/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
நூறு நாட்களுக்கு பின் முதல் முத்தம்
/
நூறு நாட்களுக்கு பின் முதல் முத்தம்
PUBLISHED ON : ஜன 15, 2012

'திருமணங்கள், சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன...' என்ற பழமொழி, நம்ம ஊரில் சர்வசாதாரணமாக, புழக்கத்தில் இருப்பது தெரிந்த விஷயம். ஆனால், உலகில் வேகமாக மாறி வரும் வாழ்க்கை முறை, இதுபோன்ற பழமொழிகளை, கேள்விக்குறியாக்கி விடும் போல் தெரிகிறது. சமீபத்தில் நடந்த, ஒரு வினோதமான சம்பவமே, இதற்கு நல்ல உதாரணம்.
பிரிட்டனின், சவுதாம்ப்டன் நகரில் உள்ள பல்கலைக் கழகத்தில் படித்து வருபவர், சைய்யது இஸ்லாம். வயது: 28. வங்கதேசத்தை சேர்ந்தவர். அமெரிக்காவின் பென்சில்வேனியா நகரில் வசித்து வருபவர் மொனிரா சவுத்ரி. வயது: 28. இருவருக்கும், 'ஆன்லைன் சாட்' மூலம் (கம்ப்யூட்டரில் அரட்டை அடிப்பது), பரிச்சயம் ஏற்பட்டது. இருவருக்கும் இடையேயான இந்த கம்ப்யூட்டர் நட்பு, அடுத்த பரிணாமத்தை எட்டியது.
முகம் தெரியாமல், அரட்டை அடிப்பதற்கு பதிலாக, முகத்தை பார்த்துக் கொண்டே, அரட்டை அடிக்கலாமே என்ற ஆர்வம் ஏற்பட்டது. இதையடுத்து, வீடியோ சாட் (கம்ப்யூட்டரின் முன் அமர்ந்து, இருக்கும் இடத்தில் இருந்தே, மற்றொரு ஊரில் இருப்பவரின் முகத்தை பார்த்து பேசும் வகையிலான தொழில்நுட்ப வசதி) மூலமாக, இருவரும் அரட்டை அடிக்கத் துவங்கினர்.
முகம் தெரியத் துவங்கியதும், அவர்களின் மனதில், காதல் பூ பூத்தது. இருவரும், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். வேலைப் பளு, இரு நகரங்களுக்கும் இடையே உள்ள, 5,600 கி.மீ., தூரம், உடனடியாக ஒரே இடத்தில் சந்திக்க முடியாத சூழல் ஆகியவற்றின் காரணமாக, தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி, இருக்கும் இடத்தில் இருந்தே, வீடியோ இணைப்பு மூலமாகவே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இருவரது வீட்டில் உள்ள பெரியவர்களும், பச்சைக் கொடி காட்டவே, திருமணத்துக்கான ஏற்பாடுகள் தயாராகின.
பெரியவர்களின் முன்னிலையில், சவுதாம்ப்டனில் சைய்யது இஸ்லாமும், பென்சில்வேனியாவில் மொனிராவும், திருமண உடையணிந்து, ஒரே நேரத்தில், கம்ப்யூட்டர் முன் அமர்ந்தனர். ஒருவரது முகம், ஒருவருக்கு தெரிந்ததும், வெட்கத்துடன் புன்னகைத்துக் கொண்டனர்.
மாலை மாற்றுதல், உள்ளிட்ட அனைத்து திருமணச் சடங்குகளும், கம்ப்யூட்டர் முன்னிலையிலேயே நடந்தன. திருமணம் முடிந்ததும், இருவரும் அவரவர் வேலையை கவனிக்கத் துவங்கி விட்டனர்.
இதற்கு பின் இருவரும், மொபைல் போனில் நலம் விசாரித்துக் கொண்டதுடன் சரி. திருமணம் நடந்து, நூறு நாட்களுக்கு பின், நேரடியாக சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. பிரிட்டனுக்கு புறப்பட்டு வந்தார் மொனிரா.
விமானம் வருவதற்கு, பல மணி நேரம் முன்பாகவே, சவுதாம்ப்டன் விமான நிலையத்தில், பட படக்கும் இதயத்துடன், தன், புது மனைவியை நேரில் காணப் போகும் உற்சாகத்தில் காத்திருந்தார் சைய்யது.
விமானத்தில் இருந்து இறங்கி வந்த மொனிராவை கட்டித் தழுவினார். மொனிராவின் கண்களில் இருந்து, ஆனந்த கண்ணீர். மொனிராவின் நெற்றியில், காதலுடன் முத்தமிட்டார் சைய்யது. இருவருக்குமே, நேரில் சந்தித்துக் கொண்ட, இன்ப அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு சில நிமிடங்கள் ஆயின. 'எப்படி, இப்படி ஒரு திருமண நிகழ்வு சாத்தியமானது?' என, கேட்டபோது, 'இருவரும், ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த நம்பிக்கை தான் இதற்கு காரணம்...' என, மகிழ்ச்சியுடன் கூறினர்.
விரைவில் தேனிநிலவுக்காக, வெளிநாட்டுக்கு பறக்கவுள்ளன, இந்த ஆன்லைன் காதல் பறவைகள்.
***
எஸ். சந்தோஷ்ராம்