
அன்புள்ள சகோதரிக்கு —
எனக்கு ஒரே மகள். அவளுக்கு திருமணமாகி, மூன்று மற்றும் ஒரு வயதில், இரண்டு பெண் குழந்தைகள். அவளுக்கு கல்லூரியில் படித்த பெண் நண்பர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். எல்லாரிடமும் மணிக்கணக்கில் நன்கு பேசுவாள்.
பிரச்னை என்னவென்றால், அந்த மூத்த குழந்தையை, ஆறு மாதம் முதல் அடித்து துன்புறுத்துகிறாள். அவள் வீட்டுக்காரன் கேட்டால், மேலும் அக்குழந்தையை வெறி வந்த மாதிரி அடிக்கிறாள். நான், அவளுடைய அம்மா, போனில் கேட்டால், எங்களையெல்லாம் மிரட்டி, மறுபடியும் அடிப்பதாகச் சொல்கிறாள்.
அக்குழந்தை எலும்பும், தோலுமாக இருக்கிறது. அதை நாங்கள் கேட்டால், ஏதாவது சொல்லப் போகிறது என்று மிரட்டி வைத்து இருக்கிறாள். அக்குழந்தையை வெளியில் தள்ளி, கதவை சாத்தி கொடுமைப் படுத்துகிறாள். இந்த அடங்காப் பிடாரியைப் பற்றி யாரிடம் சொல்வது. போலீஸ் வரை போனால், கவுரவப் பிரச்னை. அவளை அடக்க ஒரு வழி சொல்லுங்கள். முதுகில் அடிப்பதால், மார் அடைத்து செத்து விடுமோ என்று பயமாக இருக்கிறது. இதை நான் வேண்டுமென்று எழுதவில்லை. அவள் மாமியாரும் சொல்லி பார்த்து, பெரிய சண்டையாகி, அவர் ஊருக்குச் சென்று விட்டார். அவள் கணவர் அவருடைய கத்தலுக்கு பயந்து, ஆபீஸ் சென்று இரவு, 12:00 மணிக்குத்தான் வருகிறார்.
இதை படித்த பிறகாவது, அவள் திருந்துவாள் என்று நம்புகிறேன்.
— இப்படிக்கு,
அப்பெண்ணின் அம்மா.
பின்குறிப்பு: இதனால், நான் மிகவும் உடம்பு சரியில்லாமல் இருக்கிறேன்.
அன்புள்ள சகோதரிக்கு—
உங்களுக்கு ஒரே மகள். அவளுக்கு திருமணம் செய்து வைத்து விட்டீர்கள். உங்களுக்கு, மூன்று மற்றும் ஒரு வயது பேத்தி இருக்கின்றனர்.
உங்களுடைய கடிதத்தில் உங்களின் வயது, உங்களது கணவரின் வயது, அவர் செய்த அல்லது செய்யும் பணி, உங்கள் மகளின் வயது, கணவரின் வயது, இருவரின் கல்வித் தகுதி, இருவர் செய்யும் பணி பற்றி குறிப்பிடவில்லை.
நான் கேட்கும் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு, பதில் கூறுங்கள் சகோதரி...
1.உங்களது முந்தைய தலை முறைகளில், யாருக்காவது மனநோய் உண்டா?
2.உங்களது கணவருக்கு குடிப் பழக்கம் உண்டா? உங்களது திருமணமான மகள், சிறுமியாக இருந்த போது நீங்களோ, உங்கள் கணவரோ அவரிடம் வன்முறையாக நடந்து கொண்டது உண்டா?
3.உங்களது மகளுக்கு நிறைய பெண் நண்பர்கள் இருப்பதாக கூறியிருக்கிறீர்கள். உங்களது மகள் லெஸ்பியனாக இருந்திருக்க, இருக்க வாய்ப்பு இருப்பதாக கருதுகிறீர்களா?
4.உங்களது மருமகனுக்கு குடிப்பழக்கம் உண்டா, திருமண பந்தம் மீறிய உறவு உண்டா, சாடிஸ்டிகலாக செக்ஸ் அனுபவிக்கும் குணம் உண்டா?
