தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஜன 03, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 03, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள சகோதரிக்கு —

என் வயது, 60; திருமணமாகி, 33 ஆண்டுகள் ஆகின்றன. 18 வயதில் கிராமத்திலிருந்து சென்னை வந்து, தனியார் தொழிற்சாலையில், அடிப்படை தொழிலாளியாக பணிபுரிந்து, மிகவும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவன். சொந்த வீடு உள்ளது.

என், 28 வயதில் திருமணம் ஆனது. வாலிபத்தில், முற்போக்கு சிந்தனையும், ஜோசியம், ஜாதகத்தில் நம்பிக்கை இல்லாதவனாகவும் இருந்தேன். என் மனைவியை பெண் பார்த்த போது, 'ஜாதகம், பேர் ராசி எதுவும் பொருந்தவில்லை; வேறு இடம் பாக்கலாம்...' என பெற்றோர் கூறினர்; அதை நான் கேட்கவில்லை. காரணம், அதுவரை எனக்கு பார்த்த பெண்களிலேயே இவள் தான் சற்று சுமாராகவும், 10வது வரை படித்தவளாகவும் இருந்ததால், 'சமைக்கத் தெரிந்தால் போதும்; இதில் என்ன பொருத்தம் வேண்டி இருக்கு...' என்று பிடிவாதமாக, அவளையே திருமணம் செய்ய தீர்மானித்தேன்.

பெற்றோர் சொல் கேளாமல், என்னை விட, 10 வயது சிறியவளான என் மனைவியை, சீர்வரிசை, வரதட்சணை எதுவும் வேண்டாம் என மறுத்து, என் சொந்த செலவில், கோவிலில் திருமணம் செய்து, என் சொந்த வீட்டிற்கு அழைத்து வந்தேன். அன்றிலிருந்து பிரச்னை ஆரம்பமானது.

என் பெற்றோருக்கு சாப்பாடு போட பிரச்னை செய்தாள். நான் மிகவும் வருத்தப்பட்ட போது, 'எங்களால் உங்களுக்குள் பிரச்னை வேணாம்; நாங்க கிராமத்திற்கே போறோம்...' என்று கூறி, சொந்த ஊருக்கே சென்று விட்டனர். அவர்களை, என் தங்கை பார்த்துக் கொண்டாள். நானும் மாதா மாதம் பணம் அனுப்பி விடுவேன். தற்போது, அவர்களும் இறைவனடி சேர்ந்து விட்டனர்.

இவ்வளவு போராட்டத்திலும், ஒரு மகள், ஒரு மகன் பிறந்தனர். மகள் டிகிரி முடித்து, வேலைக்கு சென்றாள். பின், தாய் மாமனை திருமண செய்ய விரும்பியதால், அவருக்கே திருமணம் செய்து கொடுத்தேன்; அவர்கள் வரதட்சணை கேட்டு படுத்திய கொடுமை அளப்பரியது. கம்பெனி மிஷின்களை விற்று தான், மகள் திருமணத்தை முடித்தேன்.

மகன், படிப்பில் மிகவும் மந்தமாக இருந்ததால், அவனை கம்பெனியில் வேலைக்கு அனுப்பினேன். அங்கேயும், ஒழுங்காக செல்லாமல், சொந்தமாக நான் வைத்திருந்த கம்பெனியிலும் வேலை செய்யாமல், சேராத இடத்தில் சேர்ந்து, கூடா நட்பால், ஊதாரியானது தான் மிச்சம்.

மகள் திருமணத்திற்கு, வீட்டை அடமானம் வைத்து வாங்கிய கடனை, வீட்டு வாடகைகளை வைத்து அடைத்து வருகிறேன். தற்போது, நானும் வேலைக்கு செல்வதில்லை. இந்நிலையில், என் மனைவியும், மகனும் சேர்ந்து, பணம் கேட்டு என்னை மிரட்டுவதுடன், 'பணம் கொடுத்தால் தான் சாப்பாடு போடுவேன்...' என்கிறாள் மனைவி.

'பையனை வேலைக்கு அனுப்பு...' என்றால், அவனும் செல்வதில்லை. எனக்கும், என் மனைவியால் எந்த பிரயோஜனமும் இல்லை. துணி துவைக்கவோ, உடல்நிலை சரியில்லை என்றால் என்னை பார்க்கவோ ஆள் இல்லை.

என் சொந்த பந்தங்களை இங்கு வரவிடுவதும் இல்லை. தற்போது, ஓட்டலில் தான் சாப்பிடுகிறேன். என் பெற்றோருக்கு நேர்ந்த கதி, எனக்கும் ஏற்பட்டு விட்டது. எல்லாம் இருந்தும், எதுவுமே இல்லாதவனாக இருக்கிறேன்.

