sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்!

/

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஜூலை 03, 2016

Google News

PUBLISHED ON : ஜூலை 03, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்புள்ள அம்மாவுக்கு —

நான், 39 வயது ஆண்; திருமணமாகி, 16 ஆண்டுகள் ஆகின்றன. பிளஸ் 1 படிக்கும் மகள் மற்றும் ஏழாம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர். நன்றாகப் படிக்கும் புத்திசாலியான, அழகான பிள்ளைகள்.

என் வீட்டினரின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், வீட்டை விட்டு வெளியேறி, மனைவி வீட்டார் சம்மதத்துடன், காதல் திருமணம் செய்து கொண்டேன். என் மீது அளவு கடந்த அன்பு கொண்டவள், என் மனைவி.

நான் வெளியூரில் வேலை செய்ததால், திருமணமான நாள் முதல், என் மாமியார் வீட்டில் தான் கூட்டுக்குடும்பமாக இருந்தோம். எனக்கு பெண் குழந்தை பிறந்ததை கேள்விப்பட்டு, என் மகளை பார்க்க வேண்டும் என்று அழுதார் என் அம்மா.

சிறு வயது முதலே ரொம்ப கஷ்டப்பட்டவர், என் அம்மா. 16 வயதிலேயே, சொந்த அத்தை மகனுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டு. ஒரு அக்கா, ஒரு அண்ணன் மற்றும் நான் பிறந்திருந்த நிலையில், எங்களை விட்டு பிரிந்து சென்று, வேறு திருமணம் செய்து கொண்டார் என் அப்பா. நாங்கள் என் அம்மா வழி தாத்தா வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்தோம். சில ஆண்டுகளில், என் அண்ணன் இறந்து விட்டார். இதில், மிகவும் மனம் உடைந்து போன அம்மா, என் மீதும், அக்கா மீதும் அளவு கடந்த அன்பு காட்டினார்.

தாத்தாவுக்கு சொந்தமான நிலத்தில், காலை முதல் மாலை வரை விவசாய வேலை செய்து, கஷ்டப்படுவார், அம்மா. அதற்கு கைமாறாக, என் அம்மாவுக்கு சொத்தில் சிறிது கூடுதலாகவே நிலம் எழுதி வைத்தார் தாத்தா.

என் மாமா மற்றும் சித்திகள் பேச்சைக் கேட்டு, என் திருமணத்தை எதிர்த்த அம்மா, எனக்கு குழந்தை பிறந்ததை கேள்விப்பட்டு, என்னையும், என் மனைவியையும் ஊருக்கு வந்து விடும்படி அழைத்தார்.

ஆனால், ஊருக்கு சென்ற பின் தான் தெரிந்தது, மாமா மற்றும் சித்திகளை பகைத்துக் கொண்டு தான், அம்மா எங்களை அழைத்துள்ளார் என்பது!

என் அம்மா மீது அன்பும், மரியாதையுமாக தான் நடந்து கொள்வாள் என் மனைவி. ஆனால், எங்களை விட அவள் வசதி குறைவான வீட்டைச் சேர்ந்தவள் என்பதால், மாமா மற்றும் சித்திகளுக்கு என் மனைவியை பிடிக்கவில்லை.

முதலில், அவர்கள் என் மனைவி மீது, பகைமை காட்டாமல் பழக, என் மனைவியும் நன்றாகத்தான் நடந்து கொண்டாள். நாளடைவில், பிரச்னைகள் வெடிக்க, என் மனைவியாலும், சில பிரச்னைகள் வந்து, குடும்பம் பிரிந்தது.

அன்று முதல், நாங்கள், என் அம்மாவுடன், தனியாக வசித்தோம். இந்நிலையில், என் அக்காவுக்கு குழந்தை பிறக்க, அங்கு சென்று விட்டார், அம்மா. அதுவரை நன்றாக இருந்த என் மனைவி, என் அப்பா, அம்மாவை விட்டு சென்று, இன்னொரு திருமணம் செய்து கொண்டார் என்பதையும், இரண்டாவது திருமணம் செய்தவரையும் விட்டு விட்டு, மூன்றாவது திருமணம் செய்து கொண்டார் என்பதையும் கேள்விபட்டுள்ளாள். அன்றிலிருந்து என்மீது சந்தேகப்பட ஆரம்பித்தவள், என் வீட்டார் யாரிடமும் ஒட்ட மறுக்கிறாள். பக்கத்து வீடு மற்றும் எதிர் வீடு என அனைவரிடமும் சண்டையிடுகிறாள்.

