sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்!

/

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஜூலை 07, 2013

Google News

PUBLISHED ON : ஜூலை 07, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்புள்ள சகோதரிக்கு —

நான் 34 வயதுபெண். +2 படித்துள்ளேன். தம்பி ஒருவன், அம்மா, அப்பா என்று அளவான, வளமான குடும்பம். எனக்கு எட்டு வருடங்களுக்கு முன் திருமணம் ஆனது. கொஞ்சம் கூட பொருத்தமில்லா வாழ்க்கை. கணவருக்கு குடி, சிகரட், சீட்டு என்று எல்லா கெட்ட பழக்கங்களும் இருந்தன. நிலையான புத்தி இல்லை. சந்தேகம், அடி, உதை. என்னுடன் பேசுவதில்லை. தாழ்வு மனப்பான்மை. ஹிஸ்டீரியா மாதிரி நடந்து கொள்வார். இதனால் பிரிந்து விட்டேன்.

இரண்டாவது திருமணத்திற்கு ஏற்பாடு செய்து, 50 மாப்பிள்ளைகளாவது என்னைப் பெண் கேட்டு வந்திருப்பர். நான் கருப்புதான். ஆனால், லட்சணமாக இருப்பேன்.

என் அப்பா நல்லவர், திறமையானவர். ஆனால், குடிப்பழக்கம் காரணமாக மூன்று வருடங்களுக்கு முன் ஹார்ட் அட்டாக்கில் இறந்தார். தம்பிக்கு கல்யாண வயசாச்சு! இந்த சூழ்நிலையில், 10 வயது பெண் குழந்தை உள்ள ஒருவர் ஜாதகம் வந்தது. பொருத்தம் பார்த்ததில் எல்லாம் சரியாக இருந்தது. ஆள் வைத்து விசாரித்த போதும் நல்ல விதமாக கூறினர்.

பெண் பார்த்த போது, ஒரு மணி நேரம் பேசினோம். அவரைப் பற்றி, குழந்தையைப் பற்றி, முதல் மனைவி இறந்தது, எதிர்காலம், நிகழ்காலம் என்று அனைத்தும் பேசினோம். அவருக்கு இரண்டு அண்ணன். ஒரு அக்கா. அவர்கள் சொத்து விஷயத்தில் இவரை ஏமாற்றி விட்டதாக கூறினார். முதல் மனைவி இறந்த சோகத்தில் இவர் இருந்த போது, பங்கு குறைவாகக் கொடுத்ததாகவும், குழந்தையை மூன்றரை வயதில் இருந்து அவரே கவனித்து வருவதாகவும், ஐந்து வருடமாக ரொம்பக் கஷ்டப்பட்டதாகவும் கூறினார்.

ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணினோம். கல்யாணம் நடந்து இரண்டு நாள் தான் சந்தோஷம். மூன்றாவது நாளிலிருந்து குடி ஆரம்பித்தது. திடீரென்று இரவு நேரங்களில் வீட்டுக்கே வருவதில்லை. பகலில் வெளியே போனால், மறுநாள் காலை தான் வருவார். இப்படியே ஒரு மாதம் போனது.

இரவு வராமலிருப்பதை பற்றி கேட்டால் பிரச்னைதான். அடி, உதை சித்ரவதை. 'அப்படித்தான் போவேன், நீ யார் கேட்பதற்கு? நீ! எங்கிருந்தோ வந்த நாய்; நீ யார் என்னை கேள்விகேட்க! என் வீடு, என் சவுகரியம். என் இஷ்டத்துக்கு வருவேன், போவேன். நீ கேட்கக் கூடாது. உன் கூட குடும்பம் நடத்த உன்னை கல்யாணம் பண்ணலை. வேலைக்காரியா இருக்கத் தான். என் பிள்ளைக்கு சமையல் செய்து போட, அவளைக் கவனிக்கத் தான் உன்னை கட்டினேன்...' என்றார்.

என் சொந்தங்களுக்கு ஓரளவு அவர் குணம் புரிந்தது. 'அவர் எங்கேயோ போகட்டும், வரட்டும். ஆடி அடங்கட்டும். விட்டு விடு, கண்டுக்காதே. வீட்டுக்கு சாமான்கள் வாங்கிப் போட்டால், சமையல் செய். அவனையும் சாப்பிடச் சொல். நல்லா கவனி. கண்டிப்பா மாறுவான்...' என்று கூறினர்.

