தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஜூலை 24, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 24, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மா,

என் வயது, 50; திருமணமாகி, 26 ஆண்டுகள் ஆகின்றன. திருமணத்தின் போது என் மனைவிக்கு, 10 சவரன் நகை போட்டனர். பின், நகையை விற்று, மூன்று சென்ட் இடம் வாங்கி, அதில் வீட்டை கட்டினோம். அந்த வீட்டை, என் மனைவியின் பெயருக்கு எழுதி வைத்தான், மைத்துனன். நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எங்களுக்கு, ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். என் மனைவிக்கு விட்டுக் கொடுக்கும் தன்மை, சிறிதும் கிடையாது. சிறு பிரச்னை வந்தாலும், 'இது, என் வீடு; நீ வீட்டை விட்டு வெளியே போ...' என்று தான் முதலில் கூறுவாள்; என் பிள்ளைகளுக்காக பொறுத்துக் கொள்வேன்.

சீட்டு நடத்தியும், பணம் வட்டிக்கு விட்டும் வரவு - செலவு செய்து வந்தாள், என் மனைவி. சீட்டு எடுத்தவர் பணம் கட்டாமல், ஊரை காலி செய்து விட்டதால், ஐந்து லட்சம் ரூபாய் நஷ்டம் ஆனது. அதன் காரணமாக, எப்போதும் டென்ஷனாகவே இருந்தாள். எங்களிடம் அன்பாக பேச மாட்டாள். பின், எங்கள் பகுதியில் பால் கடை நடத்தும் வாய்ப்பு கிடைத்தது. 'அதை நாம் நடத்தி, கடனை அடைத்து விடலாம்...' என நினைத்து, மறுபடியும் கடன் வாங்கி, என் மகனை வைத்து கடையை நடத்தினாள்.

சில மாதங்கள் நன்றாக நடந்த நிலையில், என் மகனின் தீய பழக்கத்தால், கடையில் நஷ்டம் ஏற்பட்டது. அதனால், 'நீ வீட்டை விட்டு வெளியே போ; நான் வேறு ஒரு ஆளை போட்டு கடையை நடத்திக்கிறேன்...' என்று கூற, வீட்டை விட்டு சென்று விட்டான், மகன்.

வேறு ஒரு நபரை நம்பி, கடையை நடத்தினாள். அவனோ, 30 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்று விட்டான்; மறுபடியும் நஷ்டம். என் பணம், 30 ஆயிரம் ரூபாயை அவளிடம் கொடுத்து வைத்திருந்தேன். 'அப்பணம் என்னவாயிற்று...' என்று கேட்டதற்கு, 'பணம் கொடுக்க முடியாது...' என்று சண்டை போட்டதுடன், அவள் தம்பியை அழைத்து வந்து, இரவில் தூங்கிக் கொண்டிருந்த என்னை அடித்து, மகளிர் காவல் நிலையத்தில், என் மீது பொய் புகார் கொடுத்து என்னையும், வீட்டை விட்டு துரத்தினாள்.

இந்நிலையில், வீட்டை விட்டு சென்ற என் மகன், தற்கொலை செய்து கொண்டான். மகனின் இறுதி சடங்கிற்கு சென்றேன். 15 நாட்கள் அமைதியாக இருந்தவள், மீண்டும் என்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டாள். தற்போது, நான் தனியாக வசிக்கிறேன். நம்பிக்கை துரோகம் செய்த இவளை, சட்ட ரீதியாக விவாகரத்து பெற்று, என் வயதிற்கு ஏற்ற துணையை தேடிக் கொள்ளலாமா இல்லை தனியாகவே வாழ்ந்து விடலாமா?

என் குழப்பமான மனதுக்கு, தெளிவான முடிவை தருவீர்கள் என, எதிர்பார்க்கிறேன்.

இப்படிக்கு,

தங்கள் சகோதரன்.


