
அன்புக்குரிய சகோதரி —
நான், 64 வயது ஆண்; கடந்த, 30 ஆண்டுகளாக சுயதொழில் செய்து வருகிறேன். எங்களுக்கு, மூன்று பெண் பிள்ளைகள். சுயதொழில் புரிந்து வந்த என் தம்பி, கடந்த, 1995ல் இறந்து விட்டார். அவர் இறக்கும்போது, அவருக்கு, 12 வயது மகன் மற்றும் ஒன்பது, ஆறு வயதுகளில் இரு மகள்கள் இருந்தனர். சொத்து எதுவும் இல்லாத நிலையில், அந்த, மூன்று பிள்ளைகளையும், நானே பொறுப்பேற்று வளர்த்தேன். அதன்பின், 2004ல் என் தம்பி மனைவியும் இறந்து விட்டார். என்னுடைய சுமாரான வருமானத்தில், ஆறு பிள்ளைகளையும் வளர்த்ததால், ஐந்து மகள்களையும் அதிகமாகப் படிக்க வைக்க முடியவில்லை. ஆண்பிள்ளை என்பதால், தம்பி மகனை மட்டும் பி.இ., படிக்க வைத்தேன். ஐந்து மகள்களுக்கும் திருமணம் செய்து கொடுத்து, அவர்களும் மாமியார் வீட்டில் நற்பெயருடன், நலமுடன் உள்ளனர்.
எங்கள் மகன், பி.இ., முடித்த பின், அவனுக்கு, வேலையும் வாங்கி கொடுத்து, மன வளக்கலை மன்றம் நடத்தும் ஒருவரின் பெண்ணை அவனுக்கு திருமணமும் செய்து வைத்தேன். ஊருக்கெல்லாம் உபதேசம் செய்யும் நல்ல மனிதரின் பெண் என்பதால், அவள் பள்ளிப் படிப்பை தாண்டாதவளாக இருப்பினும், வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்தோம். திருமணம் முடிந்து ஆறு மாத காலத்திற்கு பின் தான் தெரிந்தது, நாங்கள் சம்பந்தம் செய்தது ஒரு பித்தலாட்டக்காரக் குடும்பம் என்று!
இவ்வாறு நான் கூறக் காரணம், நாங்கள் அசைவம்; ஆனால், அவர்கள் சைவம் என்பதையும், திருமணத்திற்கு முன் பெண்ணுக்கு கர்ப்பப்பையில் இரு முறை ஆபரேஷன் செய்ததையும் மறைத்து விட்டனர்.
குழந்தையின்மை பிரச்னைக்காக மருத்துவரிடம் செல்ல அழைத்தால், அவளும், அவள் தாயும் தட்டிக் கழிக்கின்றனர்.
எங்கள் மகனும், அவளும், அவன் வேலை பார்க்கும் ஊரில் தனிக்குடித்தனம் இருக்கின்றனர். நானோ, என் மனைவியோ, எங்கள் ஐந்து மகள்களோ எங்கள் மகன் வீட்டிற்கு, விருந்தாளியாக கூட வரக்கூடாது என்கிறாள், மருமகள். ஆனால், அவளுடைய, தாய், தகப்பனை அவள் கூடவே வைத்துக்கொள்ள வேண்டும் என்கிறாள்.
மருமகளுடைய அப்பாவிடம், 'மருமகனை, அவன் பெற்றோரிடமிருந்து, பிரிக்க முயற்சிக்கிறீர்களே...' என சிலர் கேட்டபோது, 'அவர்கள் வளர்த்தவர்கள் தானே, பெற்றவர்களா...' என கேட்கிறாராம், அந்த பெரிய மனுஷன்! இவ்வளவுக்கும், அவர்கள் மகன் வெளிநாட்டில், மாதம் 1.5 லட்சம் சம்பளத்தில் வேலை பார்க்கிறான்.
