sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்!

/

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : மே 01, 2016

Google News

PUBLISHED ON : மே 01, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்புள்ள அம்மாவிற்கு —

நான், எம்.பில்., ஆங்கிலம் படிக்கும் கறுப்பு மற்றும் சுமாரான பெண்; வயது, 24. திருமணம் முடிந்து, நான்கு மாதங்கள் ஆகின்றன. 'பெண்ணை நாங்கள் படிக்க வைக்கிறோம்...' என்று கூறி, வேலைக்கே செல்லாதவரை, எம்.பி.ஏ., பட்டதாரி என்று பொய் சொல்லி, என்னை, திருமணம் செய்தனர், மாப்பிள்ளை வீட்டார். திருமணத்திற்கு முன்பே, இரு வீட்டாருக்கும் கல்யாணச் செலவு, சீர் வரிசை, துணி எடுத்தல் போன்றவற்றில், சின்னச் சின்ன பிரச்னைகள் ஏற்பட்டன.

என் கணவரின் வயது, 27; அதிக உடல் பருமன் உடையவர். அவரால் இல்லற வாழ்வில் ஈடுபட முடியவில்லை என்பதுடன், இதுவரை என்னிடம் சிரித்துப் பேசியது கூட இல்லை. அவரது 'சித்தி வாழாவெட்டி; சித்தியும், அவள் மகளும் எவ்வளவு அழகு பார்...' என்று, ஒவ்வொரு இரவும் கூறுவார்.

கல்லூரிக்கு கூட, என்னை, என் மாமியாரும், சித்தி மகளை, என் கணவரும் தான் அழைத்துச் செல்வர். அவருக்கு சித்தி சொல் தான் வேதவாக்கு. 'நில்' என்றால் நிற்பார். நான், என்ன நகைகள் போட வேண்டும் என்பதைக் கூட சித்தி தான் தீர்மானிப்பார். அவர் வேலைக்குச் செல்லாதது கூட, அவரது சித்தி சொல்லித் தான் தெரியும்.

என் முன்னிலையிலேயே சித்தியை தொடுவதும், அவர் மகளை தடவுவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்.

அதேபோன்று, என் முன், என் கணவரோ, அவரது பெற்றோரோ பேசுவதில்லை; கைபேசியில் தான் பேசிக் கொள்வர். விடுமுறை நாட்களில், காலையில் அனைவரும் அவருடைய சித்தி வீட்டுக்குச் சென்று, மாலையில் தான் வீடு திரும்புவர். நர்ஸ் வேலை பார்க்கும் என் மாமியார், வேலை முடிந்து வந்தால், 'டிவி' தொடரை மட்டுமே பார்ப்பார்; என்னுடன் பேச மாட்டார்.

திருமணமான, 20 நாட்களில், 'என் குடும்பத்தாருக்கு சம்பந்தி சாப்பாடு போடாமல், உன் வீட்டில் கை நனைக்க மாட்டேன்...' என்று கூறி, என்னையும் என் தாய் வீட்டுக்கு செல்ல அனுமதிக்கவில்லை, என் கணவர். தலை தீபாவளிக்கு எங்களை அழைக்க வந்த என் பெற்றோரிடம், 15,000 ரூபாயும், ஒரு பவுன் மோதிரம் போடுமாறு கூறி, இதை தரவில்லை என்றால், கல்லூரிக்கு அனுப்ப மாட்டேன் என்றதுடன், வீட்டில் நான் வேலை செய்வது இல்லை என்றும், இல்லற வாழ்வில் அவரை கவனிப்பதில்லை என்றும் கூறினார்.

