PUBLISHED ON : ஜூலை 08, 2018

படத்தில் இருக்கும் இக்குழந்தையை, பணத்துக்காக, அதன் தாயிடமிருந்து ஐந்து மாதங்கள் பிரித்து வைத்த கொடுமை காபான் நாட்டில் நடந்துள்ளது.
மத்திய ஆப்ரிக்காவில் உள்ள நாடு, காபான். இந்நாட்டில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், சோனியா ஓகோம் என்ற பெண்ணுக்கு, குழந்தை பிறந்தது. குழந்தை பலவீனமாக இருந்ததால், 35 நாட்கள் இன்குபேட்டரில் வைத்திருந்து, பின், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்ட போது, மருத்துவ கட்டணமாக, 2.5 லட்சம் ரூபாய் கட்டச் சொல்லியுள்ளனர். அவ்வளவு பணம் சோனியாவிடம் இல்லை. அதனால், பணத்தை கட்டி, குழந்தையை மீட்டுக் கொள்ளும்படி கூறிவிட்டது, மருத்துவமனை நிர்வாகம்.
இச்செய்தி, சமூக வலைதளங்களில் பரவியது; இரக்கம் உள்ளவர்கள் பணத்தை திரட்டி, அந்த தொகை மருத்துவமனையில் கட்டப்பட்ட பின்னர், குழந்தையை தாயிடம் ஒப்படைத்துள்ளனர்.
ஐந்து மாதங்களாக தாயிடமிருந்து குழந்தையை பிரித்து வைத்த குற்றத்திற்காக, மருத்துவமனை இயக்குனர் கைது செய்யப்பட்டார். ஆனால், சோனியா ஓகோம், கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அவரை போலீசார் விடுவித்தனர்.
- ஜோல்னாபையன்.
