தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஜூலை 05, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 05, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மாவுக்கு,

என் வயது, 48; பத்தாம் வகுப்பு படிக்கும் போதே எனக்கு திருமணம் நடந்து விட்டது. உலகில் உள்ள அனைத்து கெட்டப் பழக்கங்களின் மொத்த உருவம் என் கணவர். அவரை திருத்த எத்தனையோ முயற்சிகள் எடுத்தும் பயனில்லை.

என் மாமனார், மாமியார் இருக்கும் வரை, அவர்கள் பாதுகாப்பில் இருந்தேன். தகாத பழங்கங்களால் ஏற்பட்ட நோயின் காரணமாக, 10 ஆண்டுகளுக்கு முன் வீட்டை விட்டு காணாமல் போய் விட்டார் என் கணவர். அதனால், என் மகன் மற்றும் மகளுடன் அம்மா வீட்டிற்கு சென்றேன்.

தற்போது, நானும், என் மகளும் வேலைக்கு செல்கிறோம்; மகன் படிக்கிறான். கடந்த எட்டு ஆண்டுகளாக வேறு ஜாதிக்காரர் ஒருவரை காதலிகிறாள் மகள். அவள் காதலிக்கும் பையன் வீட்டில், இவர்களது காதலை ஏற்காததால், அப்பையனுக்கு வேலை வாங்கித் தந்து வெளியூருக்கு அனுப்பி விட்டனர். ஜாதி தான் அவர்களுக்கு பிரச்னை.

இவ்விஷயம், என் உறவினர்கள் மற்றும் என் தங்கை, தம்பிகள் யாருக்கும் தெரியாது. பேத்திக்கு, 28 வயதாகியும் திருமணம் நடக்கவில்லையே என்று கவலைப்படுகிறார் என் அம்மா. உறவினர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் சொல்ல முடியவில்லை. எவ்வளவோ அறிவுரை கூறியும் என் மகள் கேட்பதாக இல்லை. என் அம்மாவோ, 'இந்த ஒரு மாதத்திற்குள் திருமணம் செய்யா விட்டால், வீட்டை விட்டு சென்று விடுங்கள்...' என்று கூறுகிறார்.

என் மகளோ, 'அடுத்த ஆண்டு தான் திருமணம் செய்வேன்...' என்றும், 'வற்புறுத்தினால் உங்க விருப்பப்படி செய்யுங்க; ஆனா, அதன்பின், சாகும் வரை உங்க யார் முகத்திலும் விழிக்க மாட்டேன்...' என்கிறாள்.

வெளியூரில் உள்ள அவளது காதலன் திரும்பி வந்து, இவளைத் திருமணம் செய்வாரா என்று தெரியவில்லை. காலம் கடந்து திருமணம் செய்தால் குழந்தை பிறப்பும் கடினமாகும். மேலும், கணவர் வீட்டினர் ஆதரவு இல்லை என்றால், தன் பேத்தியின் வாழ்க்கை, என் வாழ்க்கையை போல் ஆகிவிடுமே என்று பயப்படுகிறார் என் தாயார். நான் யாருக்கு சாதகமாக இருப்பது என்று தெரியவில்லை. எனக்கு தகுந்த ஆலோசனை தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு,

உங்கள் மகள்.


அன்புள்ள மகளுக்கு —

பத்து ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன உன் கணவர், இறந்து விட்டதாகவே பாவிக்க வேண்டும். உன் கணவர் காணாமல் போனதிலிருந்து. உன்னையும், உன் பிள்ளைகளையும் பாதுகாத்து பராமரிப்பது, உன் தாயார். என்ன தான் நீயும், உன் மகளும் வேலைக்குப் போய் சம்பாதித்தாலும், உங்கள் மூவருக்கும் சமூக பாதுகாப்பு தருவது, உன் அம்மா தான்.

உன் மகள் எட்டு ஆண்டுகளாக வேற்று ஜாதிக்கார வாலிபனை காதலிக்கிறாள். வெளியூரில் வேலை பார்க்கும் அவர், பெற்றோரை மீறி உன் மகளை கைபிடிக்க வேண்டும்.

உன் தாயோ பேத்தியின் காதல் சரிவராது; தான் பார்த்து வைக்கும் மாப்பிள்ளையையே பேத்தி மணந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் மூவரும் வீட்டை விட்டு வெளியேறுங்கள் என்கிறார்.