அன்புள்ள சகோதரனுக்கு,

நீங்கள் என்ன பணி செய்கிறீர்கள், மாத சம்பளம் என்ன, உங்களுக்கு குடிப்பழக்கம் உண்டா, உங்கள் மகள் படிக்கிறாளா, வேலைக்கு செல்கிறாளா அல்லது திருமணம் செய்து கொடுத்து விட்டீர்களா என்பது போன்ற விவரங்கள் உங்கள் கடிதத்தில் இல்லை.

நீங்கள் நல்லதொரு கணவனாக இருந்து, மனைவிக்கு பொருளாதார பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தவில்லை. எந்நேரத்திலும் மூழ்கி விடும் நிலையில் இருக்கும் கப்பல் போல, உங்கள் வீடு இருந்துள்ளது. குடும்பத்தை நடத்த, நிதி சுமையை குறைக்க, பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளாள், உங்கள் மனைவி. ஆனால், தொழில்களில் அனுபவமின்மை மற்றும் நேர்மையான உதவியாளர்கள் இல்லாத காரணத்தால், நஷ்டப்பட்டுள்ளாள். நீங்கள் மனைவியை அமைதியான முறையில் எச்சரித்து, இத்தொழில்களில் ஈடுபடுவதை தடுத்திருக்கலாம் அல்லது மனைவிக்கு உறுதுணையாக இருந்து, தொழிலை திறமையுடன் நடத்தி லாபம் ஈட்டி கொடுத்திருக்கலாம்.

பொதுவாக, பெண்கள் சுயநலமாய், பேராசையாய் செயல்படுவது அவர்களின் இருப்பு கேள்விக்குறி ஆகும் போதுதான்!

தொழில்களில் மனைவி நஷ்டமடைவது பார்த்து, ரகசியமாக சந்தோஷப்பட்டுள்ளீர்கள். நீங்கள் ஏதாவது பிரச்னை செய்யும் போது, தன்னை தற்காத்துக் கொள்ள, 'இது என் வீடு, நீ வீட்டை விட்டு வெளியே போ...' என்று கூறியுள்ளாள், உங்கள் மனைவி. சாதாரண பெண்ணாக இருந்த உங்கள் மனைவி, 26 ஆண்டுகள் திருமண வாழ்க்கையில், வில்லியாக மாறியுள்ளாள்.

உங்கள் மகன் தற்கொலை செய்து கொண்டது, மிகவும் வேதனைக்குரிய விஷயம் தான் என்றாலும், அவனை தற்கொலைக்கு தள்ளியதில், உங்கள் இருவருக்கும் சம பங்கு உள்ளது. உங்களிருவரின் பொறுப்பற்ற தாம்பத்யத்தை பார்த்து, தீயவனாய் வளர்ந்துள்ளான், உங்கள் மகன். உங்கள் மனைவி, மகனை வெளியே துரத்தும் போது, குறுக்கே சென்று, நீங்கள் தடுத்திருக்க வேண்டும் அல்லது வீட்டை விட்டு விரட்டப்பட்டவனை, உங்கள் பாதுகாப்பில் வைத்து, பராமரித்திருக்க வேண்டும்.

உங்கள் கடித வரிகளை யூகித்து பார்த்தால், நீங்கள் வெற்றிகரமான கணவனோ, பொறுப்பான தந்தையோ இல்லை. பரஸ்பரம் இருவரும் விவாகரத்து செய்து கொள்வது நலம். இனி, அவள் வழி அவளுக்கு; உங்கள் வழி உங்களுக்கு! 26 ஆண்டுகளாக கணவன் ஸ்தானத்தில் தோற்று விட்ட உங்களுக்கு மறுமண ஆசை வரலாமா?

மகளுக்கு திருமணமாகாமல் இருந்தால், தகுந்த வரன் பார்த்து, கட்டி வையுங்கள். மகளுக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தால், அவளுக்கு அனுசரணையாக, ஒத்தாசையாக இருங்கள்.

மனசாந்தி பெற, கோவில்களுக்கு செல்லுங்கள். 50 வயதுக்கு பின், ஆன்மிகமே சரியான தேர்வு. பிறரை குறை கூறும் குணத்தை, ஆன்மிகம் அறவே அகற்றி விடும்!

என்றென்றும் தாய்மையுடன்

சகுந்தலா கோபிநாத்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us