
அன்புள்ள அம்மாவிற்கு —
என் வயது, 22; பட்டப் படிப்பு முடித்து, அரசு வேலைக்கான தேர்விற்கு தயாராகி வரும் ஒரு ஆண். பள்ளி பருவத்தில், ஒருமுறை என்னை எழுப்பி கேள்வி கேட்டார் என் ஆசிரியர். அக்கேள்விக்கு பதில் தெரிந்திருந்தும், என்னால் பதில் கூற முடியவில்லை. காரணம், பயம்.
அன்று முதல், இன்று வரை, பயத்துடனே வாழ்ந்து வருகிறேன். கடந்த ஆண்டு, ஒரு நிறுவனத்தில் நேர்முக தேர்வுக்கு சென்றிருந்த போது, அவர்கள் கேட்ட கேள்விக்கு என்னால் பதில் கூற முடியவில்லை; வார்த்தைகள் வெளி வரவே இல்லை. இப்படி நிறைய சூழ்நிலையில் அவமானப்பட்டு இருக்கிறேன். இதனால், யாருடனும் என்னால் இயல்பாக பேச முடிவதில்லை.
அம்மா... நான் பள்ளி பருவத்தில் ஒழுங்காகத் தான் பேசிக் கொண்டிருந்தேன். அந்நிகழ்வுக்கு பின் தான், பேச பயமாக உள்ளது.
எனக்கு காவல் துறையில் அதிகாரியாக வேண்டும் என்று ஆசை. ஆனால், என் பிரச்னை தெரிந்த நண்பர்கள் சிலர், 'உனக்கு அந்த வேலையெல்லாம் சரி வராது; வேறு வேலைக்கு முயற்சி செய்...' என்று கூறுகின்றனர். இதைக் கேட்டதும், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டேன். இப்பிரச்னையில் இருந்து வெளி வர வேண்டும். கோவிலுக்கு சென்றால் கூட, என்னால் நிம்மதியாக சாமி கும்பிட முடியவில்லை.
அம்மா... நான் சராசரியாக படிக்கும் மாணவன்; ஆனால், பத்தாம் வகுப்பு, +2 மற்றும் கல்லூரி தேர்வுகளில், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளேன். இருந்தும், இது எனக்கு பெரிய பிரச்னையாக உள்ளது. தயவு செய்து என் கடிதத்தை நிராகரிக்காமல், ஆலோசனை கூறுங்கள்.
— இப்படிக்கு,
ஆலோசனையை எதிர்பார்த்திருக்கும் உங்கள் மகன்.
அன்புள்ள மகனுக்கு —
மூன்று வகையான மனபிறழ்வுகளை, மனோதத்துவம் வகைப்படுத்துகிறது. அதில் ஒன்று, போபியோ - எதன் மீதாவது ஏற்படும் பயம்!
தாழ்வுமனப்பான்மை தான் பயத்துக்கு அடிப்படை காரணம். கோழைத்தனமும், தான் பேசினால் அடுத்தவர் என்ன நினைப்பாரோ என்கிற சங்கோஜமும் உபகரணங்கள். நாக்கு தடித்திருந்தாலும், வாய் அடிக்கடி உலர்ந்து போனாலும், தொண்டையில் ஏதாவது பிரச்னை இருந்தாலும் பேச வராது.
ஒரு சிலருக்கு கீச்சுக்குரலும், சிலருக்கு கட்டை குரலும் இருக்கும். தன் குரல் நன்றாக இல்லையே என்கிற எண்ணத்தினாலும் இவர்கள் பேசுவதில்லை. வாயில் துர்நாற்றம் வீசினாலும் பேச பயமாயிருக்கும்.
பயம் ஒரு வேதாளம்; அது தொற்றினால், அவ்வளவு எளிதில் நம்மை விட்டு விலகாது. பயம் ஒரு புதைசேறு. மெதுமெதுவாக நம்மை உள்ளிழுத்து விழுங்கி விடும்.
பயத்தை போக்க எளிய வழிகளை கூறுகிறேன் கேள்...
* தனிமையில், தினம் ஒரு மணி நேரம், ஏதாவது ஒரு புத்தகத்தை உரக்கப்படி.
* ஆணோ, பெண்ணோ யாரை பார்த்தாலும், நட்புடன் புன்முறுவல் செய்; துணிந்து ஹலோ சொல்.
* தன்னம்பிக்கையூட்டும் பிரபலங்களின் வாழ்க்கை வரலாறுகளை படி.
* தினமும் ஐந்து லிட்டர் தண்ணீர் குடி; பற்களை சுத்தமாக பராமரி; ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரை சந்தித்து, மருத்துவ ஆலோசனை பெறு.
* வண்ணமயமான ஆடைகளை அணிந்து, தலைகேசத்தை பராமரி. தினம் இருமுறை முகம் கழுவு. நல்லதொரு சென்ட் உபயோகப்படுத்து. கை, கால் நகங்களை வாரத்துக்கு ஒருமுறை வெட்டு.
* டூத்பிரஷ் உபயோகிக்கும் போது, டங்க் கிளீனரால் நாக்கை சுத்தப்படுத்து.
* காவல்துறை சம்பந்தப்பட்ட சினிமா நிறைய பார்; ரோல்மாடல்கள் கிடைப்பர்.
* கர்னாடிக், வெஸ்டர்ன், ப்யூஷன் என, எல்லா வகை பாடல்களையும் கேள்; இசை உன் பயத்தை விரட்டியடிக்கும்.
* உன்னை அதைரியப்படுத்தும் நண்பர்களோடு பழகாதே.
* 'வாழ்க்கை வாழ்வதற்கே! வாழும் ஒவ்வொரு நாளும் சிறப்பானது; என் மகிழ்ச்சியை கெடுக்க எந்த தீயசக்தியாலும் முடியாது...' என்ற பாசிடிவ் மனப்பான்மைக்கு தாவு.
* ஹைபோ தைராய்ட் இருக்கிறதா என சோதித்து பார். இருந்தால் டிப்ரஷன் வரும். மருந்து சாப்பிட்டு குணப்படுத்திக் கொள்ளலாம்.
* யோகா பயிற்சி மேற்கொள்.
* தினமும் இரு வேளையும், கிரீன் டீ, இனிப்பு சேர்க்கால் குடி.
* வாய் உலராமல் இருக்க, கிராம்பை மெல்லலாம்.
உனக்கு வெற்றி நிச்சயம் மகனே!
-என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.