உன் மகளோ, 'காதலித்தவனையே காத்திருந்து மணப்பேன்; மீறி வேறொரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து மண முடித்து வைத்தால் பாட்டி, அம்மா, சகோதரன் முகங்களில் விழிக்க மாட்டேன்...' என பிடிவாதம் பிடிக்கிறாள்.

இதில், உறவினரின் ஏச்சு, பேச்சு, கிண்டல், கேலி தனி! மத்தளத்திற்கு இரு பக்கம் இடி; உனக்கோ நாலாபுறமும் இடி.

வெளியூரில் வேலை செய்யும் காதலன், உன் மகளை எந்த சூழ்நிலையிலும் திருமணம் செய்ய தயாராக இருக்கிறாரா என்பதை உறுதி செய். அவரது சம்மதத்துடன், அவரது பெற்றோரிடம் பேசிப் பார். உன் மகளை அவர்களது மகனுக்கு கட்டி வைக்க பிடிவாதமாக மறுத்தால், உன் அம்மா சொன்ன வழிக்கு தாவி விட வேண்டும். உன் மகளின் காதலன், உன் மகளை மணந்து கொள்ள மறுத்தால், பிரிதொருவரை பார்த்து மணந்து கொண்ட உன் மகளுக்கு, எதிர்காலத்தில் தொந்தரவு செய்யக் கூடாது என, காதலனிடம் வாக்குறுதி பெறு.

'காதலனிடமும், காதலனின் பெற்றோரிடமும் பேசிப் பார்த்தோம்; அவர்கள் எதற்கும் மசியவில்லை. உன்னை திருமணம் செய்ய ஆசையில்லாதவனுக்காக, நீ காத்திருப்பது வீண். உன் நன்மைக்காக வேறொரு வரன் பார்க்கிறோம். அதனால், நீ எங்கள் முகத்தில் விழிக்காமல் இருந்தாலும் பரவாயில்லை...' என பேசி திருமணத்திற்கு உன் மகளை சம்மதிக்க வை.

'பெற்றோரை மீறி, உன் காதலன் உன்னை திருமணம் செய்தாலும், அந்த திருமணத்தை நிலைக்காமல் செய்து விடுவர் காதலன் வீட்டார். உன்னைக் கொல்வர் அல்லது உங்கள் இருவரையும் கொல்வர். உன் எதிர்காலம் கவுரவக் கொலையில் கருகிப் போவதா...' என்று, உன் மகளை மூளைச் சலவை செய்.

உன் அம்மா, உன் மகளுக்கு ஆத்திர அவசரமாய் வரன் பார்க்க வேண்டாம். பெரும் குடிகாரனோ, ஸ்திரிலோலனோ அல்லது மனைவி வீட்டை உறிஞ்சி வாழும் அட்டைப் பூச்சியோ, உன் மகளுக்கு கணவனாய் அமைந்து விடுவான். உன் இருண்ட வாழ்க்கை போல, உன் மகள் வாழ்க்கையும் அமைந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இரு.

எட்டு ஆண்டு காதலை மறப்பது உன் மகளுக்கு கடினமான காரியம் தான். ஆனால், என்ன செய்ய... பேசி பேசி தான் அவள் மனதை மாற்ற வேண்டும். காதலனையே திருமணம் செய்து வைக்க, சகல விதத்திலும் முயன்று, தோற்றுப் போகிறோம் என்பதை உன் மகளுக்கு புரிய வை.

நீ, உன் மகளுக்கு செய்து வைக்கும் திருமணம், உங்கள் குடும்பத்திற்கு ஒரு மறுமலர்ச்சியை பரிசளிக்க வேண்டும். உன் மகள் வாழும் திருமண வாழ்க்கையை பார்த்து, காதலனின் வீட்டார், 'இவளுக்கு நம் பையனை திருமணம் செய்து வைக்காமல் விட்டு விட்டோமே...' என்று வேதனிக்க வேண்டும். பாட்டி வாழாத வாழ்க்கையை, அம்மா வாழாத வாழ்க்கையை, பேத்தி அமோகமாக வாழ வாழ்த்துகிறேன்.

என்றென்றும் தாய்மையுடன்

சகுந்தலா கோபிநாத்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us