sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்!

/

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : பிப் 21, 2016

Google News

PUBLISHED ON : பிப் 21, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்புள்ள அம்மாவிற்கு —

நான், 22 வயது பெண்; பி.பி.ஏ., படித்து, தற்போது, தனியார் கம்பெனியில், அக்கவுன்டன்டாக பணிபுரிகிறேன். திருமணமாகி, நான்கு ஆண்டுகள் ஆகிறது. நான்கு வயதில், ஒரு பெண் குழந்தை உள்ளது. உடன் பிறந்தோர் ஒரு அண்ணன் மற்றும் தங்கை; இருவருக்கும் திருமணமாகி விட்டது. என் கணவரின் உடன் பிறந்தோர் இரு அண்ணன்கள். என் பிள்ளை கைக்குழந்தையாக இருக்கும் போதே, என் மாமியார் இறந்து விட்டார். அதனால், என்னை என் அம்மா வீட்டில் விட்டு விட்டு, வாரம் ஒருமுறை வந்து பார்த்துவிட்டு செல்வார் என் கணவர்.

ஊரிலேயே தனியார் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை பார்க்கிறார் என் கணவர். பொருளாதார பிரச்னையால், நானும், என் குழந்தையை அம்மாவிடம் விட்டு விட்டு வேலைக்கு செல்கிறேன்.

சிறுவயதில், என் அத்தை மகனை தான் எனக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறி வந்தனர். அதனால் தானோ என்னவோ எனக்கு என் மாமாவின் மேல் பிரியம் ஏற்பட்டது. ஆனால், அவரோடு பேசியதில்லை.

என் சித்தி மகளை காதலித்து, திருமணம் செய்து கொண்டார் மாமா. உடனே, எங்கள் வீட்டிலும், என் அம்மாவின் சித்தப்பா மகனை, மணம் செய்து கொள்ளும்படி, என்னை வற்புறுத்தினர். நானும், 'நினைச்ச வாழ்க்கை தான் கிடைக்கல; அப்பா, அம்மாவாவது சந்தோஷமாக இருக்கட்டும்...' என நினைத்து, திருமணத்திற்கு சம்மதித்தேன். நிச்சயம் நடந்து, ஆறு மாதத்திற்கு பின்னரே எங்கள் திருமணம் என முடிவாகியது.

இந்நிலையில், என் மாமாவின் மனைவி, வேறு ஒருவனை காதலித்து, அவனையே மணந்து கொண்டாள். எனக்கு நிச்சயம் நடந்துள்ள நிலையில், என்னை மாமாவும் ஏற்றுக் கொள்ள மாட்டார். அத்துடன், என் பெற்றோருக்கு அவமானம் நேர்ந்து விடும் எனப் பயந்து, நிச்சயத்தவரையே திருமணம் செய்து கொண்டேன். அவருக்கும், எனக்கும், 10 வயது வித்தியாசம்.

என் கணவர் மிகவும் நல்லவர். எதிர்காலத் தேவையை, இப்பவே புரிந்து, அதற்கேற்றாற் போல் வாழ்க்கை நடத்துவார். நான் அப்படி இல்லை. என்னால் அவர் அளவுக்கு யோசிக்க முடியாது. அதனாலேயே, அவரிடம் திட்டு வாங்குவேன். அத்துடன், இன்று வரை, அவரோடு முழு மனதாக தாம்பத்தியத்தில் என்னால் ஈடுபட முடியவில்லை.

எனக்கு ஆண்களைப் பற்றியோ, வெளி உலகத்தைப் பற்றியோ அதிகம் தெரியாது. நான் படித்தது, பழகியது எல்லாம் பெண்களிடம் மட்டும் தான். இந்நிலையில், என்னோடு வேலை பார்க்கும் ஒருவர் என்னோடு பேசுவார். அவர், 'நண்பர்களாக போனில் பேசலாம்...' என்றார். நான், எனக்கு ஆண் நண்பர்கள் இல்லாததால், 'சரி...' என்றேன். அவர் என்னோடு பேசும் போது, செக்சைப் பற்றியே பேசுவார். 'ஏன் எப்பப் பார்த்தாலும் செக்சைப் பற்றியே பேசுறீங்க...' என்று கேட்டதற்கு, 'ஏன், உனக்கு செக்ஸ் பிடிக்காதா... சரி நீயே பேசு...' என்றார்.

