தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : டிச 27, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 27, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மாவிற்கு —

என் வயது, 27; என் கணவரின் வயது, 32. எங்களுக்கு திருமணமாகி, எட்டு ஆண்டுகளாகின்றன. திருமணத்தின் போது, பிளஸ் 2 முடித்து இருந்தேன்; ஆசிரியராக வேண்டும் என்பது என் ஆசை; அதை, நிறைவேற்றினார் என் கணவர். தற்போது, நான், பி.எட்., பட்டதாரி!

இதுவரை, எங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை; ஐந்து ஆண்டுகளாக, மருத்துவரிடம் சிகிச்சை எடுத்து வருகிறோம். கர்ப்பப் பையில் நீர்க்கட்டிகள் இருப்பதாக கூறி, ஒருமுறை லேப்ராஸ்கோபியும், அதன்பின், பல முறை, ஐ.யு.ஐ., முறையும் செய்தோம்; ஆனாலும், பலனில்லை. என் கணவருக்கு எவ்வித பிரச்னையும் இல்லை.

என் மாமனார், மாமியார் இதற்காக என்னை திட்டுவதில்லை. ஆனால், அவர்களுக்கு, என் கணவர் ஒரே பிள்ளை என்பதால், வம்சம் விருத்தி அடையாமல் போய்விடுமோ என்ற அச்சம் உள்ளது. இதற்காக, அவர்களும் கோவில், குளம் என்று சென்று வருகின்றனர். என் கணவருக்கு, இரண்டாவது திருமணம் செய்ய, மனதிற்குள் ஆசை; ஆனால், சமுதாயத்திற்காக அதை மறைக்கிறார்.

நல்ல நிலையில் இருக்கும் போது, குழந்தையின்மை பற்றி எதுவும் பேச மாட்டார். ஆனால், மது அருந்தி வந்தால், என்னை திட்டுவதுடன், மறுமணம் செய்து கொள்ளப் போவதாக கூறி, 'விருப்பம் இருந்தால் என்னுடன் வாழ்; இல்லையேல் உன் பெற்றோரிடம் சென்று விடு. எனக்கு வாரிசு வேணும்...' என்கிறார்.

இப்போது, குழந்தையின்மையை காரணம் காட்டி, தினமும் குடிக்கிறார். மருத்துவமனைக்கு சென்று வரும் போது எல்லாம், 'இவ்வளவு பணம் செலவாகிறது...' என, என்னிடம் சண்டையிடுகிறார். மருத்துவர், 'செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பிறக்க செய்யலாம்...' என்கிறார். 'நிறைய செலவு ஆகும்...' என கூறி, அதற்கு மறுக்கிறார் என் கணவர். இவற்றை எல்லாம், என் பெற்றோரிடமோ, என் அண்ணன்களிடமோ அல்லது என் மாமனார் - மாமியாரிடமோ கூட இதுவரை கூறியதில்லை.

இப்போதெல்லாம், என் கணவர் என்னை அடிக்கடி திட்டுகிறார். அவரின் கவலை எனக்கு புரிகிறது. குழந்தையின்மை மட்டுமே எங்களுக்குள் பிரச்னை. என் பெற்றோரும், எனக்கு பண உதவி செய்ய முடியாத நிலையில் உள்ளனர்; இதனால், அவர்களிடம் கூறி உதவி கேட்க முடியவில்லை. நானும், குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையை இழந்து விட்டேன்.

இதனால், என் கணவருக்கு மறுமணம் செய்து வைத்து விட்டு, விலகி விடலாமா என்ற எண்ணம் தோன்றுகிறது. இது, அவர் மீதான கோபத்தில் எடுத்த முடிவு அல்ல; என் மாமனார், மாமியார் மற்றும் கணவர் என, அனைவரும் நல்லவர்கள். அவர்களின் குடும்பம் விருத்தி அடைய வேண்டும். அது, என்னால் தடை படக் கூடாது என்று நினைக்கிறேன்.

