sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்!

/

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : அக் 16, 2011

Google News

PUBLISHED ON : அக் 16, 2011


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்புள்ள அம்மாவுக்கு —

நான், மிக சாதாரணமான குடும்பத்தில் பிறந்தவன். என், 16வது வயதில், தந்தை இறந்தார். தந்தையின் மரணம், அம்மா, அக்கா மற்றும் என்னுடைய சந்தோஷத்தை கெடுத்தது. அக்கா விற்கு, 21 வயதான போது, அவளுக்கு திருமணம் செய்து வைத்தார் அம்மா. திருமண வாழ்க்கையில் அவரும் பெரிதாக சுகப்படவில்லை. அப்போது, அம்மா நர்ஸ் பணியில் இருந்தார். அம்மாவின் விருப்பத்துக்கிணங்க, பிளஸ் 2 படித்தேன். பிளஸ் 2 தேர்ச்சிக்கு பிறகு, வணிகவியல் கணினி படித்து முடித்தேன். சிறிது காலம் வானொலி நிலையத்தில் பணிபுரிந்தேன். அம்மாவை விருப்ப ஓய்வு பெற வைத்து, வந்த பணத்தில் சொந்த வீடு கட்டினேன். சில நாட்களில், பிரபல மொபைல் போன் நிறுவனத்தில் நிரந்தர, உயரிய பணி கிடைத்தது.

இத்தனையும் செய்து முடிப்பதற்குள் எனக்கு, 31 வயதாகிப் போனது. அம்மா, எனக்கு பெண் தேட ஆரம்பித்தார். கோவிலில் எழுதி வைத்த ஜாதகத்தின் பேரில், ஒரு தம்பதியர் எங்களை தொடர்பு கொண் டனர். நான் மகம் நட்சத் திரம் என்றதும், வீட்டுக்கே வந்து விட்டனர். ஆஸ்தி ரேலியாவில் இருக்கும் அவர்களது ஜோசியர் ஜாதகப் பொருத்தம் பிரமாத மாக இருப்பதாக கூறிவிட் டார் என்றனர். சம்பந்தம் பேச பெண்ணின் தாயாரும், தாய் மாமனும் வந்தனர். அந்தம்மாவுக்கு பெண் தவிர, ஒரு மகனும் இருப்பதாக தெரிந்து கொண்டோம். நாங்கள் மணமகளின் ஜாதகம் வாங்கி, ஜாதகப் பொருத்தம் பார்க்கவில்லை.

என் தாய், என் தந்தைக்கு இரண்டாம் தாரம். முதல் தாரம் நாயர் வகுப்பை சேர்ந்தவர். என் தந்தை பிராமணர், தாய் நாயர். ஆகவே, கேரள முறைப்படி தாயின் ஜாதி தான் மகனுக்கு வரும். எனவே, நாங்கள் ஒரு நாயர் என பெண் வீட்டாரிடம் தெரிவித்தோம். 'இவ்வளவுதானா, இன்னும் மர்மங்கள் இருக்கா?' என்ற பெண் வீட்டார், என்னையும், தாயாரையும் வேதனைப்படுத்தினர். இவ்வளவுக்கும் என் பெரியம்மா பிள்ளைகள், எங்களோடு நல்ல உறவு பேணுகின்றனர். கல்யாணத்திற்கு முன்பே ஒரு தம்பதி குடும்பம் நடத்த தேவையான சாமான்களை வாங்கி வைத்திருந்தேன். பொருட்களின் தரத்தை கிண்டலடித்தனர். மணப்பெண்ணிடம், அவளது பெற்றோரின் துர்நடத்தையை விளக்கினேன். அவளோ, பெற்றோருக்கு சார்பாக பேசி குதித்தாள். நான், அக்காள் கணவரிடம், 'இந்த இடம் நமக்கு வேண்டாம்...' என்றேன். அவரோ, 'பெண் படித்தவள், செல்லமாக வளர்ந்தவள், திருமணத் திற்கு பின் சரியாகி விடுவாள்...' எனக் கூறி, கல்யாணத்தை நடத்தி வைத்தார்.

திருமணமாகி வந்தவுடன், என் மனைவி கேட்ட முதல் கேள்வி, 'எப்ப கார் வாங்கப் போறீங்க?' தவிர, தன் தாய் மாமன் புராணம் பாட ஆரம்பித்து விட்டாள். 'சீக்கிரம் பெங்களூருக்கு மாற்றல் வாங்குங்கள். மாமா வீட்டுக்கு பக்கத்தில் தனிக் குடித்தனம் போய் விடுவோம்...' என்றாள்.

