், மனைவி என்று இருக்கிற கோபதாபங்கள், வருத்தங்கள், தனிமையான நேரங்களில் கணவர் மட்டும் மிகச் செல்லமாய் அழைக்கும் வார்த்தைகள், கணவரின் பலவீனங்கள், புகுந்த வீட்டில் பாதுகாக்கப்பட வேண்டிய பொதுவான ரகசியங்கள் — இவையெல்லாம் அயல் மனிதனிடம் சொல்லி அழுவது.

5. எதிராளி எத்தனைதான் அழகாக இருந்தாலும், நமக்கு நம் கணவர்தான் மன்மதன் என்கிற எண்ணம் இல்லாமல், இருவரையும் ஒப்பிட்டு பேசுவது. உதாரணம்...

'உங்களுக்கு டார்க் கலர் சட்டையெல்லாம் எடுப்பாக இருக்கும். நீங்கள் நல்ல சிவப்பு. நீங்கள் எது போட்டாலும் நல்லா இருக்கும். இதே சட்டையை எங்க வீட்டுக்காரர் போட்டால் பபூன் மாதிரி இருக்கும்' — இப்படி

6. ஒருநாள் அல்லது ஒருபொழுது இந்த அயல் மனிதர்களை காணாவிட்டால், தவித்து தண்ணீராய் போய், வாசலுக்கும், உள்ளுக்குமாய் அலைந்து, அவன் வந்தவுடன் உரிமையுடன் கோபித்து, சிணுங்கி...

மேற்கண்ட இதெல்லாமே, நல்ல குடும்பப் பெண்களை அகல பாதாளத்துக்குள் இழுத்துப் போகும் வழிகள் கண்ணம்மா... கண்ணதாசனின் ஒரு வரியை நினைத்துப் பார்... 'ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதி இல்லை...'

மற்றபடி எல்லாக் கணவருக்குமே மனைவியை இழுத்து வைத்துக் கொஞ்சவோ, நீ அழகாய் இருக்காய் என்று சிணுங்கிக்கவோ தெரிந்திருக்காது!' தெரிந்தாலும் நேரம் இருக்காது; நேரம் இருந்தாலும் சொல்லத் தெரியாது; ஒருவித கூச்சம் தடுக்கும்.

என்றைக்குமே வாழைத் தோப்பின் சொந்தக்காரன், தான் வளர்க்கும் வாழைக் கன்றுகளைப் பார்த்து, 'ஆஹா எப்படி இருக்கிறது!' என்று ரசிக்க மாட்டான். ஆனால், தேடிப் போகிறவர்கள்தான் ரசிப்பர்; வியப்பர்; அக்கம் பக்கம் யாரும் இல்லையென்றால், ஒரு தாரை அறுத்து ஓட நினைப்பர்.

ஆதலால், புதிதாய் வந்தவனுக்கு கதவை சாத்து; ஒரு தாழ்ப்பாளுக்கு ரெண்டு தாழ்ப்பாள் போடு. மனசு அலைபாய்ந்தால் கணவருக்கும், குழந்தைகளுக்கும் என்னென்ன விதத்தில் எல்லாம் உபயோகமாக இருக்கலாம் என்று யோசி. இது காதலில்லை, நட்பு என்பது எல்லாம்... நம் காதில் நாமே பூச்சுற்றிக் கொள்வது. நல்ல மனைவியாக இரு!

என் ஆசிகள்!

என்றென்றும் தாய்மையுடன்,

சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us