தீபாவளி அன்று, என் தாய் வீட்டில், காலையில் டிபன் சாப்பிட்டு, மதியம் என் மாமியார் வீட்டுக்கு வந்தோம். வீட்டிற்கு வந்ததும், என் குடும்பத்தார், அவரை சரிவர கவனிக்கவில்லை என்று குறை கூறினார், என் கணவர். என் சின்ன மாமியாரோ, 'நீ, எம்.பில்., படிச்சு முடிச்சுட்டன்னு நினைச்சுத் தான், உன்னை நாங்க திருமணம் செய்தோம்; இனி, நீ காலேஜுக்கு போகக் கூடாது...' என்றாள்.

தீபாவளிக்கு மறுநாள், என்னை மட்டும் என் அம்மா வீட்டிற்கு அனுப்பி வைத்து, இரண்டு நாட்களுக்குப் பின், வருமாறு கூறினார், என் கணவர்.

இரண்டு நாட்களுக்குப் பின், மொபைல் போனில், 'நான் வீட்டுக்கு கிளம்பி விட்டேன்...' என்று சொன்ன போது, 'உன்னைப் பார்க்கவே பிடிக்கல; உன்னை திருமணம் செய்ததில் இருந்து, எனக்கு நிம்மதி இல்ல. வீட்டுக்கு வராதே; உங்க அம்மா வீட்டிலேயே இரு...' என்று கூறி இணைப்பை துண்டித்தார், என் கணவர்.

இதை, என் மாமியாரிடம், கூறிய போது, 'நீ அழகாக இல்ல; 'ஈகோ' பிடித்தவள். மென்டல்...' என்று திட்டி, 'உனக்கு, என் மகனிடம் என்ன குறைங்கிறத நாலு பேர் முன்னால் சொன்னால் தான் என் மகனுடன் நீ, வாழ முடியும்...' என்றும், 'உன் சீர்வரிசை அனைத்தையும் ஒரு அறையில் வைத்துள்ளோம்; உன் வீட்டாருடன் வந்து அள்ளிக் கொண்டு போ...' என்று கூறி, போனை வைத்து விட்டார். என் அம்மா, தொடர்பு கொண்ட போதும், 'நான்கு பேர் முன்னிலையில் பஞ்சாயத்து வைத்த பின் தான் எதுவும் சொல்ல முடியும்; கல்லூரிக்கு உங்கள் மகள் படிக்கப் போகக் கூடாது...' என்று கூறி, துண்டித்து விட்டார்.

இதனிடையில், என் அம்மா வீட்டிலிருந்து கல்லூரிக்குச் சென்றேன். தேர்வு ஆரம்பமானதால், அதற்குத் தேவையான ஆவணங்கள் என் கணவர் வீட்டில் இருந்ததால், அவற்றை எடுக்க என் அண்ணனுடன் சென்றேன். என் உடைமைகள், சீர்வரிசைகள் அனைத்தையும் ஒரு அறையில் அடைத்து வைத்திருந்தனர். படிப்பு முடிந்த பின், பேசிக் கொள்ளலாம் என்று படிப்பிற்கு தேவையானவைகளை மட்டும் எடுத்து வந்து விட்டோம்.

தற்போது, தனியார் பைனான்ஸ் கம்பெனியில் பணிபுரியும் என் கணவர், ஒரு சோம்பேறி. குனிந்து எந்த பொருளையும் எடுக்க முடியாத அளவுக்கு குண்டானவர்.

நடைபயிற்சி செய்ய கூப்பிட்டாலும், வர மாட்டார். அறையில் நான் அவரிடம் பேச ஆரம்பித்தாலே, 'என் பெற்றோரை கவனி...' என்பார். என் மாமியாரிடம் சென்றால், 'இங்கு ஏன் வந்தாய்... என் மகனை கவனி...' என்பார். இதுவரை எங்கும் வெளியில் அழைத்துச் சென்றதில்லை. என் கணவரின் வீட்டினரோ, 'படிப்பை நிறுத்தி, வேலைக்கு செல்...' என்கின்றனர்.

