தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/தேடி வந்த தெய்வம்!

தேடி வந்த தெய்வம்!

தேடி வந்த தெய்வம்!


PUBLISHED ON : ஜன 03, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 03, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மனிதர்களாகிய நாம், எதன் பொருட்டெல்லாம், அழுத்தமான கொள்கைகளை கடைப்பிடிக்கிறோம்? கடவுளின் மீதான அன்பில் அந்த அழுத்தம் இருந்தால், பகவானே நம்மை தேடி வந்து அருள்வார் என்பதற்கு, இவ்வரலாற்று உண்மையே சான்று...

ராமபிரான் மீது மிகுந்த பக்தியுடைய பக்தர் ஒருவர், அரங்கநாதரை தரிசிப்பதற்காக, திருவரங்கம் வந்தார். அப்போது, அங்கு சித்திரை விழா நடைபெற்றதால், தெற்கு வீதியில், தங்கக் குதிரை வாகனத்தில், திருவீதி உலா வந்தார் பெருமாள். 'தகதக' வென ஜொலித்த அரங்கநாதரை பார்த்ததும், தன் வசம் இழந்த பக்தர், தான் தரிசித்ததை அப்படியே கீர்த்தனையாக வடித்தார். பின், கும்பலில் மிதந்தபடி வரும் பெருமாளை, அருகில் சென்று தரிசிக்க முயன்றார். ஆனால், அதற்குள் தேர் இவரைக் கடந்து, மேற்கு வீதியில் திரும்பி விட்டது. பக்தருக்கு பெருத்த ஏமாற்றம்.

மேற்கு வீதியில் திரும்பிய ஊர்வலம், அப்படியே நின்று விட்டது. பலவாறு முயற்சித்தும், திருஷ்டி கழித்தும், தேர் நகர வில்லை. இதனால், என்ன செய்வது என்று புரியாமல் அனைவரும் திகைத்து நின்றிருந்த வேளையில், அர்ச்சகர் ஒருவர் மீது ஆவேசித்த பகவான், 'என் பக்தன் ஒருவன், தெற்கு வீதியில் என் தரிசனத்திற்காக காத்துள்ளான்; உடனே அவனை அழைத்து வாருங்கள்...' என, உத்தரவிட்டார்.

தெற்கு வீதி நோக்கி ஓடிய முக்கியஸ்தர்கள், பெருமாளை அருகில் தரிசிக்க முடியவில்லையே என்ற வருத்தத்தில் நின்றிருந்த பக்தரை அழைத்து வந்தனர்.

நடந்ததை அறிந்த பக்தர் உடல் நடுங்க, கண்ணீர் வழிய, 'பெருமாளே... இந்தத் தீனனிடத்தில் உனக்கு இவ்வளவு கருணையா...' என உள்ளம் உருகி, தேவகாந்தாரி ராகத்தில், ஒரு கீர்த்தனையைப் பாடி, பெருமாளை துதித்தார்.

அதன்பின், பெருமாளின் திருவீதியுலா, எவ்வித இடையூறும் இன்றி நடந்தேறியது. அந்தப் பக்தர் தான் சங்கீத மும்மூர்த்திகளில் முதல்வரான தியாகராஜ சுவாமிகள்!

தன் பக்தருக்காக திருவரங்கநாதர் நடத்திய திருவிளையாடலை நினைத்து, அனைவரும் வியந்தனர். தூய்மையான பக்தி தெய்வத்தையே வரவழைக்கும் என்பதை விளக்கும் உண்மை இது.

பி.என்.பரசுராமன்

திருவாசகம்!

மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து

உன் விரையார் கழற்கு என்

கை தான் தலைவைத்துக் கண்ணீர்

ததும்பி வெதும்பி உள்ளம்

பொய்தான் தவிர்ந்து உன்னைப் போற்றி

சயசய போற்றி என்னும்

கை தான் நெகிழ விடேன்

உடையாய் என்னைக் கண்டு கொள்ளே!

விளக்கம்: சிவபெருமானே... அடியேனை உடைமையாக உடையவனே... உன்னை நினைக்கும் போது, உடம்பு சிலிர்த்து, உள்ளம் நடுங்குகிறது. உன் திருவடிகளை எண்ணி, கைகளைத் தலை மேல் குவிக்கிறேன். கண்களில் ஆனந்தக் கண்ணீர் ததும்ப, உள்ளம் வெதும்புகிறது. என் பொய்மைகள் யாவும் நீங்கி, 'போற்றி சயசய போற்றி' என்று உன்னை துதிக்கும் இந்நிலையிலிருந்து நழுவ மாட்டேன். சிவபெருமானே... என்னைப் பார்த்துக் கொள்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us