sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்!

/

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : பிப் 16, 2014

Google News

PUBLISHED ON : பிப் 16, 2014


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்புள்ள அக்கா —

என் வயது 20; நான் கல்தூரியில் பயிலும் மாணவன். என் கல்லூரியில் பணிபுரியும், 25 வயது ஆசிரியை ஒருவர், எங்கள் அனைவரிடமும் இயல்பாக பழகுவார். நானும், என் நண்பர்களில் ஒரு சிலரும், அவருடன் நெருக்கமாக பழகியதால், அவர், தன்னுடன் பயின்ற ஒருவரை காதலிப்பதை எங்களிடம் கூறி, வேறு வேறு ஜாதியை சேர்ந்தவராயினும், இருவருமே தங்கள் காதல் மீது உறுதியாக இருப்பதாகவும் கூறினார்.

அவரது பெற்றோருக்கு அவர்களது காதல் தெரிய வந்தது. முதலில் எதிர்ப்பு தெரிவித்தாலும், பின் சம்மதித்தனர். இந்நிலையில், எங்களுடன் பயிலும் மாணவனும், எங்கள் நண்பனுமான ஒருவனிடம் சற்று நெருக்கமாக பழகினார் அந்த ஆசிரியை. அதன் விளைவு, இப்பொழுது ஒருவரை ஒருவர் காதலிக்கும் அளவிற்கு அவர்கள் உறவு வளர்ந்துள்ளது. இப்பொழுது, அவர், தன் முதல் காதலனிடம் பேசுவது கூட இல்லை.

கணவன் - மனைவி போல் இருவரும் உரையாடுகின்றனர். என் நண்பர்களிலேயே அவன் மீது தான் அதிக பாசம் வைத்திருந்தேன். மேலும், அவன் நன்றாக படிப்பவன், பல விருதுகள் வாங்கியுள்ளான்.

மலர் விட்டு மலர் தாவும் குணம், பெண்களிடமும் இருக்குமா என்று, தோன்றுகிறது. என்னை பொறுத்தமட்டில், காதலித்தவனையே திருமணம் செய்ய வேண்டும். இல்லையேல், காதலிக்கக் கூடாது. அப்படி காதலித்தவனை கைவிடுவதென்றால், பிறர் நன்மைக்காக இருக்க வேண்டும். பிறரை துன்புறுத்தி, தான் வாழுதல் தவறு என்பதே என் கருத்து.

அவர், தன் முதல் காதலைப் பற்றி கூறிய போது, 'பெற்றோரின் சம்மதத்தோடுதான் திருமணம் செய்வேன்...' என்றார். ஆனால், இப்போது அவர் யாரை பற்றியும் பொருட்படுத்தாமல், தன் சந்தோஷத்தை மட்டுமே பெரிதாக கருதுகிறார். அவரது பெற்றோருக்கு இந்த விஷயம் தெரிந்தால் என்னவாகும்?

நானே இதைப் பற்றி, அவர் பெற்றோரிடம் கூறலாமா இல்லை, 'துஷ்டனை கண்டால் தூர விலகு' என்பதைப் போன்று இருந்து விடலாமா? என்ன செய்வது என்று எனக்குப் புரியவில்லை. என் மனம், தினமும் இதை நினைத்து வேதனைப்படுகிறது.

ஒரு ஆசிரியை, மாணவனிடையே காதல் மலருமா? அது உண்மையான காதல்தானா? ஒருவனை காதலித்து விட்டு, அவனை விட அழகாக, பணக்காரனாக வேறு ஒருவனை கண்டவுடன், வயதில் குறைந்தவனாயினும் மணக்க விரும்பும் இப்பெண் பண்புள்ளவள்தானா? மனதில் நிம்மதியே இல்லை. நீங்கள் தான் எனக்கு ஆறுதல் கூற வேண்டும். நான் என்ன செய்ய வேண்டும்?

இப்படிக்கு,

அன்பு தம்பி.


அன்புத் தம்பிக்கு —

'காதலித்தவனையே திருமணம் செய்ய வேண்டும்; இல்லையேல், காதலிக்கக் கூடாது. அப்படியே காதலை கைவிடுவதாக இருந்தாலும், அது பிறர் நன்மைக்காக இருக்க வேண்டும். பிறரை துன்புறுத்தி, தான் வாழ்வது தவறு...' என்று, காதலைப் பற்றிய உன்னுடைய தன்னிலை விளக்கக் கடிதத்தை கண்டேன். உன் உள்ளக் குமுறல்களை என்னால் உணர முடிகிறது. தம்பி, இந்த காதலைப் பற்றி, சில விஷயங்களை நீ புரிந்து கொள்வது நல்லது.

வயது, வேலை, அந்தஸ்து, சமுதாயத்தில் அவர்களின் நிலை இவற்றைப் பார்த்து காதல் வருவதில்லை. எனவே தான், காதலுக்கு கண் இல்லை என்கின்றனர். ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் முடிவு மாதிரி, எது வேண்டுமானாலும், எப்ப வேண்டுமானாலும் நடக்கலாம்.