அவருடைய உண்மையான சுயரூபம் இது தான்—

முதல் மனைவி இருக்கும் போதே! குடும்ப நண்பர் என்று சொல்லி ஒரு குடும்பத்துடன் பழகி, அந்தப் பெண் இவருடன் அந்தரங்கத் தொடர்பு வரை நெருங்கி விட்டது.

இதை முதல் மனைவி கேட்டதால் இவர் திட்ட, தற்கொலை செய்து கொண்டாள். பின் அந்தப் பெண் தாராளமாக வந்து போய் இருக்கிறாள். அவருடைய புருஷனுக்கு விஷயம் தெரிந்து அவன் கேட்கப் போக, இவர், அவனை அடித்து, உதைத்து விட்டார். தன் மனைவியை விட்டு அவன் பிரிந்து விட்டான். இப்போ அந்தப் பெண் வேறு ஊரில். கல்யாண வயதில் ஒரு மகன், அம்மா, தம்பி என்று சொந்தங்களுடன் இருக்கிறாள். இவர் அனைவருக்கும் தெரிந்தே அங்கு போக வர இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் என்னைக் கல்யாணம் செய்து கொண்டுள்ளார். அவர் திருந்தவும் இல்லை; திருந்த முயற்சிக்கவும் இல்லை. இனி மேல் அந்த உறவை விடுவதாகவும் இல்லை. இப்போ ஒருநாள் விட்டு ஒரு நாள் , அவளைத் தேடி அவள் ஊருக்கே போ# காலையில் வீட்டுக்கு வருகிறார்.

நானும் பொறுமையிழந்து கேட்ட போது, 'புதுசா எனக்கு இன்னைக்கு உறவு கிடைச்சிருக்கறதால அவளை விட முடியாது. அவங்களுக்கு நான் நன்றிக்கடன் செய்யறேன். காலத்திற்கும் இப்படித்தான் இருப்பேன். உன்னால் என்ன செய்ய முடியும்! பார்த்துக்கிட்டு சும்மா இரு. உன்னை எனக்குப் பிடிக்கலை...' என்று கூறுகிறார்.

என் வாழ்க்கையை நாசம் பண்ணின இவங்க ரெண்டு பேரையும் அவமானப்படுத்தி போலீசில் புகார் கொடுக்கப் போகிறேன்.

முடிவு எதுவாக இருந்தாலும், சந்திக்கறது என்ற தீர்மானத்துடன் இருக்கிறேன். எல்லாரையும் முட்டாளாக்கின இவரை சும்மா விடக் கூடாது. இது தான் என் முடிவு.

இப்படிக்கு,

பெயர் வெளியிட விரும்பாத வாசகி.


அன்பு சகோதரிக்கு —

உன் கடிதம் கிடைத்தது. இரண்டாவது மணவாழ்க்கையும் தோல்வியுற்றது மிகவும் வருந்தத்தக்கது தான். குடிகாரராக இருந்தாலும், நல்ல குணமுடையவராக இருந்தால், நம்மால் முடிந்த அளவுக்குத் திருத்த முயற்சிக்கலாம் அல்லது குடியை மறப்பதற்கான சிகிச்சைக்கு அவரைச் சம்மதிக்க வைக்கலாம்.

ஆனால், முதல் மனைவியின் தற்கொலைக்குக் காரணமாயிருந்தது மட்டுமன்றி, தற்போது வேறு ஒரு பெண்ணுடன் ரகசியத் தொடர்பும் வைத்து, கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாமல் நடந்து கொள்ளும் மனிதருக்கு, எந்த சிகிச்சையும் பலனில்லை.

எனக்கு ஒன்றுதான் புரியவில்லை. அந்த மனிதனுக்கு முதல் மனைவி உயிருடன் இருக்கும் போதே - நண்பனின் மனைவியுடன் தொடர்பு ஏற்பட்டதாகவும், அதைக் கேட்டதால் இந்த மனிதன் தன் மனைவியைத் திட்ட, அவள் தற்கொலை செய்து கொண்டதாகவும் எழுதியிருக்கிறாய்.

