தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/மகான்களின் மகிமை!

மகான்களின் மகிமை!

மகான்களின் மகிமை!


PUBLISHED ON : ஜன 15, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 15, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மகான்களுடைய மகிமையைப் பற்றி, இதிகாசங்களும், புராணங்களும் எவ்வளவோ எடுத்துக் கூறியுள்ளன. அவற்றிற்கெல்லாம் உண்மைப் பொருளாக வாழ்ந்தவர், பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்.

ஒருசமயம், காசிப்பூரில் தங்கியிருந்த ராமகிருஷ்ணர், கடுமையாக நோய்வாய்ப் பட்டிருந்தார். அவரது சீடர்கள், கண்ணும், கருத்துமாக, அவரை கவனித்து வந்தனர். அவர்களில், சசிபூஷணர் எனும் சீடரும் ஒருவர்!

அது, கடும் பனிக் காலம்; ராமகிருஷ்ணரின் கழிவுக் கலயத்தை வெளியே எடுத்துச் சென்று, சுத்தப்படுத்தி, அறைக்குத் திரும்பினார், சசிபூஷணர். அப்போது, அவர் கண்ட காட்சி, அவரை திடுக்கிட வைத்தது.

படுக்கையிலிருந்து எழ முடியாத நிலையில் இருந்த ராமகிருஷ்ணர், ஒரு குச்சியை ஊன்றியபடி, தட்டுத் தடுமாறி, எதையோ எடுப்பதற்காக நடந்து செல்வதைக் கண்டார். அவர் பார்வை போன திசையில் சசிபூஷணர் பார்க்க, அங்கே, போர்வை ஒன்று இருந்தது. அதை எடுப்பதற்காக தான் அவர் செல்கிறார் என்பது புரிந்ததும், 'அடடா... குருதேவருக்கு, போர்வை தேவையாக இருந்திருக்கிறது; அதை எடுப்பதற்காக தான், இவ்வளவு கஷ்டப்பட்டு எழுந்து செல்கிறார். அவருக்கு, ஏதாவது தேவையா என்று கேட்ட பின், நாம் கலயத்தை எடுத்துப் போயிருந்தால், குருதேவர் இப்படி கஷ்டப்பட்டிருக்க மாட்டாரே... தவறு செய்து விட்டோமே...' என்று, பதற்றப்பட்ட சசிபூஷணர், வேகமாக குருதேவரை நெருங்கி, 'குருதேவா... தங்களுக்கு என்ன தேவை என்பதை கேட்காமலேயே கலயத்தை சுத்தம் செய்ய போய் விட்டேன்; அடியேனை மன்னியுங்கள்...' என, வேண்டினார்.

சசிபூஷணரை மென்மையாக பார்த்து, 'வருத்தப்படாதே சசிபூஷணா... எனக்காக போர்வை எடுக்க போகவில்லை; நீ, வெளியே கலயம் சுத்தம் செய்யப் போன போது, குளிரால், உன் உடல் நடுங்கியதை பார்த்தேன். உடனே, என் உடல் குளிரால் தாக்கப்பட்டதை போல உணர்ந்தேன். அதனால், உனக்கு போர்வை எடுத்து கொடுப்பதற்காகவே எழுந்தேன்...' என்றார், ராமகிருஷ்ணர்.

மெய்சிலிர்க்க, குருவின் பாதங்களை பணிந்தார், சசிபூஷணர்.

குருவின் பணிவிடையில், தன்னை கரைத்து கொள்ளும் சீடனின் காலில், சிறு கல் குத்தினால் கூட, தன் கண்களில், முள் பாய்ந்ததைப் போல உணர்ந்து, சீடனை காப்பாற்றுபவரே குருநாதர் எனும் உண்மையை மெய்ப்பிக்கும் வரலாறு இது!

பி.என்.பரசுராமன்

தெரிந்ததும் தெரியாததும்!

சம்மணமிட்டு சாப்பிடுவதன் நோக்கம் என்ன?

சாப்பிடும் போது, காலை மடக்கி, அமர்ந்து சாப்பிட வேண்டும். மாறாக, காலை தொங்க வைத்து அமர்ந்தால், ரத்த ஓட்டம் வயிற்று பகுதிக்கு செல்லாமல், காலுக்கே அதிகமாக செல்லும். இதனால், ஜீரணமாக தாமதமாகும். காலை மடக்கி, அமர்ந்து சாப்பிட்டால். கீழே ரத்த ஓட்டம் செல்லாமல், முழு சக்தியும், வயிற்றுப் பகுதிக்கு சென்று எளிதில் ஜீரணம் ஆகும். எனவே தான், சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும்படி வலியுறுத்தப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us