PUBLISHED ON : ஆக 11, 2019

கோவில்களில் சூரிய, சந்திரர் பெயரளவுக்கு இருப்பர். அனேகமானோர், அந்த சன்னிதி பக்கம் கூட திரும்புவதில்லை. ஆனால், கண் கண்ட தெய்வங்களான இவர்களுக்கு, விருதுநகர் மாவட்டம், சாத்துார் விஸ்வநாதர் கோவிலில், தினமும், காலை மற்றும் மாலையில் பூஜை நடக்கிறது.
முன்பு, இந்த இடத்தில், ஒரு விநாயகர் கோவில் இருந்தது. பிற்காலத்தில், இங்கு, விஸ்வநாதர், விசாலாட்சி மற்றும் பத்திர காளியம்மனுக்கு, சிலை வடித்து, கோவில் எழுப்பினர், பக்தர்கள்.
ராஜகோபுரத்திற்கு இருபுறமும் சூரியன், சந்திரன் இருவரும், ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் காட்சி தரும்படி உருவாக்கினர்; உலகை இவர்களே இயக்குகின்றனர். இவர்கள் இல்லாவிட்டால், உலகில் வெளிச்சம் இருக்காது. காலநிலையையும் இவர்களே நிர்ணயிக்கின்றனர்.
இதையடுத்து, காலையில், சூரியனுக்கும், மாலையில், சந்திரனுக்கும் பூஜை நடத்தும் வழக்கத்தை, இக்கோவிலில் உருவாக்கினர்.
உலகை சமப்படுத்த, தென் திசைக்கு வந்த, அகத்தியருக்கு, இங்கு, சன்னிதி உள்ளது. பவுர்ணமி அன்று, மாலையில், இவருக்கு விசேஷ பூஜை உண்டு.
தை கடைசி வெள்ளி, ராகு காலத்தில், காலை, 10:30 -- 12:00 மணிக்கு, இங்குள்ள துர்க்கைக்கு, சுமங்கலி பூஜை நடக்கும். அன்று, பெண்களுக்கு, மஞ்சள் கயிறு, மஞ்சள் கிழங்கு, வளையல் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை பிரசாதமாக தருவர்.
சிவன் சன்னிதிக்கு இடப்புறம், பத்திரகாளியம்மனுக்கு சன்னிதி உள்ளது. ஆஞ்சநேயரும் அருள்பாலிக்கிறார்.
இங்கு, சிறிய நாகர் சிலை ஒன்றுள்ளது. ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டு, திருமணம் தடைபடுவோர், கோவில் முகப்பில் உள்ள நாகருக்கு, பாலபிஷேகம் செய்கின்றனர்.
சரஸ்வதி பூஜையன்று, இங்குள்ள, சரஸ்வதி சன்னிதியில், சகலகலாவல்லிமாலை பாராயணத்துடன் விசேஷ பூஜையும், மாணவர்களின் கல்வி சிறக்க, ஆண்டுக்கு ஒரு முறை, ஸ்ரீவித்யா ஹோமமும் நடக்கும்.
மார்கழி திருவாதிரை விழாவின்போது, விஸ்வநாதர் சன்னிதி நேரே, நடராஜரையும், அவருக்கு எதிரே, ஒரு கண்ணாடியையும் வைத்து விடுவர். அன்று காலையில், சிவன், நடராஜர் மற்றும் அவர் முன் உள்ள கண்ணாடி பிம்பத்திற்கு ஒரே சமயத்தில் தீபாராதனை நடக்கும்.
இத்தலத்தின் விருட்சம், ருத்ராட்சம்.
மதுரை - திருநெல்வேலி சாலையில், 73 கி.மீ., துாரத்திலுள்ள சாத்துார் பஸ் நிறுத்தம் அருகில், கோவில் உள்ளது.
தி. செல்லப்பா
