PUBLISHED ON : ஜன 29, 2012

ஜன., 30 - ரத சப்தமி!
சூரியனுக்குரிய விரதங்களில், முக்கியமானது சப்தமி. அதிலும், தை மாத ரத சப்தமி மிகவும் விசேஷமானது. 'சப்தம்' என்றால், 'ஏழு!' திதிகளில், இது ஏழாவதாகும். சூரியன், மகர ராசியில் பிரவேசிக்கும் மாதம் தை. இம்மாதத்தில், சூரியன் தன், வடக்கு திசை பயணத்தை துவக்குகிறார்.
இந்த விரத நாளில், சூரியனின் பிறப்பு குறித்த கதையைத் தெரிந்து கொள்ளுங்கள்.
கஷ்யப மகரிஷியின் மனைவி அதிதி. இவள் கர்ப்பமாக இருந்த சமயத்தில், கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் வந்த ஒரு அந்தணர், வாசலில் நின்று உணவு கேட்டார். கணவருக்கு பரிமாறிக் கொண்டிருந்ததால், பதி சேவைக்கே முக்கியத்துவம் அளிக்கும் வகையில், கணவருக்கு பரிமாறி, பின், அந்தணருக்கு உணவு எடுத்து வந்தாள். கர்ப்பமாக இருந்ததால், சற்று மெதுவாகவும் நடந்து வந்தாள். இது, அந்தணரின் கோபத்தைக் கிளறியது.
'பெண்ணே... தர்மத்திற்கே முதலிடம் என்று, சாஸ்திரம் சொல்கிறது. ஆனால், நீ அதை புறக்கணித்து, கர்ப்பத்தை பாதுகாக்க வேண்டுமென்ற நோக்கத்தில், மெதுவாக நடந்து வந்தாய். எனவே, உன் கர்ப்பம் கலைந்து போகும்...' என்று சாபமிட்டு சென்று விட்டார்.
அதிர்ச்சியடைந்தவள், தன் கணவரிடம் இதுபற்றி சொன்னாள். அவர், அவளுக்கு ஆறுதல் சொல்லி, 'இது போனால் போகட்டும். உனக்கு, 'ம்ருத லோகம்' எனப்படும் அமிர்தம் நிறைந்த உ<லகத்தில் இருந்து, ஒரு புத்திரன் கிடைப்பான். அவன் என்றும் அழியாதவனாக இருப்பான். இந்த பூலோகம், எத்தனை முறை அழிந்தாலும் சரி...அவனுக்கு மட்டும் அழிவே இல்லாதபடி, உச்சத்தில் இருப்பான். அவனைச் சார்ந்தே, இந்த உலகம் செயல்படும்...' என்று வாக்களித்தார்.
அதன்படி, 'ம்ருத லோகத்தில்' இருந்து ஒரு புத்திரன், அவர்களிடம் வந்து சேர்ந்தான். அவனுக்கு, அவனது உலகின் பெயரால், 'மார்த்தாண்டன்' என்று பெயரிட்டனர். அவன் ஒளி பொருந்தியவனாக இருந்ததால், சூரியன் எனப்பட்டான். அமிர்தம் குடித்தவருக்கே அழிவில்லை என்னும் போது, அமிர்த உலகிலேயே தோன்றியவனுக்கு, ஏது அழிவு! அதனால் தான், சூரியன், தோன்றிய காலத்தில் இருந்து நிலைத்திருக்கிறான்.
அவன், ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் வருபவன் என்பதால், திதிகளில் ஏழாவதான சப்தமி, அவனுக்குரியதாயிற்று. சப்தமி விரதம் அனுஷ்டிப்பது எளிமையானது. ஆனால், கிடைக்கும் பலனோ அபரிமிதமானது.
இந்த விரதத்தை, வளர்பிறை பிரதமை முதல், சப்தமி வரை ஏழு நாட்கள் வீதம், ஏழு மாதங்கள் தொடர்ந்து அனுஷ்டிக்க வேண்டும். பூஜையறையில் சூரியன் படம் வைத்தோ அல்லது மொட்டை மாடியை சுத்தம் செய்த பிறகு அமர்ந்தோ பூஜை செய்யலாம். முதல் நாள் பிரதமை அன்று, ஒரே ஒரு எருக்கு இலையாலும், அதையடுத்து வரும் துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி திதிகளில் முறையே, 2,3,4,5,6 எருக்கு இலை தூவியும், சப்தமியன்று, ஏழு இலைகளும் தூவி, சூரிய பகவானுக்கு நமஸ்காரம் என்று சொல்ல வேண்டும்.
இதே முறைப்படி, அடுத்த வளர்பிறை பிரதமை முதல், சப்தமி வரை மிளகாலும், இதையடுத்து, வேப் பிலை யாலும் அர்ச் சனை செய்ய வேண்டும். நான்காம் மாதம் பழங்களும், ஐந்தாம் மாதம் கோதுமை பண்டமும் படைத்து, அர்ச்சனை செய்ய வேண்டும். ஆறு, ஏழாம் மாதங்களில் ஒரு டம்ளர், இரண்டு டம்ளர் என, ஏழு டம்ளர் தண்ணீர் வைத்தால் போதும். படைத்த பொருட்களை பிரசாதமாக சாப்பிடலாம். பிறருக்கும் கொடுக்கலாம். விரத காலத்தில், காலை, இரவில் எளிய உணவும், மதியம் கஞ்சியும் சாப்பிடுவது ஏற்புடையது. அதிகக் காரம் தவிர்க்க வேண்டும். குடை, பாதணி @பான்றவற்றை அவரவர் சக்திக்கேற்ப தானம் செய்யலாம்.
இந்த விரதத்தால், நல்ல கல்வி, செல்வம், ஆரோக்கியம், அழகான, குணமுள்ள வாழ்க்கைத் துணை, புத்திசாலியான குழந்தைகளைப் பெறலாம் என்பது ஐதீகம். ஆதித்ய ஹ்ருதயம் படித்தால், பலன் பல மடங்காகும்.
சப்தமி விரதமிருந்து, சூரியனின் அருளால், சகல வளமும் பெறுங்கள்.
***
தி. செல்லப்பா
