தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/மவுனமே காதலாய்.....

மவுனமே காதலாய்.....

மவுனமே காதலாய்.....


PUBLISHED ON : பிப் 02, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 02, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

“அமெரிக்காலருந்து, சுஜா நம் வீட்டுக்கு இன்னக்கி வரப் போறா...” அம்மா ஆர்வமும், மகிழ்ச்சியுமாய் அறிவித்தபோது, நான் வியப்புடன் அவளை பார்த்தேன். 'எப்படி அம்மாவால் இந்த விஷயத்தை இயல்பாய் எடுத்துக் கொள்ள முடிகிறது!' என்று நினைத்து, அம்மாவிடம் மெல்ல பேச்சு கொடுத்தேன்...

“அம்மா... இந்த சுஜா தானே, அப்பாவ கல்யாணம் செய்துகிறதா இருந்தது?”

“ஆமாம்... அவளேதான். ஆனா... உம் பாட்டிக்கு, அதுல துளிக்கூட இஷ்டமில்ல. பிராமண குடும்பத்துல பிறந்துட்டு, கிறிஸ்டியன கல்யாணம் செய்துகிறதான்னு தடை போட்டுட்டா,” என்றாள்.

அப்பா, படித்துக் கொண்டிருந்த, நாளிதழில் இருந்து தலையை உயர்த்தி, ''கர்த்தரே, கர்த்தரே... எதையெல்லாம் குழந்தைகிட்ட பேசறதுன்னு வெவஸ்தை இல்லையா...” என்றார்.

“அப்பா, நான் ஒண்ணும் குழந்தையில்ல; பிளஸ் 2 படிக்கிறேன்,” என்று சொல்லி, 'அப்பா, முந்தா நாள் நம்ம வீட்டுக்கு வந்த என் ப்ரெண்ட்ஸ் கேட்கறாங்க... 'உன் அப்பா கிறிஸ்டியனா'ன்னு... எதுக்குப்பா அடிக்கடி, கர்த்தரை கூப்பிடறீங்க?”

“நல்லா கேளுடி... மாப்பிள்ளை கூட கேலி செய்றார்,” என்றாள் அம்மா, முகம் சுளித்து.

“என் பால்ய சிநேகிதன் அப்படி சொல்வான். எனக்கும் அப்படியே தொத்திகிடுச்சு; விட முடியல,” என்றவர், மீண்டும் பேப்பரில் மூழ்கி போனார்.

“அம்மா... நீ கதையச் சொல்லு. பாட்டி ஏன் கல்யாணத்துக்கு ஒப்புக்கலை... சுஜா ஆன்ட்டி பாக்க நல்லாயிருக்க மாட்டாங்களா?”

“அழகாத்தாண்டி இருப்பா. ஆனா, அவ வேற மதம். உங்க அப்பாவ விட, அவளுக்கு வசதி குறைவு.”

“அதச் சொல்லு முதல்ல. கலப்புத் திருமணத்துக்கு ஜாதி தடை இல்ல; பணம்தான். வசதி மட்டும் அதிகமா இருந்துட்டா போதும் ஜாதியெல்லாம் மாயமா மறைஞ்சுடும்.”

அம்மா நான் சொன்னதை காதில் போட்டுக் கொள்ளாமல், குரலில் கேலி இழையோட சொன்னாள்...

“முரளி எப்படி இருக்கிறார்ன்னு போனில் விசாரிக்கிறா சுஜா. அப்பாவ இப்ப பார்த்தால்...” கிசுகிசுப்பாய் கூறிய அம்மா, கண் சிமிட்டி சிரித்தாள்.

தங்களின் முப்பது வருட தாம்பத்ய அன்பின் மீதோ அல்லது தன்னுடைய அற்புத அழகின் மீதோ நம்பிக்கை வைக்காமல், அப்பாவின் மாறி விட்ட புறத்தோற்றத்தில் நம்பிக்கை வைத்துத்தான், சுஜா ஆன்ட்டி வீட்டுக்கு வருவதை அம்மா அனுமதித்து இருக்கிறாள் என்பது புரிந்தது.

