தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஜன 01, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 01, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மா —

என் வயது: 34. கணவர் வயது: 38. சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தவள், நான். தாய் மாமன் தான் படிக்க வைத்து, திருமணமும் முடித்து வைத்தார்.

புகுந்த வீட்டினர் வசதியானவர்கள். கணவர், மாமனார் - மாமியார், இரு நாத்தனார் என, உறவுகள் வந்ததும், வாழ்க்கையில் நம்பிக்கை கூடியது. இந்த நம்பிக்கை சில நாளிலேயே குறைய ஆரம்பித்தது. காரணம், கணவரின் தாத்தா, தன் சொத்து முழுவதையும், கணவர் பெயருக்கு எழுதி வைத்துள்ளார்.

மகன் மற்றும் சொத்தை, தம் கைக்குள்ளேயே வைத்திருக்கவும், சொன்னதை கேட்கும் அடிமை ஒருத்தி வேண்டும் என திட்டமிட்டும், பெற்றோரை இழந்த அனாதையான என்னை, தன் மகனுக்கு மணம் முடித்திருக்கிறார், மாமியார்.

நாத்தனார்கள் இருவரும், நிறைய படித்து, வங்கியிலும், அரசு பணியிலும் உயர் பதவியில் இருப்பவர்கள். அவர்களுக்கு திருமணமாகி விட்டாலும், பாதி நாள், பிறந்த வீட்டில் தான் இருப்பர்.

பெண்கள் இருவரையும் உயர் படிப்பு படிக்க வைத்தவர்கள், மகனை வெறும், 'டிப்ளமோ' படிக்க வைத்துள்ளனர். நிறைய படித்து, விபரம் தெரிந்தவனாகி விட்டால், சொத்து கைவிட்டுப் போய் விடுமே என்ற பயம்.

'உனக்கு எதுவும் தெரியாது...' என்று சொல்லி மட்டம் தட்டியே வளர்த்துள்ளனர். அதற்கேற்றார் போல், கணவரும் எடுப்பார் கைப்பிள்ளைப் போல, வெகுளியாக இருப்பார்.

திருமணமாகி   எட்டு ஆண்டுகள் ஆகின்றன. குழந்தை பிறக்காததால், சிகிச்சைக்காக மருத்துவமனை செல்ல கணவரை அழைத்தால், அதற்கும் முட்டுக்கட்டை போடுகின்றனர்.

ஒரு கட்டத்தில், 'எங்களை டாக்டரிடம் செல்ல அனுமதியுங்கள்...' என்று சண்டையிட்டேன். உஷாரானவர்கள், எனக்கும், கணவருக்கும் இடையே பிரச்னை ஏற்படுத்தி, பிரித்து விட்டனர்.

பல மாதங்கள், தாய் மாமா வீட்டில் இருந்தேன். உறவினர் ஒருவரது திருமணத்தின் போது, கணவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. மனம் விட்டு பேசியதில், என்னை புரிந்து கொண்டு, தனிக் குடித்தனம் வர சம்மதித்தார், கணவர்.

என் சீர்வரிசை பொருட்களை எடுத்து வர சென்றபோது, 'நாங்கள் போட்ட தாலியை கழற்றி கொடுத்துவிட்டு, பொருட்களை எடுத்துச் செல்லுங்கள்...' என்று கூறினார், மாமியார். கணவரின் அனுமதியுடன், தாலியை கழற்றி கொடுத்து விட்டேன்.

மகன் உயிருடன் இருக்கும் போதே மருமகளின் தாலியை கழற்ற சொன்னவர்களை மன்னிக்கவே முடியவில்லை. இப்போது நானும், கணவரும் தனியாக வசிக்கிறோம்.

அவருக்கு சரியான வேலை இல்லை. நான் எம்.ஏ., முடித்திருப்பதால், பள்ளி ஒன்றில் தற்காலிகமாக பணிபுரிகிறேன். அவர் பெயரில் இருக்கும் சொத்தை வாங்க முடியுமா? எங்களுக்கு நல்ல வழி கூறுங்கள், அம்மா.

— இப்படிக்கு,அன்பு மகள்.

அன்பு மகளுக்கு —

உன் கடிதத்தை கண்டதும், எனக்குள் கீழ்க்கண்ட கேள்விகள் எழுந்தன.

