
அன்புள்ள அம்மா -
பெற்றோர் இருவருமே அரசுப் பணியில் இருக்கின்றனர். அவர்களின் ஒரே மகள் நான். வயது, 25. பொருளாதாரத்தில் முதுகலை பட்டமும், இளம் முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறேன். யு.ஜி.சி., நெட் தேர்வு எழுத தயாராகி கொண்டிருக்கிறேன்.
எல்.கே.ஜி.,யிலிருந்து இளம் முனைவர் பட்டம் வரை, என்னுடன் சேர்ந்து படித்த தோழனை, உயிருக்கு உயிராக காதலிக்கிறேன். அவனுக்கு இரண்டு தங்கைகள், இரண்டு தம்பிகள்.
கடந்த ஆண்டு, அவனுக்கு, முகத்திலும் விரல்கள் நுனியிலும் வெண்புள்ளிகள் தோன்றின. தோல் மருத்துவரை அணுகி, தொடர் சிகிச்சை எடுத்துக் கொண்டான். ஆனாலும், வெண்புள்ளிகள் கூடின. இதனால், என்னுடன் பேசுவதை தவிர்த்து, என்னை விட்டு விலகி போனான், காதலன்.
நான், ஆறுதல் கூறி, தேற்ற முயன்றேன். இப்போது, அவனது உடல் முழுக்க வெண்புள்ளிகள் பரவியுள்ளன. அவனது தலைமுடியும், இமைகள் மற்றும் புருவங்களும் வெள்ளை நிறத்துக்கு மாறியுள்ளன. அவனது பார்வையில் தடுமாற்றம் தோன்றியுள்ளது.
ஒருநாள், என்னை போனில் அழைத்து, 'வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்ட நான், உனக்கு ஏற்றவனல்ல. என்னை மறந்து விடு. வேலைக்கு போ. நல்ல ஆரோக்கியமுள்ளவனை பார்த்து திருமணம் செய்து கொள். பெஸ்ட் ஆப் லக்...' என்றான்.
'நீ, 100 சதவீதம் வெண்புள்ளிகளால் பாதிக்கப் பட்டாலும், கண் பார்வையை முழுமையாக இழந்தாலும், உன்னை தான் திருமணம் செய்து கொள்வேன். இது சத்தியம்...' என்றேன்.
'தொடர்ந்து நீ பிடிவாதம் பிடித்தால், உன்னை விட்டு விலகி வெகுதுாரம் போய் விடுவேன்...' என மிரட்டுகிறான்.
எனக்கும், காதலனுக்கும் பொதுவான நண்பன் ஒருவன், எங்களுடன் படிக்கிறான். எங்களின் காதல் அவனுக்கு நன்கு தெரியும். அவன், என்னிடம் ஒரு கடிதத்தை தந்தான்.
அதில்...
'தேவதைகளின் தேவதையே... நானும், உன்னை கடந்த, 10 ஆண்டுகளாக காதலிக்கிறேன். உங்களிருவரின் காதல் அறிந்து, கண்ணியமாக விலகினேன். உன் காதலன் வெண்புள்ளியால் அவதிப்படுவதை கண்டேன். அவன் குணமடைய, கடவுளை வேண்டினேன். ஆனாலும், அவனது நோய் முற்றியது.
'இப்போது, அவன் உன்னிடமிருந்து நிரந்தரமாக விலக துடிக்கிறான். அதுதான் உங்கள் இருவருக்கும் நல்லது. அவனை திருமணம் செய்து கொண்டால், மிக அவதிப்படுவாய். குழந்தையும் வெண்புள்ளிகளுடன் பிறக்கும்.
24 மணிநேரமும் உன் கணவனை தான் நீ பராமரிக்க வேண்டி வரும்.
'அப்போது, அவனை திருமணம் செய்து கொண்ட தவறுக்காக, கதறி அழுவாய். அவனை கை கழுவி, என் காதலை ஏற்றுக்கொள். உன்னை மகாராணி போல் பார்த்துக் கொள்வேன்...' என்று எழுதியிருந்தான்.
இதற்கிடையில், அம்மா என்னை கூப்பிட்டு, 'வெற்றிகரமாக படிப்பை முடித்து விட்டாய். படிக்கும்போது நீ யாரையாவது காதலித்திருந்தால், அந்த காதலுக்கு, 'குட் பை' சொல்லி விடு. நம் உறவுக்காரப் பையன், கனடா நாட்டில் நல்ல வேலையில் இருக்கிறான்.