அப்பா ஐந்தே முக்காலடி உயரத்தில், உயரத்துக்கேற்ற பருமனாய், திடகாத்திரமாய் இருப்பார். தேக்கு மர தேகம். ஆனால், சர்க்கரை வியாதி வந்த இந்த மூன்று வருட காலத்திற்குள், என்னமாய் உருமாறி விட்டார். இளைத்து, முகத்தில் சுருக்கம் விழுந்து, நடை தளர்ந்து போய் விட்டார்.

அப்பாவை பார்ப்பதற்காக அவருடைய முன்னாள், காதலி வருகிறாள். அவளை பார்ப்பதற்கு எனக்கும் ஆவலாக இருந்தது. எப்போதும் கண்டிப்பும், கறாருமாய் குடும்பத் தலைவர் என்ற கெத்தை விட்டுக் கொடுக்காமல், வீட்டில், ஒரு ரிங் மாஸ்டரைப் போல் சுற்றிக் கொண்டிருக்கும், அப்பாவை சீண்டத் தோன்றியது.

ஹால் சோபாவில் அமர்ந்து, பேப்பர் படித்துக் கொண்டிருந்த அப்பா அருகில் சென்று அமர்ந்தேன்.

“என்னப்பா, இன்னைக்கு நம்ம வீட்டுக்கு சுஜா ஆன்ட்டி வர்றாங்க போலிருக்கு,” என்றேன் மெல்ல.

அப்பா பேப்பரை தழைத்து, என்னைப் பார்த்து, “அதனால் என்ன,” என்றார் விட்டேற்றியாய்.

அம்மா காபி கோப்பைகளுடன் வந்து, எங்கள் எதிரில் அமர்ந்து கொண்டாள். அப்பாவின் கையில் ஒரு கோப்பையை கொடுத்தவள், தானும் ஒன்றை எடுத்துக் கொண்டாள்.

“சுஜா சொல்கிறா, பழச அவ மறக்கலையாம்,” என்றாள் அம்மா.

“அப்படின்னா...” என்று நான் கேட்க, அம்மாவை முறைத்தார் அப்பா...

“மைதிலி... சித்த நாழி சும்மாயிருக்க மாட்டே!”

அம்மா அவரை அசட்டை செய்து, எனக்கு பதில் சொன்னாள்...

“எங்களுக்கு திருமணம் ஆன புதுசுல, அவ அடிக்கடி நம் வீட்டுக்கு வருவா. பாட்டி காய்கறி வாங்க போய்டுவா. நாங்க ரெண்டு பேரும் ரெக்கார்ட் ப்ளேயரில், சினிமா பாட்டை போட்டு, டான்ஸ் ஆடுவோம். அதையெல்லாம் நினைவு வெச்சிட்டு பேசினா.”

“ஓ!” என்று நான் வியப்புடன் கூற, வீட்டின் காலிங் பெல் ஒலித்தது; நான் சென்று கதவை திறந்தேன். அக்கா, தன் குழந்தையை இடுப்பில் சுமந்தபடி நின்றிருந்தாள்.

நான் வியப்போடு, “வா அக்கா,” என்றபடி, என்னிடம் தாவிய குழந்தையை தூக்கிக் கொண்டே, ''மாமா வரலையா?” என்று கேட்டேன்.

“அவரு ரொம்ப மோசம்டி; சுஜா ஆன்ட்டி நம்ம வீட்டுக்கு வர்றதப் பத்தி நக்கலா பேசறார்,” என்றாள்.

“சரி, சரி வா. மாப்பிள்ளை எப்பவுமே அப்படித்தான்,” என்று, அவளை சமாதானப் படுத்தி, அழைத்துச் சென்றாள் அம்மா.

தன் அறையிலிருந்து, வேகமாய் வெளிவந்த அண்ணன் ரகு, அக்காவைப் பார்த்தும், பாராதது போல், யாரிடமும் பேசாமல், வராந்தாவிற்கு சென்று, செருப்பணிந்து, வெளியே கிளம்பினான். அம்மா அவன் பின்னே ஓடினாள்.

“டேய் ரகு... இன்னைக்காவது வீட்டுல சாப்பிடுடா. மதியம் உனக்கு பிடிச்ச புலாவ் செய்றேன்,” என்று கெஞ்சினாள். பதிலேதும் சொல்லாம, எங்க யாரையும் ஏறிட்டும் பார்க்காம, 'விருட்'டென்று கிளம்பி வெளியே போனான் ரகு.