'மாமாவின் மடியில் இப் போதும் உக்காருவேன்; அவர்தான் சோறு ஊட்டி விடுவார்...' என்பாள். 'என் பிரண்ட் சூப்பரா இருப்பான். என்னை அன்பா பாத்துப்பான்...' என்பாள். 'கணவனிடம் மற்ற ஆண் களை பற்றி புகழாதே...' என்று கெஞ்சினேன்.

மறுநாள், 'கரூர் சென்டரில் பரிட்சை எழுதப் போகி றேன்...' என்றாள். 'என்ன... பிரண்ட் வீட்ல தங்கி பரிட்சை எழுதப் போறீயா?' என கேட்டு விட்டேன். அவ்வளவுதான், 'என் மகளை சந்தேகப்பட்டு, அடித்து சித்திரவதை செய் கிறாயா? நாங்க போலீசுக்கு போனா நீயும், உங்கம்மாவும் ஆயுளுக்கும் ஜெயில்ல களி தான் தின்ன வேண்டி வரும்...' என, மாமியார் மிரட்டினார். என்னுடைய சாதாரண பேச்சை, என் மனைவி திரித்து கூறி விட்டாள் என்பதை நிரூபித்தேன்.

மனைவி மசக்கை என்று, மூன்றாம் மாதம் அழைத்துச் சென்றனர். ஒரு மாதம் கழித்து வந்து, நகை, பொருள் எடுத்து சென்றனர். ஐந்தாம் மாதம் வளைகாப்பு என்றனர். வளைகாப்பில் நானும், அக்காவும் மட்டும் கலந்து கொண்டோம். மாலையில், மருமகளை வளைகாப்பு அலங்காரத் துடன் அழைத்து வந்து என் அம்மாவிடம் காட்டினார் அவளின் மாமா. 'நீங்களாவது என் மருமகளுக்கு புத்தி சொல்லி, எங்க வீட்டிலேயே தங்க சொல்லலாமில்ல?' என தாயார் கேட்க, 'என் தம்பியிடம் எப்படி பேசலாம்...' என, என் மாமியார் சண்டைக்கு வந்து விட்டார்.

அம்மா கோவிலுக்கு போன போது, பந்தல் சரிந்து தலையில் அடிபட்டது. அதே நேரம், அங்கே என் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது. அம்மாவுக்கு செய்ய வேண்டிய மருத்துவத்தை செய்து, வீட்டுக்கு அழைத்து வந்து விட்டேன். மாலையே குழந்தையை பார்க்கப் போனேன். அம்மாவுக்கு அடிபட்டதை கிண்டல் செய்து, போலி நலம் விசாரித்தார் என் மாமியார். குழந்தை பிறந்த, ஐந்தாம் மாதம் வரை மனைவியையும், குழந்தை யையும் அழைத்து வந்து, விடவில்லை அவர்கள். வக்கீல் நோட்டீஸ் அனுப்பினேன். சமரச விவா கரத்து பெற்று விடலாம் எனக் கூறி, அவள் வக்கீல் எங்களின் வக்கீலை சந்தித்திருக்கிறார்.

நான் ஸ்திரிலோலன், வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைபடுத்துகிறவன் என்ற ரீதியில், வக்கீல் நோட்டீசுக்கு பதில் தந்தனர். ஜீவனாம்சம், 10 ஆயிரம் ரூபாய் கேட்டனர். வழக்கு விசாரணைக்கு வந்தது. என் மீதான புகார்களை நிரூபிக்க முடியாது கேஸ் ரத்தானது. கோர்ட் உத்தரவுப்படி மனைவியுடன் மீண்டும் வாழ அவளை வீட்டுக்கு அழைத்து வந்தேன். என் ஒன்றரை வயது குழந்தை, சவலைக் குழந்தையாய் இருந்தது.

