தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஜன 22, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 22, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மாவுக்கு —

என் வயது 22; என் கணவருக்கு, வயது 27. திருமணமாகி, இரு வருடங் களாகிறது. என் கணவர், கணினி துறையில் வேலை செய்கிறார். நான் இல்லத்தரசி தான். எங்கள் திருமணம் காதல் மற்றும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் நடந்தது. என் அப்பாவழி அத்தை மகனைத்தான், நான் திருமணம் செய்தேன். நாங்கள் கூட்டுக் குடும்பம் தான். நான் சிறுவயதில் இருக்கும் போதே, என் கணவர் என்றால் எனக்கு உயிர். எனக்கு கோபமே வராது.

நான் செய்த ஒரே தவறு என்னவெனில், இதுவரை யாரிடமும் காட்டாத அன்பையும், பாசத்தையும், என் கணவர் மீது காட்டியதுதான். இந்த இரண்டு ஆண்டுகளில், அவரை நான், ஒரு குழந்தையைப் போல் பார்த்திருக் கிறேன். அதற்கு அவர், எனக்கு நல்ல பலன் கொடுத்திருக்கிறார். திருமணமான ஓராண்டு காலத்தில், அவரிடம், சிறு சிறு மாற்றங்கள் ஏற்பட்டன. அவரது துறையில் உள்ள, 24 வயது பெண்ணுக்கு, (திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது!) போன் செய்வதும், அவளுடன் வெளியில் செல்வதும், அவள் வீட்டிற்கு செல்வதும் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இந்த விஷயம், ஒரு மாதத்திற்கு முன் தான் எனக்கு தெரிந்தது. அதே நேரத்தில், என்னிடம் பாசமாகவும், அன்பாகவும் தான் இருந்தார். அவர் போன் செய்வது மட்டும், திருமணமான புதிதில் எனக்கு தெரியும். அவரிடம் கேட்பேன்... 'ஏன் அடிக்கடி போன் செய்கிறீர்கள்?' என்று. அதற்கு அவர், 'என் தோழி...' என கூறி, சமாளித்து விடுவார். நானும், தோழி இல்லை என்று விட்டு விட்டேன். பிறகு தான் தெரிந்தது, அது வெறும் தோழி இல்லை என்று.

கடந்த மாதம், அவரது மொபைல் போனில், நான் கண்ட காட்சிகள், எனக்கு சாகும் எண்ணத்தை தூண்டியது என்றால், அது என்ன காட்சி என்று, இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் அம்மா. இந்த விஷயம் பார்த்ததும், நான் அவரிடம் கேட்டது:

1.நான் உங்களுக்கு என்ன குறை வைத்தேன்?

2.அவளை விட, அழகில் நான் குறைந்து விட்டேனா?

3.எனக்கு துரோகம் செய்ய எப்படி மனது வந்தது?

4.நீங்கள் செய்தது போல் நானும் செய்தால் என்ன செய்வீர்கள்?

5.எப்படி காதல் கல்யாணம் செய்து, இப்படி நடந்து கொள்ள முடிந்தது?

கேட்டதற்கு அழுகிறார். நான் என்ன செய்வது? இனி, நான் அவளுடன் பேச மாட்டேன், பார்க்க மாட்டேன் என்று கூறினார். அதன்பின், இன்று வரை, அவளை பார்க்கவும் இல்லை, பேசவும் இல்லை.

இதை, நான் மறப்பதற்காக கோவில், அனாதை ஆசிரமம், உறவினர் வீடு என்று, என் மனதையும் மாற்றிப் பார்த்தேன்; ஆனால், என்னால் மறக்கவே முடியவில்லை. என் வீட்டில் உள்ள யாரிடமும் கூற முடியவில்லை. எனக்கு அவர் அருகில் செல்லவே கூசுகிறது. இதற்கு என்ன தீர்வு என்று தெரியாமல், பைத்தியம் போல் ஆகி விட்டேன். ஒரு மாதத்தில், நான்கு கிலோ குறைந்து விட்டேன்.

