தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : மார் 11, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 11, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள சகோதரிக்கு —

மூன்று ஆண் பிள்ளைகளை பெற்ற தாய் நான். இதில், இரண்டாவது பையனுக்கு பெண் தேடும் போது, என் சர்ச் போதகர், ஒரு பெண்ணை சிபாரிசு செய்தார். அவள் குடும்பத்தை பற்றி விசாரிக்கும் போது, அவள் தகப்பன், வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளதாகவும், குடும்பத்தை கவனிப்பதில்லை என்றும் தெரிந்ததால், அந்த பெண் வேண்டாம் என்று முடிவு எடுத்தோம்.

ஆனால், என் போதகர், 'நீங்கள் அந்த வீட்டில் பெண் கொடுப்பதாக இருந்தால், யோசிக்கலாம்; எடுக்கத்தானே போகிறீர்கள்...' என்று வற்புறுத்தி, திருமணம் செய்து வைத்தார். அக்., 31, 2008ல் திருமணம் முடிந்து, ஜூன் 2009ல் மருமகளை திருப்பூர் மகளிர் கல்லூரியில், பி.எஸ்.சி., கணிதம் சேர்த்தோம். ஆனால், அவள் கல்லூரிக்குப் போகும் போது, தாலியை கழற்றி வைத்து விட்டு, என் மகன் பைக்கில் கொண்டு விடும் போது, சக மாணவியரிடம் அவரைத்தான் திருமணம் செய்யப் போகிறேன் என்று சொல்லி இருக்கிறாள்.

அடுத்த, ஐந்து மாதத்தில், 'கன்சீவ்' ஆனதால், கல்லூரிக்கு போக மாட்டேன் என்று சொல்லி, குழந்தை ஆறு மாதம் வயிற்றில் இருக்கும் போது, என் மகனோடு பிரச்னை செய்து, வயிற்றில் அடித்தே, குழந்தையையும் கொன்று விட்டாள்.

ஒரு நாள் காலை என் மகனுக்கு போன் செய்து பேசினேன். ஆனால், அன்று மதிய@ம, 1:15 மணிக்கு, என் மகன் துணி துவைக்கும் போது, ஹார்ட் அட்டாக் வந்து மயங்கி விட்டான் என்று போன் செய்தாள். நான் திருப்பூரில் இருக்கும் என் மூத்த பையனுக்கு தகவல் சொல்லி, அவன் 108 ஆம்புலன்சோடு போகும் போது, இறந்து, இரண்டு மணி நேரமாகி விட்டது என்றனர். ஆனாலும், என் மூத்த மகன் அவனைத் தூக்கி கொண்டு இதய சிறப்பு மருத்துவரிடம் கொண்டு போன போது, அவர்களும் இறந்ததை உறுதி செய்துள்ளனர்.

மறுபடியும் இன்னுமொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது தான், கழுத்தில் தூக்கு போட்ட தடயம் இருந்ததால், போலீசில் புகார் செய்துள்ளான். விசாரணையிலும் ஹார்ட் அட்டாக் என்று தான் சொல்லியுள்ளாள். அதன்பின், போலீஸ், எவனோடு சேர்ந்து தூக்கில் தொங்க விட்டாய் என்று கேட்டவுடன், அவராக தூக்கு மாட்டிக் கொண்டார் என்றும், நான் தான் கத்தியால் அறுத்து, கீழே இறக்கினேன் என்றும் சொல்லியுள்ளாள்.

ஆனால், அந்த கத்தியையும், சேலையையும் போலீஸ் கைப்பற்றவில்லை. அவன் இருந்த வீட்டில், சிலீங் ஆறு அடி, என் பையன், ஐந்தே முக்கால் அடி. அந்த வீட்டில் தூக்கு போடுவதற்கு வாய்ப்பை கிடையாது. அவனுக்கு நாக்கு வெளியில் தள்ளவும் இல்லை. மூக்கிலும், காதிலும் ரத்தமும், வாயில் நுரையும் வந்து கொண்டே இருந்தது. போலீசும் சரியாக விசாரணை செய்யாமல், என் மூத்த மகனிடம், அவனேதான் தூக்கு போட்டுக் கொண்டான் என்று எழுதி வாங்கி, எப்.ஐ.ஆர்.,ம் போட்டு, கேசை முடித்து விட்டனர்.