* சொத்து முழுவதையும் கணவரின் தாத்தா, கணவர் பெயரில் எழுதி விட்டார், சரி. கணவரின் எந்த வயதில், தாத்தா சொத்துகளை எழுதியது? கணவர் மேஜராகும் வரை யாரையும் கார்டியனாக போட்டிருந்தாரா... எழுதி வைத்த சொத்துகள் எவை எவை என்ற பட்டியல் உன்னிடம் உள்ளதா?

* நிறைய படித்து, விபரம் தெரிந்தவனாகி விடக் கூடாது என்பதற்காக, மாமனார் - மாமியார், கணவரை டிப்ளமோ படிக்க வைத்ததாக கூறுகிறாய். டிப்ளமோ என்ன குறைவான அறிவு மற்றும் தேவைப்படாத படிப்பா?

கணவருக்கு படிப்பு வரவில்லை, டிப்ளமோ படித்தார். நாத்தனார்களுக்கு படிப்பு வந்தது, அவர்கள் நன்கு படித்து, நல்ல வேலைக்கு போயினர். கணவரின் டிப்ளமோ படிப்பில் எந்த சதியும் இருப்பதாக தெரியவில்லை

* திருமணமாகி எட்டு ஆண்டுகளாகியும், மகனுக்கு குழந்தை பிறக்கவில்லை. மகனிடம் தான் குறை இருக்கும் என தீர்மானித்து, அவர்கள், மகனை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பவில்லை அவ்வளவு தான். தாத்தா எழுதிய சொத்தை பறிப்பதற்கான சதிதான் என்று எண்ண முடியவில்லை

* உங்களை தனிக்குடித்தனம் செல்ல அனுமதித்துள்ளனர். சீர் வரிசை பொருட்களை திருப்பிப் கொடுத்துள்ளனர், மாமனார் - மாமியார். நீ நினைக்கும் அளவுக்கு, அவர்கள் கெட்டவர்கள் இல்லை

* மாமனார் - மாமியார் மோசமானவர்களாய் இருந்தால், கணவரின் தாத்தா உயிலை ரத்து செய்து, வேறொரு உயிலை, 'போர்ஜரி'யாக தயாரித்திருக்க முடியும்.

இனி நீ செய்ய வேண்டியது...

* கணவரை, சோம்பேறியாய் வீட்டில் உட்கார வைக்காதே. அவரை எதாவது ஒரு வேலைக்கு அனுப்பு

* இருவரும் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, யாரிடம் குறை இருந்தாலும் தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்

* கணவரை மக்கு மக்கு என்று மட்டம் தட்டாதே. கூட்டுப்புழு, வண்ணத்துப்பூச்சி ஆவது போல, கணவரை அறிவுத்தரத்தில் உயர்த்து

* தொலைதுார கல்வி இயக்ககம் மூலம், உயர் படிப்பு படித்து, பதவியை நிரந்தரம் செய்

* உரிமையியல் வழக்கறிஞரை அமர்த்தி, கணவரின் தாத்தா பத்திரம் பதிந்த உத்தேச ஆண்டை யூகித்து, தாய் பத்திரத்தின் நகலை, பத்திர அலுவலகம் மூலம் பெறலாம். பத்திர நகலை வைத்து, கணவரின் தாத்தா எழுதி வைத்த சொத்துகளை, முறைப்படி ஒப்படைக்க, காவல்துறையில் புகார் செய்யலாம்.

எல்லா சொத்துகளும் உங்கள் கைக்கு வந்து விட்டால், உபரி சொத்துகளை, இரு நாத்தனார்களுக்கு, கணவர் கொடுக்கட்டும்

* சொத்துகள் உங்கள் கைக்கு வந்து, மாமனார் - மாமியார் வெளியேற வேண்டியிருந்தால், அவர்களை தொடர்ந்து தங்க அனுமதி.

மொத்தத்தில் நீ, மாமனார் - மாமியாருக்கு, நாத்தனார்களுக்கு எது செய்தாலும் கருணை அடிப்படையில் கொடுத்து, உறவை பேணி காக்க பார்.

என்றென்றும் தாய்மையுடன்,

சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us