உடனே, நான் என்ன பேசுவது என்று தெரியாமல், என் அந்தரங்கங்களை சொல்லி விட்டேன். ஒருநாள் அவர், 'செக்ஸ் வச்சுக்கலாமா...' என்று கேட்டார். 'ஒருவரைப் பற்றி முழுதாக தெரியாமல், இப்படி நடந்து கொள்ளக்கூடாது...' என நினைத்து, 'முடியாது...' எனக் கூறி விட்டேன்; அவரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை. ஆனால், எட்டு மாதம் வரை என்னோடு பேசவில்லை.

ஆறு ஆண்டுகளாக காதலித்து, காதல் திருமணம் புரிந்தவர் அவர். நான்கு மாத பெண் குழந்தை உள்ளது. அவர் மனைவி வளைகாப்பிற்கு போன அடுத்த நாளே எனக்கு போன் செய்து, 'என்னோடு உடலுறவு கொள்ள சம்மதமா...' என்று கேட்டார். 'இல்லை... நான் வாழ்க்கை முழுவதும் இப்படியே இருந்து விடுவேன்; என்னை விட்டு விடுங்கள்; எனக்கு விருப்பம் இல்லை...' என்று கூறிவிட்டேன்.

ஆனாலும் எனக்கே தெரியாமல் அவரை விரும்பினேன். தினமும் அவரின் போன் மற்றும் எஸ்.எம்.எஸ்.,காக காத்திருந்தேன். அதன்பின், என்னைப் பார்க்கும் போதெல்லாம் உறவுக்கு அழைத்தார். எனக்கே என்னைப் பார்த்தால் ரொம்ப கேவலமாகவும், வேதனையாகவும் உள்ளது.

இனிமேல் எப்படி என் கணவரோடு இருப்பேன் என்று தெரியவில்லை. எனக்கு வாழவே பிடிக்கவில்லை. இப்போது என் கணவர் என்னுடன் இல்லை. ஆறு மாதத்திற்குப் பின் என்னுடன் வந்து விடுவார். அப்ப, எப்படி அவரோடு ஒன்றாக இருப்பது... நினைச்சுப் பார்க்கவே முடியல.

ஏன் இப்படி கெட்டு சீரழிந்து போனேன் என்று தெரியாமல், தினம் தினம் செத்துக் கொண்டிருக்கிறேன். வீட்டில் அனைவரும் சந்தோஷமாக உள்ளனர்; ஆனால், நான் மட்டும் தனியாக இருக்கிறேன். என் குழப்பத்திற்கும், வேதனைக்கும் நல்லதொரு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், இக்கடிதத்தை எழுதுகிறேன்.

அம்மா... தயவு செய்து, எனக்கு நல்லதொரு வழியைக் காட்டுங்கள்.

இப்படிக்கு,

ஊர், பெயர் வெளியிட விரும்பாத

உங்கள் மகள்.


அன்புள்ள மகளுக்கு —

அத்தை மகனை மணக்க விரும்பிய நீ, ஏமாற்றத்துடனேயே கணவனுடன் தாம்பத்யம் செய்து, குழந்தை பெற்றுள்ளாய். விரும்பிய உணவை உண்ணாமல், கிடைத்த உணவை உண்டால், வயிற்றில் ஒரு மாய பசி தீராமல் புகைந்து கொண்டே இருக்கும். அந்த உணர்வே, போன் செக்ஸ் பேசும் நண்பனை, கள்ளக்காதலன் ஆக்கியுள்ளது. கள்ளக்காதலன் உன்னை உதாசீனப்படுத்தியது, உனக்கு இரண்டாவது ஏமாற்றம்.