பிரச்னை முற்றியதால், இருதரப்பு உறவினர்களையும் வைத்து பஞ்சாயத்து பேசியதில், 'இனி எந்த தவறும் செய்ய மாட்டோம்; எங்கள் தலையீடு எதுவும் இருக்காது...' என்று உறுதி கூறினர். எங்கள் மகனும், 'நான் மாமியார் வீட்டுக்கு வர மாட்டேன்; அவர்களும் என் வீட்டுக்கு வரக் கூடாது. ஆனால், அவர்கள் பெண், பெற்றோர் வீட்டுக்கு செல்லலாம்; போனில் பேசலாம்...' என்கிற நிபந்தனையுடன் அவளை அழைத்து சென்றான்.
இந்நிலையில், பஞ்சாயத்து முடிந்து அழைத்து சென்ற எங்கள் மகனை, பாடாய்ப்படுத்தி, அவள் பெற்றோரை அவளுடன் வைத்துக் கொள்ள பிடிவாதம் பிடித்தாள். இதனால், அவளை, அவள் பெற்றோர் வீட்டுக்கே அனுப்பி விட்டான். அன்றிலிருந்து, இன்று வரை, 'பெற்றோரை பிரிந்து இருக்க முடியாது...' எனக் கூறி, இந்த, 32 வயதிலும், கணவனுடன் வர மறுக்கிறாள்.
கடந்த, ஒரு ஆண்டாக ஓட்டலில் சாப்பிட்டு, கல்யாணமாகியும் பிரம்மச்சாரியாக உள்ளான், என் மகன். நானும், என் மனைவியும் தூங்கி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. நாங்கள் என்ன தவறு செய்தோம்? நாங்களோ, எங்கள் மகள்களோ மகனின் வருமானத்தை நம்பி இருக்கவில்லை. அதனால், என் மகனிடம், 'நீ எங்களையோ, உன் சகோதரிகளை பற்றியோ கவலைப்படாதே; என் ஆயுள் உள்ளவரை, அவர்களுக்கு வேண்டிய சீர்செனத்திகளை நானே செய்து கொள்கிறேன்; நாங்கள் யாரும் உன் வீட்டுக்கு வரவில்லை என, வருத்தப்படாதே. நீ, உன் மனைவியுடன், மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தினால், போதும்...' எனக் கூறி விட்டோம். ஆனால், அவள், 'என் பெற்றோரை உடன் வைத்துகொண்டால் தான் வருவேன்...' எனக் கூறி, வர மறுக்கிறாள்.
எங்கள் மகனுக்கு தற்போது, வயது, 35; அவனை இவ்வளவு தூரம் வளர்த்து, ஆளாக்கி இப்படிப்பட்ட குடும்பத்தில் தள்ளி விட்டோமே என்ற குற்ற உணர்வில் நானும், என் மனைவியும் தவிக்கிறோம். சர்க்கரை நோய் உள்ள நிலையில், என் மனைவியின் உடல்நிலை இந்தக் கவலையால், மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
நாங்கள் இறந்த பின், எங்களுக்கு கொள்ளி போடுவதைத் தவிர, அவனிடம் எதையும், எதிர்பார்க்கவில்லை. எங்கள் மகள்களும் அப்படியே! ஆனால், அவன் மனைவியும், அவள் மாமியாரும் சேர்ந்து நஞ்சு வைத்து கொன்று விடுவார்களோ என அஞ்சுகிறான் என் மகன்.
எங்களின் கண்ணீரை போக்க, தங்களின் ஆலோசனையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
— இப்படிக்கு,
அன்புள்ள சகோதரன்.
அன்பு சகோதரருக்கு —
உங்களது மூன்று மகள்களுடன், இறந்து போன தம்பியின் பிள்ளைகளையும் சேர்த்து வளர்த்து ஆளாக்கி, திருமணமும் செய்து வைத்துள்ளது, உங்களின் நல்ல மனதைக் காட்டுகிறது. அதே சமயம், உங்கள் மருமகள் மீது நீங்கள் கூறும் குற்றச்சாட்டுகள், மச்சத்தை மலையாய் பார்க்கும் மிகையாகவே தோன்றுகின்றன.