பின் முடிவாக ஒரு மனநல ஆலோசகரை அணுகினேன். அவரிடம் நடந்த அனைத்தையும் கூறினேன். அவர் என்னிடம் கேட்டார்... உங்கள் தாம்பத்ய வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று.

எங்கள் தாம்பத்ய வாழ்வில், இருவரும் சந்தோஷமாக தான் இருந்தோம், என்றான். பின் அவர், என் கணவரையும் அழைத்து வர சொன்னார். என் கணவரிடம் கூறினேன் - என்னை ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள் என்று. அதற்கு அவர், 'இனி, நான் உன் மீது பாசமாக இருப்பேன்...' என்று கூறினார். நான் மனநல டாக்டரிடம் சென்றது, என் கணவருக்கு தெரியாது.

பழைய அன்பையும், பாசத்தையும் என்னால் கொடுக்க முடியவில்லை அம்மா. இதனால், என் தூக்கம் பறி போனது. நாங்கள் காதலிக்கும் போதே, அவர் என்னிடம் கூறி விட்டார்... திருமணமாகி, மூன்று வருடம் போனதும், குழந்தையை பெற்றெடுக்கலாம் என்று. அதனால், இன்றுவரை நான் கருத்தரிக்கவில்லை. என் கணவர் மீது, பழைய அன்பையும், பாசத்தையும் காட்ட, எனக்கு ஒரு வழி காட்டுங்கள் அம்மா.

குறிப்பு: இப்போது என் கணவர், என் மீது பாசமாக இருக்கிறார். அந்த பெண்ணிடம் எந்த தொடர்பும் இல்லை. ஆனால், நான் பார்த்த காட்சிகள், என் மனதை விட்டு போகவே இல்லை. அடிக்கடி என் மனதில் என் கணவர் என்னை ஏமாற்றி விட்டார் - என்று தான் என் மனம் நினைக்கிறது.

இப்படிக்கு,
அன்பு மகள்.

அன்புள்ள மகளுக்கு—

நீயும், உன் கணவனும், சிறு வயதிலிருந்து நண்பர்களாக பழகி வந்திருக்கிறீர்கள். அந்த நட்பில், உன் கணவன் அடக்கியாள்பவனாகவும், நீ அடங்கிப் போகிறவளாகவும் இருந்திருக்கிறீர்கள். அந்த முதலாளி - அடிமை உறவே, உங்கள் திருமணத்திற்கு பின்னும் தொடர்ந்திருக்கிறது. நெருங்கிய உறவில் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள், தங்கள் ஈகோவை தற்காத்துக் கொள்ள வேண்டும். கணவனின் கால்களுக்கு கீழே பம்மி கிடக்கக் கூடாது. கணவனின் தலைக்கு மேலே ஏறி நின்று, ஆனந்த தாண்டவமாடவும் கூடாது.

திருமண பந்தம் மீறிய உறவுகளில், அதிக நாட்டம் உள்ளதால்தான், அவர், 'திருமணமான மூன்று வருடங்களுக்கு குழந்தை வேண்டாம்...' என்று சொல்லி, உன்னை காப்பர்-டி பொருத்த வைத்திருக்கிறார். 27 வயதில் குழந்தை பெற்றுக் கொள்ளாமல், 54 வயதிலா குழந்தை பெற்றுக் கொள்வார் உன் கணவர்? இப்போது, அவர் மனசு மாறினால் கூட, அவர் குழந்தை பெற்றுக் கொள்ள, 31 வயதாகி விடும். வாழ்க்கையில் எதை சாதிக்க வேண்டும் என்பது கூட தெரியாத குதர்க்கவாதிகள் இவர்கள்.

ஐந்து கேள்விகள் கேட்டிருக்கிறாய்.

நீ கேட்ட முதல் கேள்விக்கு பதில், நீ, உன் கணவனுக்கு, எந்த குறையும் வைக்க வில்லை. உன்னைப் போன்று எந்தக் குறையும் வைக்காமல், இன்பத்தை வாரி வழங்கும் பெண்களை, வலைவீசி பிடிக்க ஆரம்பித்து விட்டான் உன் கணவன்.

