PUBLISHED ON : ஏப் 09, 2017

சித்திரை, முதல் தேதியை ஏன் தமிழ் புத்தாண்டாய் கொண்டாடுகிறோம் தெரியுமா?
சித்திரையில் துவங்கி, பங்குனி வரையிலான தமிழ் மாதங்கள் அனைத்தும், அந்தந்த மாத பவுர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரையே, அந்தந்த மாதத்திற்கு பெயராக வைத்துள்ளனர், நம் முன்னோர்.
சித்திரை - சித்திரை (சித்ரா பவுர்ணமி)
விசாகம் - வைசாகம் - வைகாசி (வைகாசி விசாகம்)
அனுஷம் - ஆனி
பூராடம் - பூராடி - ஆடி
சிரவணம் - ச்ராவணி - ஆவணி (திருவோணம் - வடமொழியில் ஸ்ராவண நட்சத்திரம்)
பூரட்டாதி - புரட்டாசி (புரட்டாசி பவுர்ணமி, பூரட்டாதி நட்சத்திரத்தில் வரும்.)
அஸ்வினி - ஐப்பசி (வடமொழியில் ஆஸ்வீஜம்)
கார்த்திகை - கார்த்திகை (கார்த்திகை பவுர்ணமி)
மிருகசீரிஷம் - மார்கஷீர்சம் - மார்கழி
பூசம் - வடமொழியில், புஷ்யம். இதற்கு, தைஷ்யம் என்ற மற்றொரு பெயருமுண்டு. இது, தை ஆனது. (தை பூசம்)
மகம் - வடமொழியில் மாக - மாசி (மாசி மகம்)
உத்திரம் - வடமொழியில் உத்திரப் பல்குனி - பங்குனி (பங்குனி உத்திரம்)
தமிழ் மாத பெயர்கள், வான சாஸ்திரத்தை அடிப்படையாக கொண்டவை என்பதற்கு இதுவே உதாரணம்.
ஒரு ஆண்டு என்பது, பூமி, சூரியனை ஒருமுறை சுற்றி வர ஆகும் காலம்.
ஒரு வட்டத்தின் முதற்புள்ளியை எப்படி கணிப்பது... சுற்றும் போது, பூமியின் சாய்வால் சூரியன் வடக்கு, தெற்காக நகர்கிறது. சூரியன், பூமத்திய ரேகையில் நேராக பிரகாசிக்கும் மாதத்தை முதற்புள்ளியாய் ஆண்டின் துவக்கமாக கொண்டுள்ளனர், நம் முன்னோர். அது தான் சித்திரை.
அதேபோன்று, பூமத்திய ரேகையை ஒட்டியுள்ளது, நம் நாடு. 12 ராசியால், பனிரெண்டாக பகுக்கப்பட்ட ஆண்டில், நம் மீது நேராக பிரகாசிக்கும் போது, சூரியன், மேஷ ராசியில் இருப்பான்; எனவே தான், மேஷம் முதல் ராசியானது; சித்திரை முதல் மாதமானது.
தை மாதத்தில், சூரியன், ஆஸ்திரேலியா மீது, நேராக பிரகாசிப்பான்.
நம் முன்னோர், மெய் ஞானிகள் என்பது இதிலிருந்து நிரூபணமாகிறது அல்லவா!