அப்படியானால், இவன் எதற்காக, இல்லை யாருக்கு பயந்து இரண்டாம் தாரமாக உன்னை மணக்க வேண்டும்? மகளுக்கு சமைத்துப் போட ஒரு சமையற்காரியை வேலைக்கு அமர்த்தியிருக்கலாமே... தனக்குத் தானே விலங்கு போட்டு, பூட்டிக் கொண்டது போல, உன்னை எதற்காக மணம் புரிந்தான்; யாராவது வற்புறுத்தினரா?

எதுவாயினும் சகோதரி, உன் ஆத்திரம் நியாயமானது. ஆனால், அதற்காக போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் என்னவென்று புகார் கொடுப்பாய்? உன் கணவன், அவளுடன் சேர்ந்து வாழ்வதாக நீ புகார் கொடுத்தாலும், அதற்கு ஆதாரம் எங்கே இருக்கிறது... உன்னிடம் சொன்னது போலவே, போலீசிலும் உன் கணவன் சொல்வான்...

'அவங்களுக்கு நான் நன்றி கடன்பட்டிருக்கேன். காலத்துக்கும் அவங்க குடும்பத்துக்கு உழைப்பேன். அது இவளுக்குப் பிடிக்கலே. சந்தேகப்பட்டு, உங்க கிட்ட புகார் கொடுத்திருக்கா. இப்படித்தான் முதல் புருஷனையும் கேவலப்படுத்தியிருப்பா போல... யார் கண்டது...!' என்பான்.

நன்றாக கவனி. அவன் வரையில் அவனது முதல் மனைவி இறந்து விட்டாள். அவள் உயிரோடு வந்து அவன் செய்த அக்கிரமங்களைச் சொல்லப் போவதில்லை. அவள் தற்கொலை செய்து கொண்டாளா அல்லது இயற்கையாகச் செத்தாளா என்பது கூட அதிகம் வெளியே தெரியாமல் இருக்கலாம்.

ஆனால், உன் முதல் கணவன் உயிரோடு இருக்கிறான். உங்களுக்குள் ஏற்பட்டுள்ள தகராறு கேள்விபட்டு, எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றுவது போல, அவனும் உன் மேல் ஏதும் பழி சொல்லாமல் இருக்க வேண்டும். ஆதலால் நீ பேசாமல் உன் பிறந்த வீட்டுக்குப் போ. ஒரு வக்கீலைப் பார்த்து, விவாகரத்து வாங்கு. நடுவில் எத்தனை இடைஞ்சல்கள் வந்தாலும் தயங்காதே!

அனாவசியமாய் பழி வாங்கும் உணர்ச்சி வேண்டாம். முள் மீது போட்ட புடவையை கிழியாமல் எப்படி எடுக்கலாம் என்று பார்ப்பது தான் புத்திசாலித்தனம். பழிக்குப் பழி, சவாலுக்கு சவால் என்று கிளம்பினால், வீணாகச் சேற்றில் காலை வைத்த கதையாகி விடும்.

ஏனெனில், உன்னுடைய பழைய கணவனை நீ நியாயமானக் காரணங்களுக்காகப் பிரிந்திருந்தாலும், உன்னை அவமானப்படுத்துவதற்காகவாவது பழைய கதையைத் தோண்டி எடுத்து, கண், காது, மூக்கு வைத்து உன்னை கதற அடிப்பர்.

பிடிக்கவில்லையா... விலகு. மவுனமாய் புறக்கணி. பேசப்பேச உன் பக்கம் பலவீனமாகும். நீ பேசாமல் இருக்க இருக்க என்ன செய்யப் போகிறாயோ என்கிற பயம் எதிராளிக்குள் இருந்து கொண்டே இருக்கும். அந்த பயமே அவனுக்கு ஆயுள் தண்டனை.

விவாகரத்துக்கு காரணம் கேட்டால் உள்ளதை வளர்த்தாமல் சொல்...

'குடிச்சிட்டு வந்து அடிக்கறாரு; சாப்பாட்டுக்கு காசு தர மாட்டேங்கறாரு; அடி தாங்க முடியலே; அவருக்கு நிறைய பொண்ணுங்க சகவாசம் இருக்கு; அங்கேயே போகட்டும் என்னை விட்டுடட்டும்...'

விவாகரத்து கிடைத்ததும், உன் எதிர்காலத்துக்கு ஏதாவது நல்ல தொழில் கற்று, முன்னுக்கு வர முயற்சி செய்!

இப்படிக்கு அன்புடன்,

— சகுந்தலா கோபிநாத்.






      Dinamalar
      Follow us