PUBLISHED ON : ஜன 31, 2016

எம்.பானுசந்தர், கடலூர்: எதை நினைத்தால் உங்களுக்கு வருத்தம் ஏற்படுகிறது?
அரசியல்வாதிகள் வருவர், போவர்; ஆனால், அரசை நிரந்தரமாக நடத்தி செல்வது ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள். இவர்களிடமும் லஞ்சம் மலிந்து விட்டதை எண்ணும் போது, மனம் வலிக்கிறது. 'நல்லவர் இவர்...' என்று நம்பிக்கை வைத்திருந்த பல அதிகாரிகளின் இன்னொரு முகம் வெளிப்படும் போது, அதிர்ச்சியில் உறைந்து போகிறேன்!
மொ.கருப்பையா, விருதுநகர்: வயதான பெற்றோர், தம் பிள்ளைகளிடம் செலவுக்கு பணம் எதிர்பார்ப்பது சரியா, தவறா?
யோவ் அல்பம்... இப்படி அல்பமா கேள்வி கேட்பதே தப்பப்பா... ரத்தத்தைச் சிந்தி, உம்மை ஆளாக்கியதற்கு கணக்கே பார்க்காமல் கொடுக்க வேண்டுமப்பா!
ஹெச்.தாமரைச்செல்வன், பொன்னேரி: தன்னை விட படித்த மனைவியுடன் வாழ்க்கை நடத்துவது முள் மீது நடப்பது போன்றுள்ளதே... ஏன்?
'இன்பீரியாரிட்டி காம்ப் ளக்ஸ்' எனும் தாழ்வு மனப்பான்மையில் சிக்கி விடுவதால் தான், இந்த உணர்வு வந்து விடுகிறது. தம்மைவிட, எல்லாவற்றிலும் மனைவி ஒரு படி தாழ்ந்தே இருக்க வேண்டும் என்ற குணம் கொண்டவன் ஆண்... பொண்டாட்டி அதிகம் படித்துள்ளதை எப்படி தாங்கிக் கொள்வான்!
பி.ஜாகிர் உசைன், மந்தைவெளி: எம்.ஏ., படித்த என் நண்பருக்கு, பள்ளி இறுதி வரை படித்தவரின் கீழ் வேலை செய்ய பிடிக்கவில்லை. அவரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
எம்.ஏ,,க்கு வேலை கொடுக்கும் அளவுக்கு பள்ளி இறுதி வரை படித்தவரின் நிலை இருக்கிற தென்றால், அவரின் பின், எவ்வளவு உழைப்பும், அனு பவமும் இருக்கிறது என்பதை கொஞ்சமேனும் யோசிக்க வேண்டாமா? கவுரவம் பார்த்தே அழிந்து போகப் போகிறார் உங்கள் நண்பர்!
க.ஜான்டேவிட், ஆவடி: பாடங்களை மனப்பாடம் செய்யும் போது கவனம் சிதறாமல் இருக்க வழி சொல்லுங்களேன்?
அடிப்படையே தவறு; பாடங் களைப் புரிந்து கொள்ள பழக வேண்டும். மனப்பாடம் செய்தால், பரிட்சையுடன் மறந்து விடும்; வாழ்க்கைக்கு பயன்படாது!
என்.பாலமுருகன், அனுப்பானடி: செழுமையாக வாழ ஆசைப் படுகிறேன். நான் என்ன செய்ய வேண்டும். என்னிடம் என்ன குணம் இருக்க வேண்டும்?
செழுமைக்கு மூல காரணம், செயல் திறன்! அதனால், செயல்திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். செழுமைக்கு முதல் எதிரி சோம்பேறித்தனம்; அது இருந்தால் விரட்டி அடியுங்கள்!
டி.எம்.கார்த்திகேயன், குமுளி: ஒரு மனிதன், வாழ்க்கையில் எவ்வளவு காலம் வரை குடும்பக் கவலைகளை, பொறுப்புகளை தன் தோளில் சுமக்கலாம்?
அதிகபட்சம், 60 வயது வரை! 30வயதிலேயே இதற்கு அவர் திட்டமிட வேண்டும். 55களில் மெதுவாக தளைகளை விட்டு விலக வேண்டும். இப்படி திட்டமிடாத பலர், 70 80களிலும் கூட அவதியுற்று நிம்மதி இல்லாமல் தவிக்கின்றனர்!
என்.எஸ்.இளங்குமரன், திருப்பூர்: மொபைல் போன் போட்டி போட்டு மலிவு கட்டணத்தில் சேவை செய்கின்றனவே... இதனால், லேண்ட் லைன் இணைப்புகளுக்கு பாதிப்பு வருமா?
வந்து விட்டது. இதே போன்று அமெரிக்காவில் மொபைல் போன் கட்டணங்களும், இன்டர்நெட் தொடர்புகளும் மலிந்ததால், ஏராளமானோர் லேண்ட் லைன் இணைப்பைத் துண்டித்து விட்டனர். அதே நிலை இங்கும் வந்து விட்டது.
