PUBLISHED ON : டிச 25, 2016

டிச., 28 அனுமன் ஜெயந்தி
ஒரு பணியை, தடங்கலின்றி செய்ய, விநாயகருக்கு பூஜை செய்த பின்பே ஆரம்பிக்க வேண்டும். ஆனால், அது, வெற்றிகரமாக முடிய, ஆஞ்சநேயரின் அனுக்கிரகம் தேவை.
இவ்விருவரையும், ஒரே கருவறையில் தரிசிக்க, திருநெல்வேலி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள, 'கெட்வெல்' மருத்துவமனை வளாகத்தில் உள்ள கோவிலுக்கு செல்ல வேண்டும்.
இங்கு, மேற்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார், ஆஞ்சநேயர். மேற்கு நோக்கிய தெய்வங்களுக்கு, அதிக சக்தி உண்டு என்பர்.
ஆஞ்சநேயருக்கு பரிவார மூர்த்திகள், எட்டு பேர்; அவர்களில் ஒருவர், எமன். அந்த எமனை, நல்லவர்களுக்கு உதவும்படி எடுத்துச் சொல்லவே, இவரது திருப்பாதம், தென் திசையை நோக்கி உள்ளது. எனவே, இவரை வணங்கினால், எம பயம் இல்லை. அதேபோல், குபேர திசையான வடக்கு நோக்கி இருக்கிறது, இவரது வால்.
முருகனுக்கு வேல் என்றால், ஆஞ்சநேயருக்கு வால் அழகு. அந்த வாலின் நுனியில், நவக்கிரகங்களும் அடக்கம். 'கெட்வெல்' ஆஞ்சநேயரின் வாலின் அமைப்பு, ஓம் வடிவில் உள்ளது என்பதால், மந்திர சக்தி வாய்ந்தவராக கருதப்படுகிறார், இங்குள்ள அஞ்சநேயர். எந்த கிரகத்தின் கோளாறால், நோய் ஏற்பட்டுள்ளதோ, அதை அடக்கி, பக்தர்களைக் காப்பவர் இவர். இதனால், ஆஞ்சநேயர் வாலுக்கு பொட்டு வைக்கும் வழிபாடும் நடக்கிறது. இவரது வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும் ஆட்சி செய்கின்றனர்.
இவரை தரிசிக்க வருவோர், இவரது அழகில் மயங்கி, தாங்கள் கேட்க வேண்டியதை கேட்க மறந்து போனாலும் கூட, இவரது வலது உள்ளங்கையில் குடியிருக்கும், ஐஸ்வர்ய லட்சுமி, ஐஸ்வரியத்தை அள்ளிக் கொடுப்பாள்.
சாந்த சொரூபியான இவரை வணங்கினால், செல்வம், எம பயம் நீங்குதல், கல்வி, வீரம், பக்தி, குடும்ப ஒற்றுமை மற்றும் பதவி உயர்வு கிடைக்கும். இங்கு, ஆஞ்சநேயருக்கு ராஜ அலங்கார நேர்த்திக்கடன் செய்வது, பக்தர்களின் வழக்கம்.
கடும் நோய் உள்ளவர்களுக்கும் மறுபிறவி தரும் ஆஞ்சநேயரை, அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு வணங்கி வாருங்கள்!
தி.செல்லப்பா
