sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஏப்ரல் 09, 2026 ,பங்குனி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்!

/

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : மார் 18, 2012

Google News

PUBLISHED ON : மார் 18, 2012


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேன்மை மிகு அம்மாவுக்கு —

தங்கள் அன்பு மகன் எழுதிக் கொள்வது. நவ., 21, 2001ல் தொலைந்து போன என் வாழ்க்கைக்கு, எங்கு தேடியும் பலன் கிடைக்கவில்லை. ஆனால், எனக்கு தங்களால் நல்ல தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

அம்மா... நான் திருமணம் செய்திருப்பது, என் அம்மாவின் அண்ணன் மகளைத்தான். எம்.ஏ., எம்.பில்., பி.எட்., ஆங்கில இலக்கியம் படித்து, அரசு உயர் நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறாள். நான் டிப்ளமோ முடித்து, ஒரு டிராக்டர் கம்பெனியில், பார்ம் எக்சி கியூட்டிவாக வேலை செய் கிறேன். பணத்திற்கோ, பண்பிற்கோ, பாசத்திற்கோ இறைவன் எந்த குறையும் வைக்கவில்லை.

குடும்பத்தில் எல்லாரிடமும் அதிகமான பாசம் வைத்திருப்பது நான் மட்டும்தான். அதே போல், பெரியவர் முதல், சின்னக் குழந்தை வரை பாசம் வைத்திருப்பது என்னிடம் மட்டும்தான்.

எனக்கு ஏதேனும் நேர்ந்தால், எல்லாரும் துடித்துப் போவர். எனக்கு பெண் கொடுத்த என் தாய் மாமா திருமணம் செய்திருப்பது, அவரது தாய் மாமாவின் மகளை. எனக்கு என் மாமாவின் மகளை திருமணம் செய்து வைப்பதற்கு, என் தங்கைகளுக்கோ, என் பெரியம்மா, சித்திக்கோ, இவர்களது குழந்தைகளுக்கோ, குடும்பத்தார்களுக்கோ, என் நண்பர்களுக்கோ பிடிக்கவில்லை. ஏனென்றால், என் குணத்திற்கும், என் மனைவி குணத்திற்கும் ஒத்துப் போகாது என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால், அவளோ என்னைத்தான் திருமணம் செய்வேன் என்று பிடிவாதமாக இருந்தாள். என் அத்தைக்கும், எனக்கு திருமணம் செய்து கொடுக்கத்தான் விருப்பம்; என், தந்தைக்கும், மாமாவிற்கும் விருப்பம் இல்லை. இருந்த போதிலும், யாரையோ திருமணம் செய்து கொள்ளத்தான் போகிறோம்; அதற்கு ஆசைப்படுகிற பெண்ணை கட்டிக் கொள்ளலாம் என, நானும், என் அம்மாவும், முடிவு செய்து, எல்லாருடைய சம்மதத்துடன் திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்த அன்று இரவே, அவள் எண்ணத்தை சொன்னாள். என்னவென்றால், 'திருமண பந்தத்தில் இப்படி தாம்பத்யம் என்ற சடங்கு இருக்குமாயின், இதற்கு நான் சம்மதம் தெரிவித்திருக்க மாட்டேன்...' என்று.

என் இதயமெனும் தாஜ்மஹாலில், என் மனைவி, மக்களுக்காக நான் கட்டியிருந்த கற்பனைக் கோட்டையில், விரிசல் விழுந்தது. இருந்த போதிலும், என் சகோதரிகளுக்கு இதுமாதிரி நேர்ந்திருந்தால் அதை எப்படி சாதுர்யமாக சரி செய்வோமோ, அதே போல் சரி செய்வதென முடிவு செய்தேன். நான்கு மாதங்கள் கடந்தன. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

என் தந்தையிடம் கூறினால்... அதை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. உயிர் காப்பான் தோழன் என்பர்... உண்மை. அவர்களுக்கு இதயமே ஒரு கணம் நின்று விட்டது. உடனே இதை பெண்ணின் தந்தையிடம் தெரியப்படுத்தினோம். என் மனைவியின் நிலைமையை கடிதத்தில் எழுதி, அவளை ஒன்றும் கேட்க வேண்டாம், அவளுக்கு புரியும்வரை காத்திருப்பதாக எழுதியிருந்தேன்.

