தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஜன 18, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 18, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மாவுக்கு வணக்கம்.

நான், அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுகிறேன். நானும், என் கணவரும் இரு வீட்டார் சம்மதத்துடன், காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இரு ஆண் பிள்ளைகள் உள்ளனர். என் கணவர் விவசாயம் மற்றும் ஒப்பந்ததாரராக வேலை செய்கிறார். அவர் தன்னுடைய நண்பர் வீட்டிற்கு பணம் கொடுக்கல், வாங்கல் சம்பந்தமாக சென்று வருவார்.

அந்த நண்பரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்; இரு ஆண் பிள்ளைகளும் உண்டு. இருசக்கர வாகனத்தில், என்னை தினமும் பள்ளியில் விட்டு விட்டு, நண்பரின் கடைக்கு சென்று விடுவார் என் கணவர். காலை, மதியம் என, இரு வேளையிலும் செல்வார். பொழுது போக்கிற்காக தான் செல்கிறார் என முதலில் நினைத்தேன். ஆனால், ஒரு சிலர் கூறியதை வைத்து பார்க்கும் போது, என் கணவருக்கும், அவரின் நண்பர் மனைவிக்கும் தொடர்பு இருக்குமோ என சந்தேகிக்கிறேன். இதுபற்றி அவரிடம் கேட்டதற்கு, 'அப்படி எதுவும் இல்லை; அவர்கள் கூறுவது பொய். நட்பு அடிப்படையில் தான் செல்கிறேன்...' என்கிறார். மேலும், அவனுக்கு ஆசிரியர் பணியும் வாங்கி தந்துள்ளார்.

அம்மா, என் கணவருக்கு தினமும் தாம்பத்யம் தேவை. என் உடல் நிலை சரியில்லை என்றால் கூட விட மாட்டார். என் இரண்டு குழந்தைகளுமே அறுவைச் சிகிச்சை மூலமாக தான் பிறந்தனர். அச்சமயத்தில் கூட மூன்று மாதத்திலேயே வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார். அந்த மூன்று நாட்களைத் தவிர்த்து, விடாது தாம்பத்யத்தில் ஈடுபட்டவர், தற்சமயம், என் பக்கம் திரும்பிக் கூட பார்ப்பது இல்லை. கேட்டால், வயதாகி விட்டது என்கிறார். என் கணவர் வயது, 45; எனக்கு வயது, 43.

என் கணவர் வீட்டாரிடம் இதுபற்றி கேளுங்கள் என்று சொன்ன போது, 'நாங்கள் எப்படி கேட்பது?' என்கின்றனர். அம்மா வீட்டாரிடம் சொன்னாலோ, 'கோவலன், மாதவி வீட்டுக்கு சென்று வந்தது போல் பட்டு திருந்தி வருவார்; அமைதியாக இரு...' என்கின்றனர். அம்மா, இந்தப் பிரச்னையால், மூன்று ஆண்டுகளாக மனப் போராட்டத்தில் தவிக்கிறேன்.

அடுத்த தெருவில் தான் அவர்களது வீடு உள்ளது. அவரோடு நான் சேர்ந்து வாழ்வதா அல்லது தனியே பிரிந்து சென்று வாழ்வதா என்று ஒன்றும் புரியவில்லை. என் மகன்களில் ஒருவன், பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கிறான். இன்னொருவன், பிளஸ் 2 முடித்து, பி.இ., சேர உள்ளான். அம்மா, என் கணவரிடம் இந்த ஒரு குறை மட்டும் தான் உள்ளது. மற்றபடி நான் எது கேட்டாலும் வாங்கித் தந்து விடுவார். 'உனக்கு என்ன குறை வைத்துள்ளேன். 'அது' தான் நடக்கவில்லை. மீதி எல்லாம் செய்கிறேன் தானே...' என்கிறார். தற்சமயம், என் கணவரும், அவனும் சேர்ந்து ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்கின்றனர்.

நான் அவரிடம் சண்டை போட்டால், 'விருப்பம் இருந்தால், நம்பி என்னுடன் வாழ்; இல்லையேல், நீயும் எப்படி வேண்டுமானாலும் வாழ். ஆனால், உன்னை கொன்று விட்டு ஜெயிலுக்குப் போய் விடுவேன்...' என்கிறார். முன்பெல்லாம், இவ்வாறு பேச மாட்டார். அம்மா, தாயைப் போல் நல்ல ஆலோசனை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

— இப்படிக்கு அன்புடன்,

உங்கள் மகள்.