என்னையும், பிற பெண்களையும் சேர்த்து வைத்து அசிங்கமாக பேசுகிறாள். சில நேரம், அவள் பேசுவதை தாங்க முடியாமல் அடித்து விடுவேன். அவளை அடிக்க வைத்து விட்டாளே என்று வருத்தப்படுவேன். அவளும் சமாதானமாகி விடுவாள்.

சாலையில் செல்லும் யாராவது ஒரு பெண்ணை யதார்த்தமாக பார்த்தால் கூட, சண்டையிடுகிறாள். தினம் தினம் நரகமாக இருக்கிறது. நிம்மதியான தூக்கம் இல்லை. நான் எவ்வளவோ சொல்லியும், என்னை நம்ப மறுக்கிறாள். என் மகள் மற்றும் அம்மா கூறியும், அவள் சந்தேக புத்தியை விடுவதாக இல்லை.

இந்நிலையில், திடீரென என் சகோதரியின் கணவர் இறந்து விட்டார். அக்கா கணவர் வீட்டினர் யாரும் ஆதரவுக்கு முன் வராத காரணத்தால், துணைக்கு, என்னை குடும்பத்துடன் வந்துவிடும்படி அழைத்தாள், அக்கா. முதலில், மறுத்த என் மனைவி, பின் சம்மதித்தாள். தற்போது, அக்கா வீட்டுடன் தான் வசிக்கிறோம். என் அக்காவும், நானும் கடை வைத்துள்ளோம். பக்கத்து - பக்கத்து கடை என்பதால், நான் தான் என் அக்கா கடையையும் சேர்த்து பார்த்துக் கொள்கிறேன். என் மனைவியும், அவ்வப்போது கடையை பார்த்துக் கொள்வாள்.

அக்காவிடம் நல்ல முறையில் பேசி வந்தவள், இப்போது அவளிடம் பேசுவதே இல்லை. அத்துடன், தனிக் குடித்தனம் செல்ல வேண்டும் என்கிறாள். தற்போது, என் பொருளாதார சூழ்நிலை சரியில்லை; இது, அவளுக்கும் தெரியும். இருந்தும் அடம் பிடிக்கிறாள்.

என் லட்சியம் இரண்டு; ஒன்று, வாழ்க்கையில் உழைத்து முன்னுக்கு வர வேண்டும். மற்றொன்று, என் அப்பா போல இல்லாமல், என் மனைவிக்கு நல்ல கணவனாகவும், என் பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாகவும் இருக்க வேண்டும்.

ஆனால், என் மனைவியோ, 'போலீசில் கூறி உன் குடும்பத்தையே உள்ளே தள்ளிடுவேன்...' என்றும், 'தற்கொலை செய்து கொள்வேன்...' என்றும் மிரட்டுகிறாள். சில நேரம், 'என்னையும், என் குழந்தைகளையும் விட்டு விடு; எங்கேயாவது சென்று விடுகிறேன்...' என்கிறாள்.

தினமும் அவளது இந்த செய்கையால், மிகுந்த மன உளைச்சலாக இருக்கிறது. பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து, அமைதியாக இருக்கிறேன்.

இதனால், 'தனிக்குடித்தனம் தானே போகணும்; நான் வீடு பார்க்கும் வரை, உன் அம்மா வீட்டில் இரு...' என்று அவள் அம்மா வீட்டிற்கு அவளை அனுப்பினேன். மேலும், 'தனிக்குடித்தனம் செல்லணும் என்றால், நீயும் ஏதாவது வேலைக்கு செல்ல வேணடும்...' என்று கூறினேன்.

'முடியாது...' என்று மறுத்தாள். 'நம் சூழ்நிலை சரியாகும் வரை, கடையில் வியாபாரம் நன்றாக வரும் வரை நீ வேலைக்கு சென்று தான் ஆக வேண்டும்...' என கண்டிப்புடன் கூறிவிட்டேன். இப்போது, என்னிடமும், அக்கா மற்றும் அம்மாவின் காலில் விழுந்து, மன்னிப்பு கேட்டு, 'நாம எல்லாம் மறுபடியும், ஒன்றாக இருப்போம். நான் செய்த தவறை உணர்ந்து விட்டேன்...' என்று கூறி அழுகிறாள்.

இது உண்மையா அல்லது வேலைக்கு போகாமல் இருக்க நாடகமாடுகிறாளா என தெரியவில்லை.

