PUBLISHED ON : ஜன 31, 2016

ஒரு படத்தில், நடிகர் என்னத்த கன்னையா, வடிவேலுவிடம், 'இந்தக் கார் வரும்; ஆனா, வராது...' என்று கூறுவார். இன்னொரு படத்தில், நடிகர் ரமேஷ் கண்ணா, 'இது கட்டில் இல்லை; கட்டில் மாதிரி...' என்பார்.
சில உறவுகள், இப்படித்தான். இவங்க ரெண்டு பேரும் தொழில் பங்குதாரர்; ஆனால், ஒண்ணும் பயனில்லை. இவரு முதலாளி, அவரு ஊழியர் தான்; ஆனாலும் புரிந்துணர்வு இல்லை. அப்பா புள்ளை; ஆனால், எலியும் பூனையும். இவங்க, கணவன் மனைவி தான்; ஆனா, பெயரளவிற்கு! இவங்க ரெண்டு பேரும் சகலைங்க தான்; ஆனா, எப்ப சண்டை வெடிக்குமோ தெரியாது. இவங்க வீட்டுக்காரரும், குடித்தனக்காரரும் தான்; ஆனா, எப்பப் பிச்சுக்குமோ தெரியாது!
இன்னும் அடுக்கவா... போதும் என்பீர்கள்!
இந்த ஏனோதானோ உறவுகளைத் தான், புளியம் பழ உறவுகள் என்று வகைப்படுத்த விரும்புகிறேன். புளியம் பழம், ஓட்டிற்குள் பாதுகாப்புடன் இருக்கும் தான். ஆனால், இதற்கும், பழத்திற்கும் தொடர்பு இன்றி, 'கொடக் கொடக்' என்று தனியே ஆடும்.
இப்படித்தான், நாம் இப்போது கடந்து வந்த உறவுகளுள் பலவும், ஏனோதானோ என்று இருக்கின்றன.
இப்போது கூட, ஒன்றும் கெட்டு விடவில்லை. இப்படி சிதிலமடைந்துவிட்ட உறவுகளை, சரி செய்து விடலாம்.
'அந்தக் கணவன் மனைவிக்குள் கல்யாணம் ஆனதிலேர்ந்தே ஒரே சண்டை; எப்பப் பார்த்தாலும் அடிச்சுக்குவாங்க. அதுவும் நாலுபேர் முன்னிலையில், வெக்கமில்லாம வாக்குவாதம் செய்வாங்க...'
'அடடே... இப்படி ஒற்றுமையே இல்லாம இருந்தா எப்படி... புள்ளைங்க இல்லையோ?'
'நீங்க வேற... நான்கு புள்ளைங்க! அதுபாடு அது; இதுபாடு இது!'
கேட்ட நண்பர், வியந்து போனார். இப்படியே காலத்தை ஓட்டி, பேரன் பேத்திகள் பெற்று விட்டவர்களும் உண்டு. புளியம்பழ உறவுகளை, பலாப்பழ உறவுகளாக மாற்ற முடியும்; ஆக்க முடியும்.
பலாப்பழத்திலிருந்து, சுளையைப் பிரிக்க படாதபாடு பட வேண்டும். கத்தியும், கையில் தடவ எண்ணெயும், உள்ளே உள்ள நார்களையும், சுளைகளையும் பிரித்தெடுக்க பொறுமையும் வேண்டும். புளியம்பழம் அப்படி அல்ல, தரையில் வீசினாலே போதும். பழமும், ஓடும் சர்வ சாதாரணமாகப் பிரிந்து விடும்.
உறவோ, நட்போ, தொழிலோ சக மனிதர்களுடன் அனுசரித்துப் போவது அரிய கலை.
பேய்க்கு வாழ்க்கைப்பட்டால், புளிய மரமோ, வேப்பமரமோ தான் கதி.
'இந்தப் பிசாசை என் தலையில் கட்டிட்டாங்க...' என்று அவன் புகார் கூற, 'என்னை, எங்கப்பா அம்மா இந்தப் பாழுங்கிணத்தில தள்ளிட்டாங்க...' என்று இவள் புலம்ப, இந்தப் பிசாசுடன், பாழுங்கிணத்துல காலத்தை ஓட்டுவதைத் தவிர, இருவருக்கும் வேறு வழியில்லை. நம் கலாசாரமும், பண்பாட்டு நெறிகளும் அப்படிப்பட்டவை!
எனவே, இருவருமே சற்று முன்வந்து, தங்கள் அணுகுமுறைகளை மாற்றிக் கொண்டால், பாழுங்கிணறு பசுஞ்சோலையாக மாறும்; பிசாசும், தேவதையாகிவிட வாய்ப்பு உண்டு.
மனிதர்களின் குணங்களை அடுக்குகளாகக் கருதுங்கள். ஒவ்வொரு கெட்டவனுக்குள்ளும், ஒரு நல்லவன் இருக்கிறான். அசுரர்கள் வேறு, தேவர்கள் வேறு தான். ஆனால், மனிதன் மட்டும் அசுர குணமும், தேவ குணமும் கலந்தவனாக இருக்கிறான்.
அந்தாளுடன் என்னால் சமாதானமாக போக முடியவில்லை என்று, எவரேனும் முடிவிற்கு வந்து விட்டால், நிச்சயம் தவறான முடிவு; அவசர முடிவு. காரணம், நாம், அவரின் இன்னோர் அடுக்கைத் தொடர தவறி விட்டோம். மின்சாரத்திற்கு பாசிட்டிவ், நியூட்ரல் என இரு முனைகள் உண்டு. நியூட்ரலைத் தொட்டால் மின்சாரம் தாக்குவது இல்லை; பாசிட்டிவைத் தொட்டால் தூக்கிப் போடுகிறது.
நாம் புகார் பட்டியல் வாசிக்கும் எந்த உறவுக்குள்ளும், ஒரு நல்ல மனம் இருக்கிறது. அவற்றைத் தொடத் தவறி விட்டோம்.
அன்பு, பொறுமை, விட்டுக் கொடுத்தல், பெருந்தன்மை இந்த நான்கு தூண்களைக் கொண்டு, உறவு மாளிகையை நிச்சயம் புதிதாக எழுப்ப முடியும். இதற்குக் குறுக்கே நிற்கும் எண்ணம் ஒன்று தான்: அது, 'நான் ஏன் முதலில் முன்வர வேண்டும்; எதிராளி ஆரம்பித்து வைக்கட்டும்...' என்கிற மனத் தடையைத் தூக்கி எறிந்தால் போதும், நம்ப முடியாதவை நடக்கும்!
லேனா தமிழ்வாணன்
