PUBLISHED ON : ஜூலை 25, 2021

அன்புள்ள சகோதரி,
வயது: 68. தாசில்தார், பணிநிறைவு. இரண்டு ஆண்டுகளுக்கு முன், இறந்து போனார், மனைவி.
எனக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். எல்லாரும் சிறப்பான பணியில் இருக்கின்றனர். மருமகன்களும், மருமகளும் மிகவும் அன்பானவர்கள். எனக்கு ஆறு பேரக் குழந்தைகள்; நான்கு பேத்தி, இரண்டு பேரன்கள். மூத்த பேரன், பிளஸ் 2 முடித்திருக்கிறான்.
பணிநிறைவு மற்றும் மனைவி இறந்த பின், தினம் கோவில்களுக்கு சென்று கதாகாலட்சேபம் நடந்தால், கேட்டு வருகிறேன். தினமும் பூ கட்டி சாமிக்கு அணிவிக்கிறேன்.
அப்பா வயது, 96. உயர் ரத்த அழுத்தமோ, சர்க்கரையோ, கொழுப்போ இல்லாதிருந்தவர், தினமும், 8 கி.மீ., நடப்பார். ஆள் கெச்சலாக இருப்பார். கடவுள் பக்தி கிடையாது. சில மாதங்களாக, 32 வயது நபருடன், அப்பாவுக்கு நட்பு ஏற்பட்டது. அந்த நபருடன் சேர்ந்து தினமும் நாட்டுச் சாராயம் குடிக்கிறார். ரோட்டோரத்தில் விற்கும், 'சிக்கன் சூப்' குடிக்கிறார்.
எப்படியாவது அப்பாவை, 100 வயது வரை வாழ வைத்து விடவேண்டும். நுாறாண்டு மனிதரின் மகன் என்ற பெருமையை பெற்றுவிட, துடியாய் துடிக்கிறேன். இப்போது, அவருக்கு,
'பி.பி., சுகர், கொலஸ்ட்ரால்' எல்லாம் வந்து விட்டது. 'குடிக்காதீர்கள் அப்பா...' என, காலில் விழுந்து கெஞ்சி பார்த்து விட்டேன்.
'நான் வாழ்ந்து முடிச்சுட்டேன். வாழ்க்கையில எல்லாவற்றையும் பார்த்துட்டேன். நான், இறந்தா என்ன... என் இஷ்டப்படி வாழ விடு. என் புது நண்பரை என்கிட்டேயிருந்து பிரிச்சுடாதே...' என்கிறார்.
வீட்டில் அவரை கட்டிப் போடலாமா, சாராயம் வாங்கிக் கொடுக்கும் அப்பாவின் நண்பரை அடித்து, உதைத்து, அவர் பக்கம் வராமல் செய்தால் என்ன...
வீட்டின் அனைத்து உறுப்பினர்களும், அவரின் கால்களில் விழுந்து, 'குடிக்காதீர்கள்...' என, கெஞ்சலாமா... மயக்க மருந்து கொடுத்து, அவரை படுக்கையிலேயே கிடத்தி வைக்கலாமா...
— இப்படி பல மாதிரி எண்ணங்கள் தோன்றுகிறது. என்ன செய்யலாம் சகோதரி?
— இப்படிக்கு,
அன்பு சகோதரன்.
அன்பு சகோதரருக்கு —
உறவினர்களுடன் இணக்கமாக, சந்தோஷமாக வாழ்ந்தால், நீண்ட ஆயுளை பெறலாம் என்பர். உடலிலுள்ள செல்களுக்கு ஆக்சிஜன் அதிகம் கிடைத்தால், அதுவே ஒரு கட்டத்தில் நச்சுத் தன்மையை உருவாக்கி, ஆயுளை சுருக்கி விடுகிறது என்கிறது, ஆய்வு.
உடலின் மரபணுக்களில், ஒரு மனிதனின் ஆயுட்காலம், சங்கேத தகவலாய் பதித்து வைக்கப்பட்டிருக்கிறது. எத்தனை உயிர் கொல்லி நோய்கள் தாக்கினாலும், மரபணுவின் மரண தேதி மாறாது என்கிறது. ஒமேகா - 3 சத்து அதிகமுள்ள மீன் உணவை தொடர்ந்து சாப்பிட்டால், ஆயுள் கூடும் என்கின்றனர்.
நீண்ட ஆயுள் கொண்ட பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளும், நீண்ட ஆயுளை பெறுகின்றனர். சராசரியாக பார்த்தால் பெண்கள், ஆண்களை விட அதிக நாள் வாழ்கின்றனர். அதிக கல்வியறிவும், ஆயுளை கூட்டுகிறது. வெற்றிகரமான திருமண வாழ்க்கை வாழ்வோர், அதிக நாள் வாழ்கின்றனர். நாத்திகர்கள் அதிக நாள் உயிர் வாழ்வதாக, என் உள் மன பட்சி கூறுகிறது.