அம்மா... எனக்கு நல்ல அறிவுரையும், வழியையும் கூறுங்கள்.

இப்படிக்கு,

பெயர் வெளியிட விரும்பாத மகன்.


அன்பு மகனுக்கு —

உன் தந்தை, மூன்று திருமணங்கள் செய்தவர் என்பதால், உன் தந்தையின் குணம், உன்னிடம் வந்துவிடுமோ என்று பயப்படுகிறாள், உன் மனைவி.

எல்லா மனைவிகளுமே, 'என் புருஷன்; எனக்கு மட்டும் தான்' என்கிற எண்ணம் கொண்டவர்கள் தான் என்றாலும், உன் மனைவி, மனித உறவுகளை உணர்வுப்பூர்வமாக அணுகுகிறாள். எத்தனையோ பெண்கள், கணவன்மார் தங்களை வேலைக்கு அனுப்பவில்லையே என மறுகி நிற்க, உன் மனைவியோ, கணவன் தன்னை எந்த வேலைக்கும் அனுப்பிவிடக் கூடாது என நினைக்கிறாள். உன் மனைவி, வாழைப்பழ சோம்பேறி!

அம்மாவின் தியாகத்தையும், அக்கா தன் கணவரை இழந்த சோகத்தையும், அண்ணன் இறந்த துக்கத்தையும் கண்டு உணர்ச்சிப்பூர்வமாய் உருகுகிறாய். அதனால், அம்மாவை நன்கு கவனிக்க வேண்டும்; கணவனை இழந்த அக்காவுக்கு, உதவிகரமாக இருக்க வேண்டும் என, ஆவலாதிக்கிறாய். நீ உறவுகளை பாராட்டி, ஆராதித்து கொண்டாடுபவன். உன் மனைவியோ, உனக்கு நேர் எதிர்!

முதலில், மாமியார் வீட்டிலும், பின், உன் அம்மாவுடனும், அதன்பின், அக்காவுடன் சேர்ந்து கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்ததால், உன் மனைவி அசவுகரியத்தை உணர்ந்திருக்கிறாள்.

மகனே... உன் லட்சியங்களை அடைய வேண்டும் என்றால், முதலில், புலம்புவதை நிறுத்து. தெளிவான திட்டமிடலுடன், வியாபாரத்தை கவனி. சரியான நேரங்களில், ரத்தின சுருக்கமாக, உன் மனைவியிடம், 'விசுவாசமாய் இருக்கும் என்னை வீணாக சந்தேகப்படாதே; உறவுகளை மதி; பேசும் வார்த்தைகளை தணிக்கை செய்து பேசு; யாருடனும் உறவை சட்டென்று முறித்துக் கொள்ளாதே; சுயநலமாய் இருக்காதே; தனிமரம் தோப்பாகாது என்பதை உணர்ந்து, என் அம்மா மற்றும் அக்காவை உன் அம்மா, அக்காவாக நினை; அவர்களை இழிவாக தூற்றாதே; காதலின் முழுவெற்றி, திருமண வாழ்க்கையை, வாழும் விதத்தில் தான் உள்ளது...' என மென்மையாக எடுத்துச் சொல்.

குடும்ப பொருளாதாரம் மேம்படும் வரை, உன் மனைவி ஏதாவது ஒரு வேலைக்கு போவதில் தவறில்லை. கணவன் தன்னை வேலைக்கு அனுப்பி விடக்கூடாது என்கிற எண்ணத்தால் தான், திருந்திவிட்டது போல நாடகமாடுகிறாள், உன் மனைவி. அவளை சிறிதும் நம்ப வேண்டாம்; நீ விதித்த நிபந்தனையில், உறுதியாக இரு. சொந்தமாக ஒரு பைசா சம்பாதித்து பார்த்தால் தான், பணத்தின் அருமை புரியும். பணம் சம்பாதிக்க நீ எவ்வளவு சிரமப்படுகிறாய் என்பதை உணருவாள்.

அதனால், உன் நிபந்தனையை தொடர்ந்து வலியுறுத்து. அதுவே, மனைவி எனும் யானையை அடக்கும் அங்குசம். அவளது பலவீன புள்ளிகளை தொடர்ந்து கண்டுபிடித்து, அவைகளால் அவளை கட்டுப்படுத்து. மொத்தத்தில், நீ கொடுக்கும் அதிர்ச்சி வைத்தியத்தால், அவள் திருந்த வேண்டும்.

என்றென்றும் தாய்மையுடன்

சகுந்தலா கோபிநாத்






      Dinamalar
      Follow us