'சயின்டிபிக் அனலைசிஸ் ரிப்போர்ட்' இன்னும் வரவில்லை. அவன் சாவதற்கு ஒரு வாரத்திற்கு முன், 'என் மனைவி எனக்கு துரோகம் செய்கிறாள்...' என்று சொல்லி அழுதுள்ளான். அவன் கம்பெனியிலும் ஒரு மாதமாக, இரவு 1:00 - 2:00 மணிக்கு திடீரென்று வீட்டிற்கு போய் கண்காணித்துள்ளான். என் ஊரிலும், அவளுக்கும், அவளது அத்தை பையனுக்கும் தொடர்பு உண்டு என்றும், அவனும், திருப்பூரில் தான் இருக்கிறான் என்றும், என் பையன் இரவு பணிக்கு போகும் போது, இருவருக்கும் தொடர்பு உள்ளதால், அவன் இரவில் வந்து பார்த்ததாகவும் தெரிகிறது.

என் பையனின் சாவில், ஏகப்பட்ட மர்மம் இருக்கிறது. பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டில், 10:30க்கு சாவு நடந்ததாக சொல்கிறது. ஆனால், எங்களுக்கு 1:15 மணிக்கு தான் தகவல் சொன்னாள். அதுவும், ஹார்ட் அட்டாக் என்று. எனவே, நான், சி.பி.ஐ., விசாரணை கோரி மனு செய்ய உள்ளேன். என் மகனின் சாவின் மர்மம் தெரிந்து, அவளுக்கு தண்டனை வாங்கி தந்தால் தான், என் மகனின் ஆத்மா சாந்தி அடையும். அதற்கு நான் எப்படி, யாரை அணுக வேண்டும் என்பதை தெரியப்படுத்தவும்.

இப்படிக்கு,
உங்கள் சகோதரி.


அன்புள்ள சகோதரிக்கு —

ஒரு மதப் போதகரின் தவறான வழிகாட்டு தலால், உங்களின் இரண்டாவது பையனுக்கு, தவறான நடத்தை உள்ள பெண்ணை மணம் செய்து விட்டதாக கூறுகிறீர்கள். ஒன்று: வேண்டு மென்றே அந்த மதப் போதகர், தவறான பெண்ணை, உங்கள் மகனுக்கு சிபாரிசு செய்திருக்க மாட்டார் என்றே நம்புகிறேன். மதப்போதகரும் மனிதர் தானே? அவரது அபிப்பிராயங்களும் விமர்சனத்திற்கு உட்பட்டவையே.

இரண்டு: நீங்கள் சொல்வதை வைத்து மட்டும் அப்பெண்ணை நடத்தை கெட்டவள் என சொல்லிவிட முடியாது. உங்கள் மகனோடு பிரச்னை செய்து, வயிற்றில் இருந்த குழந்தையை, தன் கையால் அடித்தே கொன்று விட்டார் என கூறியிருக்கிறீர்கள்... நம்புவதற்கு சிரமமான விஷயம்.

சரி... விஷயத்துக்கு வருவோம்...

சம்பவத்தன்று காலை, 7:30 மணிக்கு, உங்களது மகனுடன் போனில் பேசி, அவரை உங்கள் ஊருக்கு வரச் சொல்லியிருக்கிறீர்கள்; அவரும் வருகிறேன் என்றிருக்கிறார். ஆனால், மதியம், 1:15 மணிக்கு, உங்கள் மருமகள் போன் செய்து, 'உங்கள் மகனுக்கு ஹார்ட் அட்டாக் வந்து, மயங்கி விழுந்து விட்டார்...' என்றிருக்கிறாள். மூத்த மகன், 108 ஆம்புலன்சுடன் விரைய, இரண்டாவது மகன் இறந்து, இரண்டு மணி நேரமாகி விட்டது என்றிருக்கிறார் முதல் மருத்துவர். இரண்டாவது மருத்துவமனையில், தூக்கு போட்ட தடயம், கழுத்தில் உள்ளது என்றிருக்கின்றனர். 'கணவன் தூக்கு போட்டுக் கொண்டார். நான்தான் சுருக்கு கயிற்றை கத்தியால் அறுத்து பிரேதத்தை கீழே இறக்கினேன்...' என்றிருக்கிறாள் உங்கள் மருமகள். கடைசியில், தூக்கு போட்டு தற்கொலை என, கேசை முடித்து விட்டனர் போலீசார் என்றிருக்கிறீர்கள்.