எனக்காக கடன் வாங்கி செலவு செய்த என் பெற்றோர் மன உளைச்சலுக்கு ஆளாகி, உடல் உபாதைகளுக்கு உட்பட்டுள்ளனர். என் மாமியார், மாமனார் மற்றும் கணவரிடம் எதிர்த்துப் பேசியது கிடையாது; எல்லாவற்றையும் சரி என்று எடுத்துக் கொள்வேன். இவ்வளவு படித்த எனக்கு, என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பது தெரியவில்லை.

எனக்கு, நல்ல தீர்வு கூறுங்கள்.

இப்படிக்கு,

பெயர் சொல்ல விரும்பாத, அபலைப் பெண்.


அன்பு மகளுக்கு —

பொதுவாக, மணமகன் வீட்டார், தங்கள் மகனுக்கு பொருத்தமான மனைவியையோ, தங்களுக்கு இணக்கமான, அனுசரணையான மருமகளையோ எதிர்பார்ப்பதில்லை; அதற்குப் பதிலாக, தங்களுக்கு சேவகம் செய்ய, ஒரு அடிமையை எதிர்பார்க்கின்றனர். அந்த அடிமையும், கறுப்பாக இல்லாமல், சிவப்பாக இருக்க வேண்டும். விரும்பினால் படிக்க வேண்டும்; இல்லா விட்டால், படிப்பை நிறுத்தி, வேலைக்கு போய் சம்பாதிக்க வேண்டும்; அவர்கள் விரும்பாவிட்டால், வேலையை கூட ராஜினாமா செய்ய வேண்டும்.

கறுப்பு என்பது திராவிட நிறம்; உன் கணவனும், அவனது குடும்பத்தாரும் அமெரிக்கா, இங்கிலாந்து வழி தோன்றல்களா? கறுப்பிலும் அழகு மிளிர்கிறது. கறுப்பு நிறத்தை இழிவாக பேசுவது, ஆங்கிலேயரின் அடிவருடும் தனம்.

பெண்களை மதிக்க தெரியாத, இல்லற வாழ்க்கைக்கு தகுதியில்லாத உன் கணவனிடம் இருந்து சட்டப்படி விவாகரத்து பெறு.

இளம் முனைவர் பட்டம் பெற்ற பின், யு.ஜி.சி., நெட் தேர்வை எழுதி, விரிவுரையாளர் பணிக்கு செல்; பொருளாதார சுதந்திரத்தை அனுபவி.

தகுதியான வரன் தேடி, மறுமணம் செய்து கொள். பார்க்கும் வரன் மனதாலும், உடலாலும் பொருத்தமானவனாக இருக்கிறானா என்பதை உறுதி செய்ய வேண்டும். இரண்டாம் திருமணம், அவசர கோலமாய் இல்லாது, அர்த்த பொருத்தமாய் அமைதல் நல்லது.

இறைவன் ஒரு கதவை மூடினால், இன்னொரு கதவை திறந்து வைப்பான். கொடிய கோடை காலத்திற்கு பின், வசந்த காலம் வருவதைப் போல், உன் வாழ்விலும் சந்தோஷம் ஏற்படும்.

தாழ்வு மனப்பான்மையை விட்டொழி; உன் வெற்றிகரமான இரண்டாம் திருமணம், உன் முன்னாள் கணவனுக்கும், அவனது குடும்பத்தாருக்கும் தண்டனையாக அமையட்டும். பணிக்குச் சென்று, திருமணமும் செய்து கொண்ட பின், பகுதி நேர பிஎச்.டி., படி. உன் கல்வித் தகுதியை வளர்த்துக் கொண்டே செல். உன் சம்பாத்தியமும், பதவியும், அதிகாரமும் உன்னை பாதுகாக்கும் கவசங்கள். வெற்றி பெற தேவையான யுக்திகளை திட்டமிட்டு செயல்படுத்து!

வாழ்த்துகள்!

என்றென்றும் தாய்மையுடன்,

சகுந்தலா கோபிநாத்






      Dinamalar
      Follow us