அன்பு மகளுக்கு,

உன் கணவனும், அவரது நண்பர் மனைவியும் தாம்பத்யத்தில் ஈடுபடுவதை நேரில் பார்த்தாயா? வெறும் யூகங்களும், செவிவழிச் செய்திகளும் உண்மை ஆகிவிடாது. காலையில், மூன்று மணி நேரமும், மாலையில், ஐந்து மணி நேரமும், நண்பர் வீட்டிற்கு செல்லும் உன் கணவன், இந்த எட்டு மணி நேரமும் திருட்டு தாம்பத்யத்தை தேடுகிறான் என்பதற்கு என்ன உத்தரவாதம்? ஒரு வேளை, உன் கணவனும், அவன் நண்பரும் காசு வைத்து சீட்டு விளையாடலாம்; நண்பர்கள் கூட்டாய் சேர்ந்து இன்டர் - நெட் பார்க்கலாம்; பொழுது போக்கிற்காக வீடியோ கேமோ, சதுரங்கமோ கூட ஆடலாம். இந்தக் கோணத்திலும் நீ ஏன் யோசித்துப் பார்க்கவில்லை?

நண்பருக்கு தெரிந்துதான், நண்பரின் மனைவியோடு உறவு வைத்திருக்கிறான் உன் கணவன் என, ஒரு குண்டை தூக்கிப் போடுகிறாய். இது எளிதில் நடக்கக்கூடிய விஷயமல்ல. உன் கணவனின் நண்பரும் அவரது மனைவியும் காதல் திருமணம் செய்து, இரு ஆண் குழந்தைகளை பெற்று, கவுரவமாக ஒரு தெருவில் நிரந்தரமாக குடியிருப்பவர்கள். நீ சொல்வது உண்மையாக இருக்க வேண்டுமென்றால், உன் கணவனின் நண்பர் ஆண்மையற்றவராக இருக்க வேண்டும் அல்லது உன் கணவனின் நண்பரும், அவரது மனைவியும் ஆடம்பர செலவில் ஈடுபட்டு, கடனாளியாகி கடனை அடைக்க தவறான வழியில் பணத்தை தேடுபவர்களாய் இருக்க வேண்டும். இப்படியும் யோசித்துப் பார்...உன் கணவனும், அவரது நண்பரும் ஓரின சேர்க்கை பேர்வழிகளாக கூட இருக்கலாம் அல்லவா? அல்லது குடித்து கும்மாளம் போட்டு, இரவு, 8:00 மணிக்கு கொய்யா இலைகளை மென்றுவிட்டு, உன் கணவன் வருகிறானோ என்னவோ? நான் சொல்வதை ஜீரணிக்க முடிகிறதா?

உன் கணவன், தன் நண்பருக்கு ஆசிரியர் பணி வாங்கித் தந்தது நட்பின் அடிப்படையில் தான் என, நம்புகிறேன்.

உன் சந்தேகம், வீண் சந்தேகம் என்பதை தெரிந்து கொண்டு தான் உன் கணவன் வீட்டாரும், உன் வீட்டாரும் மழுப்பலாய் பதில் சொல்கின்றனரோ என்னவோ?

நான் சொல்லும் கோணம் திருப்தியளிக்கவில்லை என்றால், இனி நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

கொஞ்சம் சகுனிதனத்தோடும், கூனித்தனத்தோடும் செயல்பட்டு, உன் கணவனுக்கும் அவனது நண்பர் குடும்பத்துக்கும் உள்ள தொடர்பை கத்தரித்து விடு. டயட்டில் இருந்து, உடல் எடையை குறை. மாலையில் பணி முடித்து வந்ததும், நன்றாக குளித்து, தலையில், மல்லிகப்பூவை சூடு. கொஞ்சம் வலுக்கட்டாயமாக, கணவனை இழுத்து, அணைத்து உறவு கொள்.

நண்பரின் மனைவியுடன் தனித்து பேசி, அவளுடனான உன் கணவனின் உறவை துண்டிக்கப் பார். வேலைவெட்டி இல்லாமல் இருப்பதால் தான், தேவையற்ற இடத்துக்கு போய் இளைப்பாறுகிறான் உன் கணவன். விவசாய வேலையையோ, ஒப்பந்ததாரர் வேலையையோ யாருடனும் கூட்டு சேராமல் தனியாக பார்க்கச் சொல்.

உன் வீட்டில் இல்லாத ஒன்று, உன் கணவனுக்கு நண்பர் வீட்டில் கிடைக்கிறது. அது என்ன என்பதை உளவறிந்து, அதை, உன் வீட்டிலேயே கிடைக்க வை. உன் கணவன் புத்திசாலி. அவனிடமிருந்து யாரும் எதனையும் பிடுங்கிவிட முடியாது. சுயபச்சாதாபத்தை ஒழித்து, யதார்த்தமாக நிதர்சனமாக செயல்படு. வெற்றி உனதே!

என்றென்றும் தாய்மையுடன்

சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us