“கர்த்தரே கர்த்தரே...'' என்று முனகிய அப்பா, குளிப்பதற்காக பாத்ரூமிற்குள் சென்றார்.

“ஏம்மா, என்னாச்சு ரகுவுக்கு... ஏன் இப்படி, 'உர்'ன்னு இருக்கான்?'' புரியாமல் கேட்டாள் அக்கா.

''திமிருடி,” என்று கூறிய அம்மா, “ஒரு வாரமா இப்படித்தான் இருக்கான்; பேசாம இருந்தா, என்னை தன் வழிக்கு கொண்டு வந்திடலாம்ன்னு இருக்கான். இவனுக்கே இவ்வளவு பிடிவாதம் இருந்தா, எனக்கு எவ்வளவு இருக்கும்,” என்று அங்கலாய்த்தாள் அம்மா.

“என்னம்மா சொல்றே?”

“அது ஒரு பெரிய கதைடி. உள்ளே வா சொல்றேன்,” என்று, அக்காவை சமையலறைக்கு கூட்டிச் சென்றாள் அம்மா.

சுஜா ஆன்ட்டியின் வருகைக்காக, அடுத்த இரண்டு மணி நேரத்தில், வீடு பரபரப்பாகியது. எப்போதும் நீண்டநேரம் குளிக்கும் அப்பா கூட, அன்று, சுறுசுறுப்பாய் குளித்து முடித்தார். நானும், அக்காவும் சேர்ந்து வீட்டை பளபளப்பாக்கினோம். சமையலறையிலிருந்து அம்மா செய்யும் வெஜிடபிள் புலாவ் வாசம் மூக்கை துளைத்து, பசியை கிளறியது. அந்த சூழல், எனக்கு வேடிக்கையாக இருந்த போதும், இதுவே தலை கீழாக, அதாவது, அம்மாவை மணமுடிக்க இருந்த வேறு ஒரு ஆண்பிள்ளை, இந்த வீட்டுக்கு விருந்தாளியா வர முடியுமா என்று தோன்றியது. அப்படியே வந்தாலும், இந்த அப்பா, அம்மாவைப் போல், இவ்வளவு ஈடுபாட்டுடன், அந்த ஆணை வரவேற்க முனைவாரா என்ற எண்ணம் மனதை நெருடியது.

அப்போது அப்பா, டைனிங் டேபிளை துடைத்து, மெருகேற்றிக் கொண்டிருந்த காட்சி, என் கண்ணில் பட்டது. தான் குடித்த காபி டம்ளரைக் கூட குனிந்து கீழே வைக்காமல், சமையலறையில் வேலையாய் இருக்கும் அம்மாவைக் கூப்பிட்டு, அவள் கையில் கொடுக்கும் அப்பா, டைனிங் டேபிளை சுத்தம் செய்தது வியப்பளித்தது. வெளிப்படையாக சுஜா ஆன்ட்டியின் வருகையைப் பற்றிக் கவலைப்படாதவர் போல், அலட்டலாய் தோற்றமளித்த அப்பா, உள்ளுக்குள் எங்களைப் போல் பரபரப்பாகவே இருக்கிறார் என்று புரிந்தது.

எங்க எல்லாரின் ஆவலுக்கும், பரபரப்புக்கும் முற்றுப்புள்ளி வைப்பது போல், ஒரு வழியாக பென்ஸ் காரில் வந்து இறங்கினாள் சுஜா ஆன்ட்டி. பால்கனியின் திரைச்சீலையை லேசாய் ஒதுக்கி, அவளைப் பார்த்த நான், அசந்து போனேன். நல்ல பளீர் நிறத்தில், உயரமாய், ஒல்லிக்கும், பருமனுக்கும் இடைப்பட்ட உடல்வாகில், மெல்லிய ஜரிகையிட்ட, இளரோஜா வண்ண பட்டுப்புடவையில், மிகவும் நேர்த்தியான அழகுடன் மிளிர்ந்தாள். அதிகார ஆளுமையும், நறுவிசும் இணைந்த, அவள் தோற்றம் பிரமிப்பூட்டியது. தலைமுடிக்கு இயற்கையான ஹென்னா போட்டிருப்பாள் போலும்... காப்பர் நிற ஷேடில் மிளிர்ந்தது, அவள் நீண்ட தலைமுடி.