5.மூத்த பெண் குழந்தை பிறந்த ஆறாவது மாதத்திலிருந்து, இன்று வரை உங்கள் மகளுக்கு குடும்ப அங்கத்தினர்களில் ஒருவர் வழி கெடுதி விளைவிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதன் விளைவான வெளிப்பாடுதான் உங்களின் மகள் நடத்தையோ?
6.சிறுவயதிலிருந்து திருமணம் ஆகும் வரை, உங்கள் மகளை பொத்தி, பொத்தி வளர்த்தீர்களா? உங்களுக்கும், அவளுக்கும் இடையே ஆன உறவுமுறை இனிமையாக இருந்திருக்கிறதா?
7.'பெண் குழந்தை' என்பதாலேயே உங்கள் மகள் உங்களாலும், உங்கள் சொந்த பந்தத்தாலும், சமூகத்தாலும் அவமானப்பட்டிருப்பார். அதன் வெளிப்பாடோ இது?
8.பிறந்திருக்கும் இரு குழந்தைகளில், மூத்த குழந்தை கறுப்பாகவும், அவலட்சணமாகவும் இருப்பதாக உங்கள் மகள் கருதுகிறாளா?
9.உங்கள் மகள் பெற்றோருக்கோ, மாமியாருக்கோ, கணவனுக்கோ பயப்படவில்லை. ஆகவே, திருமண பந்தம் முறிந்தாலும் சரி, பெற்றோர் கைவிட்டாலும் சரி, நான் சுயமாய் செயல்படுவேன் என்கிறாரோ?
10.உங்களது மகளுக்கு திருமண பந்தம் மீறிய தொடர்பு இருக்க வாய்ப்பிருக்கிறது.
மனித மனங்களை முந்தைய தலைமுறை ஆவிகள் சுற்றும் சுடுகாடு என்பர். உங்களின், நான்கு தலைமுறை சரிதங்களை தோண்டிப் பாருங்கள். உங்கள் மகளின் நடத்தைக்கு விடை கிடைக்கும்.
இனி, தீர்வுகள் யோசிப்போம்...
உங்களின் மகள் நடத்தைக்கு எதிராக காவல்துறை நடவடிக்கை எடுப்பது அறிவீனம்; எதிர்பார்க்கும் பலன் இராது. நீங்களும், உங்கள் சம்பந்தியம்மாவும் மகளிடம் மனம் விட்டு பேசுங்கள். அவள் ஆவலாதி ஏதாவது சொன்னால், அதை சரிசெய்து கொடுங்கள்.
பேத்திகளை, தாத்தா - பாட்டி வீட்டில் வைத்து வளர்க்க பாருங்கள். மருமகனிடம் பேசி, அவரிடம் இருக்கும் குறைபாட்டை களையுங்கள். குடும்பம் என்ற அமைப்பு, ஒரு லட்சம் வருடங்களாய் இருக்கிறது. குடும்பம் என்பது மலர் என்றால், மையப்பகுதி தாய், இதழ்கள் குழந்தைகள். தந்தைக்கு இடமில்லை. குடும்பத்தை வலை, மலர், கல்லறை, சிறை, கோட்டை என, பலவிதங்களில் வர்ணிப்பர். உங்கள் மகளுக்கு குடும்ப அமைப்பின் உன்னதம் புரியவில்லை.
அவருக்கு மனச்சிதைவு நோய் இருக்க வாய்ப்பிருக்கிறது. மனச்சிதைவு நோய் உள்ளவரை, சாதாரண மனநிலை உள்ளவர் போல் நடத்தினால், மனச்சிதைவு நோய் உள்ளவரின் நடத்தை மேம்படும். மனச்சிதைவு நோய் உள்ளவரை நெகடிவ்வாக நடத்தினால், மனச்சிதைவு அதிகமாகும்.
உங்கள் மகளின் மனநோய்க்கு பின்னால் கட்டாயம் நீங்களோ, உங்களது கணவரோ, மகளின் கணவரோ இருக்கிறீர்கள். உங்களின் மகளை, மனநல மருத்துவரிடம் நேரடியாக அழைத்துச் சென்று ஆலோசனையும், சிகிச்சையும் பெறுவது நல்லது.
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.

