தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நினைவுகளின் இனிமைகள்!

நினைவுகளின் இனிமைகள்!

நினைவுகளின் இனிமைகள்!


PUBLISHED ON : மே 23, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 23, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியாவுக்கு எடுத்துப் போக வாங்கிய பொருட்களை சரி பார்த்து, பெட்டியில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள், நர்மதா.

''நர்மதா, இந்தியா போக தயாராகிட்டே போலிருக்கு,'' என, கேட்டபடி வந்தான், கணவன், சங்கர்.

''ஆமாம்... மூணு வருஷம் கழிச்சு பெத்தவங்களை பார்க்கப் போறேன். மனசு முழுக்க பரவசமா இருக்குங்க,'' என்றாள்.

கல்யாணம் முடிந்து ஒரு மாதத்தில், யு.எஸ்., வந்தவள், இப்போது தான் இந்தியா கிளம்புகிறாள். மனதில், அம்மாவின் நினைவு ஆக்கிரமித்தது.

'நர்மதா... உனக்குப் பிடிக்கும்ன்னு பால்கோவா செய்தேன். சூடா இருக்கு, சாப்பிட்டுப் பாரு...'

புடவையை எடுத்துச் செருகி, வியர்வை வழியும் முகத்தோடு, அவளருகில் அமர்ந்து, சூடான பால்கோவாவை எடுத்து, சூடு ஆற, வாயால் ஊதி, 'வாயைத் திற நர்மதா...' என, ஊட்டுவாள்.

நாவில் கரையும் சுவையில் மயங்கி, அம்மாவின் கழுத்தைக் கட்டிப் பிடித்து, கன்னத்தில் முத்தமிட்டு, தலை சாய்வாள்.

அடுப்படியில் இருந்து வந்ததால், லேசான ஈரத்துடன் இருக்கும் புடவையிலிருந்து வீசும் ஒருவித நறுமணத்தை அனுபவித்தபடி, 'அம்மா... ப்ளீஸ், ஒரு பாட்டு பாடு...' என்பாள்.

'இந்தப் பச்சைக் குழந்தைக்கு செவ்வந்திப் பூவில் தொட்டிலைக் கட்டி வைத்தேன்...'

அம்மாவின் இனிமையான குரல், மனதை வருட, மெய்மறந்திருந்தாள்.

''என்ன நர்மதா, உட்கார்ந்துட்டே கனவு காண்றே?''

''இல்லை சங்கர். அம்மாவின் நினைவு. எங்கம்மாவுக்கு, என் மேல் அளவு கடந்த பாசம். எனக்கும், அப்பாவுக்கும் பார்த்துப் பார்த்து செய்வாங்க. எளிமையான காட்டன் சேலையில் புன்னகையோடு இருக்கும் அம்மாவுக்கு, நாங்க தான் உலகம்.

''அம்மாவிடம், 'ஏம்மா இப்படி எதிலுமே, 'இன்ட்ரஸ்ட்' இல்லாமல், அடுப்படியிலேயே நேரத்தைக் கழிக்கிறே...' என்றால், 'நீயும், அப்பாவும் அருகில் இருப்பதே சொர்க்கம். உங்களுக்கு வேண்டியதை செய்யறேன். உங்க தேவைகளைக் கவனிக்கிறேன். இதுதான் எனக்குப் பிடித்தமான வாழ்க்கை...' என, கன்னத்தை வருடி முத்தமிடுவாங்க.

''இப்பவே ஓடிப் போய் அம்மா மடியில் படுத்து, 'அம்மா, உங்க நர்மதா வந்துட்டே'ன்னு சொல்லணும் போல இருக்கு. முணு வருஷம் கழிச்சு வரேன்னு அவங்களும் ரொம்ப ஆவலோடு இருப்பாங்க,'' என்றாள்.

''ஓ.கே., என்ஜாய். இரண்டு மாசம் உங்கம்மாவோடு, இருந்துட்டு வா. அதே நேரம், உன் நினைவுகளோடு இங்கே ஒருத்தன் இருப்பதை மறந்துடாதே,'' என்றான்.

செல்லமாக அவன் முதுகில் தட்டினாள், நர்மதா.

விமான நிலையத்தில், 'ட்ராலி'யில், 'லக்கேஜை' வைத்து தள்ளியபடி வந்த நர்மதாவின் கண்கள், பெற்றோரை தேடியது.

''நர்மதா, அப்பா இங்கே இருக்கேன்.''

அவரைத் தழுவியவள், ''அம்மா எங்கப்பா?'' என்றாள்.

''வரலை. நான் மட்டும் தான் வந்தேன். வா, வீட்டுக்குப் போகலாம். வெளியில் போயிருக்கா. நாம் போறதுக்குள்ள வீட்டுக்கு வந்துடுவா.''