அம்மாவும் அழகுதான்; உண்மையில், சுஜா ஆன்ட்டியை விட, அம்மாதான் அழகாக இருந்தாள். ஆனாலும், இப்படி ஒரு மாடலைப் போல், மடிப்புக் கலையாத புடவையும், தேர்ந்தெடுத்த ஆடை அணிகலன்களும் அணிந்து, நிமிர்வாய் அம்மா நடந்து, நான் பார்த்தில்லை.

''வாங்க சுஜா அக்கா... பார்த்து எவ்வளவு வருஷமாச்சு...'' சுஜா ஆன்ட்டியின் கைப்பற்றி, வீட்டினுள் அழைத்து வந்தாள், அம்மா.

''ஹலோ முரளி, எப்படி இருக்கீங்க?'' அப்பாவை விசாரித்தாள் சுஜா ஆன்ட்டி.

அப்பா கூச்சத்துடன் சிரித்து, ''ஐயம் பைன் நீ... நீங்க எப்படி இருக்கீங்க... உங்க கணவர் வரலியா?''

''நான் நல்லா இருக்கேன் முரளி. இந்த திடீர் மரியாதை எல்லாம் வேண்டாமே,'' என்று புன்னகைத்தவள், ''என் ஹஸ்பெண்ட் நியுஜெர்சியில் மோஸ்ட் வாண்டட் கார்டியாலஜி டாக்டர். சார் ரொம்ப பிசி,'' என்றாள்.

எங்களை அழைத்தாள் அம்மா. நாங்கள் இருவரும், அவளைப் பார்த்து புன்னகைத்தோம்.

''ஹலோ, ஆன்ட்டி... இட்ஸ் எ பிளஷர் டு மீட் யூ,'' என்று, அவள் கைப்பற்றி குலுக்கினேன்.

''ஹாய், நைஸ்டு மீட் யூ கேர்ள்ஸ்,'' என்று சந்தோஷமாய் கை குலுக்கியவள், அக்கறையுடன் எங்கள் இருவர் பற்றிய விவரம் கேட்டாள். தூங்கிக் கொண்டிருந்த அக்கா பையனை பார்த்து, ''சோ க்யுட்,'' என்றாள். ரகுவைப் பற்றி விசாரித்தாள். அதன் பின் அப்பா, அம்மா, சுஜா ஆன்ட்டி மூவரும், தங்களுக்கு பொதுவாக, தெரிந்தவர்கள் மற்றும் உறவினர்களைப் பற்றி பேசினர். நானும், அக்காவும் அறையினுள் இருந்தாலும், எங்கள் காதுகள் ஹாலிலேயே இருந்தன.

அம்மா சாப்பிட அழைத்தாள். அனைவரும் டைனிங் டேபிளை சுற்றி அமர, அம்மா வாழையிலையில் உணவு பரிமாறினாள்.

''மைதிலி... நீயும் உட்கார். எல்லாரும் அவரவருக்கு தேவையானதை எடுத்து சாப்பிட்டுக்கலாம்,'' என்று அம்மாவின் கைப்பற்றி, தன் அருகில் அமர்த்திக் கொண்டாள் சுஜா ஆன்ட்டி.

''நம்ம ஊர்ல தான் இன்னும் இந்த வழக்கம். இருக்கு. அமெரிக்காவுல எல்லாம் ஆணும், பெண்ணும் சமம்.''

''உங்க பெரிய பையனுக்கு கல்யாணமாகி ஐந்து வருஷமாகியும் குழந்தை இல்லையாமே!'' அம்மா கேட்டாள்.

சுஜா ஆன்ட்டி மெல்ல புன்னகைத்து, ''மைதிலி, நீ என்னை கேட்டது போல, நான் இதுவரை என் புள்ளையையோ, மருமகளையையோ இது பத்தி கேட்டது கெடையாது. அப்படி பட்டுன்னு யாரையும் கேட்டுடவும் முடியாது. அதனால, எங்களிடையே பாசம் இல்லன்னு அர்த்தமில்ல. அவரவர் வாழ்க்கை, அவரவர் கையில. யாரும் எல்லை தாண்டி அடுத்தவர் விவகாரத்தில் தலையிடுறது கெடையாது,'' என்றாள்.