ஒரு குடும்பம், இன்னொரு குடும்பத்துடன் சம்பந்தம் வைத்துக் கொள்ளும் போது, அசைவம் உண்பவர்கள் தான், தங்களை சைவம் என பொய் கூறுவர். சைவம் உண்போர், தங்களை அசைவம் உண்பவர் என பொய் கூறி, நான் கேள்விப்பட்டதில்லை. அவரவர் உணவுப் பழக்கம் அவரவருக்கு!
உங்கள் மருமகளுக்கு, இரு முறை கர்ப்பப் பையில் அறுவை சிகிச்சை நடந்ததாக கூறுகிறீர்கள்; நீங்கள் கூறுவதற்கு மருத்துவ ஆதாரங்கள் உள்ளனவா? கர்ப்பப் பையில் கட்டி அல்லது வயிற்றில் வேறு ஏதாவது பிரச்னைக்காக அறுவை சிகிச்சை நடந்திருக்கலாம். அதை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறீர்களோ என எண்ணுகிறேன்.
மருத்துவரிடம் சென்று, குழந்தையின்மைக்கு யார் காரணம் என்பது உறுதியாகி விட்டால், அது கணவன், மனைவிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று கூட உங்கள் மருமகள் நினைத்திருக்கலாம்.
நீங்களோ, உங்கள் மகள்களோ தங்கள் வீட்டுக்கு வரக்கூடாது என்ற உங்கள் மருமகளின் மனோபாவம், இன்றைய ஒட்டுமொத்த மருமகள்களின் மனோபாவம். பொதுவாக, திருமணமான பெண்கள் பிறந்த வீட்டார், புகுந்த வீட்டார் யாரும் தங்கள் வீட்டுக்கு வரக்கூடாது என, விரும்புவர். உங்கள் மருமகள், விதி விலக்காய் தன் பெற்றோரை ஆதரிக்கிறாள்.
உங்கள் மகனை, உங்கள் மருமகளும், அவள் தாயாரும் விஷம் வைத்து கொன்று விடுவர் என்பது, வீண் கற்பனை என்றே நினைக்கிறேன்.
தம்பி மகனை, உங்கள் பிள்ளையாக என்கிறீர்கள். இந்த மனப்பக்குவம், சுயநலமில்லா அன்பு, வேற்றுமை காட்டாத உள்ளம் உலகில் பெரும்பாலும் யாருக்கும் இருப்பதில்லை. அதை உங்கள் சம்பந்தி, இழித்து, பழிக்கிறார்.
நீங்கள் மகன் வீட்டுக்குப் போக வேண்டாம். உங்கள் வீட்டுக்கு, மகன் - மருமகள் வர வேண்டாம். அவர்கள் தனியாக குடும்பம் நடத்தட்டும்; விட்டு பிடியுங்கள்.
உங்கள் மகன், சிறப்பான தாம்பத்யம் செய்தால், உங்கள் மருமகள், தன் பிறந்த வீட்டுக்கு அடிக்கடி போக மாட்டாள்; அவர்களும் உங்கள் மகன் வீட்டில் வந்து டேரா அடிக்க மாட்டார்கள். உங்கள் மகனிடமும் குறைகள் உள்ளன. அதை ஆராய, இது நேரமல்ல.
உங்கள் வயது சபிக்கும் வயதல்ல; குற்றம் குறைகளை மன்னித்து, ஆசிர்வதிக்கும் வயது.
மகன் குடும்பம் மீதான கவனத்தை, மகள்கள் குடும்பங்களின் மீது திருப்புங்கள். அவர்களின் மீது அன்பை கொட்டி, அன்பை பெறுங்கள். இருட்டை ஏசுவதை விட, ஒளியை ஏற்றி வைப்போம் சகோதரரே!
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.