உன் இரண்டாவது கேள்விக்கான பதில், கடந்த ஐயாயிரம் வருடங்களில், உலகம் பார்க்காத ஒரு பேரழகியை கட்டிய கணவனும், பத்து சின்ன வீடு வைக்க முயற்சிப்பான். இது ஆண்களின் பிறவிக் குணம், தொட்டு விட்டால், ஒரு பெண், அவனுக்கு அஞ்சு பைசா நாணயம். தொடாவிட்டால் ஒரு பெண், அவனுக்கு ட்ரில்லியன் யூரோ நோட்டு.

மூன்றாவதற்கு, 'உனக்கு துரோகம் செய்து பிடிபட்டால், கையை வெட்டுவாயா, காலை வெட்டுவாயா? தலையை வெட்டுவாயா?' அழுது புலம்ப போகிறாய். தாராளமாய் புலம்பு... என்கிறான் உன் கணவன்.

நான்காவதற்கு, உன்னை கொலை செய்வான், விவாகரத்து செய்வான் அல்லது வீட்டை விட்டு, உன்னை அடித்து விரட்டுவான். பிறன்மனை நோக்குவது அவன் பிறப்புரிமை.

ஐந்தாவதற்கு, காதலிக்கும் டெக்னிக் தெரிந்த வன், தொடர்ந்து பல பெண்களை வீழ்த்தவே செய் வான்.

உன் பிரச்னைக்கான தீர்வை இனி காண்போம்...

1.தற்காலிக குடும்பக் கட்டுப்பாடு முறைகள் ஏதேனும் ஒன்றை, நீ பயன்படுத்தி வந்தால், அதை கணவனிடம் சொல்லாமல் நிறுத்து. விரைவில் கர்ப்பம் தரி. பிறக்கப் போகும் குழந்தை, தந்தையை நெறிப்படுத்தும்.

2.உன் கணவனுக்கு தெரியாமல், அவனது மொபைல் போனை எடுத்து, போன் புக்கில் உள்ள அனைத்து எண்களையும், பதிவான புகைப்பட விடியோ கிளிப்பிங்குகளையும் அழித்து விடு.

3.உன் குடும்பத்திலுள்ள மூத்த உறுப்பினரை அனுப்பி, உன் கணவன் தொடர்பு கொண்டுள்ள பெண்ணுடன் பேசி, தொடர்பை கத்திரிக்க வை. அவளை வெளியூருக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு போகச் சொல்.

4.உன் கணவனோடு உறவு வைத்துக் கொள்ளும் போது, அவள் முகம் தெரிகிறது என்கிறாய். உறவுக்கு முன், குளித்து விட்டு, இருவரும் சாமி கும்பிடுங்கள், உங்களிருவரின் சிறுவயது புகைப்படங்களையும், உங்களது திருமணப் புகைப்படங்களையும் பார்த்து, ஆழ்ந்து ரசித்து விட்டு, உறவுக்குள் போங்கள். அத்தனையும் மீறி, அவள் முகம் நினைவுக்கு வந்தால், 'போடி... போடி போக்கத்தவளே...' என முணு முணுத்து உறவை ரசி.

5.அன்பு, அன்பு என்று புருஷனிடம் சரணாகதி ஆகாதே. கொஞ்சம் தளுக்கும், மினுக்குமாக நடி. நாலு முறை கேட்டால், பயலுக்கு இரண்டு முறை கொடு; இரண்டு தடவை தாமதப்படுத்து. போலீஸ் நாய் பயிற்சியாளர் போல, சர்க்கஸ் சிங்கம் பயிற்சியாளர் போல, குரங்காட்டி போல, புதிய அவதாரம் எடு.

6.பத்தாம் பசலித்தனமான புலம்பல்களை உதறி, விவேகத்தையும், துணிச்சலையும் தேசிய கீதமாய் பாடு மகளே!

என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us