என் மாமாவோ, தன் மகளை யாரும் குறைகூறி விடுவரோ என்ற பயத்தில், என்னை எதிரியாக பாவிக்கலானார். எல்லாரும் (உறவினர்கள்) அவளுக்கு அறிவுரை சொல்ல, என் மனைவியோ, தன்னை மகளாக பாவித்த மாமன், மாமியாரை கொடுமைக்காரர்கள் என புறம் தள்ளினாள். காலங்கள் கரைந்தன; கனிவதாக தெரியவில்லை. எனக்கு விவாகரத்து தருவதற்கும் மறுக்கின்றனர். வேறு திருமணமும் செய்ய வழியில்லை. எல்லாரும் பெண் தர காத்திருக்கின்றனர். ஆனால், என் மனைவிக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை, சட்டபூர்வமாக கேட்கின்றனர்.

என்னைப் புரிந்து, என் நிலைமையை தெரிந்து, என் வாழ்விற்கு வழி வகுக்கும் பெண்ணிற்கு, நான் உள்ளன்போடும், உண்மையுள்ளவனாகவும் இருப்பேன். அந்த பெண்ணிடமிருந்து நல்ல பண்புகளை மட்டுமே எதிர்பார்க்கிறேன்; வேறு எதுவும் வேண்டாம்.

இப்படிக்கு,
உங்கள் அன்பு மகன்.

அன்புள்ள மகனுக்கு —

பத்து வருடங்களுக்கு முன், உன் தங்கைகளுக்கோ, பெரியம்மா, சித்தி, சின்னம்மா வீட்டுக்கோ, நண்பர்களுக்கோ பிடிக்காத, ஆனால், அம்மாவுக்கு பிடித்த தாய் மாமன் மகளை திருமணம் செய்து கொண்டாய். மாமன் மகளும், உன்னைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என அடம் பிடித்தாள் எனக் கூறுகிறாய். ஆனால், திருமணம் நடந்து முடிந்த இரவில், 'தாம்பத்யம் என்ற சடங்கு முன்னமே தெரிந்திருந்தால், இத்திருமணத்திற்கு ஒப்புதல் தெரிவித்திருக்க மாட்டேன்...' என அவள் கூறியதாகவும் கூறுகிறாய். மூன்று பட்டங்கள் பெற்ற பெண்ணுக்கு, 'தாம்பத்யம் பற்றி எதுவும் தெரியாது என்பது சிறிதும் நம்புகிற மாதிரி இல்லை. தாம்பத்யம் பற்றி தெரியாதவள், என்ன அடைய விரும்பி, உன்னை மணந்து கொள்ள பிடிவாதம் பிடித்தாள்?

கீழ்க்கண்ட மன நோய்கள் இருந்தால், ஒரு பெண், உன் மனைவி போல் நடந்து கொள்வாள் மகனே:

1.ஆன்ட்ரோபோபியா - ஆண்களைக் கண்டு இயற்கை மீறிய பேரச்சம்.

2.கேமோபோபியா - திருமணம் செய்து கொள்வதில் இயற்கை மீறிய பேரச்சம்.

3.ஜிம்னோபோபியா - நிர்வாணமாய் இருக்க, நிர்வாணத்தை காண இயற்கை மீறிய பேரச்சம்.

4.கிளினோபோபியா - படுக்கைக்கு செல்வதில் இயற்கை மீறிய பேரச்சம்.

5.மாயூஸியோபோபியா - கருவுறுதல் குறித்து இயற்கை மீறிய பேரச்சம்.

6.டோகோபோபியா - பிள்ளைப் பேற்றை எண்ணி, இயற்கை மீறிய பேரச்சம்.