'மாதம், 4 லட்சம் சம்பளம். ஆள் பிரமாதமாக இருப்பான். அவன், உன்னை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான். உனக்கும், கனடாவில் வேலை வாங்கி தருவதாக கூறுகிறான்.
'நீ சரி என்றால், இரண்டு மூன்று வாரங்களில், இந்தியா வருவான். நிச்சயதார்த்தம் நடத்தி, அடுத்த இரண்டு மாதத்தில், ஜாம் ஜாமென்று கல்யாணத்தை நடத்தி விடலாம்...' என்றார்.
தயங்கி தயங்கி, என் காதலை கூறினேன். என் காதலனை பலமுறை பார்த்திருக்கிறாள், அம்மா.
'வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டவனை கல்யாணம் பண்ணிகொள்ளப் போவதாக கூறுகிறாயே, உனக்கு பைத்தியம் பிடித்திருக்கிறதா... ஒரு வாரம் அவகாசம் தருகிறேன். அதற்குள் உன் முடிவை மாற்றி, கனடா மாப்பிள்ளையை மணந்து கொள்ள சம்மதி மகளே...' என்கிறார்.
தகுந்த ஆலோசனைகளை வழங்குங்கள், அம்மா.
— இப்படிக்கு,
அன்பு மகள்.
அன்பு மகளுக்கு —
உனக்கு முன், மூன்று தெரிவுகள் வரிசை கட்டி நிற்கின்றன. ஒன்று, நீ காதலிக்கும் வெண்புள்ளி இளைஞன். இரண்டு-, உன்னை காதலிக்கும் சக மாணவன். மூன்று,- பெற்றோர் பார்த்து வைத்த, கனடா மாப்பிள்ளை.
முதல் தெரிவு: வெண்புள்ளி நோய் பாதித்தவர்களுக்கு, காது கேளாமையும், பார்வை குறைபாடும் ஏற்படுகின்றன. இவர்களுக்கு பிறக்கும் இரண்டில் ஒரு குழந்தைக்கு, பிறவியிலேயே வெண்புள்ளி நோய் ஏற்படுகிறது.
வெண்புள்ளியாளர்களுக்கு ஏற்படும் பார்வை குறைபாட்டை வைத்து, அவர்கள் மாற்றுத் திறனாளியாக பாவிக்கப்பட்டு, வேலை வாய்ப்பில் முன்னுரிமை தருகிறது, தமிழக அரசு.
நீ, இவனை திருமணம் செய்து, காலம் முழுவதும் சிரமப்பட வேண்டி வரும். பிறக்கும் உன் குழந்தைக்கும் அந்த நோய் வரலாம். 'காதலுக்காக உயிரையும் கொடுப்பேன். நான் தியாக மனப்பான்மை கொண்டவள்...' என, வசனம் பேசாதே.
இந்த நோயை பற்றி, 'நெகடிவ்'வாக கூறி, மக்களை அதைரியப்படுத்தும் வேலையை நான் செய்யவில்லை. யதார்த்தத்தை கூறினேன். சுயநலமாய் நீயாக பிரிந்தால் தான் தவறு. காதலனே உன்னை
விட்டு விலகுகையில் நீயும், 'ஒன்ஸ் பார் ஆல் குட் பை...' கூறி, விலகிக் கொள்வது நல்லது.
இரண்டாவது தெரிவு: நீயும், உன் காதலனும் உருகி உருகி காதலித்ததை, 10 ஆண்டுகள் உடன் இருந்து பார்த்தவன். 'அவனுக்கு இல்லேன்னா உன் மனசை எனக்கு கொடு...' என, காதல் பிச்சை கேட்கிறான். இந்த வகை ஆண்கள், பெரும்பாலும் ஆபத்தானவர்கள். நாகரிகமாய் முழுமையாக மறுத்து விடு.
மூன்றாவது தெரிவு: கனடா மாப்பிள்ளை, உத்தியோகத்தில் நல்ல சம்பளத்தில் இருக்கிறான். கனடாவில் அவன் யாரையும் காதலிக்கிறானா என்பதை மட்டும் உறுதி செய்ய சொல். நீ காதலித்தவனை விட்டு விலகி, வெகுதுாரம் போய் கனடாவில் கணவனுடன் வசிக்க போகிறாய். சிறப்பான தாம்பத்யம் கிடைத்தால், முதல் காதலை முழுமையாக மறந்து விடுவாய்.
எந்த குற்ற உணர்ச்சியும் தேவையில்லை. வசதியான, நிம்மதியான, ஆரோக்கியமான திருமண வாழ்க்கைக்கு, என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.

