PUBLISHED ON : ஏப் 08, 2012

டைடானிக் - உலகின் முதல் சொகுசு கப்பல்!
ஒரே இரவில், 1,523 பேர் கடலில் மூழ்கி இறந்த சோக வரலாற்றை சொந்தமாகக் கொண்ட கப்பல் டைடானிக்.
வருகிற ஏப்.,15ம் தேதி@யாடு, இந்த டைடானிக் கப்பல் முழ்கி நூறு வருடமாகிறது.
இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, எண்ணற்ற நாவல்களும், திரைப்படங்களும் வெளிவந்திருந்தாலும், ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் லியார்னாடே டிகாப்ரியோ, கேட் வின்ஸ்லெட் நடிப்பில், கடந்த 1997ல், உருவாக்கப்பட்டு வெளிவந்த டைடானிக் திரைப்படம், எல்லார் மனதிலும் மறக்க முடியாத சோகத்தை பதித்துள்ளது என்னவோ நிஜம்.
பல நூறு பக்கங்களில் சொல்ல முடியாத சோகத்தை, அந்த, 194 நிமிட படம் நேர்த்தியாகவும், கூடுமானவரையில் நிஜமாகவும் சொன்னதன் விளைவே, 11 ஆஸ்கர் விருதுகள் பெற்று, உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடியது. 200 மில்லியன் டாலர் செலவில் எடுத்த படம், 1,850 மில்லியன் டாலரை சம்பாதித்து கொடுத்தது. (1டாலர்-48 ரூபா#.)
அந்த படத்தில் சொல்லப்பட்ட காதல் கதை மட்டும் கற்பனையே தவிர, மற்ற அனைத்தும் சம்பவத்தின் அடிப்படையிலேயே எடுக்கப்பட்டதால், இன்றளவும் டைடானிக் தொடர்புடைய சம்பவங்கள் என்றால், மக்களிடம் ஒரு ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது.
டைடானிக் கப்பல், பயணிகளுக்கான சொகுசு கப்பலாக திட்டமிட்டு, பார்த்து பார்த்து உருவாக்கப்பட்டது. அயர்லாந்து நாட்டின் பெல்பாஸ்ட் நகரில் கட்டப்பட்டது. நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம், பல்துறை அரங்குகள் என, ஒன்பது அடுக்குகளுடன் உருவாக்கப்பட்ட இந்த கப்பலின் நீளம், 882 அடி, உயரம் 175 அடி, எடை 46 ஆயிரத்து 328 டன்.
மார்ச் 31, 1909ல், கட்டத் துவங்கி, மே 31, 1911ல், நிறைவடைந்தது. 3,000 ஆட்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர், கப்பலின் பயண தேதி அறிவிக்கப்பட்டது. பலரும் ஆர்வமாக பயணச் சீட்டை பெற்றனர். அப்போதே அனுமதி கட்டணம், 4,350 டாலர் இன்றைய மதிப்பிற்கு, 80 ஆயிரம் டாலர்.
தன் முதல் பயணமே, முடிவான பயணம் என்று அறியாத டைடானிக் கப்பல், 1,343 பயணிகள் மற்றும் 885 கப்பல் சிப்பந்திகளுடன் மகிழ்ச்சியாக புறப்பட்டது.
அயர்லாந்தில் இருந்து கிளம்பி, பிரான்ஸ் வழியாக நியூயார்க் போவதாக பயண ஏற்பாட்டின்படி கப்பல், 1912ல் ஏப்., 10ம் தேதி கிளம்பியது. கடல் அலைகளை மிஞ்சும் பயணிகளின் ஆர்ப்பரிக்கும் ஆனந்த அலைகளுடன் பயணித்த கப்பல், ஐந்து நாட்கள் கழித்து அதாவது, 15ம் தேதி இரவு, 220 அடி நீள பனிப் பாறையில் மோதியதில், மூழ்க தொடங்கியது. இரவு 11.40 மணிக்கு மூழ்க துவங்கிய கப்பல் பின்னிரவு, 2.20 மணிக்கு முழுமையாக மூழ்கியது. முழுவதுமாக மூழ்கும் போது, கப்பல் இரண்டாக பிளந்தது இன்னுமொரு சோகம்.
இந்த இடைப்பட்ட நேரத்தில், கப்பலில் இருந்த உயிர்காக்கும் படகுகளின் மூலம் பெண்கள், குழந்தைகள் என, 705 பேர் மட்டும் காப்பாற்றப் பட்டனர். கப்பல் சிப்பந்திகள் உட்பட, 1,523 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். மூழ்கியவர்களில், 300 பேரின் உடல் மட்டும் மீட்கப்பட்டது.
இந்த கொடுமையான சம்பவம் நடந்து, 74 வருடங்களுக்கு பிறகு, 12,ஆயிரத்து 600 அடி ஆழத்தில் சிக்கியிருந்த கப்பலின் என்ஜினின் ஒரு பகுதி மீட்கப்பட்டது. அதன் பின், டைடானிக் பற்றி ஏற்பட்ட ஆர்வம்தான் சிறிதும் பெரிதுமான, 14 படங்களும், நூற்றுக்கும் அதிகமான புத்தகங்களும் வெளிவந்தன.
இதோ, இந்த சோக சுவட்டின் நூற்றாண்டை முன்னிட்டு, டைடானிக் படம், முப்பரிமாண(3டி) திரைப்படமாக உருவாக்கப்பட்டு, திரையிடப்பட்டுள்ளது. தான் தத்தளித்தாலும், தன் காதலி உயிர் பிழைக்க வேண்டும் என்பதற்காக விடிய, விடிய ஐஸ் தண்ணீரில் உருகாத குறையாக, காதலுக்காக உருகும் காதலன் டிகாப்ரியோ தன் காதலியின் விரலில் இருந்து விடுபட்டு கொஞ்சம், கொஞ்சமாக காதலி கேட் வின்ஸ்லெட்டின் கண் முன்னே, கடலின் ஆழத்தில் மெல்ல, மெல்ல அமிழ்ந்து இறந்து போகும் அந்த காட்சிக்கு, இந்த முப்பரிமாண தொழில்நுட்பம் இன்னும் கொஞ்சம் கனத்தையும், ஆழத்தையும், அழுகையையும், ரசிகர்களிடம் இருந்து வெளிக்கொணரப் போவது நிச்சயம்.
***
எம்.எல். ராஜகுரு
