தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : நவ 08, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 08, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மாவுக்கு —

என் வயது, 41; என் கணவர் வயது, 52. கல்லூரியில் படிக்கும் இரு மகன்கள் உள்ளனர். உடற்கல்வி ஆசிரியராக பணிபுரியும் என் கணவர், அவருடன் வேலை பார்க்கும் ஆசிரியை ஒருவருடன், 13 ஆண்டுகளாக தொடர்பு வைத்துள்ளார்.

அவளுக்கு, 45 வயது இருக்கும்; இரு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். அரசு போக்குவரத்து துறையில் வேலை பார்த்த அவள் கணவருக்கு, இவ்விஷயம் தெரிந்து, தற்போது, வெளிநாடு சென்று விட்டார்.

இதனால், இரவில் அவள் வீட்டிற்கு சென்று விடுகிறார் என் கணவர். இவர்கள் விஷயம் பள்ளியிலும் தெரியும். அடிக்கடி அவளிடமிருந்து போன் மற்றும் மெசேஜ் வரும். உடனே, வெளியில் சென்று விடுவார். அத்துடன், மொபைல் எண்ணையும் அடிக்கடி மாற்றுகிறார்.

'பிள்ளைகள் வளர்ந்து விட்டனர்; இப்படி செய்கிறீர்களே...' என்றால், 'அப்படித் தான் செய்வேன்... உனக்கு என்ன குறை வைத்தேன்; என் விஷயத்தில் தலையிடாதே...' என்கிறார்.

என் வாழ்க்கை அல்லவா... நான் கேட்காமல் வேறு யார் கேட்பர்! மனதுக்கு கஷ்டமாக உள்ளது. இதையெல்லாம் சகித்து, என்னால் வாழ முடியவில்லை. எனக்கு நல்ல வழி கூறுங்கள்.

இப்படிக்கு,

உங்கள் மகள்.


அன்பு மகளுக்கு —

உன் கணவரின் துர்நடத்தையை, இரு மகன்கள் காதிலும் போடு; அவர்கள், தறிகெட்டு ஓடும் தந்தையை கண்டிக்கட்டும். இரு தரப்பு பெரியவர்களுக்கும் தகவல் கூறி, உன் கணவரை முறைப்படி கண்டிக்க, தண்டிக்க வை. பள்ளி நேரத்தில், கணவர் பணிபுரியும் பள்ளிக்கு போ. கணவரின் கள்ளக் காதலியை சந்தித்து, 'தொடர்பை கத்தரித்துக் கொள்ளவில்லை என்றால், பெரும் பிரச்னையை கிளப்புவேன்...' என எச்சரி.

பள்ளி நிர்வாகத்திடம் எழுத்துப்பூர்வ புகார் கொடு. கணவனுடைய கைபேசியை எடுத்து சோதி. கணவர் என்ன செலவு செய்கிறார் என்பதற்கு கணக்கு கேள்.

மொத்தத்தில், பொறுத்தது போதும் பொங்கி எழு. 'மனைவி பரம சாது; எதிர்த்து நேரடியாக எதுவும் கேட்க மாட்டாள்...' என்ற உன் கணவரின் தப்பெண்ணெத்தை தகர்.

'தொடர்ந்து நீ ஆட்டம், பாட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று விரும்பினால், விவாகரத்து செய்து கொள்வோம்; கோர்ட் தீர்மானிக்கும் ஜீவனாம்சத்தை கொடு. நானும், என் மகன்களும் தனியாக போய் விடுகிறோம்...' என ஒரு குண்டைத் தூக்கி போடு.

உன் கணவர் போன்றோருக்கு வெளி உல்லாசம் எத்தனை முக்கியமோ, அதைவிட, வீடும், வீட்டு அங்கத்தினர்களும் முக்கியம். வீட்டு அங்கத்தினர்கள் இல்லையென்றால், நிலைகுலைந்து போவார்.

'வேலைக்குப் போனால், வேலை நேரம் முடிந்தவுடன் வீட்டுக்குத் திரும்பி விட வேண்டும்; இல்லையென்றால், அறவழியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவேன்...' என எச்சரி.

உன் அதிரடி அளப்பறைகளால் அதிர்ந்து போவார் உன் கணவர். திருந்த, 90 சதவீத வாய்ப்பு இருக்கிறது; எதுவும் பலன் அளிக்கவில்லை என்றால், விவாகரத்து பெறாமலே, கணவரிடமிருந்து விலகி வாழ். படிப்பை முடித்து, வேலைக்கு போன பின், உன்னிரு மகன்களும் உன்னிடம் திரும்பி வருவர்!

என்றென்றும் தாய்மையுடன்

சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us