நீ, திருமணபந்தம் மீறிய உறவுகளுக்கு வலை வீசுபவள் அல்ல; நிராசைகளுக்கு வடிகால் தேடும் குழப்பவாதி.

பணிபுரியும் பெண்களுக்கு, எப்போதுமே அக்னி பரிட்சை உண்டு. அலுவலக ஆண்கள், சகலவிதமாய் தூண்டில் வீசி பிடிக்க பார்ப்பர். அந்த தூண்டில்களில் சில பெண்கள் சிக்கி விடுகின்றனர். காரணம், அலுவலக ஆண்களின் நகைச்சுவை, குசலம் விசாரிக்கும் அனுசரணையான பேச்சு, எட்டுமணி நேர அருகாமை மற்றும் சிறு சிறு உதவிகள்!

உனக்கோ மாமியார் தொந்தரவு இல்லை; நீயும், உன் கணவனும் சம்பாதிக்கிறீர்கள். அதனால், பெரிதாய் பொருளாதார பிரச்னையும் இல்லை. உன் கணவர் நல்லவர். எதிர்காலத்திற்காக, திட்டம் தீட்டி நிவர்த்தி செய்பவர்; குடிகாரர் இல்லை. உன்னை உடலாலும், மனதாலும் துன்புறுத்தும் குணம் இல்லாதவர். இத்தனை ப்ளஸ் பாயின்ட்கள் உள்ள கணவரை விட, ஒரு சுயநலகாரனின் பிரிவு தான் உன்னை வாட்டுகிறது.

உன் கள்ளக் காதலனுக்கு, ஆறு ஆண்டுகள் சிரமப்பட்டு காதலித்து மணந்து கொண்ட மனைவி தான் முக்கியமே தவிர, நீ அல்ல; நீ, அவனுக்கு வெறும் பொழுதுபோக்கு மட்டுமே! இந்த உண்மையை மனதில் நிலை நிறுத்து!

உன்னால், உன் கணவரை விட முடியாது; உன் கள்ளக் காதலன் மனைவியை விட மாட்டான். பின் எதற்கு விஷ நிழலை துரத்துகிறாய்?

உன் கள்ளக்காதலனுடனான நேரடி பேச்சையும், தொலைபேசி பேச்சையும் கத்தரித்து விடு. அவனது நினைவுகளை தலை முழுகு. உன் அலுவலகத்திற்கு வேறு கிளைகள் இருந்தால் மாற்றலாகி போ. மனம் தடுமாறும் போதெல்லாம் உன் மகளை நினை; மனைவி என்ற ஸ்தானத்தை விட, அம்மா என்ற ஸ்தானம் உயர்ந்தது; சுயநலம் இல்லாதது. கணவனுடைய அலைவரிசைக்கு உன்னை உயர்த்தி, கணவனுடன் முழு மனதாய் தாம்பத்யத்தில் ஈடுபடு.

வீட்டில் அனைவரும் சந்தோஷமாக இருக்க, நீ மட்டும் ஏன் சோகமாய் இருக்க வேண்டும்? சந்தோஷமாக இருக்க முயற்சித்தால், சந்தோஷம் தானே ஊற்றாய் கொப்பளிக்கும்.

உன் குடும்ப நலனை நினைத்தால், தவறான ஆசைகள் தலைதெறிக்க ஓடிவிடும். தனிமையில் இராதே. நல்ல பாட்டுகளை கேள், கோவிலுக்கு போ; மனம் சலனப் பட்டதற்கு இறைவனிடம் மன்னிப்பு கேள். நடந்ததை கெட்ட கனவாய் நினைத்து மறந்து, புதிய வாழ்க்கையை ஆரம்பி!

என்றென்றும் தாய்மையுடன்

சகுந்தலா கோபிநாத்.






      Dinamalar
      Follow us