என் கணவருக்கு மறுமணம் செய்து வைத்து விட்டு விலகி விடலாம் என்றால், அவரை பிரிந்து, என்னால் உயிர் வாழ முடியுமா என்ற எண்ணமும், என்னை குழப்பத்தில் ஆழ்த்துகிறது.

நீங்கள் தான் நல்ல ஆலோசனை தர வேண்டும்.

இப்படிக்கு

தங்கள் மகள்.


அன்புள்ள மகளுக்கு —

ஆணும் - பெண்ணும் கூடி சிறப்பான தாம்பத்யம் செய்தால், கனியாக கிடைப்பது குழந்தைப் பேறு. கணவன் - மனைவிக்கிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளை அகற்றி, ஈர்ப்புவர உதவும் கிரியா ஊக்கிகள் குழந்தைகள். திருமண வாழ்க்கையில் நடக்கும் எல்லா செலவுகளையும், வரவு கணக்குகளாக்குவதுடன், தாய் - தந்தையின் ஈகோக்களை, சுயநலங்களை இவர்கள் தான் சாம்பலாக்குகின்றனர்.

மகளே... உனக்கு, 27 வயது தான் ஆகிறது. பெரும்பாலான பெண்கள், இந்த வயதில் தான் திருமணமே செய்கின்றனர். உன் கணவருக்கு இன்னொரு திருமணம் செய்து வைக்கும் உன் யோசனை விபரீதமானது. இதனால், உன் கணவர் மற்றும் அவருக்கு மனைவியாக வருபவளுக்கும், அவள் குழந்தைக்கும் சம்பளம் இல்லாத ஆயாவாகி விடுவாய். தற்கொலை முயற்சியும் அனாவசியம்.

உன் கணவர் குடிக்காத போது அவருடன், உணர்வுப்பூர்வமாக பேசி, 'டெஸ்ட் ட்யூப் பேபி'க்கு செலவு செய்ய சம்மதிக்க வை. நீயும் பணிபுரிகிறாய் என்றால், பர்சனல் லோன் போடு அல்லது இனிமேல் தான் ஆசிரிய பணிக்கு போகப் போகிறாய் என்றால், லோனை அடைக்க முழு சம்பளத்தையும் கொடுப்பேன் என, உறுதி கூறு. மருத்துவமனை நிர்வாகத்தை அணுகி, மருத்துவ செலவை, 'ஸ்பான்சர்' செய்யும் நிறுவனங்களின் முகவரி வாங்கி, அவர்களை அணுகு. உன் தரப்பு உறவினர் மற்றும் உன் கணவர் தரப்பு உறவினர் பட்டியலை தயார் செய்து, வசதியுடையோரிடம் பண உதவி பெறு.

நம்பிக்கையுடன் மருத்துவ சிகிச்சையை தொடர். குழந்தை வேண்டும் என்கிற எண்ணத்துடன் தாம்பத்யம் கொள்ளாது, தாம்பத்ய சுகத்துக்காக, தாம்பத்யம் மேற்கொள்ளுங்கள். இரு மாதங்களுக்கு ஒரு முறை, மினி சுற்றுலா செல்லுங்கள். உன் கணவன் பணி முடித்து வீடு திரும்பும் போது, வீடு வெறுமையாக இல்லாது, கலகலப்பாக இருக்குமாறு பார்த்துக் கொள். கணவனுக்கு புத்தாடைகள் வாங்கி, பரிசளி.

காதல் மனைவியை பரிதவிக்க விட்டுவிட்டு, குழந்தைக்காக இன்னொருத்தியை மணந்து கொள்வது சுயநலமானது என்பதை, கணவனுக்கு உணர்த்தும் வண்ணம் இருக்க வேண்டும் உன் செய்கைகள். எவ்வளவு செலவானாலும் சரி, இதே மனைவி மூலம், 'டெஸ்ட் ட்யூப் பேபி' மூலம் குழந்தை பெற்றுக் கொள்வோம் என்கிற உறுதியான முடிவுக்கு கணவனை கொண்டு வா. ஆணோ, பெண்ணோ அழகான குழந்தையை பெற்றெடுக்க வாழ்த்துகிறேன்.

என்றென்றும் தாய்மையுடன்,

சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us