அம்மா, என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், சாப்பிட்டாள்.

''முரளி... நீங்க காலி பிளவர் பக்கோடா வச்சுக்கலை... மைதிலி அருமையா செஞ்சிருக்கா,'' என்று அப்பாவின் பக்கம், பக்கோடா பாத்திரத்தை தள்ளினாள், சுஜா ஆன்ட்டி.

அம்மா, 'களுக்'கென்று சிரித்து. ''சுஜா அக்கா, அவருக்கு கீழ்த்தாடை பல் பூராவும் கொட்டி போச்சு. அவரால் எதயும் கடிச்சு சாப்பிட முடியாது.''

அப்பா தர்மசங்கடமாய் நெளிய, எனக்கு அம்மாவின் மேல் கோபம் வந்தது.

''இதுல சிரிக்க என்ன இருக்கு மைதிலி... நாம கடிச்சு உண்ணும் உணவுகளை செரிமானப்படுத்துற சக்தி, நம்ம உடல் உள்ளுறுப்புகளுக்கு குறைந்து விட்டதை உணர்த்தி, குறிப்பிட்ட வயசுக்கு பிறகு, திரவ உணவு தான் அதிகம் சாப்பிடணும்ன்னு வலியுறுத்தும், உடம்போட சங்கேத மொழிதான், பற்கள் கொட்டுறது,'' என்று சொன்ன சுஜா ஆன்ட்டியை, எனக்கு பிடித்துப் போனது. அப்போது, அப்பாவை அவள் புரிதலோடு, பரிவுடன் பார்த்த பார்வை, என் மனதிற்குள், ப்ரேமிட்டு அமர்ந்து கொண்டது.

சாப்பிட்டு முடித்து, அனைவரும் ஹாலில் அமர்ந்தோம்.

''முரளி... நீங்க நல்லா பாடுவீங்களே... ஒரு பாட்டு பாடுங்களேன்,'' என்றாள் சுஜா ஆன்ட்டி.

''அதெல்லாம் விட்டு ரொம்ப நாள் ஆயிடுத்து,'' என்றார் அப்பா விட்டேற்றியாய்.

''கதை, கவிதையெல்லாம் எழுதுவீங்களே... அப்போ நீங்கள், 'ஜனனம்' என்ற பெயரில, கையெழுத்து பத்திரிகை நடத்துனீங்க நினைவு இருக்கா!''

அப்பாவின் கண்கள் பளிச்சிட்டன. ''மெக்கானிக்கல் இன்ஜினியர் வேலையில, என் இலக்கிய அறிவு செத்து போயிட்டது சுஜா,'' என்ற அப்பாவின் குரலில், கையாலாகாத சோகமும், ஆதங்கமும் கொட்டிக் கிடந்தது.

''அப்படி சொல்லாதீங்க முரளி. உங்க இலக்கிய அறிவ வளர்க்க, நீங்க முயற்சிக்கலைன்னுதான் சொல்லணும். நான் இன்னும் கூட உங்க, 'ஜனனம்' கையெழுத்துப் பிரதி எல்லாம் வச்சிருக்கேன் தெரியுமா!''

அப்பாவின் கண்களில், ஒளி மிளிர்ந்தது... ''ஒரு காப்பி எனக்கு தர முடியுமா?''

''நிச்சயமா,'' என்று கூறி சிரித்த சுஜா ஆன்ட்டி, ''ஆனா அதுக்கு, இப்ப நீங்க ஒரு பாட்டு பாடணும்,'' என்று கண்டிஷன் போட்டாள்.

அந்த உரையாடலின் பின்னணியில், நாங்கள் மூவரும் அமிழ்ந்து போக, அவர்கள் இருவர் மட்டுமே பிரதானமாய் இருந்தனர்.

அப்பா தயங்கி, ''இப்போ இருக்கிற சினிமா பாட்டு எதுவும் எனக்குத் தெரியாதே,'' என்றார்.