கல்லூரி துறைத் தலைவரை பார்க்கப் போகிறேன் என, பொய் கூறிவிட்டு இவள் வேறெங்கோ சென்றதை நான் கண்டுபிடித்து விட்டேன். தொடர்ந்து தான் காலேஜிற்குதான் போனதாகவும், நான் வீணாக சந்தேகப்பட்டு பிரச்னை செய்வதாகவும் சண்டையைத் தொடர்ந்தாள். ஒருநாள் முக்கியமான அலுவலகப் பணியில் இருக்கும் போது, 'உடனே காலேஜிற்கு வா... நான் உத்தமி என்பதை நிரூபிக்கிறேன்...'' என்றாள். அவளை திட்டி விட்டேன். அம்மா வீட்டிற்கு சென்று விட்டாள்.

தொடர்ந்து ஏகப்பட்ட பிரச்னை. மீண்டும் விவாகரத்துக்கு மனு போட்டிருக்கிறாள் மனைவி. வீடு கட்டிய விதத்தில், நான்கு லட்சம் ரூபாய் கடன். 22 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில், இவளுக்கு எப்படி மாதம், 10 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் தர முடியும்? அப்படியே கொடுத்து விவாகரத்து செய்தாலும், என் மகளின் எதிர்காலம்? நான் இரண்டாம் கல்யாணம் செய்தால், அது வெற்றிகரமாக அமையுமா? அடுத்து நான் என்ன செய்ய வேண்டும் அம்மா...

அன்பு மகன்.

அன்புள்ள மகனுக்கு —

உன், 24 பக்கக் கடிதம் கிடைத்தது. உன் மனைவியிடம் கேட்டால் உன்னைப் பற்றி, 48 பக்கம் கடிதம் கொடுப்பாள். கணவன் - மனைவி உறவு நுட்பமானது. வாழ்க்கைத் துணை பிடித்திருந்தால், வசவு வார்த்தைகள் இனிக்கும்; பிடிக்காவிட்டால் காதல் வார்த்தைகள் கூட கசக்கும்.

நீ கட்டுப்பெட்டியாக வளர்ந்தவன். விதவை அம்மாவுடன் கூட்டு சேர்ந்து உழைத்து, அக்காளின் திருமணத்தை நடத்தி முடித்தவன். 15 வருடங்கள் கடுமையாக உழைத்தும், படித்தும் இளமையை தொலைத்து உயர்நிலை அடைந்தவன். இறைபக்தி மிக அதிகம். பெரும்பாலானோர் வார்த்தைகளை பற்றி ஆராயாமல் பேசும் வேகத்திற்கேற்ப எதிராளியிடம் கொட்டி விடுகின்றனர். நீயோ பைனாக்குலர், மைக்ராஸ்கோப் லென்ஸ் வைத்து ஒவ்வொரு வார்த்தையையும் ஆராய்பவன்.

நீ வாழ்க்கையில் மிக, மிக திட்டமிடுகிறாய்; திட்டமிட்டபடி எதுவுமே நடப்பதில்லை. உனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து, என்னென்ன விஷயங்கள் திட்டமிட்டிருந்தாய், அவைகளில் எது, எது அப்படியே நடந்திருக்கிறது என பார். எதிர்பாராதது, நடக்கவே நடக்க முடியாதது நடந்திருக்கும்.

அக்கா கல்யாணத்திற்கு வாங்கிய கடனை அடைக்க திண்டாடி இருக்கிறாய். வீடு கட்ட வாங்கின கடனில், நாலு லட்ச ரூபாயை அடைக்க போராடுகிறாய். திருமணத்திற்கு முந்தியே குடும்பம் நடத்த தேவையான வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கிக் குவித்திருக்கிறாய். பொருள் சார்ந்த வாழ்க்கை உன் வாழ்க்கை.

கடுமையாக உழைத்து, உழைத்து நீ வயதான தோற்றம் கொண்டிருப்பாய் என நினைக்கிறேன். உனக்கும், உன் மனைவிக்கும் வயது வித்தியாசம் அதிகம். நீ வளர்ந்த சூழல் வேறு, அவள் வளர்ந்த சூழல் வேறு. திருமணத்திற்கு முன்பே அந்த பெண் வேண்டாம் எனக் கூறியும், உன் மாமா உன்னை மூளைச்சலவை செய்து, திருமணம் செய்து வைத்து விட்டார்.

நீ கடிதத்தில் உனக்கும், உன் மனைவிக்கும் இடையேயான பல சம்பவங்களை எடுத்துக் கூறியிருக்கிறாய். இரு தரப்பிலும் வாயடக்கம் இருந்திருந்தால், உங்களுக்குள் சண்டையும் வந்திருக்காது, பிரிவும் வந்திருக்காது.