என் மீதி காலத்தை எப்படிக் கடப்பது என்று தெரியாமல் தவிக்கிறேன்.

என் சகோதரியாக இருந்து, எனக்கு

நல்ல ஆலோசனை வழங்கவும்.

இப்படிக்கு,

பெயர் வெளியிட விரும்பாத,

தங்கள் சகோதரன்.


அன்பு சகோதரருக்கு —

உங்களது அமைதியற்ற திருமண வாழ்க்கைக்கு ஜாதகப் பொருத்தமின்மையோ, வயது வித்தியாசமோ, வரதட்சணை கேளாமையோ காரணங்கள் அல்ல; இருவருக்கும் இடையே மனப் பொருத்தம் இல்லாததே அடிப்படை காரணம்.

திருமணம் என்பது வாலிப வயது ஆண்கள் - பெண்களுக்கு அவசியமான மருந்து தான். ஆனால், அம்மருந்தில் தவிர்க்க முடியாத சில பக்க விளைவுகளும் உள்ளன. சகிப்புத்தன்மை, பரஸ்பரம் விட்டு கொடுத்தல், ஈகோ தொலைத்தல், சுயநலம் தவிர்த்தல் போன்ற பண்புகள் இருந்தால், பக்க விளைவுகளை சமன் செய்யலாம்.

திருமணத்திற்கு முன் எதெல்லாம் உங்களுக்கு பெரிய விஷயமாக தோன்றவில்லையோ அவையெல்லாம் திருமணத்திற்கு பின், அதிருப்தி அளிக்கும் விஷயமாக மாறி, அத்தகைய மனநிலையிலேயே, 33 ஆண்டுகள் குடும்பம் நடத்தியுள்ளீர்கள். அதிருப்தியில் தாம்பத்யம் செய்தால், வன்முறையான, மந்தபுத்தியுள்ள பிள்ளைகள் தான் பிறப்பர்.

வியாபாரத்தில், ஒரு ரூபாய் முதலீடு செய்து, 1,000 ரூபாய் லாபம் எதிர்பார்ப்பவன் பேராசைக்காரன். நெகடிவ் சிந்தனையுள்ள நீங்கள், திருமண வாழ்க்கையில், ஒரு ரூபாய் அன்பை முதலீடு செய்து, பதிலுக்கு, 1,000 ரூபாய் லாபத்திற்கு சமமான, அமைதியான, வெற்றிகரமான குடும்ப வாழ்வை எதிர்பார்த்திருக்கிறீர்கள் ; விதைத்ததை தானே அறுவடை செய்ய முடியும்.

ஒரு பெரிய கம்பெனி முதலாளி, தனக்கான அந்தரங்க காரியதரிசியை பணியமர்த்தும் போதே, அந்த காரியதரிசியிடம், தான் அவளிடம் எதிர்பார்க்கும் பணிகள் என்னென்ன என்பதை அழகாக விளக்கி புரிய வைப்பான். அதைப் போன்று, கணவனும், தன் மனைவியிடம் முதலிரவிலேயே போரடிக்காமல், ரத்தின சுருக்கமாக, தன் எதிர்பார்ப்புகளை கூறி விட வேண்டும்.

சரி போனது போகட்டும்; முதலில், வாடகைக்கு விட்டிருக்கும் வீடுகளில் ஒன்றை விற்று, அடமானக் கடனை அடையுங்கள்; மீதியை வங்கியில், டிபாசிட் செய்து, பணம் கட்டி தங்கும் முதியோர் இல்லத்தில் சேருங்கள்.

முதியோர் இல்லத்தில் கூட, சக முதியவர்களை சகித்து இருந்தால் தான், அங்கு தொடர்ந்து இருக்க முடியும். உங்களிடம் இருக்கும் எதிர்மறை எண்ணங்களை தொலைத்து, தலை முழுகுங்கள்.

மனைவி - மகன் உங்களிடம் சமரசம் பேச வந்தால், இரு தரப்புமே என்னென்ன விஷயங்களில் தங்களை மாற்றி கொள்ள வேண்டும் என்பது குறித்துப் பேசி, ஒரு முடிவுக்கு வாருங்கள். சமரசம் வெற்றி பெற்றால், முதியோர் இல்லத்தை ஒதுக்கி தள்ளலாம். திருந்துவதற்கு தயாராய் இருந்தால், மகனை மீண்டும் வேலைக்கு அனுப்புங்கள். நல்ல இடத்தில் வரன் பார்த்து, திருமணம் செய்து வையுங்கள்.

பிரச்னைகள் மட்டுமல்ல, அதற்கான தீர்வுகளும் நம்மிடமே உள்ளன.

என்றென்றும் தாய்மையுடன்,

சகுந்தலா கோபிநாத்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us