வயதானவர்களை வீட்டில் வைத்திருப்பவர் பெரும்பாலும், 'கிழம் எப்படா சாகும், கல்யாண சாவுன்னு கொண்டாடலாம்...' என, கழுகு போல காத்திருப்பர். உங்கள் அப்பா, 100 வயது வரை வாழ வேண்டும் என, நீங்கள் விரும்புவது பாராட்டுக்குரியது.
வீட்டில் அவரை கட்டிப்போடுவது, வன்முறையான சித்திரவதை. சாராயத்தை முதல் முறை தொட்டபோதே, உங்க அப்பா குடி நோயாளியாகி விட்டார். அப்பாவின் நண்பரை அடித்து, உதைத்து பலனில்லை. இவரே போய் அல்லது புது நண்பருடன் கூடியோ, குடியை தொடர்வார்.
வீட்டு அங்கத்தினர்கள் என்ன, ஊர் உலகமே அப்பா காலில் விழுந்தாலும், அவர் எளிதில் திருந்த மாட்டார். மயக்க மருந்து கூடினால், மரணம் நிச்சயம். 98 - 99 வயதில் போக வேண்டியவரை, உங்களது அவசர செயல்களால், 96லேயே அனுப்பி விடாதீர்கள்.
அப்பா வாழும் ஒவ்வொரு நாளும் போனஸ் தான். உங்கள் அப்பா, 100 அல்லது ௧௧௦ வயதில் இறந்தாலும், இயற்கைக்கு அது ஒரு எண் விளையாட்டே.
கீழ்க்கண்ட முறைகளில் உங்கள் அப்பாவை, 100 வயது வரை வாழ வைக்கலாம்.
* அப்பா, எந்த நேரத்தில் குடிக்கிறார்... பகலிலா, இரவிலா? இரவில் என்றால், அவர் குடிக்க போவதற்கு முன், இரவு உணவை சாப்பிட வைத்து விடுங்கள். உங்கள் அப்பா, குடியை மறுநாளைக்கு தள்ளி வைக்கக்கூடும். இப்படியே கூட செயல்பட்டு, குடியை வாரத்துக்கு ஒன்று, மாதத்துக்கு ஒன்றாய் மாற்றலாம்
* வெளியே செல்லும்போது, அவர் மிகவும் நேசிக்கும் பேரனை அவருடன் அனுப்புங்கள். பேரனுக்கு குடிப்பழக்கம் தொற்றிவிடக் கூடாது என்பதற்காக, தானும் குடிக்காது வீடு திரும்புவார்
* அப்பாவின் நண்பருக்கு பணம் கொடுத்து, 'அவரை ஜோடி சேர்க்காமல், நீங்கள் தனியாக போய் குடியுங்கள்...' என, ஆசை காட்டி ஜோடியை பிரிக்கலாம்
* 'அப்பா, உங்களுக்கு, 100 வயது நிறைவடையும்போது, யாராவது ஒரு நடிகையை அழைத்து, மிகப்பெரிய விழாவிற்கு ஏற்பாடு செய்கிறேன். ஊரிலுள்ள எல்லா இளைஞர்களும் உங்களிடம் ஆசிர்வாதம் பெறுவர். ஊரின் பிரதான பேச்சு பொருளாய் மாறுவீர்கள்...' என, ஆசை வார்த்தை கூறு
* பழச்சாறு பருக கொடுக்கலாம். அது, சாராயத்துக்கு மாற்றாக செயல்படும்
* வீட்டு அங்கத்தினர்கள் அனைவரும், அவருடன் நெருங்கிப் பழகுங்கள். உறவின் நெருக்கம், அவருக்கு உயிராசையை ஊக்குவிக்கும்
* மாதம் ஒருமுறை, 'மெடிக்கல் செக் - அப்'புக்கு கூட்டிச் செல்லுங்கள். அவருக்கு கொடுக்கும் மாத்திரைகளை அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருங்கள்
* இன்னும் பல ஆண்டுகள் உயிர் வாழ்வதற்கான அர்த்தத்தை, தேவையை அவருக்கு பலவிதங்களில் உருவாக்குங்கள்
* அப்பா வழி சொந்தங்களை வரவழைத்து, அவருடன் அளவளாவ சொல்லுங்கள். அவரின், நுாற்றாண்டு விழாவிற்கு என்னையும் அழையுங்கள். வந்து கலந்துகொண்டு அவரிடம் ஆசிர்வாதம் பெறுகிறேன்.
— என்றென்றும் பாசத்துடன்,
சகுந்தலா கோபிநாத்
