PUBLISHED ON : அக் 18, 2020

அழகிய பரந்த நெற்றி, நிலத்தை தொடும் தும்பிக்கை, தேன்நிறக் கண்கள், கம்பீரமே உருவெடுத்தது போன்ற உயரமான தோற்றம், இதெல்லாம் தான், செங்களூர் ரங்கநாதன் என்ற பெயருள்ள யானையின் கவுரமான அடையாளங்கள்.
திருச்சியை அடுத்துள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், பெருமாளுக்கு சேவை செய்வதற்காக குட்டியாக இருந்த போது வந்தது.
தினமும், காவிரி நதியில் இருந்து, ரங்கநாதன் எடுத்து வரும் கலச நீரில்தான், பெருமாளுக்கு அபிஷேகம் நடக்கும்.
ரங்கநாதனின் வளர்ச்சி ஒரு கட்டத்தில், 11 அடி 4 அங்குல உயரத்துடன் மிக கம்பீரமாக காணப்பட்டது. ஆப்ரிக்கா யானையாக இருந்தால், 11 அடியும்; இந்திய யானையாக இருந்தால், 10.7 அடி உயரம் தான், இதுவரை உள்ள, 'ரிக்கார்ட்!'
அசாதாரண உயரத்தால், கோவிலின் குறுகிய வாசல் வழியாக, கலச நீருடன் சென்றதில், காயம் ஏற்பட்டு அவதிப்பட்டது.
ரங்கநாதனை பராமரிக்க முடியாது என்ற நிலையில், 'யானை விற்பனைக்கு' என, ஆங்கில நாளிதழ் ஒன்றில் விளம்பரம் கொடுத்தனர். இந்த விளம்பரத்தைப் பார்த்த, கேரளா மாநிலம், செங்களூரைச் சேர்ந்த பரமேஸ்வரன் நம்பூதிரி என்பவர், 1905ல், யானையை, 1,500 ரூபாய்க்கு வாங்கினார்.
தன் சொந்த ஊரான செங்களூர் மன்னா என்ற இடத்திற்கு, ரங்கநாதனை அழைத்துச் சென்று, அதற்கு சத்தான உணவு கொடுத்து பராமரித்தார். கொஞ்ச நாளில் ரங்கநாதன் மிகவும் போஷாக்கு பெற்றதுடன், உற்சாகமும் கொண்டது.
கடந்த, 1906ல் நடந்த, திருச்சூர் ஆடிப்பூரம் திருவிழாவிற்கு ரங்கநாதனைக் அழைத்து வந்து நிறுத்தினார், நம்பூதிரி. ரங்கநாதன் வந்து நின்றதும், பக்கத்தில் நின்றிருந்த மற்ற யானைகள் எல்லாம், குழந்தை போல் தெரிந்தது.
இதைப் பார்த்த மக்கள் ஆர்ப்பரித்து, ரங்கநாதனை கொண்டாடினர். 1914 வரை, ரங்கநாதன் தான் யானைகளின், 'சூப்பர் ஸ்டார்' ஆக, வலம் வந்து, அதன் புகழ், உலகமெங்கும் பரவியது.
இந்த சூழ்நிலையில், 1914ல், கோவிந்தன் என்ற யானை தாக்கி, ரங்கநாதன் கடுமையான காயமடைந்தது. சிகிச்சை பலனின்றி, 1917ல் இறந்தது.
ரங்கநாதனின் உயரம் ஒரு அதிசயம் என்பதால், அப்போதைய பிரிட்டிஷ் அரசு, அதன் எலும்புக்கூட்டை, லண்டன் மியூசியத்தில் வைக்க விரும்பி, ரசாயனம் தடவி மண்ணில் புதைத்தது.
ஆறு மாதம் கழித்து தோண்டி, மிஞ்சிய எலும்புகளை கோர்த்து, நிமிர்த்திய போது, ரங்கநாதன் மீண்டும் உயிர்பெற்று எழுந்து நிற்பது போன்ற உணர்வு, அதை பார்த்தவர்கள், பழகியவர்களுக்கு ஏற்பட்டது.
'ரங்கநாதன் எங்களிடமே இருக்கட்டும்...' என்று, மன்றாடிக் கேட்டுக் கொண்டதால், கடைசி நேரத்தில், லண்டன் மியூசியம் செல்வது தவிர்க்கப்பட்டு, தற்போது, கேரளா மாநிலம், திருச்சூர் அருங்காட்சியகத்தின் பிரதான ஹாலில் வைக்கப்பட்டுள்ளது.
இறந்து, 103 ஆண்டுகளான நிலையிலும், 'செங்களூர் ரங்கநாதன்' என்ற பெயர் தாங்கி, மங்காத புகழுடன், பார்வையாளர்களை மகிழ்விக்கிறது.
திருச்சூர் அருங்காட்சியகத்தில் நின்று கொண்டு இருக்கும் ரங்கநாதனை, அங்கு போகும் போது அவசியம் பாருங்கள்.
- எல். முருகராஜ்