-மேற்சொன்ன பேரச்சங்களில் ஒன்றோ, இரண்டோ அல்லது பலவோ, உன் மனைவிக்கு இருக்க வாய்ப்பிருக்கிறது. மனநோய் இல்லாது, திருமண நாளன்று, உன் மனைவி, உன் நட்பு உறவு வட்டத்தால், ஏதாவது ஒரு விதத்தில் அவமானப் படுத்தப்பட்டாளோ அல்லது நீ அவளை அன்று ஏதாவது இழித்து பேசி, அதை அவள் காதுற்றாளோ?

ஆடை மறைக்கும் இடங்களில் சொறி, சிரங்கு, பூஞ்சை காளான் பாதிப்பு ஏதாவது இருந்து, அதை மறைக்க முயன்றாளோ?

அவள் சிறுமியாக இருந்த போது, நெருங்கிய வக்கிரமான உறவினர் எதாவது பாலியல் வன்முறையில் ஈடுபட்டு, அதன் பாதிப்பு தொடர்கிறதோ?

உன்னுடைய கடிதம் உன் மனைவியின் தரப்பு நியாயத்தை சொல்லவில்லை. அவளது நடத்தைக்கு காரணம் நீ கேட்டிருக்கலாம். ஏற்கனவே நீ கேட்டிருந்தால் அவள் காரணங்களும் கூறி இருப்பாள். அதை நீ ஏன் செய்யவில்லை? மருத்துவரிடம் அழைத்துச் சென்று, நிவாரணம் ஏன் பெறவில்லை?

திருமணத்திற்கு முன் தான் அவளிடம் உனக்கு காதல் இல்லை. திருமணத்திற்கு பின்னாவது, அவள் மேல் காதல் வராவிட்டாலும், அட்லீஸ்ட் ஒரு பரிவு, ஒரு அக்கறை, ஒரு மனிதாபிமானம் வரலாமில்லையா?

அவளிடமிருந்து சட்டப்படி விவாகரத்து பெறவே முயற்சிக்கிறாய். மறுமணம் செய்ய, துடியாய் துடிக்கிறாயா அல்லது மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்று வா, கல்யாணம் செய்து கொள்ளலாம் என்கிறாளா புதுக் காதலி?

தன்னை மகளாய் பாவித்த, மாமன் - மாமியாரை கொடுமைக்காரர்கள் என, உன் மனைவி எதற்கு கூறுகிறாள்?

பழைய பகைக்கு பழி தீர்த்தல் இருபக்கமும் அரங்கேறுகிறதோ? உன் மனைவி திருமணத்திற்கு முன் யாரிடமும், திருமணத்திற்கு பின் உன்னுடனும் உறவு வைத்துக் கொண்டதில்லை. அவள் ஒரு கன்னிப் பெண் - அவள் தாம்பத்யத்தில் ஈடுபாடு இல்லாதவள் - அவள் ஒரு லெஸ்பியன் - அவள் செக்ஸ் ஹார்மோன் குறைபாடு உள்ளவள் - இப்படி ஏதாவது ஒரு விஷயத்தை மகப்பேறு மருத்துவரோ, மனநல மருத்துவரோ உறுதி செய்தால்தான், உனக்கு சட்டரீதியான விவாகரத்து கிடைக்கும்.

மருத்துவ அறிக்கை அவளுக்கு சார்பாக இருந்தால், நீதிமன்றம் உன்னை எள்ளி நகையாடும்.

ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ முதல் திருமணம் வெற்றி பெறும் அளவிற்கு, இரண்டாவது திருமணம் வெற்றி பெறுவதில்லை. ஆகவே, உன் மனைவியை மருத்துவர்களிடம் அழைத்துச் சென்று மருத்துவ ஆலோசனை பெறு. உன் கடிதம் முழு உண்மையாக இருக்கும் பட்சத்தில், உன் மனைவி உடல், மன அளவில் பூரண நலம் பெற்று, இரு அழகிய குழந்தைகளை பெற்றுத் தருவாள்.

வாழ்த்துக்கள்!

என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.






      Dinamalar
      Follow us