தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கும்பகோணம் செல்வோமா?

கும்பகோணம் செல்வோமா?

கும்பகோணம் செல்வோமா?


PUBLISHED ON : பிப் 09, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 09, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிப்.15 மாசி மகம்

'மாசி மகம் என்றாலே, கும்பகோணம் தான் நினைவுக்கு வரும். இங்குள்ள மகாமக குளத்தில், இந்நாளில், புனித நீராடுவது எல்லா பாவங்களையும் போக்கி விடும். பாவம் செய்தவர்களை, 'காசிக்குப் போய் கங்கையில் நீராடு' என்று பரிகாரம் சொல்வர். ஆனால், காசியில் பாவம் செய்தவன், கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடினால் தான், பாவம் தொலையும் என்கிறது கும்பகோணம் தல புராணம்.

ஒரு காலத்தில், வெள்ளத்தால் உலகம் அழிய இருந்தது. மீண்டும் அதை உருவாக்கும் போது, 'எங்கிருந்து படைப்புத் தொழிலை ஆரம்பிப்பது' என சிவனிடம் கேட்டார் பிரம்மா. அவரிடம், 'நீ இப்போதே பல புண்ணிய தலங்களில் உள்ள மணலை எடுத்து, அமுதத்தோடு சேர்த்து பிசைந்து, மாயக்கும்பம் ஒன்றை செய். அந்தக் கும்பத்தில் அமுதத்தை நிரப்பி, படைப்புக்கலன்களை அதனுள் வைத்து, நீரில் மிதக்க விடு...' என்றார் சிவன். பிரம்மாவும் அப்படியே செய்து, கும்பத்தை வெள்ளத்தில் மிதக்க விட்டார். அந்தக் குடம் ஒரு இடத்தில் ஒதுங்கியது.

சிவன் ஒரு பாணத்தை அதன் மீது எய்தார். இதனால், கும்பத்தின் மூக்கு (கழுத்து பகுதி) சிதைந்து, அதிலிருந்த அமுதம் நான்கு புறமும் பரவியது. அந்த அமுதம் வெண்மணலுடன் கலந்து, ஒரு லிங்கம் உருவானது. இந்த லிங்கமே, 'கும்பேஸ்வரர்' எனப் பெயர் பெற்றது. சிதறிய அமுதம் உள்ள குளமே, மகாமக குளம் எனப்படுகிறது. கும்பத்தின் மூக்கு சிதைந்ததால், 'குடமூக்கு' என்று பெயர் பெற்ற இவ்வூர், பிற்காலத்தில், 'கும்பகோணம்' ஆனது.

கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. நாரதர் கொடுத்த ஞானக்கனியைப் பெற உலகத்தைச் சுற்றி வரும் போட்டியை, சிவன் அறிவித்தார். விநாயகர், அம்மையப்பரை சுற்றி வந்து, அவர்களே உலகம் என அறிவித்தார். இதை மெய்ப்பிக்கும் வகையில், இக்கோவிலின் பிரகார அமைப்பு சுவாமியையும், அம்பாளையும் சேர்த்து சுற்றிவரும் வகையில் உள்ளது. பெரும்பாலான கோவில்களில் சிவனைத் தனியாகவும், அம்பாளைத் தனியாகவும் சுற்றி வரும் வகையில் தான் பிரகார அமைப்பு இருக்கும்.

அது மட்டுமல்ல, இங்கு மூலவருக்கு அபிஷேகம் கிடையாது. லிங்கம் கீழே பருத்தும், மேலே செல்ல செல்ல ஊசி வடிவிலும் காணப்படும். கோவிலுக்குள் பொற்றாமரை குளம் இருக்கிறது. மாசி மகத்திற்கு வருபவர்கள், மகாமக குளத்தில் நீராடிய பிறகு, இந்த குளத்து நீரை தலையில் தெளித்துக் கொள்வர். நவகன்னியரான நதிகள், மகாமகத்தன்று, மகாமக குளத்தில் நீராட வருவதாகவும், அங்கு நீராடிய பின், கோவிலுக்குள் உள்ள பொற்றாமரை குளத்தில் நீராடுவர் என்பதும் ஐதீகம்.

இங்குள்ள அம்மனுக்கு மங்களநாயகி என்று பெயர். சிவபெருமான் தன் திருமேனியில் பாதியை, பார்வதிக்கு வழங்கியதைப் போல், தன் மந்திர சக்திகளில், 36 ஆயிரம் கோடியை, பார்வதியான இத்தல அம்மனுக்கு வழங்கியுள்ளார். இதுதவிர, அம்பாளுக்கென்று தனியாக, 36ஆயிரம் கோடி மந்திர சக்தி உள்ளதால், 72ஆயிரம் கோடி மந்திர சக்திக்கு அதிபதியாக இவள் விளங்குகிறாள். 'மந்திரபீடேஸ்வரி' என்ற சிறப்பு பெயரும் இவளுக்கு உண்டு. எனவே, இவளிடம் மனப்பூர்வமாக எந்த வேண்டுதல் வைத்தாலும் பலிக்கும். அம்மனுக்குரிய, 51 சக்தி பீடங்களில் ஒன்று இது.

இத்தகைய சிறப்பு மிக்க கோவிலுக்கு, மாசிமகத்தன்று சென்று வாருங்கள். மகாமக குளத்தில் நீராடி, இனிமேல் நல்லதை மட்டுமே செய்வோம் என்ற உறுதியுடன் திரும்புங்கள்.

தி.செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us