PUBLISHED ON : டிச 25, 2022

ஒருவருடைய வளர்ச்சி, அடுத்தவருக்குப் பிடிக்காமல் போவது இயல்பு. அந்த அடுத்தவரும் அருகிலேயே இருந்து விட்டால், ஏராளமான இடையூறுகள் உண்டாகும்; பெரும் ஆபத்தை உண்டாக்கும்.
இது ஏதோ, கலியுகத்தில் தான் இப்படி என, எண்ண வேண்டாம். துவாபர யுகத்திலும் இப்படித்தான் நடந்தது. அதற்காக கவலைப்பட வேண்டாம். கூட இருந்து காப்பாற்றும், தெய்வம்.
பஞ்ச பாண்டவர்களும், துரியோதனன் முதலானவர்களும் ஒன்றாக இருந்த காலம் அது. அனைவருமே இளமையானவர்கள். அவர்களில் பீமனின் பெரும் வடிவம் மற்றும் அவனது ஆற்றல், துரியோதனன் மனதில், பெரும் பயத்தை உண்டாக்கியது.
'இந்த பீமன் இருக்கும் வரை, நமக்கு நிம்மதியே இருக்காது. இவனால், பஞ்ச பாண்டவர்கள் மேலும் பலம் பெறுவர். ஆகையால், எப்பாடுபட்டாவது, பீமனை அழித்துவிட வேண்டும்...' என்று நினைத்தான், துரியோதனன்.
அதற்கு ஏற்றாற்போல், பாண்டவர்களும், கவுரவர்களுமாக, 'வன போஜனம்' என்ற பெயரில், காட்டில் உணவு உண்டு மகிழ்ச்சியாக இருந்தனர்.
அப்போது, துரியோதனன் மிகுந்த பாசத்துடன் விஷம் கலந்த உணவை, பீமனுக்கு ஊட்டினான், துரியோதனன்.. ஊட்டியது மட்டுமல்ல, விஷம் கலந்த உணவால், பீமன் மயங்கி இருந்த போது, அவனை அப்படியே காட்டுக் கொடிகளால் கட்டி, நதியில் கொண்டு போய் வீசினான்.
'அப்பாடா, பீமனை ஒழித்து விட்டோம். பாண்டவர்கள், பல் பிடுங்கிய பாம்பைப் போல ஆகி விட்டனர்...' என, மகிழ்ச்சியுடன் திரும்பினான். ஆனால், அவன் செய்தது அவனுக்கே பாதகமானது.
ஆம்... துரியோதனன், பீமனைத் தள்ளிய இடம், நாக உலகம் செல்லும் வழி; அங்கு வந்து விழுந்த பீமனை, சில பாம்புகள் கடித்தன. அதன் விளைவால் பீமன் உடம்பில் ஏற்கனவே இருந்த நஞ்சு நீங்கியது.
அதைக் கண்ட நாகர்கள், பீமனைக் கொண்டு போய், தங்கள் மன்னரான வாசுகியிடம் சேர்த்தனர்.
பீமனைப் பற்றிய விபரங்கள் எல்லாம் அறிந்த வாசுகி, பீமனுக்கு எட்டு குடங்கள், ரசம் கொடுத்தார்.
ஒரு குடம் அளவு, அந்த ரசம் குடித்தால், ஆயிரம் யானை பலம் கிடைக்கும். எட்டு குடங்கள் என்றால்...
வாசுகி அன்புடன் தந்த ரசத்தைக் குடித்த பீமன், பெரும் பலம் பெற்றுத் திரும்பினான்.
விளைவு, பீமனுக்குத் தீங்கு செய்ய நினைத்த துரியோதனன், போரில் அவனாலேயே இறந்தான்.
கெடுவான் கேடு நினைப்பான் என்பதைத் துரியோதனன் மூலம், பாடம் நடத்தியிருக்கிறார், வியாசர்.
பி. என். பரசுராமன்