அவளுக்குள் சின்னதாய் ஒரு ஏமாற்றம். மூன்று வருஷம் கழித்து வரும் மகளை வரவேற்காமல், அப்படி என்ன வேலை.

காரில் போகும்போது, ''நம் வீட்டுக்கு அருகில், அனாதை குழந்தைகள் காப்பகம் ஒண்ணு இருக்கு, நர்மதா. அங்கே இருக்கிற பிள்ளைகளுக்கு, பாட்டு சொல்லிக் கொடுக்கறா.

''ஞாயிற்றுக்கிழமை மட்டும் தான் பாட்டு வகுப்பு. குழந்தைகள், அவளை எதிர்பார்த்துட்டு இருப்பாங்க. 'நீ போயிட்டு வா... நான், நர்மதாவை அழைச்சுட்டு வரேன்'னு சொல்லி வந்தேன்,'' என்றார்.

''அம்மா, பாட்டு சொல்லித் தர்றாங்களா?''

''ஆமாம், நர்மதா... உனக்காக பாடிய அம்மா, அவளுக்கு இருக்கும் சங்கீத ஞானத்தை, இப்ப குழந்தைகளுக்காக செலவழிக்கிறா... அதில், அவளுக்கு ஒரு ஆத்ம திருப்தி.''

வீட்டு வாசலில் கார் நிற்க, உள்ளிருந்து வேகமாக வந்த சாரதா, காரிலிருந்து இறங்கும் மகளைத் தழுவி, ''நர்மதா, எப்படிடா இருக்கே?'' குரலில் பாசம், கண்களில் கனிவுடன் கேட்டாள்.

அம்மாவின் தோற்றத்தில் நிறைய மாற்றங்கள்.

புடவை தவிர, வேறு எதுவும் அணியாதவள், அழகான சுடிதாரில். துாக்கிப் போடும் கொண்டையை, இப்போது, 'கிளிப்' போட்டு தொங்க விட்டிருந்தாள்.

ஆச்சரியத்துடன் கண்கள் அகல பார்த்தவள், ''அம்மா... உன்கிட்டே நிறைய மாற்றம் தெரியுது.''

''தோற்றத்தில் மட்டுமில்லை, உங்கம்மாகிட்டே இந்த மூணு வருஷத்தில் நிறைய மாற்றங்கள். கார் ஓட்டக் கத்துக்கிட்டா... 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' வகுப்பு போயி, சரளமாக இங்கிலீஷ் பேசக் கத்துக்கிட்டா...

''இப்ப, கம்ப்யூட்டர் வகுப்பு போயிட்டிருக்கா... அதுமட்டுமில்லை, கதை, கவிதைன்னு பத்திகைகளுக்கும் எழுதிட்டு இருக்கா.''

''எப்படிம்மா... நீ எதுவுமே என்கிட்டே சொல்லலை?''

''நீ, நேரில் வரும்போது சொல்லி, உன்னை ஆச்சரியப்படுத்தலாம்ன்னு, உன்கிட்டே சொல்ல வேண்டாம்ன்னு, நான் தான் சொன்னேன்,'' என்றார், அப்பா.

''சரி சரி... என்னைப் பற்றி சொன்னது போதும். நீ, உள்ளே வா நர்மதா. மாப்பிள்ளையும் வந்திருந்தா நல்லா இருந்திருக்கும்,'' என்றபடியே உள்ளே போனாள், அம்மா.

'டிராபிக்'கில் அழகாக கார் ஓட்டும் அம்மாவை பார்த்தாள்.

''என்ன நர்மதா, அப்படிப் பார்க்கறே?''

''சத்யமா சொல்றேன். சென்னை, 'டிராபிக்'கில், என்னால கூட இவ்வளவு நேர்த்தியா கார் ஓட்ட முடியாது. நிறையவே கத்துக்கிட்டேம்மா,'' என்றாள், நர்மதா.

''நர்மதா, இப்பெல்லாம் என் ஆபீஸ் நண்பர்கள் வந்தால், உங்கம்மா இங்கிலீஷ்ல தான் பேசறா,'' என்றார், அப்பா.

''ஆமாம் நர்மதா... நீ அமெரிக்காவில் இருக்கே... நாளைக்கு எனக்கு பிறக்கப் போற பேரன், பேத்தியோடு பேச, நிச்சயம் இங்கிலீஷ் தெரிஞ்சிருக்கணும் இல்லையா?''

இன்னும், 10 நாளில் அமெரிக்கா கிளம்ப வேண்டும்.

''நர்மதா, உன் நாட்களை அம்மாவோடு, 'என்ஜாய்' பண்ணினியா?'' என, போனில் கேட்டான், சங்கர்.

