/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
முதன் முதலில் வெளியான வாரமலர் இதழ் அட்டைப்படம்
/
முதன் முதலில் வெளியான வாரமலர் இதழ் அட்டைப்படம்
PUBLISHED ON : பிப் 08, 2026

பிப்ரவரி 14, 1982 பொன்னெழுத்துக்களால் பொறிக்க வேண்டிய மகத்தான நாள்.
காலங்கள் மாறினாலும், காட்சிகள் மாறினாலும் வாழ்வியலின் அடிப்படை அறங்களை வலியுறுத்துவதை இலக்காக கொண்டு, கடந்த 44 ஆண்டுகளாக பல்வேறு படைப்புகளைத் தாங்கி, வாசகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகிறது, வாரமலர் இதழ்.
புதுப்புது படைப்பாளிகளை இனம் கண்டு ஒளி பாய்ச்சும் மேடையாக திகழ்ந்து வருகிறது. வாரமலர் இதழ். 44 ஆண்டு வரலாறு என்றாலும், சாதித்து விட்டதற்கான எல்லைக்கோடு அல்ல இது. அடுத்தடுத்த பயணத்துக்கான உந்து சக்தி மட்டுமே!
ஒரு தலைமுறை என்பது, 40 ஆண்டுகள் என்று கணக்கிடப்படுகிறது. அப்படி பார்த்தால், நாம் ஒரு தலைமுறை கடந்து பயணிக்கிறோம். 45 ஆண்டுகள் நிறைவுறும் போது, 540 மாதங்கள், 2,348 வாரங்கள், 16,436 நாட்கள், 3,94,462 மணி நேரத்தை கடந்திருப்போம் என்று நினைக்கும்போதே மலைப்பாக இருக்கிறது.
இந்த நீண்ட பயணத்தை அர்த்தமுள்ளதாக்கி வரும் வாசக முதலாளிகளை பெருமிதத்துடன் வணங்குகிறோம். உங்களது ஊக்கமும், உத்வேகமும் எங்களது ஆன்ம பலம். உங்களது இதயத்தின் துடிப்பாகவும், தேடலுக்கான துாண்டுகோலாகவும், நண்பனாகவும் தொடர்ந்து செயல்படவே விரும்புகிறோம். உங்களது அன்பும், ஆதரவும் தான் எங்களது ஆயுதமும், கேடயமுமாகும்.
நம்மை சுற்றி மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் அடித்தளமாக, பக்க பலமாக வேரும், விழுதுகளுமாக இருப்பவர்கள் நீங்களே!
இப்போதைய, 'டிஜிட்டல்' யுகத்தில், மின்னஞ்சல்களிலும், சமூக ஊடகங்களிலும் வாரமலர் இதழ் குறித்து எழுதப்படும் விமர்சனங்களும், எதிர்பார்ப்புகளுமே இதற்கான நற்சான்றுகள்.
மேன்மேலும் உயரங்களை தொடர்வதற்கான உங்களது ஊக்கத்துக்கும், ஆக்கத்துக்கும் எங்களது சிரம் தாழ்ந்த வணக்கங்களும், நன்றிகளும்.
கைக் கோர்ப்போம், களம் அமைப்போம்: நம் எண்ணங்கள் ஈடேறட்டும்.
பொறுப்பாசிரியர்
தினமலர் வாரமலர்

