PUBLISHED ON : ஏப் 15, 2018

பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும், வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பர், அதற்கு காரணம், வீட்டுக்குள் வரும் தேவதைகள் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவர்; அவ்வாறு ஊஞ்சலில் ஆடிய தேவதைகள் வீட்டிற்கு நல்லது செய்வர் என்பது நம்பிக்கை. இன்றும் சில இடங்களில் சுப காரியங்களை பற்றி பேசும்போது, ஊஞ்சலில் அமர்ந்து பேசுவது வழக்கம்.
முன்பெல்லாம், ஊருக்கு வெளியே ஆல மரத்தில், ஊஞ்சல் கட்டி ஆனந்தமாக ஆடினர், பெண்கள். பின், படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய் விட்டது.
ஊஞ்சல் ஆடுவதால், மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து, நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கின்றன. இதன் அடிப்படையிலேயே, இன்றும் திருமணங்களில், 'ஊஞ்சல் சடங்கு' நடத்தப்படுகிறது. மேலும், தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவதன் மூலம், சுத்தமான பிராண வாயுவை அதிகமாக சுவாசிக்க செய்து, இதயத்தை சீராக இயங்க வைக்கிறது. இதன் மூலம், மனச்சோர்வு நீங்கி, உடல் உற்சாகம் பெறுகிறது.
சாப்பிட்டவுடன் அரை மணி நேரம், மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடினால், உணவு நன்கு செரிக்கும்; கோபமாக இருக்கும் போது, ஊஞ்சல் ஆடினாலோ, கோபம் தணியும்.
நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி, இரு பக்க சங்கிலிகளையும் பிடித்து வேகமாக ஆடும்போது, முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து, மூளை சுறுசுறுப்பாகிறது.
வெளியில் சுற்றியலைந்து வருவோர், ஊஞ்சலில் அமர்ந்து கண்மூடி, தலையை சற்றே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதிய வைத்து ரிலாக்ஸாக ஆடினால், களைப்பெல்லாம் பறந்து, உடலில் ஒவ்வொரு பகுதியும் ஓய்வுபெற்று நிம்மதி ஏற்படும்.
கம்ப்யூட்டரில் மணிக்கணக்கில் உட்கார்ந்து, முதுகுத்தண்டு வளைந்து போன் இன்றைய பெண்கள், இந்த ஊஞ்சல் பயிற்சியை தினமும் செய்தால், முதுகு தண்டுவடம் பலம் பெற்று, கழுத்த வலி குணமடையும்!
- புஷ்பலதா