உங்கள் கடித உள்ளடக்கத்தை, காவல் துறையின் மிக உயர்ந்த பதவியில் இருந்து ஓய்வு பெற்ற ஒருவருடன் விவாதித் தேன். அவர் கூறியதாவது:

1.ஒரு ஆணோ, பெண்ணோ தானே தற்கொலை செய்து கொண்டால், கழுத்தின் மேலிருந்து கீழாக லிகேச்சர் மார்க் காணப்படும். கொன்று தூக்கில் தொங்க விட்டால், கழுத்தைச் சுற்றி படுக்கை வசம் வட்டமாக லிகேச்சர் மார்க் தென்படும்.

2.ஆறடி உயரமுள்ள சீலிங்கில், ஐந்தே முக்கால் அடி உயரமுள்ள மனிதன் தூக்கிலிட்டுக் கொள்ள சாத்தியம் குறைவு. குறைந்தபட்சம், காலுக்கும், தரைக்கும் ஒன்றிலிருந்து ஒன்றரை அடி இடைவெளி இருக்க வேண்டும். குற்றம் நடந்த இடத்தில், தூக்குக்கு ஏறி நின்ற வஸ்து ஏதாவது கைப்பற்றினார்களா என்ற தகவல் கடிதத்தில் இல்லை.

3.மரணத்தை முதன் முதலில் யார் பார்த்து, போலீஸுக்கு ரிப்போர்ட் செய்தது? தூக்கு போட்டுக் கொண்டதாக சொல்லும் இடத்தில், சுருக்கு மாட்ட கனமாக இரும்பு வளையம் போன்ற வசதி, சீலிங்கில் இருந்ததா? காவல்துறை, பிரேதம் கிடந்த இடத்தில், என்னென்ன கைப்பற்றியது என்ற தகவலும் கடிதத்தில் இல்லை.

4.ரிகர்மார்ட்டிஸ் எனப்படும், பிரேதத்தின் உடலில் ஏற்படும் விரைப்பு தன்மையை வைத்தும், விரைப்பு தன்மை விலகுவதை வைத்தும், இறந்த நேரத்தை கணிக்கலாம். விஸ்ரா ரிப்போர்ட், விஷம் வைத்து கொல்லப்பட்டிருந்தால் காட்டி விடும். விஷம் புகட்டப்பட்டு இறந்தவர் உடல், நீல நிறமாக மாறியிருக்கும்.

5.கழுத்தை சுற்றிய தோல் பகுதியை, தனியாக எடுத்து பரிசோதனை செய்தும், நிஜ தூக்கா அல்லது பொய் தூக்கா என்பதை கண்டுபிடித்து விடலாம்.

6.போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட், போரன்ஸிக் ரிப்போர்ட் பார்க்காமல், முழுமையாக அபிப்ராயம் கூற முடியாது என்றார்.

7.ஆனால், கடிதத்தை படித்த அளவில், கடிதம் எழுதியவரின் சந்தேகத்தில், அடிப்படை ஆதாரங் கள் உள்ளன. இறந்தவரின் தாய், தகுந்த வழக் கறிஞர் துணையுடன், உயர்நீதிமன்றத்தில் மனு செய்து, சி.பி.ஐ., விசாரணை கோரலாம்.

கர்த்தர் உங்களை கைவிட மாட்டார் சகோதரி. உங்களது மகனின் மரணத்திற்கு உங்கள் மருமகளும் அவளது கள்ளக் காதலனும்(?) காரணமாய் இருந்தால் நிச்சயம் சட்டத்தின் கையில் சிக்கி தண்டிக்கப்படுவர். உங்கள் மகனின் ஆத்மா சாந்தியடையும்.

இறுதியாக ஒரு விஷயம்...

என்னுடைய பதில், சட்ட அபிப்பிராயம் அல்ல; உங்களின் துக்கத்திற்கு மருந்திடும் சிறு மருந்தே!

என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us