உன் கடிதம், உன் மனைவிக்கு மாமனிடமும், ஆண் நண்பனிடமும் தவறான உறவு இருந்திருக்கிறது என வாதாடுகிறது. மாமாவின் நடத்தை, டாஸ்மாக் கடையில் அமர்ந்து பால் குடித்த கதை. நாங்கள் விகற்பமில்லாமல் பழகுகிறோம் எனக் கூறி, பிறரின் கண்களுக்கு விகற்பமாய் தெரிகின்றனர். அவர் களுக்குள் செக்ஸ் இல்லை என உறுதியாகக் கூறு வேன். சாதாரணமாய் பழகிய நண்பனை உங்களிருவரின் சண்டை உசுப்பேற்றி விட்டது. அவனுக்கும், உன் மனைவிக்கும் உறவிருக்க, 20 சதவீதம் வாய்ப்பிருக்கிறது.

உன் மனைவி ஆடம்பர வாழ்க்கையில் நாட்டமுடையவள். அவளின் பெற்றோருக்கு குழந்தை வளர்ப்பு தெரியவில்லை. உன் மனைவிக்கு உன் மேல் அன்பு இருந்திருக்கிறது. உங்களிரு வருக்கும் இடையே இருந்த கருத்து பேதத்தை களையாமல் விஸ்வரூபிக்க செய்து விட்டனர் அவளின் பெற்றோர்.

திருமணமான புதிதிலேயே நிறைய கணவன் மார்கள் மனைவி கட்சிக்கும், மனைவிமார்கள் கணவன் கட்சிக்கும் தாவியிருக்கின்றனர் அல்லது இருவரும் சேர்ந்து ஒரு தனி கட்சியை ஆரம்பித்து விடுகின்றனர். மலை உச்சியில் வசிக்கும் ஆண், பள்ளத்தாக்கில் இருக்கும் பெண்ணை மணந்து கொண்டால், தாம்பத்யம் செய்ய மனைவி மலைக்கு ஏறி போய் விட வேண்டும் அல்லது கணவன் பள்ளத்தாக்குக்கு இறங்கி வந்து விட வேண்டும். இல்லையென்றால், திரிசங்கு சொர்க்கம் நிலைதான் தங்கும்.

இருமுறை விவாகரத்து கோரி, இருவரும் நீதிமன்றம் போயிருக்கிறீர்கள். இனி, உங்களுக்குள் சமாதானம் என்பது சிரமமான விஷயம். காவல் நிலையங்களுடன் இணைத்து, ஒரு பேமிலி கோர்ட் கவுன்சலர் இருப்பார்; பெரும்பாலும் அவர் பெண் ணாய்தான் இருப்பார். நீங்களிருவரும், ஆறேழு தடவை அவரிடம் ஜோடியாக கவுன்சலிங் போனால், சமாதானத் திற்கு வாய்ப்புண்டு.

உங்கள் மகளின் எதிர்காலம், உங்களின் அன்பு வளர்ப்பில் இருக்கிறது.

உனக்கு 35 வயதாகிறது. விவாகரத்துக்குப் பின் மீண்டும் நீ, இரண்டாம் திருமணம் செய்து கொள் ளலாம்; ஆனால், அது சோபிக்காது. தற்கால பெண்களுக்கு பிடிக்காத ஓர் அம்சம் - உன்னிடம் இருக்கிறது. அதை களையாமல், நீ வெற்றிகரமான, மகிழ்ச்சிகரமான கணவனாக முடியாது.

தற்சமய விவாகரத்து வழக்கை முடிந்தவரை இழு. இடைவெளியில் நீ அம்மா இல்லாமல், உன் மனைவி, மாமா இல்லாமல் சந்தித்து பேசு.

பழைய குழப்பங்களை பேசாமல், புதிய தெளிவுகளை பேசு. இருவரும் சேர்ந்து வாழ குறைந்தபட்ச செயல் திட்டம் ஒன்றை தயாரி. முந்தைய துர்நடத்தைகளுக்கு பரஸ்பரம் மன்னிப்பு கேட்டுக் கொள்ளுங்கள்.

வெளிச்சமாயிருந்து உன்னை நெருங்கியவை களை வெளிச்சப்படுத்து மகனே!

என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.






      Dinamalar
      Follow us