
அன்பு சகோதரிக்கு -
என் வயது, 65; அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்றவன். இரு மகன்கள் உள்ளனர். மூத்தவன், அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிகிறான்; இளையவன், வியாபாரம் செய்கிறான். இருவருக்கும் திருமணமாகி விட்டது. ஒரு பேரன், ஒரு பேத்தி உள்ளனர்.
திருமணமானதிலிருந்து, என் மகனுடன் அடிக்கடி சண்டையிட்டு, எட்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறாள், மூத்த மருமகள்.
இடையில், உறவினர்களின் சமரசத்தால், 10 மாதம் சேர்த்து வாழ்ந்தனர். பின், பழையபடி கணவனுடனும், எங்களுடனும் சண்டையிட்டு, என் மகனுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என்று கூறி, பிரிந்து சென்று, ஒரு ஆண்டு ஆகிறது.
தற்போது, என் மகனுடன் சேர்ந்து வாழவும் மறுக்கிறாள், விவாகரத்து கொடுக்கவும் மறுக்கிறாள். மருமகளின் உறவினர் மூலம் தொடர்பு கொண்டு பேசினேன். அவர்கள், 'நாங்கள் சொன்னால் கேட்க மாட்டார்கள்...' என்று கூறி விட்டனர். மருமகளுக்கு அம்மாவும், அண்ணனும் மட்டும் தான். அவர்களும் எந்த முடிவும் எடுக்க மறுக்கின்றனர்.
என் மகனுக்கு, 36 வயது ஆகிறது. மனைவியுடன் சேர்ந்து வாழவும் முடியாமல், வேறு திருமணமும் செய்ய முடியாமல் மிகவும் சிரமப்படுகிறான். என் மகனுக்கு எந்தவித கெட்ட பழக்கங்களும் கிடையாது. நாங்களும் எங்கள் பேரனை பார்க்க முடியாமல் தவிக்கிறோம். என் இரண்டாவது மருமகள் மிகவும் நல்ல குணமுள்ள, அமைதியான பெண்; தற்போது, நாங்கள் அனைவரும் ஒரே குடும்பமாக வசித்து வருகிறோம்.
என் மூத்த மகனின் வாழ்க்கைக்கு, நல்ல வழி சொல்லுங்கள்.
- இப்படிக்கு,
உங்கள் சகோதரன்.
அன்பு சகோதரருக்கு -
நீங்கள் உங்கள் மூத்த மருமகள் மீது, குற்றப்பத்திரிகை வாசிப்பதைப் போல், உங்களின் மருமகளைக் கேட்டால், அவள் உங்கள் அனைவரின் மீதும் குற்றப்பத்திரிகை வாசிப்பாள்.
கணவன் ஸ்தானத்தை எல்லா ஆண்களும் சிறப்பாக நிர்வகிப்பதில்லை. நல்ல நண்பனாக, நல்ல அடிமையாக, சர்வாதிகாரியாக, தனக்கு இழைக்கப்படும் எல்லா அவமானங்களையும் மனைவி மீது சுமத்தும் சூத்திரதாரியாக, மனைவியிடம் நடந்து கொள்கின்றனர், சிலர்.
ஓர் ஆண், ஒரு கோடி பேரிடம் நல்ல பெயர் வாங்கி இருக்கலாம்; ஆனால், மனைவியிடம் நல்ல கணவன் விருதை அவ்வளவு எளிதில் வாங்க முடியாது.
ஒரு குடும்பத்தை சுமூகமாக நடத்த தம்பதியரிடையே விட்டுக் கொடுத்தல், 'ஈகோ' இன்மை, நகைச்சுவை உணர்வு, ஆடம்பரமின்மை, குறைவான எதிர்பார்ப்புகள் தேவை. தம்பதிக்குள் சண்டை வந்தால், யார் முதலில் சமாதானம் மேற்கொள்வது என, சிறிதும் யோசிக்காமல் சமாதானத்தில் இறங்க வேண்டும். எப்படி ஒரு இல்லத்தரசி அன்றன்றைய எச்சில் பாத்திரங்களை இரவுக்குள் கழுவி சாத்தி வைக்கிறாளோ, அதைப் போல கணவன் - மனைவி சண்டைகளை அன்றைய இரவுக்குள் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். சண்டை வாரக்கணக்கில் தொடர்ந்தால், அதுவே பழகி விடும்.
இரு தரப்பு பெரியவர்களை கூட்டி, உங்கள் மூத்த மருமகள் மற்றும் அவளது குடும்பத்தினரிடம் பேசிப் பாருங்கள்.
பேச்சுவார்த்தைக்கு ஒத்து வராவிட்டால், குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு, முறைப்படி உங்கள் மகனை மனு செய்ய சொல்லுங்கள். நீதிமன்றத்தில் முடிவு தெரியாமல் உங்கள் மகன், மறுமண ஆசை கொள்ள வேண்டாம்.
பேரனை பார்க்க வேண்டும் என்றால், தயங்காமல் சம்பந்தி வீட்டுக்கு செல்லுங்கள். பேரன் அம்மாவிடம் இருக்க வேண்டுமா, அப்பாவிடம் இருக்க வேண்டுமா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யட்டும்.
மகன், மருமகள் பிரிவில் உங்கள் பங்கு எத்தனை சதவீதம் உள்ளது என்பதை, ஆத்ம பரிசோதனை செய்து, தவறு இருந்தால் திருத்திக் கொள்ளுங்கள்.
பிரச்னைகளை குப்பையை கிளறும் கோழி போல் கிளறாமல், ஒற்றை கால் கொக்குபோல் நிதானமாக காத்திருந்து தீர்வை காணுங்கள்.
- என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்