''ஆமாங்க... அடுத்த வாரம் புறப்படறேன்.''

பதில் சொன்னாலும், மனதில் இனம்புரியாத ஏக்கத்தை அவளால் உணர முடிந்தது.

''நர்மதா, இன்னைக்கு, என்னோடு அனாதைகள் காப்பகம் வர்றியா... ஒரு மணி நேரம் தான். நீயும் அந்தக் குழந்தைகளை பார்த்த மாதிரி இருக்கும்.''

ஆறிலிருந்து பத்து வயதிற்குள் இருக்கும் சிறுமியர், சாரதாவைப் பார்த்ததும், ''அம்மா,'' என்று பாசமாக அழைத்து, அவளை சூழ்ந்து கொண்டனர்.

''இன்னைக்கு, உங்களுக்கு பெருமாள் பாட்டு சொல்லித் தர்றேன்னு சொன்னேன் இல்லையா... பாடறேன், கேட்டு, நீங்களும் என்னோடு பாடணும்.''

'குறையொன்றுமில்லை, மறைமூர்த்தி கண்ணா... குறையொன்றுமில்லை கண்ணா... குறையொன்றுமில்லை கோவிந்தா...'

அம்மா, ராகமாக பாட, சிறுமியரும் தொடர்ந்து பாடினர்.

அம்மாவின் இனிமையான குரலை ரசித்தபடி உட்கார்ந்திருந்தாள், நர்மதா.

காலையில் குல தெய்வம் கோவிலுக்குப் போய் வந்த களைப்பில், மதியம் சாப்பாட்டிற்கு பிறகு குட்டித் துாக்கம் போட்டாள்.

''மணி 5:00. எழுந்திருடா.''

அவளால் நம்ப முடியவில்லை. பழைய அம்மாவா, எளிமையான காட்டன் புடவையில், முந்தானையை இழுத்துச் செருகி, கையில் ஸ்வீட்டோடு எதிரில் நின்றாள்.

''என்ன நர்மதா, அப்படிப் பார்க்கிறே... உனக்குப் பிடிக்கும்னு லட்டு செய்தேன். சூடா சாப்பிடு.''

அவளருகில் உட்கார்ந்தவள், சூடு ஆற, வாயால் ஊதி, ஊட்டினாள்.

''எப்படிடா இருக்கு?''

அதற்குமேல் தாங்க முடியாதவளாய், மனம் விம்ம, அம்மாவைக் கட்டிக் கொண்டாள்.

''நர்மதா, உனக்குப் பிடிச்சதை செய்து, என் கையால் ஊட்டி எத்தனை வருஷமாச்சு. இந்த நாட்களின் சந்தோஷம் அப்படியே என் மனசில் இருக்கும்மா... கல்யாணமாகி போனதும், நீங்க தான் என் உலகம்ன்னு வாழ்ந்த எனக்குள்ள, பெரிசா ஒரு வெற்றிடம் உருவாச்சு.

''அதிலிருந்து மீண்டு வர, உன்னை நீ மாத்திக்கணும், சாரதா... நர்மதா, அவ புருஷனோடு சந்தோஷமாக வாழ்ந்துட்டிருக்கா. அவளையே நினைச்சு, உனக்குள் சுருங்கிடாதே. தேடல்கள் தான் வாழ்க்கையை சுவாரசியமாக்கும். டிரைவிங் கத்துக்க, அமெரிக்காவில் பிறக்கப் போகும் பேரன், பேத்தியோடு பேச, ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸுக்குப் போ...

''அம்மான்னு கூப்பிட பக்கத்தில் நர்மதா இல்லைன்னாலும், அருகில் இருக்கும் காப்பக குழந்தைகளுக்கு, உனக்கு தெரிந்த பாட்டைச் சொல்லிக் கொடுக்கும்போது, உன்னோடு பாசமாகப் பழக, குழந்தைகள் கிடைப்பாங்க என, என்னுள் இந்த மாற்றத்தை கொண்டு வந்தாரு, உன் அப்பா.

''ஆனா, இந்த சாரதாவுக்கு பிடிச்சது எது தெரியுமா... மகளுக்காக வாழ்ந்த அந்த இனிமையான நாட்கள் தான்,'' கண்கள் பளபளக்க சொன்னாள்.

அவள் கன்னத்தில் முத்தமிட்டு, மடியில் தலை சாய்ந்தாள்.

அடுப்படியிலிருந்து வந்ததால், லேசான ஈர புடவையின் நறுமணம், அவள் மூச்சுக் காற்றில் கலக்க, நர்மதாவின் கண்களில், கண்ணீர் பெருகியது.

பிரவிணா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us