இருபாலார் படிக்கும் கல்லூரியில், பணிபுரியும் ஆசிரியைகள், பெருந்தன்மையுடன், புத்திசாலித்தனமாக, ஆக்கபூர்வமாக சிந்தித்து, சீர்தூக்கி பார்ப்பவர்களாக இருப்பர் என்பது உலகறிந்த செய்தி. ஆனால், நீ குறிப்பிடும் பெண், விதிவிலக்காக இருக்கிறார். விதிவிலக்குகள் என்றும், வழிகாட்டியாக இருக்காது என்பதை, நீ தெரிந்து கொள்ள வேண்டும்.

வாழ்வின் முக்கியமான ஒரு நிகழ்வு கல்யாணம். எதிர்காலம், குடும்பம், சமூக பொருளாதார நிலை, பணி சம்பந்தப்பட்ட வாழ்க்கை, புரபஷனல் வாழ்க்கை, சம்பாதித்தல், குழந்தைகளை பெற்றுக் கொள்வது... இப்படி பலவிதமான நிகழ்வுகளை, காதலிப்பவர்கள் முன்னமே உட்கார்ந்து அலசி ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். அப்பொழுதுதான், காதல் வெற்றி பெறும்; குடும்பம், குடும்பமாக இருக்கும்.

இல்லையேல், திருமணத்திற்கு பின், போர்க்களமாய் மாறி விடும். கணவன் - மனைவி இருவருக்கும் நிறைய புரிதல், விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கு, முன்னேற வேண்டும் என்ற உந்துதல் மிக அவசியம். இவைகளை காதலிக்கும் போதே தெளிவாகப் பேசி முடிவெடுக்க வேண்டும். இல்லையேல், காதல் திருமணம் விவாகரத்தில்தான் முடியும்.

அந்த பெண், தன் காதலனை விட்டு விட்டு, தன்னிடம் படிக்கும் மாணவனை காதலனாக தேர்ந்தெடுத்திருக்கிறாள் என்றால், அது ஏன் என்று ஆராய வேண்டும்.

உன்னை, உணர்வுப்பூர்வமாக இவ்வளவு ஆதங்கப்பட்டு கடிதம் எழுத தூண்டியதே உன்னுள் ஆழமாய் புதைந்திருக்கும் 'இது இப்படித்தான் இருக்க வேண்டும்' என்ற கோட்பாடு; சமூக சூழல் பற்றிய விரிவான நினைப்பும்; எதிர்பார்ப்புமே.

ஆனால், அந்த ஆசிரியைக்கு இப்படி ஒரு நினைப்பு இல்லை என தோன்றுகிறது. எப்படியும் வாழலாம் என்ற அலட்சியமான நினைப்பு அவரிடம் மேலோங்கியிருக்கலாம். இதில் குழப்பம் வந்தால், சமாளிப்பது கடினம்.

இம்மாதிரியான சூழலில், நீ என்ன செய்ய வேண்டுமெனில்,

உன் எல்லைக்கு மீறி, அளவிற்கு அதிகமாக, அவர்களுக்காக உன்னால் முடிவெடுக்க முடியாது என்ற எதார்த்த உண்மையை நீ முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

உண்மையிலேயே உதவி செய்ய வேண்டும் என நினைத்தால், முதலில் அந்த பெண்ணிடமும், பின், அவளது இரண்டாவது காதலனுடனும் தனித்தனியாக பேசி, விபரங்களை தெளிவுபடுத்திய பின், கூட்டாக வைத்து பேசி, சில முடிவுகளை எடுக்க முயலலாம். அவரது பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் பாயின்ட்டுகளை ஓபனாக பேச வைக்கலாம்.

பேசும் போது ஏதாவது மாறுபட்ட கருத்துகளை சொல்ல நேர்ந்தால், மிக தைரியமாக, தயவு தாட்சண்யம் பாராமல் எடுத்துரைக் கலாம்.

முடிந்தால் இருவரது பெற்றோர் களையும் சந்தித்து, அவர்களது விருப்பு, வெறுப்புகளை பேசி தீர்த்து, அங்கீகாரத்தையும் பெற முயற்சிக்கலாம்.

இவைகளை அப்பெண் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், அவளது உரிமையில், வாழ்க்கையில் தலையிட நமக்கு உரிமை இல்லை என்ற, எதார்த்த உண்மையை புரிந்து கொண்டு, அவளது வாழ்க்கையை அவளே தேர்வு செய்ய, விட்டு விட வேண்டியதுதான்.

மேற்கூறியவைகளை பற்றி நன்கு யோசித்து, தேவையானவைகளை எடுத்துக் கொண்டு, உன் நண்பனை நல்வழிப்படுத்த முயற்சி செய்.

என்றும் தாய்மையுடன்,

சகுந்தலா கோபிநாத்.







      Dinamalar
      Follow us