''இப்போ இருக்கிற பாட்ட யார் கேட்டா... நீங்க எப்பவுமே, 'கணீர்'ன்னு' பாடுவீங்களே, அந்த, 'விண்ணோடும் முகிலோடும்...' பாட்டக் கேட்கணும் போல இருக்கு.''

அப்பா லேசாய் தொண்டையை கனைத்தபடி, பாட ஆரம்பித்தார்.

அம்மா விழி அகல, அப்பாவையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்பாவின் அற்புதமான குரல், உணர்ச்சி பெருக்கில் கமறியது. சட்டென திரும்பிய என் கூரிய கண்களில், அம்மாவின் அகன்ற அழகிய விழிகளில் துளிர்த்த கண்ணீர், சோக கவிதையாய் மனதை கனமாக்கியது. சுஜா ஆன்ட்டி நளினமாய், தன் சுண்டு விரலால், தன் விழி நீரை சுண்டி எடுத்துக் கொண்டிருந்தாள்.

நானும், அக்காவும் கைதட்டி, 'அப்பா க்ரேட் பா... ரியலி சூப்பர்ப்!' என்றோம்.

எங்கள் கைத்தட்டல் ஓசையை மீறி, அக்கா பையன் தூங்கிக் கொண்டிருந்த அறையிலிருந்து, 'தொப்' என்ற ஒசை கேட்க, எல்லாரும் அறையை நோக்கி ஓடினோம். குழந்தை, தொட்டிலில் இருந்து கீழே விழுந்து, அழுது கொண்டிருந்தான். அக்கா, பாய்ந்து சென்று, அவனைத் தூக்கிக் கொண்டாள்.

''கர்த்தரே... என்ன ஆச்சு... குழந்தைக்கு ஒண்ணும் காயமில்லையே...'' என்று அரற்றியபடி, அக்காவின் அருகில் சென்று, வருணை சோதித்தாள் சுஜா ஆன்ட்டி.

அம்மா அதிர்ச்சியில், வருணைக் கூட கவனிக்காமல் அப்பாவை ஏறிட்டாள்; அப்பா தலை குனிந்தார். அதற்குப் பின் அம்மாவின், 'வளவளா' பேச்சு நின்று போனதை, நான் கவனித்தேன்.

சுஜா ஆன்ட்டியும் உடனே கிளம்பி விட்டாள். எங்கள் அனைவரையும், அமெரிக்காவில் உள்ள தன் வீட்டிற்கு வரும்படி, அன்புடன் அழைப்பு விடுத்து, சென்றாள்.

அதன்பின் வீடு அமைதியானது; அம்மாவும் - அப்பாவும் மவுனமாய் சோபாவில் அமர, நானும் அவர்கள் எதிரே அமர்ந்து கொண்டேன். அவரவர் சிந்தனையில் மூழ்கியிருந்தோம். முகத்தில், ஒருவார தாடியுடன், தளர்ந்த நடையில் வீட்டினுள் நுழைந்த ரகு, யாருடனும் பேசாது, தன் அறையை நோக்கி நடந்தான்.

அம்மா, திடீரென்று அவனை அதட்டி, ''ரகு, நில்லுடா,'' என்றாள்; நின்றான். அம்மா தொடர்ந்து, ''யார் அந்த பெண்? உன் காதலி, அவள் பெயர் கூட ஆங்... சுஜிதா பேகம். அவளையே... நீ கல்யாணம் செய்துக்க; எங்களுக்கு பரிபூர்ண சம்மதம்,'' என்றாள்.

திகைத்து திரும்பிய ரகு, கண்ணில் நீருடன் அம்மாவை அணைத்து, ''தேங்ஸ்மா...'' என்றான். அம்மாவின் கையை இறுகப் பற்றிக் கொண்டார் அப்பா. அம்மா, அவரைப் பார்த்து புன்னகைத்தாள். இருவர் கண்களும், ஆனந்த கண்ணீரால் நிரம்பி இருந்தன. அவர்களிடையே நிகழ்ந்த, அந்த மவுன பரிபாஷையை கண்டு, என் கண்களும் நிறைந்தன.

பொற்கொடி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us