PUBLISHED ON : ஏப் 09, 2017

கோடையில், சிறிது நேரம் வெயிலில் சென்று வந்தால் கூட, சருமம் உடனே கருமையடையும். அதனால், நேரடியாக, 'சூரிய ஒளி' நம் மீது படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வெளியே செல்லும் போது, குடை பிடித்து, தொப்பி மற்றும் குளிர் கண்ணாடி அணிவது அவசியம். வெளியே செல்லும் போது, 'சன் ஸ்கிரீன் லோஷன்' பூசவும்.
* வெயில் காலத்தில், 'அல்ட்ரா வயலட்' அதிகமாக வெளிபடுவதன் காரணமாக, முடி நன்கு வளரும். அதேசமயம், வெயிலின் பாதிப்பால், முடியின் நுனி வெடிக்கும். இதனால், முடி வளர்ச்சி தடைபடும். இதைத் தவிர்க்க, தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் சூடுபடுத்தி, தலையில் பூசி மசாஜ் செய்ய வேண்டும்.
* வேர்க்குரு பிரச்னை உள்ளவர்கள், நுங்கு தண்ணீரை, உடலில் தேய்த்து, ஊற வைத்து, பின் குளித்தால், நல்ல பலன் கிடைக்கும்.
* வெயில் காலத்தில், சிலருக்கு தலையில் அரிப்பெடுக்கும். அப்பிரச்னை உடையவர்கள், எண்ணெயை சிறிது சூடாக்கி, தலைக்கு, மசாஜ் செய்து, பின், சிறிது வேப்பிலையுடன், மூன்று சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து, தலையில் ஊற வைத்து, 10 நிமிடங்கள் கழித்து, தலைக்கு குளித்தால், அரிப்பு நிற்பதுடன், முடி மென்மையாக இருக்கும்.
* வெயில் காரணமாக, உடலில் அரிப் பெடுத்தால், இரவில், அரை பக்கெட் தண்ணீரில், துளசிப்பொடி, வேப்பிலை மற்றும் மஞ்சள் பொடி கலந்து, காலையில், சிறிது தண்ணீர் சேர்த்து குளிக்கவும். குளிக்கும் முன், தேங்காய் எண்ணெய் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து குளிக்கவும்.
வெயிலால் முகம் கறுப்பாவதை தடுக்க, கிர்ணி மற்றும் தர்பூசணிப்பழத்தின் சாறை, முகத்தில் பூசி கழுவலாம்.
கற்றாழை ஜூஸ் எடுத்து, உடலில் மசாஜ் செய்தால், குளிர்ச்சியாக இருக்கும்.
* வெயில் காலத்தில், வியர்வையால் பொடுகு தொல்லை ஏற்படும். அதற்கு, வாரம் மூன்று முறை, ஆயில் மசாஜ் செய்து, தலைக்கு குளிக்க வேண்டும். விளக்கெண்ணெயும், ஆலிவ் எண்ணெயும் ஒன்றுக்கு இரண்டு என்ற விகிதத்தில் கலந்து, சூடு செய்து, மசாஜ் செய்யலாம்.
* வியர்வை நாற்றத்தை தவிர்க்க, கைப்பிடி அளவு கல் உப்பை, தண்ணீரில் போட்டு குளிக்கலாம்.
* வெயில் காலத்தில், கடலை மாவிற்கு பதில், பயித்த மாவு போட்டு குளியுங்கள்.
* தவிர்க்க முடியாதபடி, சில நேரங்களில் ஷூ அணிய நேர்ந்தால், கால்களுக்கான, 'புட் பவுடர்' போட்டு, பின் சாக்ஸ் போட்டு, ஷூ அணிந்தால், அவ்வளவாக வியர்க்காது.
* பருத் தொல்லையால் அவதிப்படுவோர், வேப்பிலைச்சாறு எடுத்து, 10 நிமிடத்துக்கு ஒருமுறை என்று, மூன்று முறை தினமும் ஒத்தடம் கொடுத்தால், பரு பிரச்னையிலிருந்து விடுதலை கிடைக்கும்.
* வெயில் காலத்தில், நம் உடம்பில் இருக்கும் உப்பு, வியர்வையின் காரணமாக, அதிகமாக வெளியேறும். அதனால், மாதுளை, ஆரஞ்சு மற்றும் எலுமிச்சம் ஜூஸ் நிறைய குடியுங்கள். மேலும், கூழ் மற்றும் வெங்காயம் நிறைய எடுத்துக் கொள்ளுங்கள்.
* லைட் கலர் காட்டன் உடைகள் மற்றும் பருத்தியால் ஆன உள்ளாடைகளையே அணியுங்கள், அத்துடன், இறுக்கமாக போடுவதை தவிருங்கள்.
